Sunday 31 March 2024

சங்கீத கலா நிதி - 2024 -

 

முன்னுரை:

இந்த வருட சங்கீத வித்வத் சபை, சங்கீத கலாநிதி மற்றும் இதர நிதிகளை தேர்வு செய்யும் பொருட்டு சபை, ஒரு திங்கள் காலை கூடுகிறது. சபையில் என்ன நடந்து இருக்கும் என்று எல்லோரும் மண்டையை உடைத்துக் கொள்ளாமல்- படிக்கவும் - ஒரு அலசல்:

வீ. ஸ்ரீ – வீ.ஸ்ரீராம்.-  ஸ்ரீ.மு – ஸ்ரீ. முரளி -  மெ. மெம்பர்ஸ்

பாகம் 1

வீ. ஸ்ரீராம் - இந்த சபைக்கு வந்திருக்கும் அனைவருக்கும் சங்கீத வித்வத் சபை சார்பாக வாழ்த்துக்கள். ஸ்ரீ. முரளி அவர்களின் கார் மெட்ரோ-பாதை குழப்பத்தில் மாட்டிக் கொண்டு இருப்பதால் கொஞ்சம் லேட்டாக வருவார்.

இந்த வருடம் சங்கீத கலாநிதி மற்றும் இதர அவார்டுகள் யாருக்கு வழங்க வேண்டும் என்று என்பதை தீர்மானிப்பதற்காக இந்த சபை கூட்டப்படுகிறது வழக்கம் போல கடவுள் வாழ்த்துடன் இந்த சபையை தொடங்குவோம்.

மெ-1 – என்ன சார் இது. மணி 8.50  தான் ஆகிறது. கொஞ்சம் வெயிட் பண்ணி ராகு காலம் முடிந்து 9.00  ஆரம்பிக்கலாம்.

வீ.ஸ்ரீ – (கொஞ்சம் கோபமாக) இரண்டு மாதம் முன்பு, நாம் இனிமேல், சமூக நீதியை பின் பற்றவேண்டும் என்றும் சனாதனம் வேறு, நாம் வேறு என்று முடிவும் பண்ணி விட்டோம். இது போன்ற மூட நம்பிக்கைகளை ஒழிக்கவேண்டும் என்று உங்களுக்கு சொன்னது மறந்து விட்டதா ? இப்படி பொறுப்பில்லாமல் இருந்தால் என்ன அர்த்தம். அதனால் ராகு காலம் முடிவதற்குள் நிகழ்ச்சி ஆரம்பிக்கவேண்டும். இது அவரின் அன்புக் கட்டளை. இறை வணக்கம் ஆரம்பிக்கலாம்.

மெ.1 – சாரி. சார். எனக்கு கொஞ்சம் காது கேக்காது.

வி.ஸ்ரீ . சரி சரி.

ஸ.வி.சபை- ஸ்டூடென்ட் - “மஹா கணபதிம்” என்று பாட ஆரம்பிக்க, ஸ்ரீ. முரளி உள்ளே வருகிறார்.

ஸ்ரீ. மு- “யார் பா இந்த பாட்டை எல்லாம் பாடறது. சமத்துவ சிந்தனையும், சமூக நீதியிலும் எதற்கப்பா கணபதி ?  நிறுத்துப்பா !!!!

இன்னொரு மெம்பர் – சார். அது வேண்டாம் என்றால் “ஈஸ்வர அல்லா தேரே நாம்” பாட்டை பாடலாமா”

மெ-3 – “என்ன சார் விவரம் கெட்ட ஆளா இருக்கீங்களே. ரகுபதி ராகவ ராஜாராம் என்று ஆரம்பிக்குது அந்தப் பாடல். எப்படி சார் பாடறது ? இதை பாடினா “அவர்” கோச்சுப்பார். இந்த ஒரு வரியை மட்டும் பாட, இது என்ன RTP யா. ?!

வீ.ஸ்ரீ. – சார் வேதநாயகம் பிள்ளை என்று ஒருவர் இருந்தார். அவர் அருமையான பாடல்கள் பல எழுதி இருக்கிறார். அவர் 1826 ல் பிறந்தார். அவர் பன் மொழி வித்தகர். அவர் திருச்சி நீதிமன்றத்தில் வேலை செய்தார்  இதுவரை அவர் பல புத்தகங்கள்..........

மெ.4 – இடை மறித்து, ஏம்பா ஸ்ரீ ராம். எப்போ ஏதாவது பேசச் சொன்னாலும் உடனே சரித்திர ப மாதிரி வள வள என்று பேசறியே  எங்களால முடியல பா. இறை வணக்கம் தானப்பா இப்ப டாபிக். அதுக்கு ஏம்பா வே.நா சரித்திரம் சொல்லிண்டு இருக்க !!!

வீ.ஸ்ரீ. சாரி சார். பழக்க தோஷம்....

மெ. 5 – சார் பாரதியார் பாட்டு பாடலாம். நாட்டுப் பற்றுள்ள பாடல் பல இருக்கின்றன. ஏதாவது பாடலாம் !!

ஸ்ரீ. மு- நல்ல ஐடியா. கூப்பிடுப்பா பாரதியார் பாட்டு பாடத் தெரிந்தவரை....

பாடகர் – சுருதி பாக்ஸ் சரி செய்து கொண்டு. “நெஞ்சு பொறுக்குதில்லையே, நெஞ்சு பொறுக்குதில்லையே, இந்த நிலை கெ....

ஸ்ரீ.மு – ஸ்டாப், என்ன கண்றாவிப்பா  இது. இந்தப் பாட்டெலாம் பாடிண்டு. யாருப்பா இது பாடறது  ?

பாடகர். நான் விஜய் சிவா சிஷ்யன். இங்கு advance music training சேந்திருக்கேன்.

மெ 5  - நினைச்சேன். இந்த பாட்டெல்லாம் சமத்துவத்துக்கு ஒத்து வராது. வேற எதோ நினைவு  வருது. நிச்சயமா அவர் கோச்சுப்பார். போப்பா உள்ளே.....

மெ- 6 -  இறை வணக்கமே வேண்டாம், மீட்டிங்கை ஆரம்பிக்கலாம்.

மெ 7 –  அது எப்படி !!! சம்பிரதாயமா அதான பண்றோம் !!!. நான் ஒத்துக்க முடியாது.

ஸ்ரீ. மு- என்னாப்பா இது, சாதரணமாக மீட்டிங் போது தான் அடிச்சிப்போம். இப்போ இ.வணக்கம் முன்னாடியே அடிசுக்கிறோம். !!!!!

மெ 4  -  சார். வானாகி மண்ணாகி வளிஆகி..  பாடலாம், இது இயற்கையைப் பற்றி பாட்டு. அர்த்தம் யாருக்கும் புரியாது.

வீ.ஸ்ரீ – கரெக்ட். அதையே பாடலாம்

இனிதாக கடவுள் வாழ்த்து முடிந்தது

 

பாகம் 2

ஸ்ரீ. முரளி – இங்கு கூடியுருக்கும் அனைவருக்கும் வணக்கம் இந்த வருட சங்கீத கலாநிதி யாரு என்பதை முடிவு செய்யலாம் ?

மெ. 4 –  ஒரு சின்ன விண்ணப்பம். சாதாரமாக இட்லி, வடை போடுகிறீர்கள். இந்த வருடமாவது சமோசா, கட்லெட், கொஞ்சம் கெட்டி சட்னி, போடவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். வீட்டில் இட்லி சாப்டு நாக்கு செத்துப் போச்சு. அதனால்.

மெ. 7 -  ஏன் சார் தின்னிப் பண்டாரம் மாதிரி, இன்னும் மீட்டிங்கே ஆரம்பிக்கலை. அதற்குள்ளாகவே தீனியா  >

ஸ்ரீ. மு- சார் அவரை ஒன்னும் சொல்லாதீங்கோ. சாதாரனமா. பாதி மீட்டிங்கிலதான் நிறைய பேர் தூங்குவா. இவர் கலை டிபன் சாப்ட ஒடனேயே தூங்கிடுவார். அதனால் நாம் என்ன சொனாலும் அவருக்குத் தெரியாது. அதனால் அவர் கேட்பதை கொடுத்து விடுவோம். !!!

வி.ஸ்ரீ  -  அது மட்டும் இல்லை  இங்கு பாதி பேருக்கும் காது கேட்காது. கண்ணு தெரியாது.

ஸ்ரீ. மு- இந்த வருடம், மிகுந்த சிரமம் எடுத்து, சங்கீத கலாநிதி விருதுக்குரியவரை தேர்ந்து எடுத்து இருக்கிறோம். யார் என்று நான் சொன்னால், மூக்கில் மேல் விரலை வைக்கப் போகிறேள் ?

மெ 5. இரண்டு வருடமாகவே மூக்கில் மேல் அடிக்கடி விரல் வைக்கிறமாதிரி நிறைய நடந்து கொண்டு இருக்கிறது.

ஸ்ரீ.மு. இந்த வருடம் மகா.ஸ்ரீ T.M.Krishna அவர்களுக்குக் ஸ.க விருது கொடுப்பது என்று ஏக மனதாக தீர்மானித்து இருக்கிறது.

விழித்துக் கொண்டிருக்கும் எல்லா மெம்பரும் ஒரு மனதாக எழுந்து

“என்னது !  அவருக்கா !! என்னப்பா நடக்குது. இங்கே”

இந்த சத்தத்தில் அந்த சமோசா மெம்பெர், அரை குறையாக காதில் வாங்கிக்கொண்டு

“சரியான முடிவு. ஏன் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சி. போன வருடம் கூட காலை ப்ரோக்ராமில் மிக அருமையாக பாடினார். மிகச் சிறந்த ஸ.கலாநிதியின் மகன். அவரைப் போலவே பாடினாலும் ஞானம் அதிகம்.

ஒய், நீ யாரைச் சொல்றீர்

அதான் நா..T.N.S.Krishna

நாசமா போச்சு. அவர் இல்லைன்னா. இது T.M.Krishna

என்னது அவரா ? என்று பல் செட்டு விழுந்தது கூட தெரியாமல் அதிர்ச்சி ஆகிறார்.

மெ.4 -  அவர் என்ன சாதித்தார் என்று விருது கொடுக்கிறீர்கள் ?

வீ. ஸ்ரீ. அவருடைய சங்கீதம் சம்ப்ரதாயமானது. நம்முடைய பாரம்பரிய சங்கீதத்தை கட்டிக் காப்பதில் இன்னிக்கு அவர்தான் முதல்.

மெ. 4.  என்னது அப்படியா ?  (அப்படியே மயங்கி விழுகிறார்)

மெ. 8   கடுப்புடன்  அவர் போகாத சர்ச் கிடையாது. பாடாத மசூதி கிடையாது  திட்டாத பாடகர்கள் கிடையாது” – இதையும் சேத்துக்கோங்கோ..

மெ. 9 – என்ன சார் அக்ரமமா இருக்கு

மெ. 4 -  அவர் நம் சபாவிலேயே பாடலியே சார் !

வி.ஸ்ரீ. அதனால் தான் 4 மாதத்திற்கு முன்பு  கச்சேரி பண்ண வைத்தோம். த்யாகராஜர் உற்சவத்தின் போது. தியாகராஜர் மன்னிச்சாரோ இல்லையோ ? நாங்க மன்னிச்சு அப்பயே முடிவும் பண்ணிட்டோம். அவர்தான் ஸ.கலாநிதி என்று.

மெ.3. – அவர் கச்சேரியைக் கேட்டே ரொம்ப நாள் ஆச்சே சார். ?

ஸ்ரீ.மு.  அவர்தான் வாடிகன் சிடியில் பாடினாரே. ஹிண்டு பேப்பரில் கூட ஒரு பக்கத்திக்கு கட்டுரை வந்து இருந்ததே. அவர் வாடிகனில் பாடியபோது ஞான ஒளி எல்லா நாடுகளுக்கும் பரவியதே  ?... நீங்க பார்க்கலையா ?

வீ.ஸ்ரீ  இந்த வருடம் Musicologist விருது, ஒரு கிறிஸ்தவ பெண்மணிக்கு கொடுத்து இருக்கிறோம். அவர் தேவாரம் ராமலிங்க அடிகளார் அவர்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் வாங்கி இருக்கிறார்.  அது போல ஹிந்து அல்லாத தெய்வங்களைப் புகழ்ந்து பாடி, நம்முடைய இசையை உலகெல்லாம் பரவக் செய்த TM Krishnaa விற்கு வழங்கறதுக்கு என்ன தடை?

மெ. 4 – (தமிழ் பண்டிதர் மற்றும் MA மெம்பெர்) - இது சங்கீத கலா அநீதி

மெ 3 அவர் தியாகராஜ சுவாமியை மிகவும் வருந்தத்தக்க முறையில் பேசி இருக்கிறார். ?

வி.ஸ்ரீ  இடை மறித்து, ஏன் சுவாமி தியாகராஜரே “நரஸ்துதி சுகமா ?” ங்கறார். அதனால் தான்....

மெ. 3 -அதனால. தியாகராஜரை வசை பாடணுமா என்ன. Stupid Answer   இது  ?

வி.ஸ்ரீ - அவர் மிகச் சிறந்த நடிகர் கூட ?

மெ. 4 - என்னது எப்போ சார் நடிச்சார் ?

வி.ஸ்ரீ- என்ன சார் ஆறு மாதம் முன்னாடி, அந்த சபாவில் “சுவாமி ஐயப்பன்” நாடகம் போடுமோது வாபர் வேஷம் போட்டுக் கொண்டு வந்தாரே ? மறந்துட்டீங்களா ?

மெ. 4 - ஆமா. சாரி மறந்துட்டேன். அந்த வேஷத்திலேயே லுங்கியோட அடுத்த கச்சேரி பண்ணினாரே ?  அதில் கூட அமீர் கல்யாணி RTP பாடி “எல்லோரும் கொண்டாடுவோம், அல்லாவின் பெயரை சொல்லி” ன்னு பல்லவியும் பாடினாரே ?!

வி.ஸ்ரீ  கரெக்ட்., இருந்தாலும் உமக்கு அநியாயத்திற்கு ஞாபக சக்திங் கனும் !!!

மெ. 3- அப்போ அடுத்த ஸ.க விருது, சித் ஸ்ரீராமுக்கு கொடுத்து விடலாம். சாதாரணமாக TMK தியாகராஜரைத் திட்டறார்.  சித் பாடினாலே திட்றா மாதிரி தான் இருக்கும். அதனால் தான்.

மெ. 8.  இந்த அவல நிலை ஏன் வந்தது என்றால். இதுவரை ஸ.க கொடுக்காத மிகச் சிறந்த வித்வான்களின்  ஆவி வந்து இங்கு பழி வாங்குகிறது என்று நினைக்கிறேன். அதனால் ஆவி அமுதாவை கூப்பிட்டு எதாவது பரிகாரம்........

மெ. 2 – சங்கீத கலாநிதி என்பது நம் சபையில் மையப் புள்ளி. அதற்க்கு என்று ஒரு நீதி உண்டு. மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதும் நீதி மக்கள் பக்கமா, நல்ல சங்கீதத்தின் பக்கமா என்று விவாதிக்கும் அதே வேளையில், நாம் எந்தப் பக்கம் இருந்தாலும் கவலைப் படாமல் ஒரே பக்கமும்.........

மெ 4 – ஐயோ.....யாருப்பா இவரு. என்ன சார் சொல்ல வரீங்க ?

வி.ஸ்ரீ – சாரி சார். அவர் 5 மாதத்திற்கு முன்பு ஆழ்வார்பேட்டையில் கமல ஹாசன் வீட்டிற்கு பக்கத்தில் குடி போய் விட்டார். இரண்டு மூன்று முறை அவருடன் பேசியதின் விளைவு !!!

ஸ்ரீ. மு – அதனால் எல்லோரும் ஏக மனதாக ஒத்துக் கொண்டதன் பேரில். இந்த வருடம் ஸ.க விருது  T M Krishna அவர்களுக்கு கொடுப்பது என்பதை உறுதி செய்து விட்டோம். உடனே அவருக்கு சொல்ல வேண்டும். ரொம்ப நன்றி

முடிவுரை

தில்லானா மோகனாம்பாள் படத்தில் தூண் மறைவில் நின்று கொண்டு சண்முகசுந்தரம், மோகனா நாட்டியத்தைப் பார்ப்பது போல், நான் தூணின் மறைவில் நின்று கொண்டு இதை எல்லாம் பார்த்த பின்,

வெளியில் வந்து புலம்புகிறேன்  (வடிவேலு, "இதுக்கெல்லாம் சரி படமாட்டான் என்று எல்லோரும் சொன்ன பிறகு புலம்புவாரே....அது போல)

“அவர் அவர் னு அடிக்கடி சொல்றாங்களே. யாருப்பா அவரு !. சாதாரணமா பேர சொல்லிட்டு தான அப்புறம் தானப்பா அவர் அவர் ன்னு சொல்லுவாங்க. கேட்டா கூட சொல்ல மாட்டேன் கராங்களே. !! பதில் தெரியலேன்னா :உறுத்துமே... Rasikas.org குழுமத்தில் வேறு கேட்பாங்களே. அவர்களுக்கு நான் என்ன பதில் சொல்வேன் ? இப்படிப் புலம்ப வுட்டாங்களே !! தெய்வமே....

என்று நடந்து 29C பஸ்சில் மந்தவெளி போவதற்கு பதிலாக, எதிர் திசையில் ஏறிவிட, கண்டக்டர் என்னைப் பார்த்து, என்ன சார், “கீழ்பாக்கமா?” என்று கேட்டார்.

 

 

 

Saturday 30 March 2024

>> ஜெய ஜெய வராஹபுரி வெங்கடேசா >>>

 எங்கள் பெருமாள் அளப்பரிய கருணை மிக்கவர். அது எங்கூர்க்காரர்களுக்கு நன்கு தெரியும். அதனால் தான் எந்த உத்சவம் என்றாலும், எங்கு இருந்தாலும் உடனே வரகூர் வந்து, பெருமாளைக் கொண்டாடித் தீர்ப்பார்கள்.

நேற்று, நான் மைலாப்பூர் ஸ்ரீ ராம் சிட்ஸ் கிளைக்கு சென்றிருந்தேன். அங்கு உயர் அதிகாரியிடம் பேசிக்கொண்டு இருந்தேன். அப்பொழுது வரகூர் புராணத்தை பாடிவிட்டு, மேலே பார்த்தால் வரகூர் பெருமாளின் காலண்டர் மாட்டி இருக்கிறது. யாரோ மாட்டி இருக்கிறார். இதே போல். P.S.CBSE  பள்ளியில், Secretary யும், பெண்ணாத்தூர் அவர்களின் பேரனும், இப்போது தலைமை நிதி நிர்வாகி யும் (Treasurer of PS Group of School) ஆன ஸ்ரீ P.S.Prabhakar  அவர்களிடம் பேசிக்கொண்டு இருந்தேன். அவர் அருகில் வரகூர் monthly calender இருந்தது. அவரிடம் கேட்டபோது, “யாரோ கொண்டு கொடுத்தார்கள், நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கொடுத்து விட்டார்.  இந்த சின்ன விஷயங்கள், வரஹூர்க்காரனான எனக்கு சின்ன சிலிர்ப்பு உண்டாக்கும் நிகழ்வுகள்.

அது போகட்டும்

சேங்காலிபுரம் என்று ஒரு ஊர் உண்டு.  (அனந்தராம் தீட்சிதர்) அங்கு பிறந்தவர்கள், காசிக்குப் போக மாட்டார்கள். ஏனென்றால் சேங்காலிபுரம் தான் காசி, அங்கு ஓடும் தீர்த்தம் தான் கங்கை என்று. இன்றும் அப்படித்தான்.

அப்படித்தான் வரஹூர்

மஹா பெரியவா சொல்லுவார் “வரஹூர் க்காரானுக்கு அவன் பெருமாள் உசத்தி. வேறு ஒரு கோவிலுக்குப் போகவும் யோசிப்பான். அங்கு போனாலும், வரஹூர் சுவாமியாகவே அதையும் பார்ப்பான்?” என்று

ஏன் அப்பா சொல்வார். மஹா பெரியவாளிடம், ஒருவர் சென்று, “நான் வரஹூர் போய் வந்தேன் என்று சொல்ல, அவர் “தனியா போனியா, ஆத்துக்காரியை அழைச்சிண்டு போனியா” என்று கேட்க, அவர் “தனியா போனேன்” என்றார். அதற்க்கு, பெரியவா “எண்டா, வரஹூர் பெருமாளே, தாயாரை மடியில் வச்சிண்டு இருக்கார். நீ என்னடான்னா, தனியா போனேன் கறியே..... இனிமேல் அங்கு போனால் தம்பதி சமேதரா போங்கோ” என்றாராம்.

இந்தக் கதை எதுக்கு என்று அப்புறம் சொல்கிறேன்.

நேற்று முன் தினம், இப்போது இருக்கும் எங்கள் ஊர் பட்டாச்சார்யார், சில நிர்பந்தங்கள் காரணமாக, போக வேண்டிய சூழ்நிலை. இவர் வந்து சுமார் ஒரு வருடம் இருக்கலாம். இதற்க்கு முன்பு இருந்த மாது பட்டாச்சர்யார் (நாங்கள் அன்புடன் கூப்பிடும் மாது அண்ணா) திரும்பி வருவதாக முடிவு செய்யப்பட்டு விட்டது.

இப்போது இருக்கும் பட்டாச்சர்யார், எப்படி வந்தார் என்பது, வரகூர் வாசிகளுக்கு மட்டுமே தெரியும். பெருமாளின் கருணை எத்தகையது என்பது. இது போகட்டும். !!!!

இந்த நிகழ்வை நான் யோசித்தேன். இதில் பெருமாளின் திருவிளையாடல் என்ன என்று ?  ஏன் ஒருவர் வரவேண்டும், ஒரு வருடத்திற்குள் திரும்பிச் செல்ல வேண்டும் என்று ???? 

இப்போது இருக்கும் பட்டாச்சர்யாருக்கு ஒரு மகன் உண்டு. அவர் பேர் வெங்கடேஷ் பட்டாச்சர்யார். (ஜூனியர் பட்டாச்சார்யார்). வரகூர் பெருமாள் பேரும் அதே தான்.

வெங்கடஷுக்கு  திருமண வயது. அவருக்கு திருமணம் ஆக வில்லை. தாயார் வரன் பார்த்துக் கொண்டிருக்கிறார் இரண்டு மூன்று வருடமாக. சரியாக அமையவில்லை.  என் அம்மாவிடம் பல முறை சொல்லியும் இருக்கிறார். ஏன் அம்மா, எப்போதும் எல்லோரிடமும் சொல்லும் ஒரே வார்த்தை. “வரஹூர் பெருமாளை கெட்டியா புடிச்சிக்கோங்கோ.. அவர் கை விடவே மாட்டார், இது சத்தியம்”  என்பதுதான்

இங்கு வந்த சில மாதங்களிலே, அவருக்கு சில மாதங்களில் நிச்சயம் ஆகி, பெருமாள் சந்நிதானத்தில் கல்யாணம் ஆகி விட்டது. ஊர் கூடி கல்யாணம்.

எங்கள் பெருமாள் என்ன நினைத்தார் என்றார். “நீங்கள் என் ஊருக்கு வாருங்கள், என்னைத் தொட்டு பூஜை செய்யுங்கள், நான் உங்களைப் பார்த்துக் கொள்கிறேன்” என்று சொல்லி, சொன்ன வண்ணம் செய்து, உரியடி உற்சவத்தையும், இப்போது இருக்கும், பட்டாச்சர்யார் மூலமாக நடத்திக் கொண்டும் விட்டார்.

ஆனால், மாது அண்ணாவை விட, எங்கள் பெருமாளுக்கு மனமில்லை. திருமணமான எந்தப் பெண்ணுக்கும், பிறந்த வீட்டுப் பாசம் விடாது, என்பது போல. மிகவும் பிடித்த மாது அண்ணாவை திருப்பிச் சேர்த்துக் கொண்டுவிட்டார்.

இப்போது நான் சொன்ன கதை புரியும்.  தனியாக வந்த எங்கள் ஜூனியர் பட்டாசார்யாரை தம்பதி சமேதராக அனுப்பி வைத்தார்.

அதுதான் எங்கள் பெருமாள் அணுகிரஹம்.....

திருமூலர் சொன்னது போல் “ஆர் அறிவார் எங்கள் அண்ணல் பெருமையை, யார் அறிவார் அந்த அகலமும் நீளமும்”

//....ஜெய ஜெய வராஹபுரி ஸ்ரீ வெங்கடேசா..........