Wednesday 30 December 2020

செம்மங்குடியும் மார்கழி மாதமும்

 

இந்த சிற்றுரைக்கு - ஷ்யாமளா தண்டகமும், திருப்புகழும் என்று கூட தலைப்பு வைக்க நினைத்தேன்

மார்கழி மாதத்தில், திருப்பாவை, திருவெம்பாவை தவிர, மேற் சொன்ன இரண்டையும் பற்றி கொஞ்சம் “அசை” போடலாம் என்றுதான் இது.

நான் ஏதோ இரண்டையும் ஆராய்ந்து கட்டுரை எழுதப்போகிறேன் என்று பயப்பட வேண்டாம். என்னை இந்த இரண்டும் எப்படி என் வாழ்க்கை நீரோட்டத்தில் நின்று யோசிக்க வைத்தது/பாதித்தது என்பதைப் பற்றித்தான் இது.

செம்மங்குடியில் எங்கள் வீடு, பெருமாள் கோவிலில் இருந்து நான்காவது வீடு. மார்கழி மாதத்தில் விடியற் காலை நான்கு மணிக்கு, பாட்டு போட்டு விடுவார்கள். அதில் பல பாடல்கள், எனக்கு இன்றும் ஞாபகம் இருக்கிறது.

உதாரணமாக, பாடகி எம், எல். வசந்தகுமாரியின் யின் திருப்பாவை. “திருப்பதி மலைவாசா வெங்கடேசா” என்ற T M சௌந்தர ராஜனின் பாட்டைச் சொல்லலாம். (இதற்க்குப் பிறகு வேறு எங்கேயும் நான் இந்தப் பாட்டைக் கேட்டதில்லை). “அங்கம் ஹரே” என்று கனகதாரா ஸ்தோத்ரமும் உண்டு

இதில் முக்கியமாக, 5 செகண்ட் வீணை வாசித்தவுடன், ஒரு பெண்மனி “மாணிக்க வீணாம் உபலாயந்திம்” என்று “பொட்டில் அடித்தார் போல” ஒரு பாட்டு ஆராம்பிப்பார்.  ஸ்லோகம் போன்று நீண்ட வரிகளோடு ஒரு 15 நிமிடம் ஒரு பாட்டு வரும். அதுதான் பின்னாளில், நான் தெரிந்துகொண்ட ஷ்யாமளா தண்டகம்.  

கொஞ்சம் ஷ்யாமளா தண்டகம் பற்றி:

தண்டகம் என்பது ஒரு செய்யுள் போன்று, அதில் 26 வார்த்தைகள், அதற்கு மேலேயும் வரும். ஒரே மூச்சில் பாடினால்தான் அது அழகாக இருக்கும். இல்லாவிட்டால் நமக்கு தொடர்ந்து படிப்பது கஷ்டமாகக் கூட இருக்கும். இது ஒரு செய்யுள் போல இல்லாமல், உரை நடை போல கூட இருக்கும்.

இதை இயற்றிவர் மஹாகவி காளிதாசன். பாரதியார் “கம்பன் என்றொரு மானுடன் வாழ்ந்ததும், காளிதாசன் கவிதை புனைந்ததும் தெரியாமல் போயிற்று” என்று பெருமையாகச் சொல்லும் ஒரு புலவர்.  அம்பாளின் அருளுக்கு ஏங்கி, அதைப் பெற்றவுடன், பீறிட்டுக் கொண்டு வந்தது இந்த ஷ்யாமளா தண்டகம். மிகவும் பட்டினி கிடந்து இறக்கும் தருவாயில் இருப்பவனுக்கு, சோறு கிடைத்தால் எப்படி சாப்பிடுவான். அது போல்.

திரும்பவும் செம்மங்குடி:

எனக்கு செம்மங்குடியில், கோவிலில்,  இந்தப் பாட்டு ஆரம்பித்தவுடன், கடுப்பாக இருக்கும். “யாராவது மார்கழி மாதத்தில் விடியற் காலை 5 மணிக்கு மூச்சு விடாமல் பாடுவார்களா ?  (அரைத்தூக்கத்தில் ரசித்த ஸ்லோகமும் இதுவே..என்பது வேறு விஷயம்)  இவ்வளவு நீளமான வார்த்தைகள். யாரு இந்த பாடும் அம்மா !!!, இப்படிப் படுத்தறாளே”, என்று இருக்கும். போதாக்குறைக்கு, சிவன் கோவிலில் இருந்து, விஸ்வநாத ஆசாரி தன் குழுவோடு “தோடுடைய செவியன்” என்று பாடிக்கொண்டே வருவார்கள். ஜால்ரா வேறு. கோவில் மணி மாதிரி.  என் வீட்டைக் கடந்து போனபின்பு, “அப்பாடி” என்று இருந்தால், “u turn”  போட்டு, “தில்லை வாழ் அந்தணர்க்கு அடியார்க்கும்” என்று பாடிக்கொண்டு செல்வார்கள். போதாதிற்கு, சீர்காழி கோவிந்தராஜன் வேறு “சின்னஞ்சிறு பெண் போலே” என்று பாட..... (சீர்காழி பாடினால், இந்தப்பக்கம் மணக்கால் அய்யம்பேட்டை, அந்தப்பக்கம் சேங்காலிபுரம் வரை கேட்கும்)

இதை விட கோவிலில் பாட்டு போடும், record player என்பது ஒரு மினி  ஜெனேரேடர் மாதிரி இருக்கும்.  அதில் வட்டமாக ஒரு  சாதனத்தைப் போட்டு. ஒரு  கைப்பிடி மாதிரி இருக்கின்ற ஒன்றில் ஒரு ஊசியைப் போட்டு, அந்த ரெகார்ட் (தட்டில்) மேல் வைப்பார்கள். அது பாட ஆரம்பிக்கும்.   பாட்டு முடிந்தவுடன் அந்த ஊசியைத் தூக்கிப் போட்டு வேறு ஒரு ஊசி (அடுத்த ரெகார்டுக்கு). அது பாட ஆரம்பிக்கும்.  இதில் என்ன வேடிக்கை என்றால்,  அந்த ஊசி ஒரு சின்ன டப்பாவில் (பொடி டப்பா  மாதிரி)  இருக்கும் அந்த டப்பா காலியானவுடன், அதை தூக்கிப் போட்டு விடுவார்கள். அதற்க்கு நாங்கள் அடித்துக் கொள்வோம்.   முன்னமேயே "ரிசர்வ்" செய்து வாங்கி கொள்வோம்.  இப்போது  நினைத்தால் அதெல்லாம் பைத்தியக்காராத் தனமாகக் கூட தோன்றும்.  ஆனால் அந்த வாழ்க்கையின்  நினைப்பே சுகமானது.

இப்போதும் அதே மாதிரி டப்பா இருக்கிறது. அதை  இரண்டு பகுதியாகப் பிரித்து,  சாப்பிடுவதர்க்கு முன்,  சாப்பிட்ட பின் என்று மாத்திரை வைத்து இருக்கிறேன்.  !!!!

அரைப் பரீட்சை முடிந்து, ஸ்கூல் லீவ் விட்டபிறகு, தொடங்கும் மார்கழி மாதத்தில், விடியற்காலை தூக்கம் என்பது, ஒரு அனுபவம். அது ஏதோ எழுதினோம், போனோம் என்று இல்லாமல், ஒவ்வொருவரும் அனுபவிக்க வேண்டியது. அதைக் கூட அனுபவிக்காமல் இப்படி பாட்டு போட்டு கடுப்பேத்தினால் எப்படி இருக்கும் ?

மார்கழி மாதத்தில் எல்லோரும் வாசலில் கோலம் போட்டு, பூசணிப் பூவை நடுவில் அழகாக வைத்து இருப்பார்கள். வீதியே பூக்கோலம் பூண்டிருக்கும். ஓட்டு மேல் பூசணிக் கொடி படர்ந்து இருக்க, ஓட்டு மேல் ஏறி, பூ பறித்து தரவேண்டியது என் வேலை. பக்கத்து ஆத்து நாகராஜன் வீட்டில், திருடி ஒரு தடவை “சந்திராவிடம்” (நாகராஜன் அக்கா) மாட்டி கொண்டேன்.

மார்கழி மாதத்தில், நான் ஏறக்குறைய அடித்துதான் எழுப்பப்படுவேன். அப்படி அடிபடாமல் நானாகவே எழுந்த நாள், திருவாதிரை தான், சிவன் கோவிலில், களி கிடைக்கும். பல வீட்டில் இருந்து நைவத்யம் பண்ணி கோவிலில் விநியோகம். பல் தேய்த்துவிட்டு, நேரே சிவன் கோவில் குளத்தில் குளித்து விட்டு களி சாப்பிட்டுவிட்டு, ஏதோ “உலகத்தையே ஜெயித்தால் போல” ஒரு நடை நடந்து வீட்டுக்கு வருவேன்.  

தேவுடு மாமா வாத்தில் இருந்து, இந்தப்பக்கம் அப்புவாம் வரை. பிரசாதம் கொடுத்து காலி பாத்திரத்தை அவர்கள், அவர்கள் வீட்டில் சேர்க்கும் வேலை எனக்கு. அதனால் அவர் அவர்கள் வீட்டுக்குப் போய் “எக்ஸ்ட்ரா” களி வேறு. ஒரு “கட்டு” கட்டிவிடுவேன். சாஸ்த்ரிகள் பேரன் என்ற மரியாதை வேறு.   

அதைத் தவிர எங்கள் வீட்டில் "எறிச்ச கூட்டு" என்று  "மீந்து போன" கூட்டை (கூட்டு என்பது, பல வித காய்கறிகளின் சங்கமம்)  சுண்ட வைத்து ஒரு வாரம் வைத்து இருந்து பழைய சாதத்தை,  (எருமைத்) தயிருடன்  கலந்து, உருட்டி,  வலது கையில் வைத்து,  நடுவில் குழித்துக் கொண்டு, அரை கரண்டி அந்த  எ.கூட்டு வைத்து சாப்பிட்டால்,  ஏறக்குறைய சொர்க்கத்தைப் பார்க்கலாம்.  நான் பல முறை பாரத்து இருக்கிறேன்.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால்,  இது ஒன்றுமே எனக்கு சம்பந்தம் இல்லை என்று சொல்வது போல்,  மார்கழி மாசம் முழுவதும் 4 மணிக்கு எழுந்து, ஒரு நாள் கூட விடாமல் தனுர் மாச பூஜை பண்ணிய என் அப்பா, தானும் எழுந்து, நைவேத்யம் என்று சொன்னவுடன்,  "டாண்" என்று பொங்கல் பண்ணி கொண்டு வைத்த  என் அம்மா"  ... இப்பொழுது நினைத்தாலும் என் நெஞ்சம் சத்தியமாக விம்முகிறது.   

கோலப்போட்டியை நீங்கள் செம்மங்குடியில் மார்கழி மாத்ததில் பார்க்க வேண்டும். எத்தனை புள்ளி வைத்து கோலம் போடுவது என்று முதல் நாள் வீட்டில் ஒத்திகை நடக்கும்.  எதித்தாத்து, கணக்கு பிள்ளை மாமாவின் பெண் பத்மா,  எங்கள் வீட்டில் சசி,  ONE TO ONE .....  "சின்னதாக கோலம் போது போறும், பனியாக இருக்கிறது" என்று கரிசனப்படும்  எங்கள் அப்பா.

இன்று என் வீட்டில் செய்த "திருவாதிரை களி" யை என் வீட்டு  WATCH MAN மற்றும் அவன் மனைவி சாப்பிட்டு கொண்டு இருக்கிறார்கள்

 ஷ்யாமளா தண்டகமும் திருப்புகழும்:

பின்னால், சம்ஸ்க்ருதம் படிக்க ஆரம்பித்த பிறகு, சங்கீத அறிவு சற்று வளர்ந்த பிறகு, ஷ்யாமளா தண்டகத்தை கேட்க வாய்ப்புக் கிடைக்கும்போது மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. அதுவும் செம்மங்குடியில் கேட்ட பாட்டு இசை அரசி டி. கே பட்டம்மாள் அவர்களின் குரல் என்பது மேலும் ஒரு சந்தோஷம், சம்ஸ்க்ருத உச்சரிப்பு ஸ்பஷ்டமாக, மிகவும் அழகாக பாடி இருந்ததைக் கேட்க ஒரு புரியாத பிரமிப்பு

நான் எம்.எஸ், எம்.எல் வி போன்ற பெண் பாடகர்களின் தீவிர ரசிகன். DKP எனக்கு என்னமோ சுதந்திர பாடல்கள் “ஆடுவோமே பள்ளு” பாடுவதற்குத்தான் லாயக்கு என்று இருந்த நான், ஷ்யாமளா தண்டகத்தைக் கேட்ட பிறகு, நிறைய கச்சேரி ஆடியோ கேட்டு, “பட்டம்மாள் ஸ்கூல் சங்கீதத்தின்” ஆழத்தை கண்டு பிரமித்து நின்றேன். நான் விஜய் சிவாவிடம் சீட்டு கொடுத்து “எந்த செளுவகே” என்ற புரந்தராசரின் கிருதி பாடச் சொன்னது, பட்டம்மாள் அவர்கள் பாட்டு கேட்ட பிறகுதான்

பட்டம்மாள் அவர்கள் அந்த 5 செகண்ட் வீணை (ராகம் தன்யாசி) முடிந்த வுடன், பாட ஆரம்பித்து,  அதற்குப் பிறகு நடுவில் ராகத்தை மாற்றி, ஆரபி, பிலஹரி, சரஸ்வதி, ஸ்ரீ என்று பாடி அசத்தி இருந்தார். அதில் வித்யா பற்றி வரும் வரிகளை, சரஸ்வதி ராகத்திலும், கடைசியில் ஸ்ரீ என்று மகாலக்ஷ்மியைப் பற்றி வரும் இடத்தில ஸ்ரீ ராகத்திலும் பாடி இருப்பார்.

மிகவும் கஷ்டமான, மூச்சு விடாமல் சொன்ன ஒரு உரைநடை போன்ற இது. நான் புத்தகம் வைத்துக் கொண்டு, யூ டியுப் உதவியுடன் DKPயின் குரலில் ஷ்.த கேட்ட பிறகு கூட, அவருடன் தொடர்ந்து சொல்ல முடியவில்லை. இதற்கு அவர் எவ்வளவு பயிற்சி பெற்றிருக்க வேண்டும், தப்பு இல்லாமல் சொல்வதற்கு. !!! 

அதே போன்ற அனுபவம், எனக்கு திருப்புகழிலும் நடந்தது. அங்கே அம்மா காளிதாசனுக்கு உதவி செய்ய, இங்கே பிள்ளை முருகன், அருணகிரிக்கு..

முத்தை என்று எடுத்துக் கொடுக்க, “முத்தைத்திரு” என்று ஆரம்பித்து  இருக்கிறார்.  தமிழின் அந்த “வீச்சு” அபாரம். இதை பலர் T M சௌந்தரராஜன், ஷண்முகப்ரியா ராகத்தில் பாடி கேட்டிருக்கலாம். ஆனால் குருஜி ராகவன் அவர்கள், கௌளை ராகத்தில் பாடியிருக்கும் பாடல் அது.

இந்தப் பாடலைப் பார்த்து ஒழுங்காகப் படித்தாலே போதும். தமிழ் தாய் மனங் குளிர்ந்து விடுவாள். அருணகிரியின் பல பாடல்கள், பார்த்துப் பாடுவதே மிக கஷ்டம். என்கண் என்ற செம்மங்குடி அருகில் உள்ள ஊரில் உள்ள முருகனைப் பற்றி ஒரு பாட்டு எழுதி இருக்கிறார். இதை ரஞ்சனி ராகத்தில் பாடுவோம். இப்படி எல்லாம் கூட ஒரு தமிழ் வரிகள் இருக்க முடியுமா என்று மலைக்கும் விஷயம்.  செம்மங்குடியில் பிறந்த, என் சித்தி சரஸ்வதி என்ற  சசிக்கு,  நிறைய திருப்புகழ் அத்துபடி.

இறை அருள் இருந்தால் எது தான் முடியாது ? செம்மங்குடியில் நான் படித்த தமிழ், எனக்கு வாய்த்த தமிழ் ஆசிரியர்கள், போன மாதம் மறைந்த என் பெரியப்பா, ஸ்ரீ பாலக்ருஷ்ண தீட்சிதர் உட்பட,  போட்ட தமிழ் விதை, இது போன்ற அற்புதமான ஸ்லோகங்களை விமர்சிக்கும் அளவு, தைர்யத்தைக் கொடுத்து இருக்கிறது.

 கொசுறு:

இந்த நூற்றாண்டிலும், குருஜி ராகவன் போன்ற மகத்தான பெரியார்கள், திருப்புகழை உலகம் முழுவதும் பரவச் செய்து, மிகவும், மகத்தான சேவை செய்து இருக்கிறார்.

நான் துபாயில் வேலை செய்து கொண்டு இருந்தபோது, அங்கு இருந்த, பெண்மணி, என் பெண்ணுக்கு அபிராமி அந்தாதி சொல்லி கொடுத்தாள். (குருஜியின் சிஷ்யை). கடைசி வரை ஒரு பைசா கூட வாங்கவில்லை.

 

 

 

 

 

 

 

 

 

Sunday 28 June 2020

ஸந்த்யாவந்தனத்தை விட்ட பாபத்தை எங்கே தொலைப்பது ?


பிராஹ்மணர்கள் மூன்று காலங்களும் ஸந்த்யாவந்தனம் செய்ய வேண்டும் என்பதும், ஸ.வ பண்ணினால் தான் பிராஹ்மணன் என்றும் பண்ணாவிட்டால் மற்ற பித்ரு கார்யங்களை (தர்பணங்களை} செய்ய யோக்யதை இல்லை என்பதை மஹா பெரியவா, சிருங்கேரி பெரியவா மற்றும் பல உபன்யாசகர்கள் சொல்லி கேட்டாகி விட்டது. நாம் திருந்தியதாக தெரியவில்லை. அதற்க்கு மாறாக சிருங்கேரி பெரியவரிடமே “ஸந்த்யாவந்தனத்திற்க்கு மாற்று உண்டா” என்று கேட்கிறோம். (வீடியோ whatsapp ல் வந்தது)

காயத்ரீ யை விட ஒரு உயர்ந்த மந்த்ரம் கிடையாது. அம்மாவை விட ஒரு உயர்ந்த தெய்வம் கிடையாது என்பது வேத வாக்கு.

கொரொனா காலத்தில், வேறு வேலை இல்லாததால், ஸந்த்யாவந்தனம் பண்ண ஆரம்பித்து, ஸ்ரத்தையாக செய்து கொண்டிருப்பவர்களை நான் அறிவேன்.  (அதற்க்கு நாம் கொரொனாவுக்கு thanks கூட சொல்லலாம் !!!!)

ஸ்ரீ. சுந்தர குமாரின் அருமையான ஒரு உபன்யாசத்தில், ஸந்த்யாவந்தனம் பண்ணாத பாவத்தை எங்கே தொலைப்பது என்பது பற்றி பேசினார். அதில் இருந்து சில துளிகள்.

“பஞ்ச மஹா பாதக விதிரிக்தனாம்” என்று ஆவணி அவிட்டம் அன்று சொல்லும் மகா சங்கல்பத்தில் (மந்த்ரத்தில்) ஒரு வாக்யம் வரும். பஞ்சமகா பாதகங்களுக்கும் சேர்த்துதான் இந்தப் பிராயச்சித்த மகா சங்கல்பம் என்று நினைத்தால் தவறு. பஞ்ச மகாபாதகங்களை விட்டுவிட்டு மீதி பாபங்களுக்கு பிராயசித்தம் என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ளவேண்டும். ப.ம,பாதகங்களுக்கு பிராயசித்தம், ரிஷிகளால் கூட சொல்ல முடியவில்லை என்பது தான் உண்மை.

ப.ம.பாதகங்கள் என்ன என்பதையும் அதற்கு என்ன பண்ணலாம் என்பதையும் பார்ப்போம்:  ப.ம.பாதாகம் என்று பல உண்டு. ஆனால் அந்தப் பாவத்தை வேறு ஒரு ப.ம.பாதகம் செய்பவனிடம் சேர்த்து விடலாம். அதற்க்கு தர்ம சாஸ்த்ரம் இடம் கொடுத்து இருக்கிறது. என்ன புரிய வில்லையா. மேலே பார்க்கலாம்:  (இது இந்த share transfer மாதிரி....}

முதலில், ஆரம்பிப்பது, --காலையில் தூங்கிக்கொண்டிருப்பவனிடம் இருந்து. காலயில் எழுந்திருக்காமல் தூங்கிக் கொண்டு இருப்பது மகா பாபம்.

-காலையில் தூங்குபவன், தன்னுடைய பாபத்தை சாயங்காலம் படுத்துக்கொண்டிருந்தவ்னிடம்  தள்ளினான்.

-சாயங்காலம் படுத்து தூங்கிக்கொண்டு இருப்பவன் –நகம் சொத்தையாகப் போனவனிடம் தன் பாபத்தைத் தள்ளினான். . தங்கத்தை திருடியவனுக்கு நகம் சொத்தையாகப் போய்விடும். (அதனால் தங்கத்தை திருடுவது பாபம் என்பது அறிக)

-சொத்தை நகம் உடையவன் சொத்தைப் பல் உடையவனிடம் கொண்டு இந்த பாவத்தைத் தள்ளினான். பல் சொத்தையாகப் போவது என்பது “சோம பானம், சுரா பானம்” போன்ற திரவங்களைப் குடிப்பதால் வருவது.

-சொத்தைப் பல் உடையவன் “அக்ரதிதீஷூ” விதம் தள்ளினான். அக்ரதிதிஷூ என்பது சம்ஸ்கிருத பதம். இந்தப் பதத்திருக்கு ஆங்கிலத்திலோ, தமிழிலோ ஒரே வரியில் வாக்யம் இருக்குமா என்று தெரியவில்லை. சம்ஸ்கிருதம் எவ்வளவு உயர்வான பாஷை என்பது இதையெல்லாம் படிக்கும்போது தெரியவரும். அக்ரதிதிஷூ என்ற பதத்திருக்கு “அக்காவுக்கு முன்னால், தங்கையை விவாகம் செய்து கொள்ளக்கூடியவன்” என்று அர்த்தம்.

அப்படிக் கல்யாணம் செய்து கொண்ட பர்த்தாவிடம், சொத்தைப் பல் உடையவன், தன் பாவத்தை தள்ளினான்

-அக்ரதிதீஷூ பாபத்தை அடைந்தவன், “பரிவேத்தா” (சம்ஸ்க்ருத பதம்) விடம் தன் பாபத்தைத் தள்ளினான்.  இந்த வார்த்தையும் சம்ஸ்க்ருத அழகு பதம். “பரிவேத்தா” என்ற பதத்துக்கு, “அண்ணா கல்யாணம் செய்து கொள்வதற்க்கு முன்பு திருமணம் செய்து கொள்ளும் தம்பிக்கு” என்று அர்த்தம்.  இதெல்லாம் மகா பாபம். அண்ணா கல்யாணம் வேண்டாம் என்று சொன்னால், தம்பியும் சும்மா இருக்க வேண்டியதுதான். அப்படி மீறி செய்து கொண்டால் நரக பிராப்தி...
பரிவேத்தா என்ற பதத்தை ராமாயணத்தில் வாலி, ராமனிடம் சொல்வது போல் ஒரு ஸ்லோகம் வருகிறது:

“ராஜஹா, பிரஹ்ம்ஹா, கோக்ணஹா, சோரஹா, பிராணிவதே ரதஹா, நாஸ்திகப் பரிவேத்தா ச சர்வே நிரயகாமினஹா..”   (4-17-35)
இதன் பொருள்:

“ராஜாவை, பிராஹ்மணனை, பசுவை, கொன்றவர்கள், மற்றும் திருடன், உயிருடன் இருக்கும் பிராணிகளை வதம் செய்பவன், நாஸ்திகன், அண்ணன் திருமணம் செய்யாமல் இருக்கும்போது, திருமணம் செய்யும் தம்பி, - எல்லோரும் நரகத்துக்குப் போவார்கள்” – வாலி ராமனிடம் கூறுவது...

-“பரிவேத்தா” தோஷம் அடைந்தவன் “வீரஹத்தி” தோஷம் அடைந்தவனிடம் தன் பாபத்தைத் தள்ளினான். இந்த பதத்திற்கு - ஏதோ வீரனை கொலை செய்வது என்பது அர்த்தமில்லை. பரம்பரையாக இருக்கும் தர்மத்தை எவன் ஒருவன் விட்டு விடுகிறானோ அவன் வீரகத்தி தோஷம் அடைகிறான்.  வீரஹா என்ற பதத்துக்கு “கர்மஸூ குஷலஹா” என்று அர்த்தம். அக்னிஹோத்ரத்தை எடுத்துக் கொண்டு அதை பாதியிலே விட்டு விட்டால், அவன் “வீரகத்தி” தோஷம் அடைந்தவன் ஆகிறான். அக்னிகோத்ரம் என்பது மிகவும் கடினமான, சிரம சாத்யமான ஒரு அனுஷ்டானம். யாராவது கோடியில் ஒருவர்தான் பண்ண முடியும். ஆயிரம் பிராஹ்மன ஜன்மம் எடுத்தால் தான் யஜ்வாவாக (அக்னிஹோத்ரம்) முடியும். கோடி ஜன்மா எடுத்தால்தான் ஸந்யாஸி ஆகும் பாக்யம் கிடைக்கும்.  (சன்யாஸக் கோடி ஜன்மஸூ:)  அக்னி ஹோத்ரம் “ஆதானம்” பண்ணி விட்டால் அதை கடைசி வரை ரக்ஷிக்க வேண்டும். அக்னிஹோத்ரம் அக்னியாக இருந்தாலும் சரி (ஸ்ரௌதாக்னி), ஒளபாசனத்தில், ஸ்மார்த்த அக்னி யாக இருந்தாலும் சரி.  (ஸ்ரௌத, ஸ்மார்த, விஹித நித்ய கர்ம அனுஷ்டான யோக்யதா..-யக்ஞோபவீத மந்த்ரம்-இதிலிருந்து வந்ததுதான்).

“நாம் இந்த மந்த்ரங்களைச் சொல்லி பூணல் போட்டுக் கொள்கிறோம். ஆனால் ஸ்ரௌத, ஸ்மார்த்த,- இரண்டையும் விட்டுவிட்டோம். விவாஹ மந்த்ரத்தில் – “ஜன்மம் முழுவதும் ஔபாசனம் செய்கிறேன், பரமேஸ்வரா” என்று மந்த்ரம் சொல்லப்படுகிறது. ஆனால் அடுத்த வேளையே ஔபாசனம் செய்வது இல்லை.” நாம் அதற்கு கொஞ்சமும் முக்யத்துவம் கொடுப்பது இல்லை, என்பது சோகமான உண்மை.”

அதனால்தான், விதுர நீதியிலும், யாயாதி தர்மத்திலும் சரி- 4 விஷயங்கள் சரியாகச் செய்தால் அபயத்தைக் கொடுக்கும். சரியாகச் செய்ய வில்லை என்றால் பயத்தைக் கொடுக்கும். அதில் அக்னிஹோத்ரம் ஒன்று.

கிருஷ்ண பரமாத்மா ஆறு பேருக்கு நமஸ்காரம் செய்கிறார். நித்யம் அன்ன தானம் செய்பவர்கள், பால்யப் பிராயத்திலே அக்னி ஹோத்ரம் செய்பவர்கள், பதிவ்ரதைகள், சாந்த்ராயணம் போன்ற விரதங்களை எடுத்து உபவாஸம் செய்பவர்கள், வேதாந்தந்தம் கற்றுத் தேர்ந்த ஞாநிகள், சதாபிஷேகம் ஆன தம்பதிகள்... என்று.

இந்த வீரகத்தி தோஷம் அடைந்தவேனிடம், பரிவேத்தா, தன் பாவத்தை தள்ளினான். 

-வீரகத்தி பாபம் செய்தவன் பிரஹ்மஹத்தி பண்ணியவன் மேல் தன் பாபத்தைத் தள்ளினான் !!!

பிரஹ்மஹத்தி என்றால் என்ன ? பிரஹ்மஹத்தி   என்றால் பிராஹ்மணனை கொலை செய்தவன் என்று ஆர்த்தமாகுமா ?  என்றால் – உண்மைதான். அது ஒரு விதமான பிரத்யக்ஷமான பிரஹ்மஹத்தி. பிரஹ்மம் என்ற சப்தத்திற்கு பல அர்த்தங்கள். பரப்ரஹ்மம் என்று ஒரு அர்த்தம், பிராஹ்மணன் என்று ஒரு பொருள். வேதம் என்று ஒரு அர்த்தம் உண்டு.  மூன்று வேதங்களின் சாரமாக காயத்ரியை ரிஷிகள் அனுக்ரஹம் செய்து கொடுத்தார்கள்.  அந்த காயத்ரியை எவன் ஒருவன் ஜபம் பண்ணாமல் விட்டு விடுகிறானோ, ஸந்த்யாவந்தனத்தை விட்டவன் “பிரஹ்மஹத்தி தோஷத்தை அடைகிறான்” என்று வேதம் சொல்கிறது.

ஸந்த்யாவந்தனத்தை விட்டவன் தனக்கு வந்த பாபத்தை எங்கு போய் தள்ளினான் என்று வேதம் சொல்லவில்லை.

The buck ends here.

அதனால் ஸந்த்யாவந்தனம் பண்ணாத பிராஹ்மணன், தான் அனுஷ்டானம் பண்ணாத பாபத்தை சுமப்பதைத் தவிர, முன்னமே 7 பேரின் பாவத்தையும் சேர்த்தே சுமக்கிறான்.

இதைவிட ஸந்த்யாவந்தனம் எவ்வளவு முக்கியம் ? என்று சொல்வதற்க்கு ஒரு வியாக்கியானம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை !!!

முடிவுரை:

தேவதைகள் மந்த்ரத்திற்கு கட்டுப்படுபவர்கள். அந்த மந்த்ரம் பிராஹ்மணனுக்கு கட்டுப் படுகிறது.
ராமாயணத்தில், சீதை அசோக வானத்தில் ராமனின் பெருமையை ராவணிடம் சொல்லும்போது,

अहमौपयिकी  भार्या तस्यैव वसुधापतेः।। व्रतस्नातस्य विप्रस्य विद्येव विदितात्मनः। 5.21.17।।

நன்றாக ஸ்நானம் செய்து அனுஷ்டானங்களை
ஒழுங்காகச் செய்து (vratasnaatasya) தேஜஸ் ஆக இருக்கும், தபஸ்விக்கு (விப்ரஸ்ய) எப்படி சகல வித்யைகளும் சர்வ சாதாரணமாக வருமோ, அப்படி நான் ராமனுக்கு சொந்தமானவள்”  என்று சீதை ராவணனிடம் சொல்கிறாள்.

ஆங்கிலத்தில்:

"I am alone the lawful wife of the lord of the earth like the knowledge of the Vedas which rightfully belongs to a wise brahmin who has realised the self after having had his ceremonial bath (as a token of celibacy) and having observed strict vows during the period of his study.

தீர்த்தம் இல்லாவிட்டால், மணலைக்கூட அர்க்யப் பிரதானமாகச் செய்யலாம் என்று ஸ்ரீ. அனந்த ராம தீக்ஷிதர் சொல்கிறார். ஸ்வதர்மத்தை விடவே கூடாது.

கொரொனா காலத்தில் இத்தனை பூஜைகள், விஷ்ணு ஸஹஸ்ரநாமம், லலிதா ஸஹஸ்ரநாம பாராயணம், சஹஸ்ர காயத்ரி நடந்து கொண்டிருக்கின்ற போதும் கூட, அதனுடைய  தீவிரம் குறையவே இல்லை. இது மிகவும் கவலை அளிக்கக் கூடிய செயல்.

எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், இதற்கு எல்லாம் ஒரே மருந்து “காயத்ரி உபாசனை”.  அதை நாம் விட்டுவிட்டோம். அந்த பாபத்தின் விளைவு தான் இது.  நம் நாட்டில் இது குறைவாக இருப்பது இன்னும் மகா பெரியவா போன்ற பல யோகிகளின் இன்றும் இருந்து கொண்டு “அரண்” மாதிரி நமது தேசம் அழியாமல் காத்துக் கொண்டு இருப்பது,  மற்றும் இன்னும் காயத்ரியை மற்றும் இதர அனுஷ்டானங்களை விடாமல் செய்து கொண்டு இருக்கும் பிராஹ்மணர்கள்..


Monday 22 June 2020

ஆதி சங்கரரும் முருகனும் (புஜங்கத்தில் தந்தையர் தினம்) (Father’s Day)


ஆதி சங்கரர் தமிழ் கடவுளான முருகனைப் பற்றி அருளிய பாடல்களில்/, கிரந்தங்களில் மிக முக்கியமானது, சுப்ரமண்ய புஜங்கம். 

ஆதி சங்கரர், விநாயகர், சிவன், தேவி, விஷ்ணு, ஸூர்யன், குகன் என்று ஆறு வடிவங்களில் உபாசனை புரியும்படி உபதேசிக்கிறார்கள். அதில் முருகனுக்காக பாடிய சுப்ரமண்ய புஜங்கம் மிகவும் விஷேஷமானது. ஏனெனில், கடுமையான வயிற்று வலியில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த ஆதி சங்கரர் பாடிய பாடல் இது.

கடுமையான வயிற்று வலி வந்து, மனமுருகி பாடி, இறைவனின் அருளால், நோய் நீங்கி குணமானவர்கள் 3 மகான்கள்.
ஆதி சங்கரர்- சுப்ரமண்ய புஜங்கம்
நாராயண பட்டத்ரீ- நாராயணீயம்
நாராயண தீர்த்தர்- கிருஷ்ண லீலா தரங்கிணி          

இதில் முதல் இருவரும், வயிற்று வலியுடன் பாடிய பாடல்கள். (ஆதி சங்கரர் பன்னீர் இலையில் வீபூதி எடுத்து தரித்துக் கொண்டவுடன் அவர் வயிற்று வலி சரியாகி விட்டது. பிறகுதான் புஜங்க பாடினார் என்ற ஒரு school of thought ம் உண்டு}. சத்குரு நாராயண தீர்த்தர், வயிற்று வலியால் அவதிப்பட்டு, காவேரி ஆற்றுப் படுகையில் உள்ள விநாயகர் சன்னிதியில் உறங்க, கனவில், நாளை காலை உன் முன் முதலில் எது தோன்றுகிறதோ, அதன் பின்னால் செல்வாயாக” என்று கட்டளை பிறக்க, அடுத்த நாள், ஒரு வெள்ளைப் பன்றி ஒன்று தோன்ற, அதன் பின்னால் சென்று பூபதி ராஜ புரம்” என்ற வரகூர் க்ஷேத்திரதித்தில் வந்து அடைந்த பின் அவருக்கு வயிற்று வலி தீர்ந்து விடுகிறது. பிறகு அவர், கிருஷ்ண லீலையை விவரிக்கும் ஸ்ரீமத் பாகவத்தின் 10 வது பிரிவை, தரங்கிணி என்று பாடலாய் பாடுகிறார்.

பட்டத்ரீ கதை மிகவும் கஷ்டமானது. அவர் வயிற்று வலி துடிக்க துடிக்கப் பாடுகிறார். ஒவ்வொரு பகுதி முடியும்போது, “வயிற்று வலியால் கஷ்டப்படுகிறேனே குருவாயூரப்பா என்னை காப்பாற்ற மாட்டாயா ?” என்று அரற்று.கிறார்.  மூன்றாவது தசகம் படித்துப் பாருங்கள். புரியும்.

திரும்பவும் சு.பு க்கு வருவோம்

அபினவ குப்தர் ஆதி சங்கரரிடம் பல வாதங்கள் செய்து தோற்றபின், ஆபிசார வேள்வி செய்து, ஆதி சங்கரர்க்கு கடுமையான வயிற்று வலியை உண்டாக்கியதும், கோகர்ணத்தில் திருத்தலத்தில் தங்கி இருந்த இவருக்கு ஈசன் கனவில் தோன்றி, முருகப்பெருமான் குடியிருக்கும் திருசெந்தூர் சென்று தரிசித்தால் உனக்கு வயிற்று வலி குணமாகும் என்று சொல்ல, திருசெந்தூர் வந்து, பன்னீர் இலை வீபூதியை பூசிக்கொண்ட பின் அவருக்கு தீரா வயிற்று வலி மறைந்தததும் பல பேருக்குத் தெரிந்த கதை

சுப்ரமண்ய பூஜங்கத்தைப் பற்றி நான் விரிவாக எழுதப்போவதில்லை. ஆனால் 18 வது ஸ்லோகம் மட்டும் கொஞ்சம் விசேஷம். இதில் “பரமேஸ்வரன், குழந்தாய், இங்கே வா, என்று பரிவுடன் கூப்பிட, தாயின் மடியில் இருந்து குதித்து, தந்தையை அடைந்து, தந்தையான சிவபெருமானால் உடல் முழுதும் அடங்க அணைக்கப் பெற்றவருமான பால வடிவிரான குமாரனை வழி படுகிறேன்.” என்று பொருள்பட ஆதி சங்கரர் எழுதி இருக்கிறார்.  (வைத்ய ஸ்ரீ ராதாக்ருஷ்ண சாஸ்த்ரி அவர்களின் விளக்கம் இது)

சாதாரணமாக ஸ்லோகங்களில், புராணங்களில், அம்மா கூப்பிட்டு பிள்ளை ஓடி வந்து அணைத்துக்கொள்வது என்பது பிரசித்தமான ஒன்று. நீங்கள் வைதீஸ்வரன் கோவில் போனால், அடிக்கடி மூத்துக்குமாரஸ்வாமி, பாலாம்பிகாவிடம் ஓடிச் சென்று அம்மாவுடன் இருப்பார்.  வைத்யநாதஸ்வாமி டாக்டர் வேலை பார்த்துக் கொண்டிருப்பார். அப்பா பிள்ளையை கொஞ்சினார் என்று நான் பார்தது இல்லை. நடை முறையில் கூட, தகப்பன் பிள்ளை நடுவே ஒரு புரிதல் என்பது இருக்காது. மனதிற்க்குள் பாசம் இருந்தாலும், இருவரும் வெளிக்காட்ட மாட்டார்கள். ஆனால் இந்த ஸ்லோகம்...  father’s day க்காகவே ஆதி சங்கரர் எழுதியைப் போல் உள்ளது.

சம்ஸ்க்ருததில், சுப்ரமண்ய ஸ்வாமி மேலே, நிறைய ஸ்லோகங்கள் உள்ளது. ஸ்ரீ. ஆனந்தராம தீக்ஷிதர் அவர்கள் “ஜெய மங்கள ஸ்தோத்ரம்” என்று தடி தடியாக 4-5 புத்தகங்கள் போட்டிருக்கிறார். இந்தப் புத்தகத்தை, திருவல்லிக்கேணியில் ரோடில் உள்ள புத்தகக் கடையில் பார்த்தேன். பதறிப் போய் வாங்கினேன். அதில் “குக பஞ்சரத்னம், சுப்ரமண்ய மங்களாஷ்டகம், மூல மந்த்ரஸ்தவம், கத்யம், பஞ்சக ஸ்தோத்ரம், பஞ்ச ரத்னம் என்று மானாவாரிக்கு ஸ்லோகங்கள் உள்ளது. ஆனால் ஆதி சங்கரர் சுப்ரமண்ய புஜங்கத்தை தவிர ஒன்றே ஒன்றில் தான் முருகனைக் குறிப்பிடுகிறார்: அது -

சிவ பாதாதி கேசாந்த வர்ணன ஸ்தோத்ரம் என்ற ஒரு பகுதியில், சுப்ரமண்யருக்காக அவர் அற்புதமான ஸ்லோகம் ஒன்று உள்ளது, அதன் அர்த்தத்தை முதலில் பார்ப்போம்:

முன்பு தாரகன் என்ற ஒரு அரக்கன் தேவர்களைப் போரில் வென்று அவர்களுக்கு அளவு கடந்த இன்னல்களை விளைவித்துக் கொண்டிருந்தான். ஆத்தேவர்களின் புண்ய பலத்தால் லோக மாதாவான பார்வதி தேவிக்கும், தந்தையான பரமேஸ்வரனுக்கும், ஸ்கந்தன் என்ற பிரசித்தி வாய்ந்த திருக்குமாரன் பிறந்தான். அவன் தான் கூர்மையான பாணங்களைக் கொண்டு கிரௌஞ்சம் என்ற மலையைப் பிளந்து பரசுராமருக்கு தன்னுடைய திறமையைக் காண்பித்தான். ஞானக்கடவுளாக இருப்பதால் அவன் ஸம்ஸாரமென்ற ஆழமான கிணற்றில் வீழ்ந்து தவிக்கின்றவர்களை, கரையேற்றுகின்றார். தாரகனைக் கொன்று தேவர்களின் இன்னல்களை களைந்த அந்த முருகப் பெருமான் நமக்குச் சிறந்த செல்வங்களை தந்து, நம்மக் காத்தருள்வாராக !

சம்சார சாகர அகாத கூப உதர பதித சமுத்தாரக :  - என்ற சம்ஸ்க்ருத பதம்

சம்சாரம் என்ற கடலில் (சாகர), ஆழமான (அகாத), கிணற்றின் (கூப), நடுவில் (உதர), விழுந்தவர்களை (பதித) கரையேற்றுபவராயும் உள்ள (சமுத்தாரக:) – என்ன ஒரு அருமையான ஸ்லோகம்...... 

ஆதி சங்கரர் மட்டும் இல்லை என்றால், பல நல்ல ஸ்லோகங்கள் நமக்குப் படிப்பதற்கு இருந்திருக்காது. அதுவும் கோரொனா “டயத்தில்” ஏதோ படிப்பதற்கு இருக்கிறதே என்று சந்தோஷப்பட்டு கொள்ளவேண்டும். ஆதி சங்கரருக்கு நாம் காலம் காலமாக நன்றி சொல்லவேண்டும். TV யின் கொடுமையிலிருந்து நம்மைக் காப்பது பகவத் பாதரின் ஸ்லோகங்களே !!!

என்னமோ “தந்தையர் தினம்” என்று கொண்டாடுகிறார்களே என்று தோன்றியது.  கைலாச மாலையிலே அரங்கேறி விட்டது த.தி.

Tuesday 9 June 2020

வாமன அவதாரம் - 2


வமான அவதாரம் – ஒரு பார்வை – 2
முக்கியமான விஷயம் இந்த அவதாரத்தில், மஹா விஷ்ணு, மஹாலக்ஷ்மி இல்லாமல் போக வேண்டும். அதனால் சொல்லிக்காமல்  வைகுண்டத்திலிருந்து கிளம்ப நினைக்கிறார். ஆனால். மாட்டிக்கொண்டு விடுகிறார்.

டயலாக் இப்படிப் போகிறது !!
மஹா லக்ஷ்மி- எங்கே என்னை விட்டுவிட்டு கிளம்புகிறீர்கள் ஸ்வாமி ?

ம.விஷ்ணு -- ஒரு அவதார விஷயமாக கிளம்புகிறேன்

ம- நான் இல்லாமல் இதுவரை வெளியில் சென்றதே இல்லையே !

ம.வி – உண்மைதான். நீ இல்லாமல் போகக்கூடிய நிர்பந்தம். நான் போவது ஒரு அரசனிடம் இருந்து யாசகம் பெற்று அவனை ஏழையாக ஆக்குவதற்க்கு. நீ வந்தால், உன் கடாஷம் பெற்றால், எதிரே இருப்பவர் ஏழையாக ஆக முடியாது. அதனால் தான்.

ம- அதிர்ந்து- என்னது, நீங்கள். பிச்சை எடுக்கப் போகிறீர்களா ?  நீங்கள் பிச்சை எடுக்கலாமா ?  மகாலக்ஷ்மியின் கணவர் பிச்சை எடுத்தால், எனக்கு எவ்வளவு அவமானம் ?  உங்களை இவ்வளவு தாழ்த்திக் கொள்ளலாமா ?

ம.வி. உண்மைதான். ஆனால், நான் யாசகம் பெறப் போகும் ஆசாமி, அசுர குலத்தைச் சேர்ந்தவன் ஆனாலும், உத்தமன். தானம் கொடுப்பதில் சிறந்தவன். அவனிடம் தானம் பெறுவதின் மூலமாகத்தான், அவன் கர்வத்தை அடக்கி, தேவர்களுக்கு ஸ்வர்க்க லோகத்தை திருப்பிக் கொடுக்க முடியும்.
ம – ஒ அப்படியா. ஒரு அசுரனை புகழ்ந்து, அவனிடம் நீங்கள் யாசகம் வாங்க முடிவு செய்தது எனக்கு மிகவும் ஆச்சர்யம். அப்படியானால், நிச்சயம் நான் அந்த அசுரனை பார்த்தே ஆக வேண்டும்.  கட்டாயம் நான் வந்தே தீருவேன்.

ம.வி- என்னடா இது, இப்படி ஒரு இக்க்ட்டிடல் மாட்டிக்கொண்டு விட்டோமே என்று எண்ணும் போது, பூமிதேவி, காதில் வந்து “நீங்கள் வாமன அவதாரம் எடுத்து வரும்போது, உபநயனம் நடக்கும், அதற்கு நான் மான் தோல் தருகிறேன். அதை மார்பில் போர்த்திக் கொண்டு, ஸ்ரீதேவியை மறைத்து விடுங்கள். உங்கள் நோக்கம் நிறைவேறும்” என்றாள். (இதற்குத்தான்........)

தானம் கேட்க வரும்போது, வந்திருப்பவர் சாக்ஷாத் மகாவிஷ்ணு, எல்லா சொத்தையும் அபகரிப்பதற்கு வந்திருக்கிறான் என்று குல குரு சொன்ன பிறகும், பலியின் மனைவி “அர்க்யம்” விட்டு அந்த தானத்தை “மனமுவந்து” கொடுக்க ஒப்புகொண்டது மிகவும் ஆச்சர்யம். இந்தக் காலத்தில்  குடும்பத்தில் உள்ளவர்க்கு ஒரு பாடம்.  நாராயண பட்டத்ரி, நாராயணீயத்தில், இந்த நிகழ்வை வியந்து போற்றுகிறார்.

குரு கடாக்ஷம் இருக்கிற வரையிலும், பலியை ஒன்றுமே செய்ய முடியாது என்று தெரிந்து கொண்ட பகவான், சுக்ராசார்யாருக்கும், பலிக்கும் சண்டை வந்து. “உன் சொத்தெல்லாம் உன்னை விட்டுப் போகட்டும். என் பேச்சைக் கேட்காமல் தானம் செய்தால்” என்று சபிக்கும் வரை காத்திருந்து, பிறகு தன  “வேலையை” ஆரம்பிக்கிறார். குரு அவ்வளவு “பவர்புல்”

மூன்றாவது அடியை வைப்பதற்கு இடம் கேட்டதற்கு, தன் தலையின் மேல் வைக்கச் சொன்ன பலி, தலையை அழுத்தி, பாதாள லோகத்தில் சென்று விட்டபிறகு கதறுகிறான். “பாதாள லோகத்தில் நான் தனியே இருப்பதற்கு என்ன பாபம் செய்தேன்” ?  என்று. அதற்கு பகவான் மனமிரங்கி, கவலைப்படாதே, உனக்கு காவலாக, பாதாள லோகத்தில் நான் இருக்கிறேன் ?  என்கிறார்.

என்ன ஒரு ஆச்சர்யம். ஒரு அசுரனுக்கு அவன் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி காவல்காரனாக இருக்கும் ஒரு தெய்வம் !. கிருஷ்ணா அவதாரத்தில் பாண்டவர்களுக்கு வேலைக்காரனாக இருப்பதற்கு முன்பே, பலிக்கு காவற்காரனாக இருக்கிறார்.

ராவணன் பலி சக்ரவர்த்தியை பார்ப்பதற்க்காக பாதாள லோகத்திற்கு வரும்போது, பகவான் தன்னை மறைத்துக் கொள்கிறான் – என்று ஸ்ரீ சுப்பிரமணிய தீக்ஷிதர் உபன்யாசத்தில் சொல்கிறார்.

ராமாயணத்தில், வாமன அவதாரத்தை குறிப்பிட்டு ஜாம்பவான் சொல்கிறார். யார் கடலைக் கடப்பது என்ற பேச்சு ஆரம்பிக்கும்போது, ஒவ்வொரு வானரமும் ஒவ்வொரு தூரம் சொல்ல, ஜாம்பவான், நான் வாமன அவதாரத்தில், வாமன மூர்த்தி உலகத்தை அளந்த போது, அவரை மூன்று முறை வலம் வந்தேன். அவ்வளவு பெரிய தூரத்தை கடந்த நான், இந்தக் கடலை கடப்பேனா என்று பயமாக இருக்கிறது” என்கிறார்.

வாமன அவதாரத்தை முடிப்பதற்கு முன்பு:

இதில் ஒரு ஹாஸ்யமான விஷயத்தை, திருவானக்கோயில் சங்கர மடத்தில் இருந்த (சம்ஸ்ருத்தில் ஜனாதிபதி அவார்டு வாங்கியவர்) மறைந்த ஸ்ரீ சிவராம கிருஷ்ண சாஸ்த்ரிகள், ஸ்ரீ ரங்கத்தில் சப்தாகம் நடக்கும்போது இப்படிச் சொன்னார்.

“இந்த அசுரர் கூட்டம் எல்லாம் ரொம்ப நல்லவர்கள் ஆகா இருப்பார் போல. 3 அடி கேட்டு ஒருவர் வருகிறார். அவர் எப்படிப்பட்டவர் என்பதை குரு விளக்குகிறார்.  அவரை பார்க்க ஏழை பிராமணரைப் போல் தெரிய வில்லை. சாதாரணாமாக ஒரு பிச்சைக்காரன் 1 என்று கேட்டால், 1 ரூபாயைக் குறிக்கும், GOVT பியூன் 1 என்று கேட்டால் 1௦௦ ரூபாயைக் குறிக்கும். மேல் அதிகாரி 1 என்று கேட்டால் 1௦௦௦௦ ரூபாயை குறிக்கும். மினிஸ்டர் 1 ரூபாய் என்றால் 1 லட்ச ரூபாயைக் குறிக்கும்.

ஒரு பெரிய ராஜாவாக இருந்து, தேவலோகத்தையே வென்ற ஒருவனுக்கு 1 ரூபாய்க்கும் லட்ச ரூபாய்க்கும் வித்தியாசம் தெரியவில்லையே. 3 அடி கேட்டவுடன் அது பெரிய “அடி” என்று தெரியாமல் சம்மதித்தானே !” என்றார்



Wednesday 3 June 2020

த்யானம் என்றால் என்ன ?


கொரோனா சமயத்தில் எல்லோரும் த்யானம் செய்கிறேன் (வேறு வழியில்லாமல், "எத்தனை மணி நேரம் சார் டீ வீயே பார்ப்பது ? கடுப்படிக்கிறது !. அதான் த்யானம் செய்யப் போகிறேன்"} என்று கிளம்பி விட்டார்கள். இது எதோ கார் டிரைவிங் மாதிரி !

பஞ்ச பாத்திர உத்தரிணி எல்லாம், எதோ பாக்யராஜ் படத்தில் வரும் "ஐந்து பாத்திரம்" என்ற நிலை மாறி, நிஜமாகவே திரி கால, at least ஒரு காலமாவது பண்ண ஆரம்பித்து விட்டார்கள். மஹா பெரியவா அன்போடு சொன்னதை, கொரோனா அடித்துச் சொல்லி இருக்கிறது

எனக்கும பிராமணர்கள், நிஜமாகவே பிராமணர்கள் ஆகி விடுவார்களோ என்று பயமாக இருக்கிறது !!

த்யானம் கொஞ்சம் சீரியஸ் ஆன விஷயம். அதனால் கொஞ்சம் சீரியஸ் ஆக பார்ப்போம்.

 கோடி பூஜை = ஸ்தோத்ரம்
கோடி ஸ்தோத்ரம் – ஜபம்
கோடி ஜபம்  = த்யானம் என்று எல்லாம் உபன்யாசகர்கள் சொல்வது வழக்கம்.

த்யானம் சித்திக்க, எண்ணிக்கையில் மனசு வைக்காமல், சிந்தனையை உள் நோக்கித் திருப்பவேண்டும். ஆனால், த்யானம் ஆரம்பத்தில், எண்ணிக்கையில் தான் மனசு போகும். மெதுவாக எண்ணிக்கையில் இருந்து விலக வேணும் என்று சிலர் சொல்கிறார்கள்

ஸ்ரீ ஸ்ருங்கேரி நருசிம்ம பாரதி சுவாமிகள், த்யானம் செய்வதைப் பற்றி அருமையான விளக்கம் சொன்னதை, மஹா பெரியவா ஒரு இடத்தில சொல்கிறார்.

ஒரு சிஷ்யர் ஸ்ருங்கேரி பெரியவாளிடம், த்யானம் சித்திப்பதற்க்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்க, அதற்கு, “நீ த்யானம் செய்து கொண்டே இரு, தானாக சித்திக்கும்” என்றார். சிஷ்யர் விடாமல், “நானும் செய்து கொண்டே இருக்கிறேன், சித்திக்க மாட்டேன் என்கிறதே !” என்றார்.

அப்போது, சுவாமிகள், “நீ த்யானம் செய்து கொண்டே இருக்கிறது. ஒரு சமயத்தில் நெல் மணிகளின் மீது உட்கார்ந்து கொண்டு ஜபம் செய்தால், அது பொரிந்து விடும்” என்றார்.  அதை பரிட்சித்து பார்க்க, குருவையே செய்து காட்டச் சொல்லி, சந்திரசேகர பாரதி தீர்த்த சுவாமி, அப்படியே நெல் மணிகளைப் போட்டு தியானத்தில் ஈடுபட நெல் மணிகள் பொரிந்து பொறியாக வெடித்தன. (இப்படியும் ஆச்சார்ய ஸ்ரேஷ்டர்கள் நம்மிடையே இருந்து இருக்கிறார்கள் !!)

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது. நாம் த்யானம் பண்ணுகிறேன் என்று நெல் மணிகளின் மேல் உட்கார்ந்தால், அது பொடியாகி, கோல மாவு (கோகிலா இல்லை) மாதிரி ஆகிவிடும். பிறகு எங்கே பொரியும் ?  ஸ்வாமிகள், தன் உடலையும் லேசாக ஆக்கிக்கொண்டு, நெல் மணிகளின் மேல் உட்கார்ந்து த்யானம் செய்கிறார் என்று நினைத்தாலே நமக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. இப்படியும் குருமார்கள் இருந்திருக்கிறார்கள் என்று !!

ரமண பகவான் சொல்கிறார் – த்யானம் செய்வது என்பது வாய் திறக்காமல், சப்தம் வராமல் ஜபம் செய்ய வேண்டும்.  சப்தம் வராமல் செய்தால் கூட, நமக்குள் ஒரு சப்தம் வருமே, (நமக்குள் அதை உணர முடியும்)  அது எங்கிருந்து வருகிறது எங்கு கிளம்புகிறது ? என்று தேடினால், த்யானம் சித்தித்து விடும்.  (ஒரு முகப்படுத்தி ஜபம் செய்வது என்பது என்பது என்ன ? )

இப்படி எல்லாம் த்யானம் செய்வது என்பது சாத்தியமா ? (அட, போங்கப்பா, )

1௦ நிமிடம் த்யானம் செய்ய முடியாமல் தவிப்பதற்கு முதல் காரணம் மனைவி தான் என்று சொன்னால் உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும் 

நீங்கள் த்யானம்/அனுஷ்டானம் என்று ஏதோ செய்து கொண்டு இருக்கிறீர்கள். மணி காலை 9 என்று வைத்துக் கொள்வோம். சூடா தோசை செய்து (தோசை மாவை கல்லில் உற்றி, சுற்றி, நல்ல எண்ணையை "உண்டு" என்று உற்றி, நடுவில் கொஞ்சம் நெய்யை உற்றி, ஒரு 4 - 5 பண்ணி ஹாட் பாக்கில் வைத்து, உங்கள் அருகில் கொண்டு வைக்கிறாள். (ஹாட் paakai திறந்து வேறு வைத்து)  வலது பக்கத்தில், தேங்கா சட்னி, இடது பக்கத்தில், மொளகா பொடி, எண்ணை. (வெங்காய சட்னி சாப்பிடும் பிராமணர்கள் அதையும் சேர்த்துக் கொள்ளலாம்). அன்பாக "சாபிடுங்கோ ! ஆறிடப் போறது" என்று வேறு சொல்கிறாள்

இப்போது நீங்கள் தோசை வேண்டாம் என்று த்யானம் செய்வீர்களா ? அல்லது போறும் என்று த்யானத்தை முடித்து விட்டு, தோசையை சாபிடுவீர்களா ?  முதல் category ஞானி,  ரெண்டாவது, நம்ம category. !!!

நாம் எல்லோரும் "அஜாமிளன்" மாதிரி கடைசி காலத்தில் "நாராயணா என்று சொன்னால், புஷ்பக விமானத்திலோ (அ) கருட வாகனதிலோ பெருமாள் வந்து கை தூக்கி அழைத்துக் கொண்டு செல்வான் - என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம். அப்படியே இருப்போம். அதான் நமக்கு நல்லது. !!!! தியானத்தை அடுத்த ஜென்மத்தில் பார்த்துக் கொள்ளலாம். !!!

கீரன் ஒரு அருமையான கதை சொல்வார். ஒருவன் பக்தி பண்ணாமலேயே வாழ் நாளை கடத்தி விட்டான். அவன் மகன் பிரஹ்லாதன் மாதிரி நல்ல பக்தி பண்ணி ஒரு செம்மையான வாழ்க்கை வாழ்ந்து வந்தான். தன் தந்தையின் கடைசி காலத்தில், அவர் அருகில் உட்கார்ந்து கொண்டு "அப்பா, எதாவது பகவன் நாமா சொல்லு, போகிற வழிக்கும் புண்ணியம் கிடைக்கும்.  (எதிரே இருக்கும் பகவான் படங்களைக் காட்டி) எதாவது ஒரு பேரை சொல்லு" என்கிறான்.

அப்பா திடீரென்று "முரு, முரு" என்று சொல்லி திணறுகிறார். பையன் உடனே ஓடிப்போய் ஒரு டம்ளர் ஜலம் கொண்டு வந்து வாயில் சொட்டு சொட்டாக உற்றி, "சொல்லுப்பா சொல்லு"  என்று கதறுகிறான்.

அவர் மெதுவாக ஆஸ்வாசப்படுதிக்கொண்டு, தன், பையனிடம் கண்ணீர் மல்க சொல்கிறார்.

"எனக்கு முரு(று)கலா. ஒரு ரவா தோசை கிடைக்குமா"...........