Tuesday, 15 November 2022

“காந்தாரா” வும் எங்கள் ஊர் அய்யனாரும்.

 .இந்தக் கதை நம்மூர் அய்யனார் பற்றிய கதை. நம் ஒவ்வொருக்கும் இதில் சம்பந்தம் இருக்கும்- என்பது உண்மை.

எத்தனை ஆழமாக, நம் வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதத்தில் ஒரு படம் எடுக்கப்படுகிறதோ, அது உலக அளவில் பேசப்படும். –  ஒரு பாச மலர் போன்று. தில்லானா  மோகனாம்பாள் போல இப்போது -காந்தாரா ஒரு உதாரணம்.

ஒரு சினிமா என்பது நாம் கடந்து வாழ்ந்த வாழ்க்கையின் சில சம்பவங்களை ஞாபகப்படுத்தும் போது, நாம் அந்த சினிமாவுடன் ஒன்றிப் போகிறோம். சில சமயம் நெகிழ்ந்து கூடப் போகிறோம்.  அடுத்த தலைமுறைக்கு நாம் மிகவும் மதித்த ஆன்மீக ஆச்சர்யங்களை கொண்டு போய் சேர்க்காமல் இருந்துவிட்டோமோ என்ற ஒரு குற்ற உணர்வு கூட நம்மை சூழ்ந்து கொள்கிறது.

இந்தக் கன்னட படம், உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது என்பது பெரிய விஷயமல்ல. தமிழ் நாட்டில் லேசில், ஒரு வெளி மாநிலப் படம் ஓடாது. அதில் எனக்குத் தெரிந்தவரை, இரண்டு படங்கள் விதி விலக்கு. ஒன்று சங்கராபரணம், இரண்டு, காந்தாரா. நான் சொல்வது கதை அம்சம் உள்ள படங்கள்.  Fantasy படங்கள் அல்ல.

சினிமா படங்களைத் தவிர்த்து பல வருடங்கள் ஆகிறது. சமீபத்தில் பொன்னியின் செல்வனையும், காந்தாராவையும் பார்க்க நேர்ந்தது. முதலில் பொன்னியின் செல்வனைப் பற்றித்தான் எழுதலாம் என்று நினைத்தேன்.  ஆனால் காந்தாராவைப் பார்த்தவுடன் நான் “ஆடிப்” போனேன்.  2 நாள் நான் சரியாக பேச முடியவில்லை. கிராபிக்ஸ் படங்களும், மிகைப்படுத்தப்பட்ட கதைகளும், துப்பாக்கி, தோட்டா, கத்தி என்று, படம் பார்க்கும் நமக்கு ரத்தம் வரும் வரை சண்டை போட்டுக்கொள்ளும் படங்களும் வரும் இந்தக் காலத்தில், நாம் மண்ணை நேசித்து, மிகவும் யதார்த்தமாக, என் இளமைப் பருவத்தில், என் கிராமத்தில்  நான் பார்த்து ரசித்த, அந்த அழகை வெளிப்படுத்திய அந்த பெயர் தெரியாத அந்த “காந்தாரா” ஹீரோ வுக்கு ஒரு “சபாஷ்”

“வராஹ ரூபம்” – என்ற ஒரு பாடல் பிலஹரியிலும், பைரவியிலும், தோடியிலும், மிகவும் பிரபலமாகி நம்மை மயக்க, படமோ நம்மை நெகிழ வைக்கிறது

இந்தக் கட்டுரையை மூன்று பாகங்களாக பிரிக்கலாம்:

ஒன்று படம் நமக்குச் சொல்லும் பாடம்;

நிலம் (இயற்க்கை) சார்ந்த வாழ்க்கை நாம் வாழாமல் போனால், இயற்கை, (பெருமாள்) எப்படி வராஹ உருவம் (பன்றி) எடுத்து, அசுரரை அழித்தாரோ (ததோ), அதுபோல், வேறு ஒரு உருவம் கொண்டு நம்மை அழித்துவிடும் – இதுதான் காந்தாரா படத்தின் கதை.

நம் இயற்கை என்பது கடவுள் போட்ட பிச்சை. நாம் ஒவ்வொரு முறை இயற்கையை அழிக்கும்போது நம்மை எச்சரிக்கிறது. அப்படியும் நாம் உணரவில்லை என்றால்- சுனாமி தான்.....என்பதும் இந்தக் கதையில் சொல்ல வரும் முக்கியமான விஷயம்.

இந்தப் படம் முழுக்க ஆன்மீகப் (தெய்வ) படம் அல்ல. தேவர்களின் படமும் அல்ல. சிவ பெருமான் அனுப்பிய பூத கணங்கள், அய்யனார் வடிவில் வந்து நம்மையும, நம் நிலத்தையும் காப்பவர்கள். அதனால் நாம் கடவுளுக்கு கொடுக்கும் மரியாதை, நிலத்திற்க்கும் கொடுப்போம். அந்த பூத கணங்களுக்கு மரியாதை செய்வது போல், கர்நாடகாவில்- “கோலா நடனம் என்று ஒன்று இன்றும் உண்டு. நம் கிராமத்தின் தெருக்கூத்து போல இருக்கும்.

நம்மூர் அய்யன்னாரிலேயே, பல வகை உண்டு, காத்தவராயன், மதுரை வீரன், கருப்பண்ண சாமி போல. நல்ல அய்யனாரும் உண்டு, எதிர் மறையும் உண்டு. கர்நாடாகாவில், பஞ்ஜூரிலி, குலிகா – என்று இரண்டு தெய்வங்கள் பிரசித்தம், முதல் சாது, இரண்டாவது உக்ரமான சாமி’.  

மண்ணுக்காக நடந்த சண்டை தான் மகாபாரதம். பஞ்ச பூதங்களை நாம் வணங்காவிட்டால் அது திருப்பி நம்மைத் தாக்கும்போது எங்கே செல்வோம் ? என்ற கருத்து தான் இந்தப் படம்.

படத்தின் கதையை, சில வரிகளில் சொல்லி விடலாம். தான் மிகவும் நேசித்த நிலத்தையும், அந்த நிலத்தை காலம் காலமாக காத்து வரும் “அய்யனாரையும்” பயந்து போற்றி வணங்கும் அந்த கிராமத்து மக்கள். கிராமத்தில் Forest ஆபிசர் வந்து, நிலத்தை அபகரிக்க முயல்கிறார், மறு புறம், அந்த கிராம ஜமீன்தார், நிலத்தை ஒரு புறம் அபகரிக்க முயல்கிறார். அந்த கிராமத்தில் உள்ள ஒரு ஹீரோ- வந்து அதற்க்கு ஒரு முடிவு கட்டுகிறார், அது எப்படி ? என்ன என்ப்துதான் ?  - இது சினிமாத்தனமாக எடுத்திருந்தால், தெலுங்குப் படம் ரேஞ்சுக்குப் போயிருக்கும்.. யதார்த்தமாக, ஒரு துளி கூட சினிமாத்தனம் இல்லாமல், ஆன்மீக நெடியுடன் எடுக்கப்பட அற்புதமான படம். 

டைரக்டர் ஒரு பேட்டியில் “இந்த பட வெற்றிக்கு, இந்த படத்தில் உள்ள ஆன்மீகம் தான் காரணம்” என்றார். அதான் உண்மை.  

இந்தப் படத்தில், காதை கிழிக்கிறாற்போல் ஒரு சத்தம் போடுவார், அந்த சத்தம் கேட்கும் வரை உள்ள நிலம் எனக்குச் சொந்தம் – என்று நிம்மதியையும் சந்தோஷத்தையும் தர வல்ல- எல்லை சாமி சொல்லுவது மாதிரி கதை போகிறது.

அந்த சத்ததை இப்போது நீங்கள் செய்ய முடியமா ? என்று ஒரு நிருபர் கேட்க, “அது இப்போதும் எங்கள் கிராமத்தில், புனிதமாக கருத்தப்படும் அந்த ஓசை, அது நாங்கள் வெளியில் சொல்லி, அந்த சப்தத்தின் புனித்ததை கெடுக்க விரும்பவில்லை” என்றார். மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.

“பூத காலா” நடனம் என்று இந்த படத்தில் ஒன்று வரும். ஒரு மாதிரி கதகளி நடனம் போன்று. அதிகமான மேக்கப் போட்டு, இந்த நடனம் பார்க்கும்போதே நமக்கு ஒரு தெய்வீக உணர்வு வரும்.  ஹீரோ ஒரு பேட்டியில் சொல்கிறார்- “இந்த உடையுடன் ஷூட்டிங் நடக்கும்போது நான் சாப்பிடவில்லை, ஏனெனில், இந்த வேடம், எங்கள் கிராமத்தில் பக்தியின் உச்சம்”

எனக்குத் தெரிந்த அய்யனார்:

எனக்கும் என் குடும்பத்தினருக்கும் அய்யனார் மேல் மிக உயர்ந்த பக்தி, மரியாதை உண்டு.  இந்தப் படத்தை பற்றி நான் நினைத்து எழுதும்போது, எனக்கு ஒரு ஆச்சர்யமான விஷயம் நடந்தது.

என் மனைவி ஆச்சர்யமாக சௌந்தர்யலஹரியில் மூன்றாவது ஸ்லோகத்தை எனக்குச் சொன்னாள். அது, “தம்ஶ்ட்றா முரரிபு வராஹஸ்ய பவதி” என்று ஸம்ஸாரக் கடலில் மூழ்கியவனுக்கு, எப்படி, பூமியை, ஹிரண்யாக்ஷன் பாதாளத்தில் தள்ளியபோது, நாராயணன்ன் வராஹ அவதாரம் எடுத்து, தனது தெற்றுப் பல்லால் மேலே கொண்டு வந்தாரோ, அப்படி அம்பாள் ரக்ஷிப்பாள்” என்கிறார்.

பூமித்தாயை போற்ற வேண்டும் என்பது என் சின்ன வயதிலேயே நான் கற்ற பாடம். எங்கள் கிராமத்தில், தைப்பொங்கல் பொது எங்கள் வயல் நிலத்திற்க்குச் சென்று நமஸ்காரம் செய்வோம். நெல் விதை தெளிப்பதற்க்கு முன்பு, ஆட்கள் நமஸ்காரம் செய்துவிட்டுத்தான் செய்வார்கள். சூர்ய வழிபாடு, பஞ்ச பூதங்கள் வழிபாடு என்பது நாம் வழி வழியாக வரும் வழக்கம். நானும் நிலத்தில் நமஸ்காரம் செய்திருக்கிறேன். கதிர் அறுத்து நெல் மூட்டை கட்டும், அந்த இடத்தில் நடக்கக் கூட மாட்டோம். அவ்வளவு மரியாதை.

செம்மங்குடியில் நான் குழந்தையாக இருந்தபோது, ஊருக்கு வெளியே காவல் தெய்வமாக இருக்கும் அய்யனார், மதுரை வீரன், கருப்பண்ண ஸ்வாமி போன்ற பல தெய்வங்களை பார்ப்பேன். சற்று தள்ளி இருக்கும் ஒரு கிராமத்தில், ஒரு பெரிய குதிரையும், பெரிய யானையும் இருக்கும். பயமாகவும், ஆச்சர்யமாகவும் இருக்கும். என் தாத்தா, அந்தக் கோவிலின் வழியாக நடந்து போகும் பொது, செருப்பை கையில் எடுத்துக் கொண்டு நடப்பார்.  நாம் ஊரைக் காப்பாற்றும் தெய்வம் என்பதும், அம்மை போன்ற கொடும் வியாதிகள் வரும்போது, மந்திரிக்க நான் அந்தக் கோவில் பூசாரியிடம் சென்று வீபூதி வாங்கி வருவேன். 

காஞ்சி மகா பெரியவர், செம்மங்குடி விஜயம் செய்த பொது (1935 என்று நினைக்கிறேன்) அவருக்கும் 'காளி, மகமாயீ ரூபத்தில் வந்து இருக்க" 3 மாதம் செம்மங்குடியிலேயே இருந்தாராம். "அம்பாள் என் கூடவே இருக்கிறாள்" என்று சொன்னாராம்.  இந்த விஷயம் இந்த ஊர் மகமாயீ கோவில் கல்வெட்டில் இன்றும் பார்க்கலாம்

செம்மங்குடியில், கரும்பாயிரம் ஸ்வாமி, மகமாயீ என்று எல்லை காவல் தெய்வங்கள் உண்டு. வருடா வருடம், அரிச்சந்த்ரா நாடகம் உண்டு. என் சித்தி சொல்லும்போது “ ஒரு முறை அரிச்சந்திர நாடகம் பதில், ராமர் நாடகம் போடப்பட்டபோது, கிராமத்தில், அம்மை நோய், மிகவும் உக்ரமாக தாக்க, சாமி வந்த பூசாரியிடம் கேட்க,  நாடகத்தை மாத்தக் கூடாது என்று சொல்ல பிறகு அரிச்சந்த்ரா நாடகம் தான் வருடா வருடம் போட்டார்களாம்.

என்னுடைய குல தெய்வமான வரகூரில் உள்ள பெரமனார் கோவிலுக்கும் ஒரு கதை உண்டு. கேரளாவில் உள்ள ஒரு பெரியவர், மாந்த்ரீகம் தெரிந்தவர், அவர் கூடவே அய்யானாரை, நமது மந்த்ர பலத்தால் அழைத்து வர, அய்யனார் வரகூர் கிராமத்து எல்லையில் தங்கிவிட, அந்த பெரியவர் வரகூரில் தங்கியதாக சொல்வார்கள். இன்றும் அது காவல் தெய்வமாக அந்த கிராம மக்களை ரக்ஷித்து கொண்டு இருக்கிறார் என்பதும் உண்மை.

எருமைத்தலை அய்யனார் என்று சேங்காலிபுரத்தில் (குடவாசல் அருகே) ஒரு கோவில் உண்டு.  ஆனந்தராம தீக்ஷிதர் “திரயம்பாக புராதீசம்” என்று ஒரு ஸ்லோகம் சொல்வார்.  அது இந்த அய்யனார் தான்.

கல்லில் செய்து, காவல் தெய்வமாக, இன்றும் மயிலாபூரில், முண்டககன்னியம்மன், இருக்கிறாள் என்பதும் உண்மைதானே.  !

கொஞ்சம் அய்யப்பன்:

அய்யப்பன் ஒரு அவதாரமா, அல்லது அய்யனார் தான் அய்யப்பனா என்று பல கேள்விகள் எழுகிறது. ஏனென்றால். பாற்கடல் கடையும்போது, விஷ்ணு மோஹினி அவதாரமாக வந்த்தும். சிவபெருமானுக்கும், மோகினி அவதாரத்திருக்குமாய் பிறந்தவர் தான் சாஸ்தா- என்றாலும். இந்த சரித்திரம், ஸ்ரீ மத் பாகவத்தில் இல்லை.

பகவத்பாதாள், சிவ பாதாதி கேச ஸ்தோத்ரம் என்று ஒரு கிரந்தம் அருளிச் செய்து இருக்கிறார். அதில் ஆரம்ப ஸ்லோகத்தில் அய்யப்பனைப் பற்றி ஒரு ஸ்லோகம் வருகிறது. எனக்குத் தெரிந்து இதுதான் ஆதாரபூர்வமான அத்தாட்சி”

“ஆரூடப் பிரௌட வேக ப்ரவிஜிதபவனம் துங்க துங்கம் துரங்கம்.......மாமகீனே” – இதன் தமிழ் அர்த்தம் இப்படி இருக்குறது.

“மிகவும் உயரமான குதிரையில், ஆரோகணித்து, காற்றை விட வேகமாக செல்பவரும், கருப்பு வஸ்த்ரம் அணிந்து இருப்பவரும், கையில் வில், அம்பு, வேல் வைத்து இருப்பவருமான தர்ம சாஸ்தா,  நம், மனதில், பொறாமை, காமம், லோபம் போன்ற பலவிதமான விஷ ஜந்துக்கள்  இருந்து, பீதியக் கிளப்பும் இந்த நேரத்தில், என் மனதில் நிரந்தரமாக தங்கி இருந்து, இந்த விஷ ஜந்துக்களை வேட்டை ஆடட்டும்.” என்கிறார்

அய்யப்பன் தான் அய்யனார்.

சபரிமலைக்குப் போகும்போது, திருச்சியில் உள்ள இரட்டை மலை அய்யனாருக்குச் சென்று, வணங்கி விட்டுச் செல்வதும், புது வருடம், திருச்சி, மேலூரில் உள்ள அய்யனாரை வணங்கி செல்வது, சர்வ சாதாரணமான ஒன்று.

சபரிமலை செல்லும்போது, கரிமலை இறக்கத்தில், பகவதிக்கென்று, (காளி) கல்லில் செய்து ஒரு சிலை வைத்திருப்பார்கள். அது கோவில் இல்லை. கோபுரம் இல்லை. போகிற போக்கில் கல்லோடு கல்லாக இருக்கும். அதற்கு நிறைய குங்கும், மஞ்சள் அர்ச்சனை செய்து, வழித்துணையாக வர  வேண்டும் என்று வணங்கிச் செல்வார்கள். அய்யப்ப பக்தர்கள். – இதுவும் ஒரு பக்தி.

முடிவுரை:

சினிமா கடைசியில், ஹீரோ, வராஹ அவதாரம் (சாமி வருவது போல்) ஒன்று எடுத்து, எதிரியை த்வம்ஸம் பண்ணுவார் பாருங்கள்- எச்சிலைக் கூட முழுங்காமல் பார்த்தேன். 

இப்படி என் வாழ்க்கையில் பின்னிப் பிணைந்த ஒரு கதையை, அழகாக காட்டிய இந்த நடிகருக்கு என் உளங்கனிந்த நன்றிகள்.

இந்தப் படம் நன்கு ஓடுவதில் இருந்தே எத்தனை பேர் இந்த அனுபவத்தை அடைந்து இருக்கிறார்கள் என்பது தான்

Sunday, 18 September 2022

T.V சங்கரநாராயணன் (TVS) – “எப்போ வருவாரோ”

 வாஷி=நவி மும்பை- நான் திருமணம் ஆகி மும்பையில் முதல் வேலை கிடைத்து செட்டில் ஆகிக் கொண்டிருத்த நேரம்

அப்போது. அணுசக்தி நகரில் என் சித்தி சித்தப்பா இருந்ததால் வாரக் கடைசியில் அங்கு போய் எப்போவாவது நடக்கும் கச்சேரியை கேட்பதுண்டு. அப்படித்தான் ஸ்ரீ ஓ எஸ் தியாகராஜன், ஸ்ரீ. டி.என் சேஷகோபாலன், ஸ்ரீ. டி.வீ  சங்கரநாராயணன், மகாராஜபுரம் சந்தானம் அவர்கள் கச்சேரி கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இவர்கள் எல்லோரும், மும்பை வந்தால், அணுசக்தி நகர், செம்பூர் பைன் ஆர்ட்ஸ், முலண்டு, மாடுங்கா என்று ஒரு சுற்று சுற்றிவிட்டு சென்னை திரும்பிப் போவார்கள்.

அப்படி ஒரு நாள் TVS அவர்கள் பாடினார். நான் அவரின் பரம ரசிகன், பல கச்சேரிகள், திருச்சி, பெங்களூர், மும்பை, சென்னை என்று கேட்டு இருக்கிறேன்.

அவர் ஒரு நிரவல் “புன்னகை முகம் ஆறு, அருள் வரம் தேடி வந்தேன், பன்னக சயன, மருகா, முருகா, குகா” என்று (கந்தன் என்ற பெயர் –பாடல்). அது இன்றும் எனக்கு ஞாபகம் இருக்கிறது. “அம்மாடி. என்ன ஒரு நிரவல். மிக பிரமாதம்” என்று சொன்னால் நான் நரகத்துக்குத்தான் போவேன். மிக மிக அதற்க்கும் மேலே ஒரு வார்த்தை போட ஆசை. எனக்கு இன்று வரை அந்த வார்த்தை தெரியவில்லை.

இன்னொரு நிரவல் ..அன்னை காமாட்சி போலே அருள் வடிவாக வந்தார். என்று காமகோடி ஆச்சார்யா பெயரில் பெரியசாமி தூரனின் (புண்ணியம் ஒரு கோடி) கீரவாணியில் - ஒரு பாடலில் ஒரு வரி அது. இப்படிப் பல பாடல்கள்.

12 வயதில், மணி ஐயருடன் கூடப் பாடியது, 1968 ல் முதல் கச்சேரி, மணி அய்யர் மறைந்த வருடம். 77 வயது மறைவு. எந்த ராகம் பாடினாலும் அதில்  கோலோச்சியவர். எத்தனை கச்சேரி, எத்தனை இடங்கள், எத்தனை கோவில் கச்சேரிகள்..

லயமும் பாவமும் ஒன்றாகச் சேர்ந்து நம்மை பரவசப்படுத்திய பாடல்கள் அவருடையது.

டி.எம். கிருஷ்ணா அவர்கள் சொன்னது போல், அவருடைய சங்கீதம் “filled with passion, romance, flourish and unrestricted flow” அவர் பாடல் விளக்கு என்றால் நம்மை வீட்டில் பூச்சியாக விழ வைப்பார்.

சென்னையில் நான் CA படிக்கும்போதி பல நண்பர்கள், உறவினர்கள் TVS பைத்தியம்.  அதிலும் சாத்தூர் AGS அவர்களின் மாப்பிள்ளை ஸ்ரீ  சுந்தரம் மாமா என்று ஒருவர் இருந்தார். அவர் டி‌வி‌எஸ் பாடல்களை அக்கு வேறு ஆனி வேறாக அலசுவார். ஏன் அவர் பெஸ்ட் என்று சொல்லி நம்மை பிரமிக்க வைப்பார். இப்படிப் பலருடன் நான் பழகியது டி‌வி‌எஸ் மேல் நான் வைத்த மரியாதையை இன்னும் கூட்டியது

அந்தக் காலத்தில் ஆடியோ டேப் மிகவும் பிரபலம் என்பதால் அவருடைய பல லைவ் கசேரிகளின் ரெகார்டிங் நான் வாங்கி ஒரு பொக்கிஷம் போல வைத்துக் கேட்பேன்.  இங்கிலீஷ் நோட்டுக்கும், எப்போ வருவாரோ பாடல்களுக்கு ஏங்கும் மக்களிடையே, நான் ஒரு வாசஸ்பதியோ (சகஸ்ரா), கன்னட கௌளையோ (சொகசு ஜூட) ஸ்வரங்கள் எப்படி பிரளயமாக வருகிறது என்று அவர் வாயையே பார்த்துக் கொண்டிருப்பேன்.

பெங்களூர் சேஷாத்ரிபுரம் ஒரு கச்சேரி, “ஈ பரிய சொபகாவ தேவரலி நா காணே” என்ற ஒரு தாசர் பாடலை சாரங்காவில் ஆரம்பித்து ராக மாலிகையில் பாடினார். குரல் அது மாத்திரம் குழைந்து கொடுக்க அள்ளிக் கொடுத்தார். அது தான் முதல் பாட்டு – அந்தக் கச்சேரியில்...

சாதாரணமாக அவர் வர்ணம் எல்லாம் பாடுவது கிடையாது. மாமா மணி அய்யர்வாள் மாதிரி நேரே பாட்டுதான்.  ஒரு ஹம்ஸத்வனி யோ நாட்டை யோ.. அதில் ஸ்வரம் நிச்சயமாக உண்டு. அதிலே அவர் குரலை சரி பண்ணிக் கொண்டு விடுவார். கற்பக விநாயகக் கடவுளே என்று ஒரு வரியை பாடி அதில் மேல், கீழ் எல்லாம் பாடிவிட்டு கசேரியை ஆராம்பித்து விடுவார். ஸ்வர மழை பொழிவார். சாதாரணமாக முதல் இரண்டு பாட்டு முடிந்தபிறகு போனால் பரவா இல்லை என்று நினக்கும் பல பாடகர்கள் இருக்கும் காலத்தில், முதல் பாட்டு மிஸ் ஸே பண்ணக் கூடாது என்று நான் நினைத்த ஒரே வித்வான் TVS தான்.

சங்கீத கர்வம், மிடுக்கு ஒன்றுமே கிடையாது. ஒரு சிரிப்பு, எனக்கு ரசிகர்கள் போறும், என்று ஒரு எண்ணம். மணி அய்யர்வாளிடம் இருந்து இவருக்கு வந்தது – இதெல்லாம்.

சாதாரணமாக மிடுக்குடன் ஜிப்பா என்ன சட்டை என்ன, அங்கவஸ்த்ரம் என்ன, காதில் தோடு, வெளியில் தெரியும் தங்கச் சங்கிலி, துண்டு என்ன, சென்ட் என்ன, “மீசைக்குக் கூட கருப்பு அடித்து” – என்று வரும் பாடகர்கள் இடையே, சாதாரணமாக ஒரு கதர் ஜிப்பா, போட்டுக் கொண்டு, லேசா ஒரு விபூதி கீற்று, ஏதோ தூங்கி எழுந்து மூஞ்சி அலம்பி, ஒரு காபி சாப்பிட்டு விட்டு வருவது போல், ஒரு மனிதர். ஆனால் உட்கார்ந்து பாட ஆரம்பித்தால், எவ்வளவு பெரிய கலைஞர், சரஸ்வதி கடாக்ஷம் கொஞ்சம் நஞ்சம் இல்லை, இசை மேதை- என்பது எனக்குத் தெரியும்.

கான கலாதரரின் முக்கியமான விஷயங்களை, அவர் எந்த எந்த விஷயங்களில் ரசிகர்களின் மனதை அபகரித்தாரோ, அதை அப்படியே தன்னுள் எடுத்துக் கொண்டு, தன்னுடைய பாணியையும் சேர்த்து, ஒரு ஜகஜ்ஜாலாம் செய்து, என்னை போன்று ஆயிரக்கணக்கான ரசிகர்களை கட்டிப் போட்டவர்.  

தான்  இரண்டு முக்கியமான என் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவங்கள். ஒன்று ஒரு மாதிரியான கலக்கமான (இப்போது நினைத்தாலும் பகீர் என்று இருக்கும்) நிகழ்ச்சி. இரண்டு நான் மிகவும் வருத்தப்படும் நிகழ்ச்சி.

வருத்தப்படும் நிகழ்ச்சி – நான் இப்போது குடியிருக்கும்
“ரமணியம் சுமுகம்” (ராஜா அண்ணாமலை புரம்) என்ற குடியிருப்பில்
, மொத்தம் 5 தளங்கள். நான் 4 வது தளத்தில் இருக்கிறேன். 5 வது தளம் “பெண்ட் ஹவுஸ்” மாதிரி. அந்தத் தளத்தை TVS மாமா 4 மாதம் முன்பு வாங்கி இருக்கிறார். அந்தத் தளத்தில், உள் வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது. 3-4 தடவை அவர் வந்து பார்த்ததாகவும் எனக்குச் செய்தி வந்தது. என் குடும்பத்தில் அனைவரும் மிகவும் சந்தோஷம் அடைந்தோம். ஒரு சங்கீத கலாநிதி, பத்ம பூஷண். நான் மிகவும் நேசித்த, மிக உயர்ந்த மனிதர். என் தளத்துக்கு மேலே வருகிறார் என்பதும், அவருடன் பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்ளலாம் மற்றும் சாதகம் பண்ண கேட்கலாம் என்றும் நினைத்துக் கொண்டிருந்தேன். அது கனவாகப் போயிற்று.

பகீர் நிகழ்ச்சி:

1982 வருடம் அப்போது நான் “வாஷி கான்வ்” (vaashi village)  ல் குடி இருந்தோம். அப்போது வாஷி ரயில் நிலையம் வரவில்லை. மான்கூர்ட் என்ற ஒரு station தான் கடைசி. வாஷி யிலிருந்து மும்பை போவதற்க்கு பஸ் தான். வாஷி பாலத்தைக் கடந்து மான்கூர்ட் வழியாக மும்பை யை அடைய வேண்டும்.

அப்போது செம்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் ல் TVS கச்சேரி. நானும் என் மனைவியும் போய் வருவதாக பிளான் செய்து கிளம்பினோம். அப்போது என் மனைவி கர்ப்பமாக இருந்தாள். 6 மாதம் என்று நினைக்கிறேன். பஸ் ஏறி சென்று செம்பூர் செல்ல வேண்டும். வாஷி பாலம் வருவதற்க்கு முன்பு, ஒரு ஸ்பீட் பிரேக்கர் ஒன்று உண்டு. நானும் என் மனைவியும் பின்னால் ஏறி நின்று கொண்டு இருந்தோம். ஸ்பீட் பிரேக்கர் வரும்போது ஒரு பிரேக் போட்டு வண்டி ஏறி இறங்கியது. அது பின்னால் ஒரு தூக்கு தூக்கிப் போட, என் மனைவி கத்த, நான் பதறிப் போய், ஒரு நிமிடம் என் மூச்சு நின்று விட்டது.  பஸ்ஸில் பல பேர் ஓடி வந்து என் மனைவியை பிடித்து உட்கார்த்தி வைத்து ஆஸ்வாஸப் படுத்தினார்கள. பிறகு மெதுவாக செம்பூர் ல் இறங்கி, மெதுவாக அரங்கத்திற்க்குப் போனால், மாடிக்கு தான் போக வேண்டும்’. கீழே ஃபுல் ஆகிவிட்டது.  மெதுவாக படி ஏறி, (நிறைய படிகள்), ஏறி உட்கார்ந்து கச்சேரி கேட்டோம்.  அப்போது அவர் பாடிய RTP- பிருந்தாவன சாரங்கா- “ஸ்ரீ ரங்கா ஹரி ரங்கா, பாண்டு ரங்கா, பிருந்தாவன சாரங்கா” – இன்றும் என் மனதில் இருக்கிறது. அது ஒரு “அட்வெஞ்சர்”.  இன்றும் அதை நினைத்தால் ஒரு பகீர் கலந்த சந்தோஷம் !!!!  

ஒரு ஆடியோ காசெட் ரொம்ப வருடங்களாக நான் வைத்து இருந்தேன். அதில் ஆபோகி- “மனசு நில்ப”, அடுத்து கல்யாணி ராகம் பாடி “நம்பிக் கெட்டவறல்லரோ” அதற்க்குப் பிறகு பைரவி பாடி “தனயுனி ப்ரோவ”.  அது என்னமோ நான் அடிக்கடி போட்டு கேட்ட பாடல். அதில் “இன குலோத்தம” – என்ற ஒரு இடத்தில் “ஒரு சொழட்டு சொழட்டுவார்” ஒவ்வொன்றும் அற்புதம். நான் பம்பாய் இருந்தபோதும் சரி ஆதற்க்குப் பிறகு துபாய் சென்று 6 வருஷங்கள் இருந்த போதும் சரி, பிறகு சென்னை – என் கூடவே இருந்தது. 

யூ ட்யூப் காலத்தில் இதெல்லாம் காணாமல் போனால் கூட அந்த நினைவுகள் பசுமையானவை.

சங்கீதக் கடவுள் என்று நான் கருதும் மணி அய்யர் அவர்களின் மருமான், அவருடன் மறுபடி உடன் பாடச் மேலே சென்று விட்டார்.

நமக்கு அதில் உடன் பாடில்லை. இருந்தாலும் அவருடைய பாடல்கள், கச்சேரிகள், கொட்டிக் கிடக்கின்றன -You tube ல்.

அவருடைய பேட்டியில், 1984  ல் வந்தது, இரண்டு விஷயங்கள் என்னை மிகவும் கவர்ந்தது

 

1.  முக்கியமான தவறுகள் வீத்துவான்களிடம் தான் இருக்கின்றது. ரசிகர்களிடம் அல்ல

2.  நாம் நன்றாகப் பாடினாலே போரும். ஜனங்கள் நிச்சயம் வருவார்கள்.

இங்கிலீஷ் நோட் பாடுங்கள் என்று மியூசிக் அகாடெமியில் உட்கார்ந்த எல்லோரும், ஒரு சேர எழுந்து கேட்டுக் கொண்டது, மறக்க முடியாத அனுபவம் என்கிறார்.

அவருடைய ஆத்மா சாந்தி அடையட்டும். அவர் இசை என்றும் அழியாது.

 

 

 

Friday, 12 August 2022

பெருமாள் கோவிலில் “ஸ்ரீ ருத்ரம் சொல்லி அபிஷேகம்”

கோகுலாஷ்டமி இன்னும் 10 நாட்கள் வரும் நிலையில் இந்தக் கோவிலை பற்றி எழுதலாம் என்று.......

பொன்னியின் செல்வன் டீசர்வெளி வந்த பிறகு, ஹரியும் ஹரனும் ஒண்ணு, அதை அறியாதவன் வாயிலே மண்ணு, என்ற வார்த்தை மிகவும் பிரபலமாகி விட்டது. தஞ்சாவூர் பற்றிய ஒரு கணிப்பு மிகவும் உச்சத்தில் சென்று விட்டது. அதே தஞ்சை மாவட்டத்தில் வாயளவில் பேசாமல், நிஜமாகவே ஒரு கோவில் ஹரி ஹர பேதமில்லாமல் இருக்கிறது என்பது தான் ஆச்சர்யம்.

இந்த சிறிய கோவிலில் பல ஆச்சர்யங்கள் அதிசயங்கள்

1)
எந்தப் பெருமாள் கோவிலிலும் , ஸ்ரீ ருத்ரம், சமகம் சொல்லி, பெருமாளுக்கு அபிஷேகம் செய்வதை யாரும் பார்த்திருக்க முடியாது. வீபூதி இட்டுக்கொண்டு பெருமாள் கோவிலுக்குப் போனாலே, நம்மை ஒரு மாதிரிபார்க்கும் பட்டாச்சார்யார்களை மைலாபூரிலேயே நான் பார்த்து இருக்கிறேன்.

அது மட்டுமில்லை நான் சொல்லப்போகும் இந்தக் கோவிலில் பட்டாச்சார்யார்களே, ஸ்ரீ. ருத்ரம் சொல்ல ஆரம்பித்த பிறகுதான், மற்றவர்கள் சொல்ல வேண்டும்.

அது மட்டுமல்ல.

2)
பஞ்ச கச்சம் கட்டிக் கொண்டு இருந்தால் தான் சடாறிவைப்பார்கள்.

3)
கிராமமே காலியாகி மடிப்பாக்கத்திலும், நங்கநல்லூரிலும், வெளி நாடுகளிலும் குடியேறிய பிறகும் கூட, பல பிராமண குடும்பங்கள் இன்றும் இந்த் கிராமத்தில் இருந்து அந்தக் காலத்தில் சொன்ன ஸம்ப்ரதாயங்கள், பூஜை, ஸ்வாமி புறப்பாடு எல்லாம் இன்றும், ஒன்று விடாமல் நடந்து கொண்டு இருப்பது ஆச்சர்யத்திலும், ஆச்சர்யம்.

4)
வரும் காலத்தில் கோவிலில் ஸ்வாமிக்கு விளக்குஏற்றுவதற்க்குக் கூட பணம் இருக்காது என்று அன்றே கணித்த முன்னோர்கள் கட்டளைஎன்று ஒன்றை ஏற்படுத்தி, ஒவ்வொரு உற்சவத்திற்க்கும், ஒரு குடும்பம் பொறுப்பு எடுத்துச் செய்வது என்று முடிவு செய்து, இன்றும் அந்த குடும்பத்தில் உள்ளவர்கள், “அவர்கள் அமெரிக்காவில் இருந்தாலும்”, அந்த நாளில் வந்து அபிஷேக ஆராதனைகள் செய்வது, இன்னும் ஆச்சர்யம்.

இந்தக் கோவிலில் உறியடி உத்சவம் மிகவும பிரசித்தம். அந்த உறியை, சிறுவர்களும், இளைஞர்களும் ஒரு நீளமான குச்சியால் முதலில் வேகமாக தட்டுவார்கள். பிறகு பிரமிடுபோன்று நின்று உயரே தூக்கப்படும் உறியை பிடிக்க முயல்வார்கள். இதை முதலில் ஒரு நீளமான குச்சியால் ஒரு அடி அடி அடித்து ஒரு வயதானவர் துவக்கி வைப்பார், அவரும் ஒரு கட்டளைக்காரர். அவர் குடும்பம் தான் முதலில் அடிக்க வேண்டும்.

இப்படி உறியை அடித்து விளையாடும் நபர்களின் மீது தண்ணியை மூஞ்சியில் அடிப்பார்கள். அப்போது அவர்கள் நிலை தவறி கீழே விழுவார்கள். அந்த தண்ணீர் முதலில் அடிக்கும் நபர் ஒரு கட்டளைக்காரர்கள் தான்.

5)
இன்றும் இந்த ஊரில் பிறந்தவர்கள், இந்த ஊர் பெருமாளைக் குல தெய்வமாகக் கொண்டவர்கள், தன் முதல் சம்பளத்தை அப்படியே பெருமாளுக்குக் கொடுத்து விடுவார்கள்.

6)
திருப்பதிப் பெருமாளுக்கு வேண்டிக்கொண்டு இங்கே பிரார்த்தனையை முடிக்கலாம். ஆனால் இங்கே
வேண்டிக்கொண்டு, திருப்பதியில் செய்ய முடியாது.

இப்படிப் பல பெருமைகளைக் கொண்ட ஊர் பூபதிராஜபுரம் என்று அன்று அழைக்கப்பட்டு, வராஹபுரி என்று பிறகு அழைக்கப்பட்டு, வரகூர் என்று அழைக்கப்படும் கிராமம் தான் இது.

சங்கீத மும்மூர்திகள் என்று அழைக்கப்படும் ஸ்ரீ. தியாகராஜர், ஸ்ரீ. முத்துசாமி தீக்ஷிதர், ஸ்ரீ. ஸ்யாமா சாஸ்த்ரிகள் போன்ற மகான்கள் அவதரித்த சோழநாட்டில், ஆந்திராவில் பிறந்த ஸத்குரு நாராயண தீர்த்தர் என்ற மகான், இங்கு வந்து, கிருஷ்ணனின் பிறப்பு, பால லீலைகள் மற்றும் ருக்மிணி கல்யாணம் வரை கூறும் கிருஷ்ண லீலா தரங்கிணிஎன்ற அற்புதமான பாடல்களை, எழுதி, அவரே பாடி, அதற்க்கு, பரமாத்மா நடனம் ஆடி, அவருடனேயே ஐக்கியமான புண்ய க்ஷேத்ரம் இது. இதற்க்கு ஆஞ்சநேயர் தாளம் போட, இப்போதும் அந்த "ஆஞ்சநேயர் தாளம் கொட்டி" ஆஞ்சநேயர் என்று அருள் பாலிக்கிறார்.

வரகூர், திருவையாறு திருக்காட்டுப்பளி மார்க்கத்தில் செந்தலை அருகே உள்ள ஒரு சிறிய கிராமம். வரகூர் பாதை என்று ஒரு பஸ் ஸ்டாப் உண்டு. அங்கிருந்து 2 கிலோமீட்டர் நடந்தால் கிராமத்தை அடையலாம். நடந்து சென்றால் பசுமையான புல் வெளிகளும், வயல் நெல் குருத்துகளும் அதன் பச்சை வாசனையும், வாழை தோப்பும் நம்மை சொக்க வைக்கும்.

மிகச் சிறந்த பாகவதோத்தமர்கள் பிறந்து, வளர்ந்து, மிகப் பெரிய பதவியை அடைந்து, காஞ்சி மஹா பெரியவர்களின் கையால் சன்மானம், ஏன், ஜனாதிபதி கையால் பரிசு பெற்று கௌரவிக்கப்பட்டிருக்கிறார்கள். சில பெயர்களைக் கீழே கொடுத்து இருக்கிறேன்

ஸ்ரீ கோபால பாகவதர், இன்று நாம் பாடும் ஸம்ப்ரதாய பஜனைக்கு வித்திட்டவர். ஸ்ரீ. எஸ். வீ குருஸ்வாமி சாஸ்த்ரிகள் ஸத்குரு ஸ்ரீ நாராயண தீர்த்தரின் கிருஷ்ண லீலா தரங்கிணியை எளிமைப் படுத்தி, எல்லோரும் இன்றும் பாடும்படியாக செய்த பெரிய மகான். வரகூர் aஸ்வாமிகள் என்று சொல்லப்படும், ஸ்ரீ. அச்யுத கிருஷ்ண சரஸ்வதி இங்கு பிறந்து, திருவாரூர் அருகே அரசவனங்காடு கிராமத்தில் சமாதி ஆனவர். இன்றும், அங்கு, அவரது அதிஷ்டானம், அரசவங்கட்டில் தினமும் அபிஷேக ஆராதனைகளுடன் சிறப்பாக இருக்கிறது. ஸாம வேதத்தில் கரை கண்டவர்கள் இந்த ஊரில் இருந்தார்கள் என்பது இன்னொரு சிறப்பு.

கிராமத்திற்க்கு உள்ளே நுழையும்போது இரட்டைப் பிள்ளையார் நம்மை அன்புடன் வரவேற்பார்கள். இவர்கள் மாமனார்-மாப்பிள்ளை பிள்ளையார் என்று தொன்று தொட்டு அழைப்பார்கள். அதன் எதிரில் அருமையான குளம். அதைக் கடந்து வந்தால், ஸ்ரீ ஆனந்தவல்லி உடனுறை, மகா கைலாச நாதர் கோவில் இருக்கிறது. ஸத்குரு ஸ்ரீ. நாராயண தீர்த்தர் அவர்களின் அதிஷ்டானம் இங்கு உள்ளது என்பது இன்னொரு பெருமை. இதை ஏணிப்படிகளில் மாந்தர்கள்என்ற நூலில் சிவன் ஸ்வாமிகள்மிக அழகாக எழுதி இருக்கிறார்

அதை தாண்டி அழகான கிராமம், கிராமத்தின் நடுவே மிக அழகான சிறிய கோவில். இங்குதான் ஸ்ரீதேவி உடனுறை ஸ்ரீ. வெங்கடேச பெருமாள். சத்குரு நாராயண தீர்த்தருக்கு, கிருஷ்ணனாக காட்சி கொடுத்து, ஸ்ரீ. கிருஷ்ண லீலா தரங்கிணி பாடிய இடம். முடிவில் காவல் தெய்வமாக பெரமனார்இருந்து கிராமத்தை இன்றும் காத்துக் கொண்டு இருக்கிறார்.

ஸ்ரீ விட்டல் தாஸ் மகாராஜ் அடிக்கடி சொல்லுவார் - ஜெயதேவர் பாடிய அஷ்டபதியை அவர் எங்கு பாடினார். பூரி ஜேகன்னாதர் கோவிலிலா இல்லை கொஞ்சம் தூரத்தில் அவர் பிறந்த கிராமம் இருக்கிறது அங்கேயா ? என்று. ஸ்ரீ நாராயணீயம் பாடிய பட்டத்ரீ கோவிலில் ஸ்வாமி எதிரில் பாடினாரா ? என்றும் தெரியாது. இன்றும் குருவாயூர் கோவிலுக்குச் சென்றார், ஸ்வாமி சன்னதியில் எதிரில் பாராயணம் செய்ய அனுமதி இல்லை.

ஆனால் வரகூரில் ஸ்வாமி சன்னதி எதிரில் மிக அருகில் தரங்கம் பாடலாம். இன்றும், பாகவதர்கள், ஸத்குரு பாடிய இடத்தில், தரங்கம் பாடுவது கண் கொள்ளாக் காட்சி.

ஸ்ரீமத் பாகவதத்தில் ராதையைப் பற்றிக் கூறவில்லையே என்ற ஆதங்கத்தில், பூரி ஜெகந் நாதரே ஜெயதேவராக அவதரித்து கீத கோவிந்தம் என்னும் பக்தி ரசம் சொட்டும் கிரந்தம் செய்தாராம். அந்த ஜெயதேவர் கண்ணனின் லீலைகளைப் பாடவில்லையே என்று வருந்தி, அவரே நாராயண தீர்த்தராக அவதரித்து கண்ணனின் லீலைகளைப் பாடினார் என்றும் இங்கு கூறப்படுவதுண்டு

தரங்கம் பாடல்கள் மட்டும் இல்லை. அது உபநிஷத் அடங்கிய ஒரு வேதம். "க்ஷேமம் குரு கோபால, மற்றும் வீக்ஷேகம் கதா" போன்ற பல அருமையான பாடல்கள் அடங்கிய தரங்கம், கலியைப் போக்க வந்த பொக்கிஷம்.

கிருஷ்ண லீலா தரங்கிணி பற்றி ஒரு அற்புதமான விளக்கம் சொல்வதுண்டு:

"
ஸ்ரீகோபாலன் என்னும் கார்மேகத்திலிருந்து பெருகிய- அவரது பெருங்கருணை என்னும் மழைத் தாரைகள், ஸ்ரீநாராயண தீர்த்தர் என்ற மலைமீது விழுந்து பரவி, அவை முழுதும் ஒன்று சேர்ந்து, இந்த கிருஷ்ணலீலா தரங்கிணி என்னும் ஆறாகத் தோன்றி, கிருஷ்ண பக்தர்கள் என்னும் வயலில் பாய்ந்தோடி, உலகை இன்பமுறவும் ஆனந்தமுறவும் செய்யும்!'

இந்தக் கிராமத்தில், உறியடி உத்சவம் மிகவும் பிரபலம். ஆவணி அவிட்டம் முடிந்து எட்டாம் நாள், கிருஷ்ண ஜனனம் என்ற ஜன்மாஷ்டமி யை ஒட்டி நடக்கும் அற்புதமான வைபவம். இந்த எட்டு நாளும், வரகூர் கிராமம் கோகுலம்போல கோலாகலாமாக இருக்கும் பூலோக வைகுண்டம் என்று கூட சொல்லலாம். நிதம் வேறு வேறு அலங்காரம், பாகவதர்கள் பஜனை, சதுர் வேத பாராயணம், ஸ்ரீ மத் பாகவத பாராயணம், தரங்கிணி பாடல்கள் என்று ஊரே அமர்க்களம் தான்.

ஸ்வாமி வெண்ணைத் தாழியில் வீதி உலா வந்து, வெளி மண்டபத்தில் வைத்து, இரவு, அபிஷேக அலங்காரங்களுடன் புறப்பாடுமிகவும் விமரிசையாக இருக்கும், ஸ்வாமி பாதையில் அங்கப் பிரதக்ஷிணம் செய்யும் பக்தர்கள் எல்லாம் பக்தியின் உச்சம். உறியடியோ கோவிந்தோஎன்று பக்தர்கள் கூக்குரல் எங்கு காண முடியாத அதிசயம். வழுக்கு மரம் ஏறுவது என்பது, மனிதர்களுக்கு ஏற்றத் தாழ்வு என்று இருந்தாலும், இறைவனின் அருள் இருந்தால், எந்த்த் தடைகளையும் சர்வ சாதாரனமாகத் தாண்டலாம் என்பதற்க்கு ஒரு உதாரணம்..

எத்தனை எழுதினாலும் போறாது. உறியடி உத்சவத்தை ஒரு முறை நேரில் பார்க்க வேண்டும்.

வாருங்கள், வந்து ஒரு முறை வரகூர் பெருமாளைப் பாருங்கள். அவர் பயத்தை மட்டுமல்ல, பயத்தின் காரணத்தையும், வேரோடு அழிக்கக் கூடிய அற்புத தெய்வம்.

இதில் இன்னும் சில சிறப்புகளை பார்ட் – 2 ஆக எழுத ஆசை.