Wednesday 29 June 2022

காலைத் தூக்கி நின்று....

 

ஆனித் திருமஞ்சனம் அடுத்த சில நாட்களில் வர இருக்க, கொஞ்சம் நடராஜர் தியானம்:

மாரிமுத்தாப் பிள்ளையின் இந்தப் பாடல், எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று.

சிதம்பரேசனைப் பற்றிப் பாடிய பல பாடல்கள் அற்புதம். 

முத்து தாண்டவர் என்பவரும் நடராஜரைப் பற்றி பல பாடல்கள் இயற்றி இருக்கிறார். அதில் ஒரு பாட்டு – “காணாமல் வீணிலே காலம் கழிதோமே” – இந்தப் பாட்டைப் படித்துப் பார்த்தால், சிதம்பரத்தை முழுவதும் பார்த்து விடலாம், கோவில் மதகு முதற்கொண்டு.....விவரித்து இருப்பார்.

இதே மாதிரி, கோபால கிருஷ்ண பாரதியின், “எந்நேரமும் உன் சன்னதியில்” என்ற பாட்டும், கோவிலின் வர்ணனை, உள் பிராகாரத்தில் உள்ள, பஞ்சாக்ஷர படி, குளம், கொடிக்கம்பம் என்று. கண்ணை மூடிக் கொண்டு கேட்டால், முழு கோவிலை வலம் வரலாம்.

மாரி முத்தாப் பிள்ளையின் இந்தப்  பாடலில் இரண்டு முக்கியமான விஷயங்கள் உண்டு: 

முதல் சரணத்தில், நடராஜரின் ரூப வர்ணனை. அடுத்த சரணத்தில் அவருடைய பக்தர்களின் வர்ணனை. இந்தப் பாடலை முழுவதும் கேட்டால், ஸ்வாமி தரிசனம் பண்ணிய புண்ணியமும், அடியார்களின் தரிசனமும் கிடைத்துவிடும்

பிறகு, கண்ணை மூடிக் கொண்டு ஒரு 5 நிமிடம் இந்த இன்ப நிலையை அனுபவிக்க வேண்டும்.

ஆரம்பத்தில் பல்லவியில், சோமாஸ்கந்தராக முருகனையும் கூப்பிடுகிறார்.

'காலைத் தூக்கி' பட்டில் உள்ள வரிகளை கொஞ்சம் பார்ப்போம்

செங்கையில் மான் தூக்கி

சிவந்த மழுவும் தூக்கி

அங்கத்தில் ஒரு பெண்ணை அனு தினமும் தூக்கி

திங்களை, கங்கையை, கதித்த சடையில் தூக்கி

கண்ணை மூடிக்கொண்டு, இந்த வரிகளை கேளுங்கள். உங்களுக்கு சிவனின் உருவம் மனதில் படியும். மேற் சொன்ன வரிகளுக்கு விளக்கம் தேவையில்லை.

அடுத்த சரணம்”

நந்தி மத்தளம் தூக்க

நாரதர் யாழ் தூக்க

தோம் தோம் என்று அய்யனும் ஸ்ருதியும் தாளமும் தூக்க

சிந்தை மகிழ்ந்து வானோர் சென்னி மேல் கரம் தூக்க

இந்த சரணம், பக்தர்களின் உணர்ச்சி பெருக்கான நிலை.

இந்தப் பாடல், எம். எஸ். அம்மா பாடி, அந்தக் காலத்தில், வெகு பிரசித்தம், என் பாட்டி, கொள்ளு பாட்டி முதற்கொண்டு, அனுபவித்துப் பாடுவார்கள்.

ஆனால், எனக்கு சஞ்சய் சுப்ரமணியம் ஒரு தரம் இந்தப் பாட்டை பாட, அதில் விழுந்தேன். மகாராஜபுரம் சந்தானத்திற்க்குப் பிறகு, நான் பாடலை கற்றுக் கொண்டேன் என்றால் அது சஞ்சய் பாடிதான்.  அதுவும் யதுகுல காம்போதி. ..ம். தனிச்சுவை. ராமரை, “ஹெச்சரிக்க கா ராமா” என்று கூப்பிட்ட ராகம்.

இந்தப் பாட்டெல்லாம், கோவிலுக்குப் போக முடியாமல், வீட்டில் இருப்பவர்களுக்கு, சிவ சாயுஜ்யம் கிடைப்பதற்காக, இறையருள் பெற்ற, கோபால கிருஷ்ண பாரதி, முத்துத் தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை, பாபநாசம் சிவன், போன்றவர்கள் போட்ட ராஜா பாட்டை.

மாரி முத்தாப் பிள்ளை யின் பல பாடல்களில் நகைச்சுவை ததும்பும் பக்தி இருக்கும்:

ஒரு பாடலில் சரணம் இப்படிப் போகிறது”

“என் மேல் உனக்கு என்ன கோபம்-

“ஆட்டுக் காலேடுத்து, அம்பலத்தில் நின்றீர்

அதனை சொன்னேனா.

ஒற்றை மாட்டுக் காரனென்று யாருடனாகிலும், வாய் மதனஞ்ச் சொன்னேனா..

தலை ஓட்டை வைத்து பிச்சை எடுத்தீர் என்று யாரிடமாவது சொன்னேனா

பல்லை காட்டி முப்புரத்தார் முன்னே நின்ற கதையைச் சொன்னேனா

எச்சிலுண்டதைச் சொன்னேனா (கண்ணப்ப நாயனார் கதை)

சாதி, தாய், தந்தையார் இல்லாதவர் என்று சொன்னேனா

இப்படிப் போகிறது, .....

“நிறைய பேர் கோவிலுக்குப் போயே ஆக வேண்டுமா  ? என்று கேட்கிறார்கள்”

நாவுக்கரசர் திருமறைக்காடு பதிகத்தில் இப்படிப் பாடுகிறார் “விரதமெல்லாம் மாண்ட மனத்தான் மனத்தார் தன்னை”.

அதனால் கோவிலுக்குப் போவது என்பது ஒரு விரதம், மெதுவாக அதிலிருந்து விலகி,

“சும்மா இரு சொல் அற – என்றலுமே

அம்மா பொருள் ஒன்றுமறிந்திலனே”

என்று கந்தரனுபூதியில் அருணகிரிநாதர் பாடுபவதைப் போல்.

இருக்கவேண்டும்

அது எப்படி முடியும்  ?

வீட்டில் உட்கார்ந்து இது போன்ற பாடல்களை கேட்டு, உள் வாங்கி ரசித்தாலே போதும். கோவிலுக்குப் போகவேண்டும் என்ற அவசியமே இல்லை

தியாகராஜ ஸ்வாமி, ராமனை நினைத்துக் கொண்டே அற்புதமான கிருதிகளை, கண்ணீர் மல்க பாடினார். அவர் திருவையாறிலேயே இருக்கும் தர்ம சம்வர்தினி கோவிலுக்குக் கூட எத்தனை முறை சென்றிருப்பார் எனத் தெரியாது.  இவரின் பக்திக்கு ராம பிரான், தன் புடை சூழ அவர் வீட்டுக்கு வந்தார்

ராமாயணத்தில் சபரி எந்த கோவிலுக்குப் போனாள். கீழ் ஜாதியில் பிறந்து, பூ பறித்து கொடுத்து, யாக சாலையை சுற்றி கூட்டி, மெழுகி, மற்ற நேரங்களில் ராம நாமாவைத்தான் சொன்னாள். எது பறித்தாலும், அதை ராமனுக்கே அர்ப்பணம் பண்ணினாள். எல்லா முனிவர்களும் ஒன்றாக, மேலோகம் செல்லும்போது, சபரியை அழைத்துக் கொண்டு போகவில்லை,

கண்ணீர் மல்க கேட்கிறாள். “நான் என்ன பாவம் செய்தேன், என்னை ஏன் அழைத்துக் கொண்டு போக மாட்டீர்கள்” என்று. அதற்க்கு அவர்கள் சொல்கிறார்கள். நாங்களாவது ஸ்வர்கத்தை, அவரின் பாத கமலங்களில் ஐக்கியமாக சென்று கொண்டு இருக்கிறோம். எந்த பாதத்தை நோக்கி நாங்கள் போகிறோமோ, அந்தப் பாதம் உன்னை தேடி வரும்”.

அப்படியே ராம லக்ஷ்மணர்கள், சபாரியை தேடி வருகிறார்கள்.

நான் துபாயில் இருக்கும்போது, ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் லலிதா சகஸ்ரநாமம் பாராயணம், குரு, வெங்கி அண்ணா அவர்களின் தலைமையில் பண்ணுவோம். அந்த ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம். கண்ணை மூடிக் கொண்டு, அம்பாள் பிரார்தனை. அற்புதமான தருணங்கள்.

இது ஒரு சக்ர வியூகம், வெளியே வருவது கஷ்டம். அபிமன்யு க்கு வேறு விதமான முடிவு. நமக்கு வேறு விதமான அனுபவம்.

இப்படியே பகவத் ஸ்மரணம் பண்ணிக் கொண்டே இருக்கவேண்டும்.

 

Sunday 26 June 2022

திருப்பைஞ்சீலி

 

திருச்சியில் மேற் படிப்பு படித்தும், 6 வருடங்கள் இருந்த போதிலும், திருச்சியைச் சுற்றியுள்ள பல கோவில்களைப் பார்ததில்லை.  வயதானபிறகு, கொஞ்சம் புத்தி வந்து, ஒரு பிரார்த்தனைக்காக, திருப்பைஞ்சீலி என்ற ஒரு க்ஷேத்ரத்திர்க்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.

கோவில் பெருமமையைச் சொல்லும்போது “அடைய வல்லவர்க்கு இல்லை அவலமே” என்கிறார் திருநாவுக்கரசர்

ஞீலி என்பது ஒருவகை கல்வாழை. பைஞ்ஞீலி என்பது பசுமையான வாழையைக் குறிக்கும். பசுமையான ஞீலி வாழையை தலவிருட்சமாக பெற்றதால் திருப்பைஞ்ஞிலி என்று இத்தலம் பெயர் பெற்றது. இப்பவும் வாழை மரத்தையோ, கன்றையோ கொடுத்து, பரிகார நிவர்த்தி செய்து கொள்கிறார்கள்.

இதில் என்ன ஆச்சர்யம் என்றால், தல விருட்சம் என்போம். மருந்துக்கு ஒரு மரம் இருக்கும்.  இந்த இடம் வளமாக இருந்தது என்போம் ! இப்போது, கட்டிடங்கள், மக்கள், என்று அங்கலாய்ப்போம் !!

ஆனால் இதற்க்கு மாறாக, மண்ணச்ச்நல்லூரில் இருந்து, திருப்பைஞ்சீலி செல்லும் அந்த 1 கிலோமீட்டர் முழுவதும் வாழை மரங்கள் தான். ஒரு 10 தோப்பு பார்த்திருப்பேன். ஒரு 5000 மரங்கள. பச்சை பசேலென்று, குலை தள்ளி எத்தனை மரங்கள். இப்படி ஒரு இயற்க்கை சூழலை, திருச்சிக்கு மிக அருகே எதிர்பார்க்க வில்லை.

தாதாசார்யார் தோட்டமாக இருந்து இப்போது கட்டிடங்களாக இருக்கும் ஸ்ரீரங்கத்தில் பக்கத்தில் இப்படியும் ஒரு இடம் !!! 

ஸ்தல புராணத்தில், நாவுக்கரசர்,  திருவானைக்கோவில் ஜம்புகேஸ்வரரையும், தாய்மானஸ்வாமியையும், தரிசனம் செய்து விட்டு, நடந்து வர, களைப்பால் பசியெடுத்து, ஒரு மரத்தின் கீழ் அமர, வயோதிக வேடத்தில், சிவ பெருமான், கட்டுச் சோறு, கொண்டு கொடுத்தாராம். அதை சாப்பிட்டு விட்டு, பக்கத்தில் இருக்கும் ஞீலீஸ்வரர் கோவிலைப் பற்றி, வினவ, அவரை அழைத்துக் கொண்டு சென்று, ரிஷபரூடராக, ஊமையம்மையுடன் காக்ஷி கொடுத்தாராம்.

இப்பவும் இந்தக் கோவிலுக்கு உள்ளே செல்லும்போது, இடது புறத்தில், சிவன், நாவுக்கரசருக்கு, ஒரு மூட்டையில் சாப்பாடு கொடுப்பதுபோல், விக்ரகம், அதன் எதிரில், பெரிய நந்தி தான் ஆச்சர்யம். ஏனெனில் உள்ளே இருக்கும் ஞீலீஸ்வரருக்குக் கூட அவ்வளவு பெரிய நந்தி இல்லை. பக்தனோடு சேர்ந்து இருக்கும் ஸ்வாமிக்கு “ஸ்பெஷல்” நந்தி.

மூன்றாம் திருமுறை- தேவாரத்தில்

“தொத்தின தோள் முடியுடைய வன்றலை பத்தினை நெறித்த பைஞ்சீலி மேவலான்” என்கிறார்.

““கொத்தாகவுள்ள இருபது தோள்களைக் கொண்ட இராவணனின் முடியுடைய தலைகள் பத்தையும் இறைவன் நெரித்தான். அப்பெருமான் திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில்” என்று அர்த்தம்.

ராமன் ராவணனை அழிப்பதற்க்கு முன்பு, சிவனும், கொஞ்சம் பயம் காட்டி இருக்கிறார் என்பது தெரிகிறது.

சேக்கிழார், தனது பெரிய புராணத்தில், நாவுக்கரசர், பைஞ்சீலியில், தொண்டு செய்து காலத்தைக் கழித்ததை, எப்படி சொல்கிறார் என்று பாருங்கள்:  !!!!

பைஞ்ஞீலியினில் அமர்ந்து அருளும்பரமர் கோயில் சென்று எய்தி

மைஞ்ஞீலத்து மணி கண்டர் தம்மை வணங்கி மகிழ் சிறந்து

மெய்ஞ்ஞீலிர்மையினில் அன்புருக விரும்பும் தமிழ் மாலைகள்பாடிக் கைஞ்ஞீடிய தம் திருத்தொண்டு செய்து காதலுடன் இருந்தார்   5.1.31

 இதை ஒரு முறை, தவறில்லாமல் பார்த்துப் படித்தாலே, அவருக்கு, சிவபெருமானை விட்டு, இன்னொரு மூட்டை சாப்பாடு கொடுக்கச் சொல்லலாம்  !!!!!

 சிவ பெருமான், நாவுக்கரசரை, கூட்டிக்கொண்டு போய் இந்தக் கோவிலில் சென்று மறைந்து போக, உள்ளம் உருகுகிறார். தன்னுடன் வந்து நீயா ?  என்று

 “அடியேனைப் பொருளாய் அளித்த கருணை எனப் பாடல் புரிந்து, விழுந்து விழுந்து, கண்ணீர் மாரி பயில் வித்தார்” என்கிறார்.

 திருப்பள்ளி எழுச்சியில் – “தொழுகையர், அழுகையர், துவள்கையர் ஒரு பால்” (பால் என்றால் புறம்) என்கிறார் மணி வாசகப் பெருமான். கடவுளை நேரில் பார்க்காத பக்தனே இப்படி துவளும்போது, கூட இருந்தவர்- அந்த பெருமான் என்று அறிந்த பின் உள்ளம் எவ்வளவு பூரிக்கும் !!!

 என்ன ஒரு அற்புதமான் தமிழ். அந்தக் காலத்தில் எப்படி தமிழின் மூலம் இறையை அனுபவித்து இருக்கிறார்கள் ?

 விசாலாக்ஷி தாயார் சன்னதி தனியே இருக்கிறது. இதிலும் ஒரு ஆச்சர்யம் உண்டு. இங்கே  நீல நெடுங் கண் நாயகி என்ற பெயரிலும் ஒரு அம்பாள் விக்ரஹம் இங்கு உண்டு.  கும்பகோணம் மங்களாம்ம்பாள் மாதிரி கொஞ்சம் பெரிய விக்ரஹமாக இருக்கும்,  விசாலக்ஷி க்குத் தான் அர்ச்சனை, அபிஷேகம் நடக்கிறது. நீல.நாயகிக்குக் கிடையாது. ஆனால் த்வஜஸ்தம்பம் நீல. நாயகிக்குத்தான் இருக்கிறது.

இந்த ஆச்சர்யத்தை, அங்கு இருத ஷண்முக குருக்களிடம் கேட்டபோது, அவர் “விசாலக்ஷி” அம்மன் சற்று “பின்னப்பட்டு விட்ட படியால், தோஷ நிவர்த்திக்காக, நீல நெடுங்கண் நாயகியை பிரதிஷ்டை பண்ணினோம்”.  ஆனால் புராதானமாக இருக்கிற அம்பாளைத் தான் பூஜை செய்ய வேண்டும் என்ற ஆகமப்படி, பூஜை நடந்து கொண்டு இருக்கிறது” என்றார்.

அடுத்தது, நாம் இந்த்க் கோவிலில் முக்கியமான எமன் சன்னதிக்கு வருவோம். திருக்கடையூரில், மார்க்கண்டேயனுக்காக எமன் சம்ஹாரம் பண்ணப் பட்ட பிறகு, அழிக்கும் தொழில் ஸ்தம்பித்துப் போக, ப்ரம்மா, விஷ்ணு எல்லோரும் சென்று முறையிட, திருப்பைஞ்சீலி வந்து பல ரிஷிகள், கடும் தவம் புரிய, மனமிரங்கிசிவன், எம தர்மராஜரை உயிர்பித்த இடம் இது.

இது பூமி மட்டத்தின் கீழே இருக்கிறது, குடவரை கோவில் போல். பூமியில் இருந்து உயிர்பித்தார் என்பதை காட்டுவது போலே. சோமாஸ்கந்தர் என்று சொல்வது போல், தாக்ஷயானி யோடு, மிருத்யுஞ்சய மூர்த்தியும் மடியில் முருகனும், கீழே காலுக்கடியில் எமன், - ஸ்வ்யும்பாக தோன்றிய உருவம்.

சட்டென்று, ஸ்வயம்புவாகத் தோன்றியது, என்றால் எனக்கு உடனே ஞாபகம் வருவது, வேதாரண்யத்தில், திருமறைக்காடர் என்று போற்றப்படும் சிவனின்  பின்னால், திருமணக் கோலத்தில், பார்வதி சிவனோடு அற்புதமாகக் காட்சி அளிப்பார். இது அகத்தியருக்காக காண்பிக்கப்பட்ட கல்யாண கோலம். அற்புதமான ஸ்வயம்பு மூர்த்தி.

இங்கு திருக்கடையூரில் சென்று 60 வது 80 வது கல்யாணம் செய்து கொள்ள முடியாதவர்கள், இங்கு செய்து கொள்கிறார்கள். திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பேறு, இப்படி பல பரிகாரங்கள் இந்தக் கோவிலில் செய்து வருகிறார்கள்.

நவக்ரஹத்துக்கு சன்னதி இல்லை, எமன் சனீஸ்வரருக்கு அதிபதி என்பதால். ஆனால் நவக்ரஹம், 9 படிகளாக இருக்கிறது, நாம் இறங்கி ஸ்வாமி தரிசனம் செய்ய வேண்டும்.

 வேறு கோவில்:

கும்பகோணம் செல்லும் வழியில், திருக்கோடீஸ்வரர் என்று ஒரு ஸ்தலமும் உண்டு. அங்கே ஒரு பக்தனுக்கு இரங்கி, சிவன் கட்டளையிட, எமன் இந்தக் கோவிலுக்கு வருபவர்களை எமன் துன்புறுத்தக் கூடாது என்று கேட்டுக் கொண்டார் -  என்பது.

கும்பகோணத்தின் அருகில் இருக்கும் ஸ்ரீ வாஞ்சியத்திலும் எமனுக்கு ஒரு சன்னதி  உண்டு.

அற்புதமான கோவில், அழகான தரிசனம், அமைதியானது மனசு.

 



Saturday 18 June 2022

தகப்பன் (குரு) சாமி

 

இன்றைக்கு தகப்பர் தினம்.  (Father’s day).  ஒவ்வொரு ஆணும் ஒரு வகையில் தகப்பனே, அவரு(னு)க்கு திருமணம் ஆனால் தான் என்பது இல்லை ! குழந்தை பிறந்தால் தான் என்பதும் இல்லை.  !!

ஒவ்வொருவரும் தம்மை ஒரு தந்தையாக பாவித்து, இந்த உலகை பார்த்தால், பொறுப்பு உணர்ச்சி தானாகவே வரும். பொறுப்பு என்று வந்து விட்டால் பயம் தானாகவே வரும். பயம் வந்தால், அந்த பயத்தைப் போக்க பக்தியின் உதவியை நாடுவோம். நாம் பக்தியை நோக்கி போக நினைக்கும்போது, ஒரு குரு உடனே நம்மிடம் தோன்றி, வழி நடத்திச் செல்வார்.  குரு நம்மிடம் வந்தவுடன் நாம் கவலை இல்லாமல் நாம் பாட்டுக்கு நம் வழியில் செல்லலாம்.  எப்படி, ஒரு குழந்தை, தன் தந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு, ஒரு பெரிய கூட்டதில், போகும்போது, ஏதாவது கவலைப் படுகிறதா ? இல்லை. ! காரணம் அப்பா இருக்கிறார் என்பது தான். அது போலத் தான் குரு இருக்க கவலை இல்லை.

பரமாத்மா ஜீவாத்மா ஒன்று சேருவதற்க்கு காரணம் குரு. ஆன்மீகத்தில் குரு என்றவுடன் எனக்கு ஞாபகம் வருவது ஆஞ்சநேய ஸ்வாமி. அவர் தான் ராமன் என்ற பரமாத்வாவையும், சீதை என்ற ஜீவாத்மாவாவையும் இணைக்கிறார். அதனால் தான் ராமாயணத்தில், இந்தப் பகுதியை சுந்தர காண்டம் என்கிறோம்.

ஒரு குரு தகப்பனார் ஆக முடியுமா என்ற கேள்விக்கு, ராமாயணத்தில் அற்புதமாக விளக்கப் பட்டிருக்கிறது

“விஸ்வாமித்ரர். மிதிலைக்குச் சென்று ராமனை அறிமுகப்படுத்துகிறார். அவர் சொல்கிறார்- இக்ஷ்வாகு குலத்திற்க்கு, பெருமை சேர்த்த பல பெயர்களை சொல்லிக் கொண்டு வந்த அவர், புத்திர காமேஷ்டி யாகத்தால் ராமன் பிறந்ததைச் சொன்னார். எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, இந்த ராமன் தசாரதனுக்குப் பெயரளவில் மட்டும் தான் புத்திரன், ராமனை வளர்த்த பெருமை அவரின் குரு வசிஷ்டரையே சாரும்” என்று கூறினார்.

அது போல் தான் நம் குருசாமியும்.

என் தகப்பனார் எனக்கும் என் சகோதர்களுக்கும் தகப்பனார் என்பது விட, திருச்சியில் பல இளைஞர்களுக்கு, பல குடும்பங்களுக்கு, பல மாந்தர்களுக்கும் ஒரு சிறந்த குருசாமி என்ற பெயரில் ஒரு சிறந்த தகப்பனாக இன்றும் இருக்கிறார் என்பது தான் பெருமை.

இது அவருக்கு, “சத்யமான பொன்னு பதினெட்டாம் படியில் இன்றும் கலியுக வரதனாய், கண் கண்ட தெய்வமாக இருக்கும் அய்யப்பன்” இட்ட கட்டளை என்று நான் நினைக்கிறேன்.

அதனாலோ என்னவோ, தாயும் தந்தையுமாய், தாயுமானவராய் எழுந்து அருளி, அருள் பாலிக்கும், மாத்ரு பூதேஸ்வரர் என்று நாம் கொண்டாடும், தாயுமானவ ஸ்வாமி இருக்கும் ஊரில் அவர் இருக்கிறார்.  

முத்து ஸ்வாமி தீக்ஷிதர், தாயுமானவர் ஸ்வாமியை பற்றி எழுதிய பாடலில் “தம் அடியார்களின் சந்தோஷத்திற்க்கு காரணமாக இருப்பவர். கருணையுள்ளம் படைத்தவர்” என்று எழுதுகிறார்.

அதே போலத்தான். நம் குருசாமியும். நம்மை சபரி மலைக்கு வழி நடத்துவதில், ஒரு தந்தையாக, ஆன்மீக விஷயங்கள் மட்டுமின்றி, வாழ்வியல் முறைகளிலும், குடும்ப பிரச்னைகளிலும வழி காட்டும், சிறந்த குருவாக. அன்னதானம் செய்வதில், எல்லோருக்கும் சரியான நேரத்தில், மலைப் பாதையிலும் சரி, சன்னிதானதிலும் சரி, மலைக்குப் புறப்படும்போதும் சரி, அய்யப்ப பஜனை முடிந்து உணவு எல்லோருக்கும் கிடைத்ததா, என்று பாசத்தோடு கேட்பதில் ஒரு தாயாக இருப்பது இப்படி. -இது எல்லோராலும் சாத்தியமே இல்லை.

தந்தை என்பவன் வீரனாக இருக்க வேண்டும். ஒரு படையை/குடும்பத்தை வழி நடத்திச் செல்வதில் ஒரு தனித் திறமை வேண்டும். இந்த தந்தை குணம் குருசாமியிடம் இருந்ததை பலர் பார்த்து இருக்கிறோம்.

சபரி மலை, போய் வந்த நம் ஒவ்வொருக்கருக்கும், ஒரு கதை இருக்கும், அந்தக் கதையில், ஏதோ ஒரு வகையில்,  நம் குருசாமி இருப்பார்.

நாம் தாயாக பல பேரை நினைக்கலாம். என் அதுதான் சிறந்த உறவு முறை. பாரத மாதா என்று, அதனால் தான் சொல்கிறோம். ஆனால் தந்தை முறை, எல்லோருக்கும் வராது. இன்னொரு ஆண் மகனை என் தந்தை என்று ஒப்புக்கொள்ள மனம் வராது. ஆனால், நம் குருசாமி, நிறைய பேருக்கு “ஆன்மீக ஒளி” காட்டும் ஒரு ஆசானாக, தந்தையாக, தாயாக இருக்கிறார். இந்தப் பேறு எல்லாருக்கும் கிடப்பதில்லை.

மூக்கில் மேல் விரல் வைத்த அய்யப்பனுக்கே, அம்மை அப்பன் குழப்பம் உண்டு. இது ஒரு ஸ்வாரஸ்யமான கதை. அதையும் கொஞ்சம் கீழே பார்ப்போம்:

ஒரு சமயம் தஞ்சை ஸ்ரீ பிருஹதீஸ்வரர் ஆலய பிரஹ்மோத்சவம் நடைபெற்றது.

விழா முடிந்து அனைத்து வித்வான்கள் அவரவர்கள் இருப்பிடம் திரும்பினார்கள். ஆனால் அரசன் ஸ்ரீ அப்பய்ய தீக்ஷிதர் அவர்களையும், தாதாசார்யார் அவர்களியும் தன்னுடன் சிலகாலம் இருக்கும்படி வேண்டுகிறான். பல க்ஷேத்ரங்களை தர்சித்து வரும்போது மூக்கின் மேல் வலது கை விரலை வைத்துக்கொண்டு யோசனையில் இருப்பதுபோல் விக்ரஹமுடைய ஸ்ரீ ஐயப்பனை ஒரு ஊரில் தர்ஸிக்க நேரிடுகின்றது.

இதை பார்த்து அதிசயித்த ராஜா கேட்டார்: இந்த விக்ரஹம் ஏன் இப்படி யோசிக்கின்ற பாவனையில் உள்ளது?”

அந்த ஊரில் இருக்கும் வயதானவர்களில் சிலர் முன் வந்து பவ்யத்தோடு அரசினிடம் சொன்னது:

அரசனே, இந்த விக்ரஹத்தை வடித்த ஸ்தபதிக்கு ஐயப்ப சாஸ்தா இப்படி தீர்க்க சிந்தனையில் இருப்பதுபோல் தர்ஸனம் தந்துள்ளார். தமக்கு தர்ஸனம் கிடைத்த அந்த காட்சியின்ப்படியே அந்த ஸ்தபதி மூர்த்தியை வடித்துவிட்டார். பிற்காலத்தில் ஸர்வ சாஸ்திர நிபுணரும், மஹா ஞானியுமான ஒரு மஹான் இங்கு வருவார். அவர் இதன் ரஹஸ்யத்தை உலகுக்கு எடுத்துச் சொல்லுவார். அந்த க்ஷணமே ஐய்யப்பனும் மூக்கிலிருந்து விரலை எடுத்து விடுவார்.

 

ராஜா தாதாசார்யாரை நோக்கி இதன் ரஹஸ்யத்தைச் சொல்லமுடியுமா என கேட்க, தனது மனதில் தோன்றிய கருத்தை கீழ்கண்ட ஸ்லோகம் மூலம் தெரிவிக்கிறார்:

 

விஷ்ணோ: ஸுதோஹம் விதிநா ஸமோஹம்
தந்யஸ் - ததோஹம் ஸுரஸேவிதோஹம் |
ததாபி பூதோச ஸுதோஹம் ஏதைர்
பூதைர் - வ்ருதச் சிந்த்யதீஹ சாஸ்தா ​​||

 

பொருள்:

 
மோஹினி ருபமாய் விஷ்ணு இருந்தபோதுதான் நான் பிறந்தேன். ஆதலால் நான் விஷ்ணுவுக்கு மகன். பிரஹ்மாவுக்கு சமானமானவன். நான் மிக சிறந்தவனும்கூட. ஆதலால்தான் தேவர்கள் என்னை வாழ்த்தி போற்றுகின்றார்கள். விஷயம் இப்படி இருக்கும்போது, சுடுகாட்டில் பூத கணங்களால் சூழப்பட்டு வாழ்ந்துவரும் சிவனின் மகன் நான் என்று ஒரு சிலர் என்னை சொல்லுவதை நினைக்கும்போது எனக்கு வருத்தமாக இருக்கிறது என்று சாஸ்தா நினைக்கின்றார்.

 

இதை கேட்ட ஐயப்பன் மூக்கிலிருந்து விரலை எடுக்கவில்லை. பிம்பம் அப்படியே இருந்தது. எந்த சலனமும் விக்ரஹத்தில் இல்லை.

 

உடனே அரசன் அப்பய்ய  தீக்ஷிதர் அவர்களை வணங்கி இந்த ஹரிஹரபுத்ரனின் கோலத்தின் வாஸ்தவமான அபிப்ராயத்தை எங்களுக்கு தெரியப்படுத்தவேண்டும் என பிரார்த்திக்கின்றான்.

 

தீக்ஷிதர்வாளும் தனது அபிப்ராயத்தை ஒரு ஸ்லோகம் மூலம் சமர்ப்பிக்கின்ரார். இதோ அந்த ஸ்லோகம்:


அம்பேதி கெளரீம் அஹம் ஆஹ்வயாமி
பத்ந்ய பிதுர் - மாதர ஏவ ஸர்வா : |
கதம் நு லக்ஷ்மீம் இதி சிந்தயந்தம்
சாஸ்தாரம் ஈடே ஸகலார்த்த ஸித்த்யை ​​||

 

ஸ்லோகத்தின் அர்த்தம்:

விஷ்ணு பகவான் மோஹினி அவதாரம் செய்த சமயத்தில் பரமசிவனுக்கு குமாரனாக பிறந்தேன் நான். ஆகையால் கைலாசம் சென்று தந்தையான பரமசிவனை தர்ஸிக்கும்போது பார்வதி தேவியை அம்மா என்று அழைப்பேன். தகப்பனாரின் பத்னிகள் அனைவரும் குழந்தைக்கு அம்மாதானே. ஆனால் வைகுண்டம் செல்லும்போதுதான் குழப்பம் வருகின்றது. அங்கு என் தாயான மஹாலக்ஷ்மியை- விஷ்ணுவின் மனைவியை - நான் என்ன முறை சொல்லி அழைப்பது என்று புரியவில்லை.

 

இம்மாதிரி அர்த்த புஷ்டியுள்ள ஸ்லோகத்தை பக்தியுடன் தீக்ஷிதர் அவர்கள் கூறிய அந்த க்ஷணம் சாஸ்தா தனது வலக்கரத்தின் விரலை மூக்கிலிருந்து விலக்கி விடுகிறார்

ஜீனி கண்ட் – என்ற ஒரு அறிஞர், தந்தையைப் பற்றி இப்படி எழுதுகிறார்

“ஒரு தந்தையின் நம்பிக்கை என்பது அந்தக் குடும்பத்தை வழி நடத்திச் செல்லும், அணையா விளக்கு”

அந்த நம்பிக்கையை சபரி மலை செல்லும் ஒவ்வொரு சாமியிடம் அந்த சாமியை சார்ந்த குடும்பத்திடம், விதைதது தான் ஒரு பெரிய ஆச்சர்யம்.

சபரிமலைக்கு. குருசாமியின் கீழ், சென்ற நம் எல்லோரும் அவர் குழந்தைகள். அவரையும், அவரது நிழலாக அவர் கூடவே இருக்கும் அவரது துணைவியார், என் தாய், அவர்களுக்கும்,  நாம் எல்லோரும் இந்த ஜன்மத்தில் நன்றி சொல்லி அவர் நீடூழி வாழ பிரார்தனை செய்வோம்.