Wednesday 30 January 2019

காற்றில் கலந்து என் மனதில் நிறைந்த அம்மம்மா:


நான் அம்மா என்று அழைக்கும் எனது மாமியாரின் தாயார்,   ஸ்ரீமதி பிரகதாம்பாள்  என்ற “அம்மம்மா” 28.1.2019 அன்று கும்பகோணத்தில், சிவலோகப் ப்ராப்தி அடைந்தார். அவருக்கு வயது சுமார் 95. 

அம்மம்மா இறப்பதற்கு சற்று முன்/ இறந்த பிறகு என்ன என்ன நடந்தது என்று நினைத்தால் மிகவும் ஆச்ச்சர்யமாக இருக்கும்:

28.1.19 அன்று மதியம், அம்மம்மாவிற்கு பணிவிடை செய்யும் லக்ஷ்மி, (இவரைப் பற்றி கடைசியில் எழுதி இருக்கிறேன்) அம்மாவிடம் “இன்று இரவு தாண்டாது” என்று சொல்ல, மதியமே, கொஞ்சம் மண், துளசி, தீர்த்தம் சேர்த்து பிசைந்து  மண்ணாசை, பொன்னாசை “போகவேண்டும்“ என்ற ஐதீகத்தில் சாப்பிட கொடுக்கப்பட்டது. இது லக்ஷ்மி ஐடியா.

இரவு, உயிர் பிரியும் நேரத்தில், மூச்சு இறைக்க, கண் விழித்துப் பார்த்த அம்மம்மா, தனக்குத் தாயாய் இருந்து பணிவிடை செய்த அம்மாவையும், தனக்குப் பெண்ணாய் இருந்து பணிவிடை செய்த லக்ஷ்மியையும் “நன்றாகப்” பார்த்து கண்ணை மூடிக்கொண்டு விட்டாள். எல்லாம் முடிந்தது.

விட்டல் போட்டுக்கொண்டிருந்த சட்டை (பேரனின் சீதனாமாக) இருக்க, தன் உயிரினும் மேலாக அன்பு வைத்திருந்த கணேசனின் வீட்டில் இருந்து “புதுப் புடவை” எடுத்து வந்து கட்டி விட, மகேஷ் என்கிற “செல்ல” பேரன் கடைசி கார்யங்கள் செய்ய, மோகன் அண்ணாவின் மேற்பார்வையில், ஜாம் ஜாம் என்று இறுதி யாத்திரை.

மிகவும் ஆச்சர்யப்பட்ட ஒரு விஷயம், செய்தி கேட்டு மகேஷ், சென்னையில் இருந்து கும்பகோணம் கிளம்பிய காரின் driver பெயர், நீலகண்டன்.  அம்மம்மா அந்த நீலகண்டனை அடைவதற்கு, இந்த நீலகண்டன் உதவி  செய்தார். என்ன ஒற்றுமை ?

நான் வருத்தப்படப்போகிறேனே என்று, முதல் நாள் என்னை வரவழைத்து, என் கையால் ஒரு ஸ்பூன் பால் வாங்கியும் குடித்துவிட்டாள். அதைப் பற்றி அடுத்த பாராவில்:

27.1.2019 அன்று என்ன நடந்தது என்று கேட்டால் ஆச்சர்யப்படுவீர்கள்

நான் தரங்கிணி மஹோத்ஸவத்திற்காக வரகூர் சென்றிருந்தேன் (25-27) அங்கிருந்து கும்பகோணம் சென்று, “உடம்பு முடியாமல்” இருக்கும் அம்மம்மாவைப் பார்த்துவிட்டு சென்னை செல்லலாம் என்று நானும் நிஷாவும் 27.1.2019 அன்று சுமார் மாலை 5 மணிக்குச் கும்பகோணம் சென்றோம்.

கால்கள் மட்டும் லேசாக ஆட, நினைவு தப்பி, 4 நாடகள் அன்ன ஆகாரமின்றி, கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் அம்மம்மாவைப் பார்க்க மனசு கனத்துப் போனது. குடும்பத்தில் எல்லோரையும் அரவணைத்து, ஒரு பெரிய வழிகாட்டியாக இருந்தவர், அவர் நடையின் வேகத்துக்கு யாருமே ஈடு கொடுக்க முடியாது.  ஒரு பெரிய கூட்டுக்குடும்பத்தை, சர்வ சாதாரணமாக நிர்வகித்தவர், இப்போது கடைசி தருணங்களில்...

நான் மிக அருகில் உட்கார்ந்து 2-3 spoon பால் வாயில் விட்டேன். பால் கொஞ்சம் வெளியில் வந்தது. கூப்பிட்டுப் பார்த்தேன், உணர்ச்சியே இல்லாமல் கண்கள் மூடி இருந்தார். சாயம் ஸந்த்யாவந்தனம் செய்யும்போது, அம்மம்மாவின் பக்கத்தில் உட்கார்ந்து “காயத்ரி மந்த்ரம்” ஜபித்தேன். கும்பேஸ்வரன், கோவிலுக்குச் சென்று பிரசாதம், வீபூதி, நெற்றியில் இட்டு விட்டேன், கடந்த 1 வருடங்களாக அந்த ஜீவன் பட்ட பாடு நினைவுக்கு வந்து, கொஞ்சம் அழுகை வந்தது. குருநாதரிடம் வேண்டிக் கொண்டேன், “போறும், இந்த ஜீவனை “தாத்தப்பாவிடம்” சேர்த்து விடு” என்று லலிதா நவரத்தின மாலை, அம்மம்மாவின் காது அருகில் சொன்னேன்..

நேற்று காலை, சென்னை வந்து, ஆபீஸ் சென்று,  இரவு 7 மணிக்கு வித்வத் சமாஜத்தில், வர்ஷிணி பாடி முடிக்கும்போது, SMS வந்தது மகேஷிடம் இருந்து...........

இதை நான் என்ன என்று சொல்ல ? நான் பார்க்க வேண்டும் என்பதற்காக, உயிரை வைத்துக் கொண்டிருந்தாள் என்று தான் சொல்ல வேண்டும்.  கடைசி நாட்களில், யாரையும் ஸ்ரமப்படுத்தாமல், ICU என்று உடல் முழுவதும் ஊசியால் குத்திக்கொள்ளாமல், மெதுவாக குருநாதரிடம் ஐக்கியமானது அந்த ஜீவன்.

“சிந்து: ஸரித் வல்லபம்” என்று சிவானந்தலஹரியில், ஒரு ஸ்லோகம் உண்டு.  பக்தி எப்படி இருக்கவேண்டும் என்று சொல்லும்போது, ஆதி சங்கரர், “நதி உற்பத்தி ஆகும் இடத்திற்கு சென்று பார்த்தால், அது “ஹோ” என்ற பேரிரைச்சலுடன், மலையிலிருந்து உற்பத்தி ஆகும், அது, பல இடங்களுக்க்குச் சென்று கடைசியில் கடலுக்கு வரும்போது அமைதியாக வந்து கடலில் சேர்ந்து விடும், (ஏனெனில் நாம் கடைசி கட்டத்தில் இருக்கிறோம்- என்று தெரிவதால்)”- என்று சொல்கிறார்.
அம்மம்மாவில் அந்த அமைதியை, நான் அப்படித்தான் பார்த்தேன்.

இது கல்யாண இறப்பு (மரணம்} என்பதால், ரொம்ப உணர்ச்சி “கொப்பளிக்க” எழுதப் போவதில்லை. நான் பார்த்த அந்த ஒரு உன்னதமான பெண்மணியப் பற்றி சில வரிகள்:

இந்த அம்மம்மா, அப்பப்பா போன்ற வார்த்தைகள், சிலோன் வானொலியில் கேட்டாற்போல் இருந்தாலும், இந்த உறவுகள் நம்மை விட்டு போய், அம்மா அப்பாவையும் மதிக்காது, இந்தக் காலத்து குழந்தைகள் வாழும் “வாட்ஸ்அப்” வாழ்க்கையை நினைத்தால், பாவமாக இருக்கிறது. அத்தங்கா, அத்தா மன்னி போன்ற பல உறவுகளுடன் எனக்கு பழக்கம் உண்டு.

எனக்கு சின்ன வயதில் செம்மங்குடியில் என்  பாட்டியோடு (அம்மாவின் அம்மா) இருந்ததால் (நான் என் பாட்டியை அம்மா என்றுதான் கடைசி வரையில் கூப்பிட்டேன்), பாட்டியின் “அளப்பரிய” அன்பு என்றால் என்ன என்று தெரியும். எனக்கு கல்யாணம் ஆன பிறகு, அம்மம்மா ரூபத்தில் இன்னொரு பாட்டி என் வாழ்க்கையில் வந்து, அதே அ.அ காண்பித்தது நான் செய்த பாக்கியம்.

மாப்பிள்ளை என்று என் மேல், ஒரு மரியாதை இருந்தாலும், ஒரு மகனுக்கு சமமான அன்பை என் மீது பொழிந்தவர் அம்மம்மா.

நான் மடிசார் கட்டி நிறைய பேர் பார்த்திருக்கிறேன்.  மடிசார்  கட்டிக்கொண்ட, அம்மம்மாவைப் பார்க்கவேண்டும். மிகவும் அழகாக, தெய்வீகமாக இருக்கும். மடிசாருக்கு பெருமை என்று கூட சொல்லலாம். இதை என் அம்மாவே சொல்லி பெருமைப் படுவாள். நான் நினைப்பதுண்டு, யாராவது, மடிசார் கட்டிய மங்களாம்பாளைப் பார்க்க வேண்டும் என்றால், “சரக்” என்று திரும்பி அம்மம்மாவைப் பார்த்தால் போறும். வைர மூக்குத்தி மின்ன, இரண்டு மூக்கும் குத்திய அம்மம்மா, மங்களாம்பாளாக, ஜொலிப்பாள்.

கிராமத்துப் பாட்டி (களிடம்) யிடம் சில குணங்கள் உண்டு:
வீட்டையே தன் Control ல் வைத்திருப்பாள். எது எது எங்கே இருக்கிறது. வேலைக்காரர்களை, எப்படி வேலை வாங்க வேண்டும், கொல்லையில் மாடு பால் கறப்பதில் இருந்து, மச்சிலில், எத்தனை பித்தளை பாத்திரங்கள் இருப்பது வரை. ஏதன் மத்தியில்,  கிராமத்து மகளிர் பஞ்சாயத்து வேறு.

குழந்தைகளை எப்படி அரவணைக்க வேண்டும், அதே சமயத்தில் “வெளுக்கும்” சமயத்தில் எப்படி அடிக்க வேண்டும். – எல்லாம்  அத்துப்படி. 2 குழந்தைகளை வைத்து சமாளிக்க முடியாமல் திணறும் இந்தக் காலத்தில், சர்வ சாதாரணமாக 5-6  குழந்தைகளை வளர்த்து, (கோடை விடுமுறை என்றால் 5, 10 ஆக உயர்ந்து விடும்), வெற்றி கண்டவர். தினமும் பெரிய விருந்தோ, தடல் புடல் எதுவும் இல்லை. வெறும் பழேது தான், அதை எதோ “பண்ணி”- அறு சுவை விருந்தாக கொடுத்தவர். – இப்போது அந்தப் பழேதுக்கு ஏங்குகிறோம், அதுதான் அவர்களின் வெற்றி.

சாதாரணமாக, எல்லா வீட்டிலும் தாத்தா என்பவர் ஒன்றுமே தெரியாமல் இருப்பார், பூஜை செய்வார், வயலுக்குப் போய் அறுவடையை கவனிப்பார்.  சாஸ்த்ரிகளாக இருந்தால், பெரிய மனிதர்கள் வீட்டுக்குப் போய் பூஜை செய்துவிட்டு, வாழைப்பழமும், தக்ஷிணையும் வாங்கி வருவார். வந்து சாப்பிட்டுவிட்டு தூங்குவார். ஆனால், தவறாமல் வீட்டுக் கணக்கு எழுதி, நிறைய செலவு ஆகிறது என்று புலம்புவார். அடுத்த நாளே 4 பேரை அழைத்துக் கொண்டு சாப்பாடு போடச் சொல்லுவார். மடிப்பு கலையாமல் சட்டை போட்டுக் கொண்டு வெளியில் போவார்.

அப்பளம் இட்டாளா ? மாவடு போட்டாளா ?  மாகாளிக் கிழங்கு 
கிடைத்ததா ? கொல்லையில் மாட்டுக்கு வைக்கல்/புல்லு இருக்கிறதா ?  ம்ஹூம், கவலையே கிடையாது- இது எல்லாம், சர்வ சாதாரணமாக செய்வாள், பாட்டி.

இந்த அம்மம்மாவும் அப்படித்தான்.

நான் நினைத்துப் பார்க்கிறேன். எதோ படிப்பு படித்து, தினமும் ஆபீசில் ஒரு 100 பேரையும், 50 e-mail ம் சமாளிக்க முடியாமல் திணறி, எப்படா Sunday வரும் என்று நினைக்கின்ற எனக்கு, சுமாராக படித்து, 365 நாளும், தன் குடும்பத்திற்காக ஓயாமல் உழைத்து வெற்றி கண்ட, அம்மம்மா, சத்தியமாக என் Management Guru.

மனமேற்குடியில், (“நிஷா சொல்வாள்) தினமும் வீட்டில் சமாராதனை போன்று தினமும் சாப்பாடு, தாத்தப்பா “கர்ணம்” (அந்த காலத்து VAO range) பதவியில் இருந்ததால், வீட்டிற்கு வருபவர், நிறைய உண்டு. அவர்கள் எல்லோருக்கு சாப்பாடு. அன்ன பூரணியாக வலம் வந்தவர்.  இந்த புண்ணியம் எப்படி அவருடைய கடைசி காலத்தில் உதவி செய்தது என்பதை நான் கண்கூடாகப்  பார்த்தேன்.  கடைசி பாராவில் இதைப் பற்றி எழுதி இருக்கிறேன்.

கடைசி காலத்தில், தன் பெண் வீட்டில் (என் மாமியார் வீட்டில்) தான் இருக்க வேண்டும் அம்மம்மா  முடிவு செய்து, கும்பகோணத்தில் தங்கி விட்டாள் உடம்பு முடியாமல், படுத்த படுக்கையாய் ஆன பிறகு, தன் “காரியங்கள்” கும்பகோணத்தில் தான் நடக்க வேண்டும் என்று திடமாக இருந்தாள்.

என் நினைவுகள் சற்று பின்னோக்கி விரிகிறது. கல்யாணம் ஆகி, முதலில் நிஷாவுடன், அம்மம்மாவை அழைத்துக் கொண்டு, மும்பை செல்கிறேன். தாதரில் இறங்கி, வாஷி சென்று (குடித்தனம்) வாழ்கையை ஆரம்பிக்கிறோம்.  நிஷாவுக்கும் கொஞ்சம் ஹிந்தி வரும் (கறிகாய் கடையில்- வெண்டைக்காயைக் காட்டி- ய கித்னா ஹை ? என்று கேட்பாள்), அம்மம்மாவுக்கு, தமிழை தவிர ஒன்றுமே தெரியாது. சொன்னால் நம்பமாட்டீர்கள், அந்தத் தெருவில் இருந்த மராட்டி, ஹிந்தி பேசும் எல்லா வீட்டிலும், ஒரு மாதத்தில் அம்மம்மா famous ஆகிவிட்டாள். என்ன பாஷை பேசினாள், என்ன செய்தாள் ? என்று எனக்கு இன்று வரை புரியவில்லை. மாதாஜி ! மாதாஜி !! என்று அவனவன் “அமிர்தாநந்தமயி” ரேஞ்சுக்கு அம்மம்மாவை உயர்த்தி விட்டார்கள். கறிகாய் தள்ளு வண்டிக்காரன், (இந்த அழகில் அவன் ஹிந்தி கூட இழுத்து இழுத்து பேசும் bhaiyaa வகுப்பைச் சேர்ந்தவன். அவன் பேசும் ஹிந்தி எனக்கே புரியாது) அம்மம்மா வாங்கிய பிறகுதான், (கருவேப்பலையாவது) மத்த வீட்டுக்குச் செல்வான் என்றதைக் கேட்டு எனக்கு தலை சுற்றியது.

அந்த ஊர் மராட்டி பெண்கள், கட்டிக்கொள்ளும் மடிசார், கொஞ்சம் “எசகு பிசகாக” இருக்கும். தலையில் வேறு அரை தொப்பி மாதிரி இருக்கும். அம்மம்மா மடிசார், அங்கு மிகவும் famous.  அம்மம்மா மடிசாரில் மயங்கிய மகாராஷ்ட்ர மங்கையர் பலர். !!!

இன்று இதை நினைத்துப் பார்க்கும்போது, அன்பு என்ற மொழிக்கு, பாஷையே தேவையில்லை. (Ammaamma had “that”unconditional love).

அம்மம்மாவிடம் இருந்த அந்த focus, facing any situation head-on, determination, excellent attitude, equally loving every one she meets..  – It is a lesson.

எனக்கு பழைய சாதம் நிஷா போடுவது, அம்மம்மாவுக்கு சுத்தமாக பிடிக்காது. எனக்கு சாப்பாடு போடும்போது அம்மம்மா பார்த்துக் கொண்டே இருப்பாள். நிறைய சாப்பிடவேண்டும், “அந்த ஊறுகாயும் கொஞ்சம் போடு” – என்பாள். நல்ல சாப்பாடு, நாள் கிழமை என்றால், சம்படம் நிறைய பக்ஷணங்கள்- எல்லாக் குழந்தைகளும்நன்றாகச் சாப்பிடவேண்டும்- அது தான் அம்மம்மாவின் முதல் குறிக்கோள்..
விக்னேஷ் பிறக்கும்போது, குழந்தையை யார் முதலில் வாங்கிக் கொள்வது என்ற போது “ரிஷி பஞ்சமி’ விரதம் முடித்து இருந்ததால், என் அம்மா வாங்கிக் கொள்ள முடியாமல் இருந்த நிலையில், சற்றும் யோசிக்காது, முந்தானையில், குழந்தையை அம்மம்மா வாங்கிக் கொண்டதை நினைக்கும் போது, என் மனது கனக்கிறது.  நான் வசித்த எல்லா இடத்திற்கும் அம்மம்மா வந்திருக்கிறாள். 

கையால், வாயை லேசாக மூடிக்கொண்டு சிரிக்கும் அந்த சிரிப்பு. “நிஷா எப்போதும் சமத்துதான்” என்று வக்காலத்து வாங்கும் அந்த லாவகமும், Present Generation விட்டல், ஞாநேஸ்வரி வரை அவர் காட்டிய அன்பு, இனிமேல் யாரும் காட்டவே முடியாது.

யாரையும் அவர் குறை சொல்லி நான் பார்த்ததே இல்லை. அவருடைய வாழ்க்கையில் கடந்து வந்த சோகங்கள் பல. பிறப்பிலேயே சில குழந்தைகளை பறி கொடுத்தவர். மேலும், தாத்தப்பாவின்  மரணம் அவரை மிகவும் உலுக்கியதை கண்ணால் கண்டவன் நான். என் மாமனார், திண்டுக்கல் மற்றும் முத்து சித்தப்பாவின் மரணங்கள், அவர் மனதில் ஒரு வெறுமையைத் தோற்றுவித்தது.  இருந்தாலும், குழந்தைகளிடம் புலம்பி, அவர்களையும் வருத்தப் பட வைக்க வேண்டாம் என்று எல்லாவற்றையும் பூட்டி வைத்து, ஒரு “சித்தர்” போன்ற வாழ்கை வாழ்ந்தவர்.

நல்ல காலம் சுகந்தா சித்தி மரணத்தின் போது நினைவில்லை. இல்லாவிட்டால், மிகவும் ஒடிந்து போயிருப்பாள்.

இரண்டு பேரைப் பற்றி எழுதாமல் இந்த கட்டுரையை முடிக்கவே முடியாது.

முதலில் அவரது பெண்ணான என் அம்மா, கோகிலா அம்மாள். தன் தாயின் பணிவிடையே முக்கியம் என்று எல்லா சுகங்களையும் தியாகம் செய்து, அம்மம்மாவுடன் கடைசி வரை இருந்தவர்.  அவர் நினைத்திருந்தால், அம்மம்மாவை சென்னை கூட்டிச் சென்று, தன் மகன் வீட்டில் இருந்திருக்கலாம்.  ஆனால் அப்படிச் செய்யவில்லை. கும்பகோணத்தில் தான் இருக்க வேண்டும் என்று சொன்ன ஒரு வார்த்தைக்காக கடைசி காலம் வரையிலும் கூடவே இருந்தவர்.  தனக்கே உடம்பு முடியாவிட்டாலும், பெற்ற தாய்க்காக, எல்லா கஷ்டங்களையும் பொறுத்துக் கொண்டு, இரவு பகல் என்று பாராமல் கவனித்துக் கொண்ட கோ.அ என் மனதில் எப்போதுமே உயர்ந்து இருக்கிறாள்.

இரண்டாவது, லக்ஷ்மி என்ற, அம்மம்மாவுக்கு கடைசி நிமிடம் வரை இருந்து கவனித்துகொண்ட மங்கை. ஒவ்வொரு நாளும் இரவு சுமார் 7 மணிக்கு வந்து, காலை செல்வாள். ஒவ்வொரு முறையும் பொறுமையாக உணவு ஊட்டி விட்டு, இரவு முழுவதும் அருகிலேயே படுத்துக் கொண்டு, முனகல் சத்தம் வந்தாலும் உடனே எழுந்து, புடவை மாற்றி, முகம் துடைத்து, ஒரு பர்சனல் நர்ஸ் ஆக இருந்தாள்.  அம்மம்மா செய்த அன்ன தானம், கடைசியில் லக்ஷ்மி உருவில் வந்து, சேவை செய்ததோ என்று தோன்றியது.  லக்ஷ்மயிடம் இருந்த “அமானுஷ்ய நெருக்கம்” – லக்ஷ்மி கொடுத்தால் தான் சாப்பிடுவேன் என்று பிடிவாதம் பிடிக்க வைத்தது. இன்று இரவு தாண்டாது என்று 28.1.2018 அன்று மாலை சொல்ல வைத்தது. அதன் படியே நடந்தது.  லக்ஷ்மியிடம் பல கதைகள் இருக்கிறது.  பல நாட்கள் இரவு தன் பெண் “சுகந்தாவுடன்” (சுகந்தா சித்தி) பேசிக்கொண்டிருந்தாள், என்று லக்ஷ்மி  சொன்னதை நிஷா சொன்ன  போது ஆச்சர்யமாக இருந்தது

கடைசியில், காற்றில் கரைந்த உன்னதமான அம்மம்மாவிடம், நான் கையெடுத்து கும்பிட்டு, “எங்களை விழுதாக நிற்க வைத்து, ஆலமரமாக உயர்ந்து நிற்கும் நீங்கள், மறுபடியும் ஒரு விழுதாகப் பிறந்து, நாங்கள் உங்களுக்குப் பணிவிடை செய்யும் பாக்கியம் தந்தருள வேண்டும்” என்று பிரார்த்தனை செய்தேன்.

Saturday 19 January 2019

சிறகு விரித்து பறந்து செல்லத் துடிக்கும் என் கிராமம்- செம்மங்குடி


கு. ராமகிருஷ்ணன் (ராம்கி என்று எனக்கு இன்னொரு பெயர் உண்டு)
தினம்- 19-1-2019

அடுத்த மாதம் செம்மங்குடியில் உள்ள ஆனந்தவல்லி உடனுறை அகஸ்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் என்று கேளிவிப்பட்ட உடனேயே, என் மனது, உடனே என் கிராமத்தைப் பற்றி சில வரிகள் எழுத வேண்டும், என்று துடித்தது. எனவே இந்த சிறு கட்டுரை.
செம்மங்குடியைப் பற்றி எழுத தொடங்கியவுடன் எனக்கு ராமாயணத்தில் வால்மீகியின் ஸ்லோகம் ஒன்று ஞாபகம் வருகிறது
अपि स्वर्णमयी लङ्का न मे लक्ष्मण रोचते |
जननी जन्मभूमिश्च स्वर्गादपि गरीयसी ||
இதன் அர்த்தம்:
“லக்ஷ்மணா, எனக்கு இந்த தங்கமயமான ஸ்வர்க்கம் போல இருக்கும் இலங்கை கொஞ்சம் கூட ஆச்சர்யத்தையோ, ஒரு பிடிப்பையோ ஏற்படுத்தவில்லை. என்னுடைய தாயும், தாய் நாடும் சுவர்க்கத்தை விட உயர்ந்ததாக கருதுகிறேன்” என்று .ராமர் சொல்வதுபோல்...
என்னைக் கேட்டால், என் தாயும், செம்மங்குடியும் என்று சொல்லி இருப்பேன்.

செம்மங்குடி சிவன் கோவில் என்றதும் எனக்கு ஞாபகம் வருவது இளம் வயதில் நான் சந்தித்த ஏகாம்பரம் குருக்கள் மாமா. எனக்கு பக்தி மார்க்கத்தைக் காண்பித்த முதல் குரு. இவரிடம் இரண்டு விஷயங்கள் எனக்கு மறக்க முடியாது.

நான் போதாயனம் (சூத்ரம்) என்பதால், எனக்கு ஆவணி அவிட்டம் போது பிரம்ம யக்ஞம், ஏகாம்பர மாமா தான் பண்ணி வைப்பார். (என் தாத்தா ஆபஸ்தம்பம் என்பதால்). இன்றும் நான் பிரம்ம யக்ஞம் பண்ணிக் கொண்டிருப்பது இவரின் ஆசீர்வாதம்தான்

இரண்டாவது, அவர் கோபப்பட்டு தலையில் ஒரு குட்டு வைப்பார்- பாருங்கள். உயிரே போய் விடும். இதுவும் நான் வாங்கியிருக்கிறேன்.

செம்மங்குடியில் ஸ்ரீ.ராமமூர்த்தி சாஸ்த்ரிகள், ஸ்ரீமதி அலமேலு அம்மாள் என்ற ஒரு உன்னதமான தம்பதிகளின் பெண் வயிற்றுப் பேரனான நான், இங்கேயே பிறந்து 10 வது வரை படித்தேன். இவர்கள், எனக்கு சாப்பாடு ஊட்டிய நாட்களை விட, பக்தியை ஊட்டிய நாட்கள் தான் அதிகம். பாட்டி என்னைக் கொஞ்சியதை விட, “வெளுத்ததுதான்” அதிகம். (கடைசி காலத்தில் பாட்டி “உடலை” வண்டியில் ஏற்றிக் கொண்டு, இடுகாடு செலும்போது, “என்னை ஒரு அடி அடிக்க மாட்டாளா” என்று மனது ஏங்கி, அவரது கையப் பிடித்து அழுதேன்)

எல்லோருக்கும் தன இளமைப் பருவம் மறக்க முடியாது.  கடவுள், யாரையாவது,  “நீங்கள் கழித்த வாழ்க்கையில், ஒரு 10 நாட்கள் உங்களுக்குத் திருப்பித் தருகிறேன், “எந்த நாட்கள்” வேண்டும்” என்று கேட்டால், சற்றும் யோசிக்காமல், பள்ளி நாட்கள்” என்று சொல்லுவோம்

கிராமத்து அனுபவம் சுகம். அதிலும் இளமைக் காலத்தை கிராமத்தில் கழித்து இருந்தால் பரம சுகம்.  நான் சொல்வது, கோடை விடுமுறைக்காக கிராமம் செல்வது இல்லை. அங்கேயே இருந்து, படித்து,  கிராமத்து சூழல்களை அணு அணுவாக ரசித்து வாழும் வாழ்க்கை தான் சிறந்த வாழ்க்கை. அங்கு சண்டை போட்டு பறித்த நெல்லிக்காய், நாவல் பழம், விளையாடிய, கிட்டிப் புல், பம்பரம் போன்ற விளையாட்டுக்கள். போட்ட சண்டைகள், ஏறிய கூரைகள், எந்த வித கவலையும் இல்லாமல் வலம் வந்த பொற்காலம்.

பாத்திரம் எடுத்துக்கொண்து (சுண்டலுக்காக) சகோதரிகளுடன் சென்ற நவராத்திரி கொலு, (ஸ்ரீ சக்ர ராஜ சிம்ஹாஸனேஸ்வரி, ஹிமகிரி தனயே, கற்பக வல்லி நின்” போன்ற பல பாடல்கள்), நண்பர்களுடன், மணக்கால் அய்யம்பேட்டை சென்று பார்த்த திருட்டு சினிமா போன்ற பல (சாதனைகள்) !!!

நவராத்திரி என்று நினைக்கிறேன். என் வீட்டுப் பெண்களும் சரி, கிராமத்தில் உள்ள மற்ற பெண்களும் சரி. “முத்தாலத்தி” என்று ஒன்று செய்வார்கள். அதாவது ஒரு தட்டில், கலரில் கோலம் போட்டு, அதன் கோட்டில் லேசாக மைதாவினால் தயாரிக்கப்பட்ட கோந்து வைத்து, அதன் மேல் அரிசி, ஜவ்வரிசி வைப்பார்கள்.  அந்தக் கலர் கோலத்திறக்கும், நடுவில் தண்டு போல இருக்கும் இந்த தான்யங்களும், மிகவும் நேர்த்தியாக இருக்கும். என் வேலை, இந்தக் கோலத்தாம்பாளத்தை எடுத்துக் கொண்டு, சிவன் கோவில் சென்று, குருக்களிடம் கொடுக்க, அவர் நடுவில் சூடம் ஏற்றி, அம்பாளிடம், காண்மித்து விட்டு, வீபூதி, குங்குமம் கொடுத்து அனுப்புவார்.  அதை நான் திருப்பி வீட்டிற்கு எடுத்துக் கொண்டு வந்தவுடன், அந்த முத்தாலத்தி அழிக்கப்படும், மறு நாள், புதுக் கோலம், புது முத்தாலத்தி.
என் வீட்டில் இருக்கும் பெண்கள் போடும் முத்தாலத்தி தான் மிகச் சிறந்தது என்று நான், மற்ற வீட்டு நண்பர்களுடன், “அடி தடியில்” இறங்கி இருக்கிறேன்.

பெருமாள் கோவிலில் அவ்வப்போது நடைபெறும், கோபால வாஜபேயாஜி மற்றும்  சேங்காலிபுரம் என்ற பக்கத்து கிராமத்திலில் இருந்த இங்கு வந்து உபன்யாசம் செய்த அனந்த ராம தீஷிதர் மற்றும் பெரிய பண்டிதர்கள் என் பக்தி மார்கத்திற்கு “ராஜ பாட்டை” போட்டுக் கொடுத்தவர்கள்.  பெருமாள் கோவிலில் நான் கேட்ட ராமாயணம், மகாபாரதம், ஸ்ரீ மத் பாகவதம் என் வாழ்க்கையில் மறக்க முடியாது.

நான் 1௦ வது படிக்கும் வரை, ரயில் வண்டியில் பயணித்ததே இல்லை.  அதற்காக நான் இன்று வரை வருத்தப் படவும் இல்லை.   செம்மங்குடி போல ஒரு கிராமத்தில் இருந்திருந்தால், நீங்களும் வருத்தப் பட்டிருக்க மாட்டீர்கள்.  10 வது முழுப் பரீட்சையில், English Grammar, கேள்வித் தாளில், 3 tier, 2 tier என்ற கேள்விக்கு, பதில் தெரியாமல் முழித்து,  tyre க்கும் tier க்கும் வித்தியாசம் தெரியாமல் வாழ்ந்த சந்தோஷ நாட்கள் அவை.

நல்ல சாப்பாடு என்பது சில நாட்கள்:

அண்ணா அபிஷேகம் அன்று சிவன் கோவிலில் (ஹெட் மாஸ்டர் மண்டகப்படி) பிராகரத்தில் இல்லை போட்டு, பரிமாறப்படும், சுண்டல், சரக்கரைப் பொங்கல் மற்றும் இதர வகையறாக்கள்.

சபரி மலைக்குப் மாலை போட்டுக் கொண்டு, கோபால் சார் (செம்மங்குடி ஸ்ரீனிவாச அய்யரின் புதல்வர்), வீட்டில் நடக்கும் ஐயப்ப பஜனை, தொடர்ந்து பல பதார்தங்களுடன் சாப்பாடு,

ஆவணி அவிட்டம் வந்தால் எனக்கு “பயங்கர ஜாலியாக” இருக்கும். ஏனெனில், சிவன் கோவில் குளத்தில் இரு முறை குளிக்கலாம். குளத்தில் குளிப்பது என்பது நீங்கள் நினைப்பது போல் கிடையாது, எத்தனை உயரத்தில் இருந்து, எத்தனை குட்டி கரணம் அடித்து குளத்தில் விழுவது என்பது தான் உசத்தி. எங்கள் உலகமே அது தான். அதன் பிறகு வீட்டுக்கு வந்து கிடைக்கும் வடை பாயச சாப்பாடு.

மகர சங்கராந்தி போன்ற நாட்களில் கிடைக்கும், வடை பாயச சாப்பாடு. குறிப்பாக கச்சட்டியில், சுட சுட சுண்ட வைத்து, ஒரு வாரம் 
கழித்து கூட அருமையாக இருக்கும் “எரிச்ச கறி.”

வெள்ளிக்கிழமை, என் பாட்டியின், ஆனந்தவல்லி அம்பாளுக்காக செய்யும், கொஞ்சம் பாயசம். எப்போவாவது செய்யும், ஆஞ்சநேயர் வடை.

தீபாவளி என்றால், ஒரு மாதம் முன்பிருந்தே எங்களுக்கு கனவுதான்.

ஆடி பதினெட்டு- விதம் விதமான சாதங்கள் . அப்போது ஆற்றங்கரையில் எங்களுக்கு சிறப்புக் குளியல். குளியல் என்றால், வளைந்து ஆற்றின் மேல் நிற்கும் மரத்தின் மீது ஏறி, “தொபுக்கடீர்” என்று குதிக்க வேண்டும்.

சப்பரம் கட்டி (சப்பரம் என்றால் என்ன என்று தெரியாதவர்கள்,--- தெரியாமல் இருப்பதே நல்லது) அந்தத் “தேரை” உருட்டிக் கொண்டு போய், ஆற்றங்கரையில் வைத்து அழகு பார்ப்போம்.- அதில் உள்ள சந்தோஷம் தனி.

“வந்துத் தொலைடா, ராம்கி, ரொம்ப  குளிக்காதேடா, குதிக்காதேடா, சனியனே !!! ஜலதோஷம் பிடிக்கும், இரு இரு அப்பாவிடம் சொல்றேன்.” – போன்ற பல சம்பாஷனைகளை இப்போது நினைத்தாலும், நெஞ்சு நெகிழ்கிறது.

மார்கழி மாதத்தில், விடியற்காலை, ஆசாரி விஸ்வநாதன் மற்றும் சைவ அன்பர்களின் “தோடுடைய செவியன்” என்று வாசலில், தேவாரம் பாடிக்கொண்டு” பெருமாள் கோவிலில் இருந்து விடியற்காலை 5 மணிக்கே (சே, பாட்டை போட்டான்டா, தூங்கவிடாமல் !!! என்று திட்டிக்கொண்டே, போர்வையை இழுத்துப் போத்திக்கொண்டு தூங்கும் அந்த மார்கழி விடியற்காலை- மகோன்னதம்) ஒலிக்கும் (Gramaphone record ல் இருந்து), சூலமங்கலம் சகோதரிகளின், சியாமளா தண்டகம், அனந்த ராம தீட்சிதர் அவர்களின், ஆனந்த லஹரி, ஆதித்ய ஹ்ருதயம், மகிஷாசுர மர்த்தனி ஸ்தோத்ரம். T M சௌந்தரராஜனின், “திருப்பதி மலை வாசா” மற்றும் முருகன் பாடல்கள். என் இசை ஞானத்திற்கு வித்திட்ட அருமையான நாட்கள் அவை. மார்கழி மாதத்தின் கடைசி நாளில், சினிமா பாட்டு போடுவார்கள்- பாருங்கள்.. அதற்காக நாங்கள் “முழு மார்கழியின்” “ஸ்ரமங்களைப்” பொறுத்துக் கொள்வோம்.

எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியாது.  மகா பெரியவா ஒரு தடவை செம்மங்குடி விஜயம் செய்யும் போது, அம்மை போட்டு விட்டதால், 2 மாதம் "பெரிய மாடி" மாமாவாத்தில் தங்கிஇருந்தாராம்.  அப்போதுதான், மகமாயி கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்யச் சொன்னாராம்.  (என் அம்மா சொன்ன செய்தி).

எங்கள் தெருவில் சுமார்  100 வீடுகள் இருந்தது என்றால், அதில் குறிப்பிடும் படியாக சொல்வது

ஹெட் மாஸ்டர் வீடு

கரஸ்பாண்டன்ட் வீடு (Correspondent house),  சீனி மாமா என்று மிகவும் மரியாதையாக அழைக்கப்பட்டவர். என் தாத்தா மீது மிகுந்த மரியாதை வைத்து இருந்தவர். நான் வசித்த செம்மங்குடி நாட்களில், இவர் வீட்டுக்கு, மற்றும் ஹெட் மாஸ்டர் வீடு, மற்றும் பட்டாமணியார் வீட்டுக்குப் போவதற்கே பயப்படுவேன்/வோம்.

எங்கள் கிராமத்திற்கு பெருமை சேர்த்த, சங்கீத கலாநிதி செம்மங்குடி ஸ்ரீனிவாச அய்யர் வீடு (பாட்டுக்கார அய்யா)

என்னால் மறக்க முடியாத செம்மங்குடி மாந்தர்கள்:

எனக்கு, விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லிக் கொடுத்த, சம்ஸ்க்ருத பண்டிதர், தேதியூர் கிருஷ்ணமூர்த்தி சாஸ்த்ரிகள்.

நான் எப்போதும் "மோர்" வாங்க பருத்தியூர் பருத்தியூர் ராமமுர்த்தி அய்யர் ஆத்துக்குப் போகும்போது,  குடிக்க ஏதாவது கொடுத்த, மாமி. அது போல் ஒரு அழகான முகத்தை நான் இன்று வரை பார்க்க வில்லை

"வாடா குழந்தை" என்று வாய் நிறைய கூப்பிடும் ஜெயா மாமி.

அப்புவாத்து மாமா, மாமி

ஐயங்கார் மாமா, எனக்கு பெருமாள் பக்தியை உண்டு பண்ணியவர். எத்தனை முறை கோவிலில் பிரகாரத்தில் ஓடி ஓடி, விளையாடி இருப்பேன். எத்தனை முறை கோவில் மணி அடித்திருப்பேன். ?!

சிவன் கோவில் குருக்களும் அவர் ஆனந்தவல்லிக்கு செய்யும் அழகான அலங்காரமும்.

கணக்குப்பிள்ளை- எதிர் வீடு. அவர் வீட்டில் யாரும் எங்கள் கூட பேசமாட்டார்கள். ஏன் என்று இன்று வரை தெரியவில்லை

மில் காராத்து ஜெயராமன்- எப்படி மறக்கமுடியும். கர்லா கட்டையை சுற்றிக் கொண்டு, எங்கள் "Mr. செம்மங்குடியாக்கும்". ஜெயராமன் என்ற "கண்ணனை" மிகவும் நேசித்த ராதை. நான் கன்னித் தீவின் மீது காதல் கொண்டதே, ஜெயராமன் ஆத்துக்கு தினம் வரும் "தினத் தந்தி" பார்த்துதான் !!

"மகாதேவா" என்று எப்போதும் சொல்லிக்கொண்டு, இந்த வார்த்தையை என் மனதில் ஆழமாக பதித்த, post master mama.  அவர்களுடைய குமாரர்களும், நான் மிகவும் மரியாதை வைத்து இருக்கும், கோபாலக்ருஷ்ணன், ராமமூர்த்தி.

நான் மிகவும் மரியாதை வைத்திருந்த/க்கும்  Head master மாமா

வெங்குட்டு (அய்யா சாமி அவர்களது மகன்)  பக்கத்துக்கு வீட்டுக்கு வரும்போது என்னையும் கூப்பிட்டு, அவனுடன் உட்கார வைத்து தோசை போடும் மங்களாம்பா மாமி.

ஒரு தடவை ஒளிந்து பிடித்து விளையாடுகிறேன் என்று "சொக்கபானை" உள்ளே ஒளிந்து கொள்ள, என் "உயிரை" காப்பாற்றிய மகாலிங்க மாமா

எனக்கு கல்வி போதித்த செம்மங்குடி உயர் நிலைப் பள்ளியில் பணி புரிந்த, என் ஆசான்கள்:

பாடம் எடுத்ததை விட, நோட்ஸ் கொடுத்தே கையை ஓடித்த கோபால் சார்

டியூஷன் சொல்லிக்கொடுத்த ஐயங்கார் சார். அவர் வீட்டுக்கு தினமும் காலை 7 மணிக்கு போய் விடுவேன்.

எல்லோரும், கிண்டலும் கேலியும் பண்ணினாலும், sincere ஆக பாடம் நடத்திய பி. எஸ் சார்

எல்லா பாடங்களும் எடுத்தாலும், அருமையான கதைகள் சொன்ன திருமலை சார்

கந்தக அமிலம், கந்தச அமிலம் என்பதற்கு, எனக்கு இன்று வரை வித்தியாசம் தெரியா விட்டாலும்,  தன்னுடைய சன்னமான குரலில், கெமிஸ்ட்ரி பாடம் எடுத்த லா லா சார்.

இங்க்லீஷ் பாடம் எடுத்த, என் குடும்பத்தில் இருந்து படித்த அத்தனை பேருக்கும் பிடித்த V G சார்

முத்து முத்தாக எழுதி, கணக்கை மிகவும் சுலபமாக சொல்லிக் கொடுத்த கே.என் சார்.  Sin theettaa, Cos theetta போன்ற சாதுர்யமான கணக்குகள்,  இவரிடமிருந்து, எளிமையாக பிரவாஹமாக வரும்.  "தீட்டா" என்று எழுதி அதன் பிறகு ஒரு  ? குறியை போட்டு, நக்கலாக சிரிப்பார்.  பெண்கள் வெட்கித் தலை குனிந்து கொள்வார்கள்

தமிழில் வல்லவர் என் பெரியப்பா சேங்காளிபுரம் - எஸ் எஸ். பி சார்

சேங்காளிபுரம் பிச்சை சார்

ஒரு Science டீச்சர் இருந்தார். அவரி பரீட்சைக்கு முதல் நாள், கேள்வி தாளை வேகமாகப் படிதுவிடுவார்.  (அவுட் பண்ணி விடுவார்).  அந்தக் கேள்விகளை மனதில் வாங்கிக் கொண்டு. படித்து, நிறைய மார்க் வாங்க வேண்டும்  (அப்படியும், நான் தேற வில்லை என்பது வேறு விஷயம்)

தமிழ் இலக்கணத்தின், எழுவாய், பயனிலை, செயப்படு பொருள், என்பதை மக்கு மாணவர்களிடம்,  எழுவாய் (எழுந்திரு), பயனிலை (நீ பிரயோஜனமில்லை), செயப்படு பொருள் (செய்ய வேண்டிய காரியத்தை பார்- வெளியில் போ- என்று அழகாக சொல்லி வெளியில் அனுப்பிய - தமிழ் ஆசிரியர். 

இவர்களிடம் நான் கற்றுக் கொண்டதை விட, அடி வாங்கியது அதிகம்.  ஆனால என் வாழ்கையின், ஒவ்வொரு (முன்னேற்ற) அடியிலும், இவர்களது, “அடி.”, படியாக நின்று என்னை ஏற்றி விட்டு இருக்கிறது.

எல்லா ஓட்டப் போட்டியிலும் first வந்த மரிய ஜோசப் விக்டர் பிரட்ரிக், என்னை எப்போதும் பாட்டில், ஜெயித்த,  எதிர் வீட்டு பத்மா போன்ற பலர் என் வாழ்க்கையில் மறக்க முடியாதவர்கள்.
நான் முடிப்பதற்கு முன்பு, நான் இன்றும் நினைவில் வைத்து இருக்கும், 

முருகன் (ம்) பாட்டி.

இவர் முருகனுக்கு நேவைத்யம் செய்து கொடுக்குக்கும் ஞானப் பால் குடித்த, பல “செம்மங்குடி திருஞான சம்பந்தர்களில்” நானும் ஒருவன். என்னுடைய பேனா, பென்சிலை முருகன் பாதத்தில் உருட்டி, என்னிடம் திருப்பி கொடுப்பார்.  அவருடைய முருகன் மற்றும் ஆஞ்சநேய ஸ்லோகங்கள் இன்றும் என் நினைவில் நிற்கிறது. 

நான்  பள்ளியில் வாங்கிய மதிப்பெண்களில், முருகன் பாட்டியின் பங்கு மிக அதிகம்.

என் உயிரின் உயிராய் கலந்த, என் சித்திகள், ஸ்ரீtமதி கோமதி, எப்போதும் பலாப்பழத்தை தூக்க முடியாமல் தூக்கி வரும் என் மைதிலி சித்தி.  நான் லூட்டி அடித்ததற்கு உறு துணையாக இருந்த சசி. வேலைக்காரர்கள், கந்தப்பூ, உத்திராபதி  மற்றும் பலர்.

செம்மங்குடி அப்பா அம்மா இருவரின் முழு வடிவமாக இன்றும், செம்மங்குடி குடும்பத்திற்கே வழி காட்டியாக இருக்கும், என் பெரியம்மா மற்றும் என் ஆருயிர் அம்மா.

5 பெண்களைப் பெற்று, மானம் அவமானம், கிராமத்திற்க்கே உண்டான கேலிப் பேச்சு,  (பெண்ணை பெத்தியோன்னோ, கல்யாணத்திற்கு சேத்து வைக்கத் தெரியவேண்டாமா சாஸ்திரிகளே?) பெண் கல்யாணத்திற்காக ஆருயிராய்  வைத்து இருந்த நிலத்தை அடகு வைத்து  கல்யாணத்தை நடத்திய, தனக்கென்று ஒரு கல்கண்டுக்கு கூட ஆசைப்படாமல்,  சிவ பூஜை ஒன்றையே நம்பி ஒரு பெரிய குடுமபத்தை கரையேற்றிய, நான் அப்பா என்று வாய் நிறைய கூப்பிட்ட, என் தாத்தா ஸ்ரீ. ராமமூர்த்தி சாஸ்த்ரிகள், அவரின் நிழலாய் இருந்து, கடைசி காலம் வரை கணவர், குழந்தைகளுக்காகவே வாழ்ந்த அவர் பத்னி, எனாக்கு எப்போதும் அம்மாவான, பாட்டி ஸ்ரீமதி. அலமேலு அம்மாள். 

கடைசியில் இவர்கள் இருவரையும், கடைசி காலம் வரையிலும் ராஜ வாழ்க்கை வாழ வைத்து, சிவ சாயுஜ்ய பதவி அடைய வைத்த, சஷ்டி அப்த பூர்த்தி காண இருக்கும், என் மாமா மற்றும் மாமி.

இவர்களை நான் எப்படி மறக்க முடியும்

என் செம்மங்குடி நண்பர்கள், பக்கத்தாத்து நாகராஜன், இந்தப் பக்க வெங்குட்டு, பிச்சை சார் பையன் சுந்தரராமன் மற்றும் மில் காராத்து கணேஷ், என் தாத்தாவின் "வைதீகத் தொழிலை" சற்று அவதூறாகப் பேசி, நான் குளத்தில் முக்கிய வாசு. மற்றும் பெயர் தெரியாதவர்கள், 

Girls என்று 4 அடி தள்ளியே நடக்கும், என்றும் மறக்கமுடியாத கோபால் சார் அவர்களது பெண்கள், P.T சார் ஆத்துப் பெண் மற்றும் பலர்.  இன்றும் இவர்களோடு தொடர்பில் இருப்பது நான் செய்த புண்ணியம்.

கடைசியாக, எனக்கு பக்தி என்ற பதத்தின் அர்த்தத்தை விளக்கிய, ஸ்ரீ தேவி பூ தேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலும், (இன்றும், இந்தக் கோவிலில் உள்ள ஆஞ்சநேயரை மானசீகமாக வணங்காமல் நான் ஒரு நாளும் வெளியே கிளம்புவது இல்லை) ஆனந்தவல்லி உடனுறை அகஸ்தீஸ்வர சுவாமி கோவிலும், (நான் தினமும் செய்யும் "சால்யான்னம்" நேவைத்யத்தில், முதலில் சொல்வது இவரைத்தான்) பெரிய பள்ளிக் கூடத்திற்கு அருகில் உள்ள மகமாயி கோவிலும், என் வீட்டுக்கு அருகில் இருக்கும் கரும்பாயிரம் ஸ்வாமி கோவிலும் இன்று வரை எனக்குத் துணை இருக்கிறார்கள் என்பது சத்தியம்


Monday 7 January 2019

T.M.கிருஷ்ணா என்ற கலைஞனின் ஒரு சோக கீதம்


இந்த டிசம்பர் சீசனில் மட்டும், சுமார் 4000 கச்சேரி (கள்),  சென்னையில் நடந்து முடிந்து விட்டது,

TM KRISHNA  வுக்கு ஒரு கச்சேரி கூட கிடையாது.

கர்நாடக சங்கீத வரலாற்றில், T.M.கிருஷ்ணா என்ற ஒரு கலைஞருக்கு ஒரு சிறு இடம் உண்டோ இல்லையோ, என் மனதில் அவருக்கு நிச்சயமாக ஒரு இடம் உண்டு.

என் மனதில், சங்கீத வித்வத் சபை, கொடுக்கும், சங்கீத கலாநிதி (ச.க) விருது போல், சில கலைஞர்களுக்கு, “ச.க” விருது கொடுத்து அமர வைத்துள்ளேன். அது சங்கீத வித்வத் சபை, கலாநிதி கொடுத்த கலைஞர்களுக்கும் அடக்கம், கொடுக்காத கலைஞர்களும் அடக்கம். (சங்கீத கலாநிதி பெற்ற சில கலைஞர்கள், என் மனதில் இடம் பெற வில்லை என்பதும் உண்மை). 

மதுரை சோமு, T.S.கல்யாணராமன் போன்ற அந்த காலக் கலைஞர்கள், 

விஜய் சிவா போன்ற இந்த கால கலைஞர்களுக்கும்= நான் எப்பவோ சங்கீத கலாநிதி விருது கொடுத்து விட்டேன்.

அதேபோல் TMK க்கும் நான் ஸ.க. விருது கொடுத்து இருப்பேன். ஆனால்...

இந்த வருட டிசம்பர் season ல், எங்கோ  Harrington Road ல் உள்ள ஒரு ஹாலில் T.M.கிருஷ்ணா பாடப் போகிறார் என்ற ஒரு செய்தியை அவருடைய முகஸ்துதி பத்திரிக்கையான “THE HINDU” வில் பார்த்தேன். மேலும், அவரை பெருமைப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு,  ‘THE HINDU”,  - இது தான் T.M.Krishna வின் டிசம்பர் சீசனில் ஒரே கச்சேரி என்று எழுதி இருந்தது.  இது டிக்கெட் கச்சேரி (ticketed concert).  இந்த செய்தி வந்த சில தினங்களில், அதே பேப்பரில் ஒரு செய்தி வந்தது.  T.M. KRISHNA  அவர்களின் கச்சேரி நடைபெற உள்ளது, இந்த “ad கட்டிங்” கொண்டு வருபவர்க்கு, டிக்கெட் இலவசம்” என்று...

“எனக்கு மனது வலித்தது”

T.M.கிருஷ்ணா என்ற அந்த மகத்தான இசைக் கலைஞனை, அவ்வளவு சுலபமாக புறம் தள்ளி விட முடியாது.  தியாகராஜரையும், தீக்ஷிதரையும், மற்ற வாக்கியக்காரர்களின் பாடல்களையும், தன் தேன் குரலால் குழைத்துக் கொடுத்தவர் இவர்.

எப்போதுமே, சம கால கலைஞ்சர்களுடம் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அவர் அவர்களின் பெருமை புரியம். ஒரு எம்.ஜி.ஆர், சிவாஜி போல்.. அதே போல், நான் அடிக்கடி சஞ்சய்-T.M.KRISHNA  இருவரையும் ஒப்பிட்டுப் பார்ப்பேன்..

இன்னும் சொல்லப்போனால், ஒரு காலத்தில், TMK, சஞ்சயை விட, ஒரு படி மேலே கூட போய் விட்டார் சம்பிரதாயமான கச்சேரி பாணியிலிருந்து, சற்றே விலகி, முகாரி ராகத்தை அடுத்து அடுத்து 3 முறை பாடினாலும், பாதியில், கச்சேரியில் இருந்து எழுந்து போனாலும், கடைசியில், வர்ணம் பாடினாலும், பித்துக்குளித்தனமாக, கணபதி பாடலை கடைசியில் பாடினாலும், அவருக்கு இருந்த ரசிகர் பட்டாளம் கொஞ்சம் கூட குறையவில்லை. அவருடைய கச்சேரியை, குறை கூறியவர்கள் கூட, அவருடைய அடுத்த கச்சேரியில் முதல் ஆளாக உட்கார்ந்தார்கள். அப்படி ஒரு ஆளுமை TMK விடம் இருந்தது.

ஓரு சீசனில், காலை கச்சேரி FREE ஆக அவர் பாடியபோது, நாரத கான சபாவில், வாசலில், ஒரு கிலோ மீட்டர் தூரதிக்கு QUEUE நின்றது. ஒரு “சின்ன நாடே” என்று கலாவதி ராகத்தில் பாடினாலும்
சரி. க்ருஷ்ணா நீ பேகனே” என்று பாடினாலும் சரி. “இரக்கம் வராமல் போனதென்ன காரணம்” என்று பாடினாலும் சரி, அதில் ஒரு உண்மை இருந்தது, ஈர்ப்பு இருந்தது.

எங்கு வழி தவறினார். ஏன் தவறினார் ?  விதி அவர் வாழ்வில் ஏன் விளையாடியது ?  விதி அவர் வாழ்வில் விளையாடியதோ இல்லையோ, எண்ணற்ற ரசிகர்கள் வாழ்விலும், அவருடைய நல்ல இசையை கேட்க முடியாமல், விளையாடிவிட்டது ?

என்னுடைய எண்ணம் இதுதான்:

எந்த ஒரு நிகழ்வையும், சம்பிரதாயத்தில் இருந்து விலகாமல், அப்படியே அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும். . அதுவும் ஆன்மிகம் சம்பந்தப்பட்ட, நிகழ்வுகள், சிதைக்காமல், மாற்றாமல் அப்படியே கொண்டு போக வேண்டும்.  ஏனெனில், அது ஆன்மீகத்தில் கரை கண்டவர்கள், போட்ட ராஜ பாட்டை.  அதில் நாம் பயணிக்கலாமே தவிர, புதிதாக ஒரு ரோடு போடுவது என்பது மிகப் பெரும் தவறு. உதாரணமாக, கோவிலுக்குச் சென்றால், பிள்ளையாரை முதலில் வணங்க வேண்டும். இதை ஏன் என்று கேட்பதோ, செய்ய மாட்டேன் என்று சொல்வதோ= விதண்டாவாதம்.

ஏன் என்ற கேள்வி ஆன்மீகத்தில் அவசியமில்லை. அது போல், கர்நாடக் சங்கீதமும், இறை உணர்வு சம்பந்தப்பட்டது. அதனால் தான், புடை சூழ ராம பிரானை, தியாகராஜ சுவாமி, நேரில் பார்க்க முடிந்தது.  வாயில் கல்கண்டை போட்டு, திருத்தணி முருகன், முத்துஸ்வாமி தீட்சிதரை, பாட/எழுத வைத்தது.  வல்லாளர் கோபுரத்தில் இருந்து, தலை குப்புற விழுந்த, அருணகிரி நாதரை, முருகன் காப்பாற்றி, “திருப்புகழை பாட வைத்தது, “யார் இந்தப் பித்தன்” என்று சொன்ன “சுந்தரரை” அவர் வாயாலே “பித்தா பிறை சூடி” என்று பாட வைத்தது. உனர்ச்சி பெருக்கால், கண்ணனை நினைத்து உருகி, மேற்கொண்டு எழுத முடியாமல், போன, ஜெயதேவரின் அஷ்டபதியை, அந்த பரமாத்மாவே வந்து எழுத வைத்தது.

“சுப்ரமண்யாய நமஸ்தே” என்ற “காம்போதி” ராகப் பாடலை, காஞ்சி மஹா பெரியவர், அக்கு வேறு ஆணி வேறாக, பிரித்து அந்தப் பாட்டின் தெய்வீகத் தன்மையை கிலாகிக்கும் அளவுக்கு, ஒரு பாடலை நாம், கச்சேரிகளில், பாடுகிறோம் என்றால், இந்தப் பாடல்களில் “தெய்வீகத்தன்மை” –மகத்துவம்-  நமக்குப் புரியும்.
இதை புரிந்து கொள்ளாமல், தான் தோன்றித் தானமாக ஒரு “பாட்டையை” அமைக்க நினைத்தது  டி,எம், கிருஷ்ணாவின் மிகப் பெரிய தவறு.

அவருடைய “downfall
· 
    கர்நாடக் இசையை சேரிகளுக்கு கொண்டுச் சென்றது- (சத்தியமாக பைசா பிரயோஜனம் இல்லாத ஒரு காரியம்)
· 
       பஸ்ஸில், கச்சேரி செய்வது (பச்சையப்பா காலேஜ் படிக்கும் மாணவர்களுக்கு கொஞ்சம் ரெஸ்ட்)

·      வேறு மதத்தவரின் பாட்டை, கர்நாடக கச்சேரியில் பாடியது, (இதுதான் திரிசங்கு சொர்க்கம்- என்பது- பிற மதத்தினரும், சந்தோஷப்படவில்லை, நம் மதத்தினரும், சந்தோஷப் படவில்லை
·  
       இஷ்டத்திற்கு, ஒரு ஆடை உடுத்தி கச்சேரிக்கு வருவது. ஒரு (கச்சேரிக்கு லுங்கி கட்டிக் கொண்டு வந்தாரென்று கேள்வி-கொடுமைடா சாமி)

·         சர்ச்சில் பாடியது- (கர்த்தரே, இந்தப் பாவியை ரட்சியும்”

எல்லாவற்றிற்கும், தலையாய “தவறு”, அந்தக் காலத்து இசைக் கலைஞர்களை கேவலமாக விமர்சனம் செய்தது.  “கர்நாடக இசை” இந்த உலகத்தில் உள்ள அளவும், உன் இசை வாழும்” என்று காஞ்சிப் பெரியவரால், ஆசீர்வதிக்சுகப்பட்ட எம். எஸ். சுப்புலட்சுமியை, தரக் குறைவாக பேசியது-இதெல்லாம் சேர்ந்து அவருடைய கர்நாடக இசைப் பயணத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தது.

T.M.Krishna வுக்கு குரு அனுக்ரஹம் என்பது சுத்தமாக கிடையாது. அதற்க்கு ஆணித்தரமான உ.ம்- நிகழ் கால,  உச்சத்தில் இருக்கும், சங்கீத வித்வான்களை எடுத்துக் கொள்வோம்:

சஞ்சய் சுப்ரமண்யன்
விஜய் சிவா
ராமகிருஷ்ணன் முர்த்தி
அபிஷேக் ரகுராம்
மல்லாடி சகோதரர்கள்
சாகேத ராமன்

இவர்கள் எல்லோருமே மிகச் சிறந்த “குருமார்களைப்” பெற்றவர்கள். நல்ல குரு கிடைத்தால், சிஷ்யர்கள் கவலைப் பட வேண்டாம். ஏனெனில், எந்த “ADVERSE CIRCUMSTANCES” வந்தாலும் குரு, ஏதோ ஒரு வழியில், நல் வழி காட்டுவார். கிருஷ்ண பரமாத்மா, பாண்டவர்களை பார்த்துக் கொண்டாற்போல். மேற் சொன்ன பாடகர்கள், கர்நாடக சங்கீதத்தை, தவமாக செய்து வருகிறவர்கள்.

நல்ல குருவின் ஆசீர்வாதம், இப்படி எல்லாம் புத்தியைத் தூண்டாது.  “விநாசகாலே விபரீத புத்தி” என்ற வசனத்தின் படி, “யாராலோ தூண்டப்பட்டு, எங்கோ பணம் பெற்று, ஒரு பத்திரிக்கை உதவியுடன், கர்நாடக சங்கீதத்தை, சகட்டு மேனிக்கு சிதைக்கலாம்- என்று நினைத்து, நடத்திக் காட்ட முற்பட்ட, T M Krishna. இப்போது ஒரு கச்சேரி கூட இல்லாமல்- சும்மா இருக்கிறார்- என்பதுதான் உண்மையான வேதனை.

கர்நாடக சங்கீதம் பாடுபவர்  பக்திமானாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. தன்னுடைய சங்கீதத்தை “முழு அர்பணிப்புடன், கற்றுக் கொண்டு, முழு அர்பணிப்புடன், ரசிகர்களுக்காக வழங்கினால் போதும்.  “மெய் வருத்தக் கூலி கிடைக்கும்” அனால், ஒரு நாள் கடவுளின் அருகாமையை இந்தக் “கூட்டம்” உணரும்.

தான் அறியாமல், கடவுளை நிந்தித்து, பின்பு மனம் மாறி “அர்த்தமுள்ள இந்து மதம்” எழுதியவரும், நம் நாட்டில் உண்டு.

வீம்புக்காக, தவறான வழி காட்டலால், உந்தப்பட்டு, கர்நாடக் சங்கீதம் என்ற ஒரு மலையைத் தகர்க்கலாம் என்று நினைத்த T.M.கிருஷ்ணா போன்ற இசைக் கலைஞர்களுக்கு, நான் சொல்லும் ஒரே வார்த்தை=

கடவுள் இருக்கான் குமாரு”

இப்படி என் கட்டுரையை முடித்தாலும், என் பிரார்த்தனை, உண்மையை உணர்ந்து, திருந்தி, மறுபடியும் “ஒழுங்கான” ஒரு கர்நாடக கச்சேரியை TM கிருஷ்ணா செய்யா வேண்டும் என்பதே, அப்படி செய்வாரே ஆனால், முதல் ஆளாக நான் சென்று அவருக்கு சிகப்புக் கம்பளம் போட்டு வரவேற்பேன்.

அவருடைய மிகச் சிறந்த ரசிகன் என்ற கர்வம் எனக்கு இன்றும் உண்டு