Friday 25 August 2023

இன்றும் நான் காதலிக்கும் படம்

 

பிப்ரவரி 1964  இல் ஒரு படம் ரிலீஸ் ஆகிறது. அது அந்தக் கால இளைஞர்களை கட்டிப் போடுகிறது. ஒவ்வொரு காட்சியும் ஈஸ்ட்மேன் கலரில் செதுக்கப்பட்டு ஜொலிக்கிறது. வலுவான கதை என்று ஒன்று இருந்தே ஆகவேண்டும் என்று இருந்த காலத்தில், கொஞ்சம் கதை, நிறைய காமெடி, அசத்தலான மியூசிக் என்று விகிதாசாரத்தை பிரித்து வெளிவந்த படம். இன்று வரை பிரமிப்பையும், காதலையும் எனக்கு தந்து கொண்டு இருக்கும் படம். அது- காதலிக்க நேரமில்லை.

வாலி சொல்லுவார். சினிமா என்பது ஒரு டைரக்டர் ன் முயற்சி தான். எந்த கதையையும் ஒரு நல்ல டைரக்டர் மிக அழகாக செதுக்க முடியும். இசையோ, நடிகர்களோ மற்றவர்கள் பங்களிப்பு அப்புறம் தான். – எனக்கு இதில் உடன்பாடு உண்டு. 

இந்த வருடம் வந்த சில படங்கள்.  ஆண்டவன் கட்டளை, படகோட்டி, கர்ணன, வேட்டைக்காரன்.. இப்படிப் பார்த்தால் தான் கா.நே படத்தின் அருமை புரியும்.

நானும் இந்த வருடம் தான் பிறந்தேன். அதனால் நானும் இந்தப் படமும் அறுபது வயதில் குதித்து இருக்கிறோம்.

இந்தப் படம் மாபெரும் வெற்றியைப் பெரும் என்று அந்தப் படத்தின் இயக்குனர் ஸ்ரீதர் கூட நினைத்து இருக்க மாட்டார். இந்தப் படம் காரில் உட்கார்ந்து எழுதப்பட்ட கதை. பீச் ல் உட்கார்ந்து எழுதிய கதை, நெஞ்சில் ஓர் ஆலயம் என்ற ஒரு சீரியஸ் படம் எடுத்த பிறகு, ஒரு ஜாலியான படம் எடுக்க வேண்டும் என்று தோன்றி, பிறந்த கதை. – இதெல்லாம் செவி வழி செய்தி.

இந்தக் கதையெல்லாம் இருக்கட்டும்......

நான் சிறுவயது முதல் பார்த்த பல படங்களில் இன்றும் என் நெஞ்சை விட்டு அகலாத படங்கள் வெகு சில. அதில் முதாவதாக இருப்பது கா. நே. தான். தில்லானா மோகனாம்பாள், எங்க வீட்டுப் பிள்ளை போன்றவை மற்ற சில.

கா. நே எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காதபடம். அருமையான பாடல். விஸ்வநாதன் ராமமூர்த்தி உச்சத்தில் இருந்த காலம். ஸ்ரீதர் – வி,ரா இணைந்து வழங்கிய பல படங்களில் இது உச்சத்தின் உச்சம் என்பேன்.

1964 ல் இப்படி ஒரு கற்பனை, இப்படி ஒரு சினிமா பார்வை என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. ஒரு முழு நீள காமெடி என்று சில படங்கள் இதற்கு முன்பு வந்தாலும் கூட. கா.நே . ஒரு நெத்தி அடிபடம்.  முத்துராமன், பாலையா போன்ற பழைய நடிகர்களைத் தவிர, மற்ற எல்லோரும் புது முகம். நாகேஷ் புது முகம் என்று யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.

இந்தப் படத்தைப் பார்த்த யாரிடம் கேட்டாலும் அவர்கள் உடனே சொல்வது பாலையாவிடம், நாகேஷ் கதை சொல்லும் காட்சி தான். என்னை கேட்டால் இதை கடைசியில் தான் வைப்பேன். பல “அழகுகள்” இந்தக் கதையில் உண்டு.

 முதல் அழகு: முதல் சீனிலே, சித்திரம் போன்று வரைந்து அது நிஜமாகி, முத்துராமன் காஞ்சனாவாக உருப்பெற்று, சென்னை பீச் ல் டான்ஸ். “என்ன பார்வை” என்ற பாடல் யேசுதாஸ், பி. சுசீலா.. இந்தப் பாடல் முழுவதும் இளமை பொங்கி வழியும். கடந்த ஐந்து வருடங்களில், இப்படி ஒரு அழகான காதல் பாட்டு ஒரு இருந்தால் சொல்லுங்கள். இந்த பாடல் முழுவதும். இருவரும் ஓடிக்கொண்டே இருப்பார்கள். பின்புல விசுவல் மிகவும் பிரமாதமாக இருக்கும்

இந்தப் பாடலில் ஒரு சீனில், காரில் \முத்துராமன் வர. கார் நடு   கண்ணாடியில் (Centre Mirror)  காஞ்சனா முகம் தெரியும் இன்னொன்று, ஒரு ஆச்சர்யமான அழகு. அந்தக் கார் தானாகவே மூடிக்கொள்ளும். கிராமத்தில் இருந்து  வந்த எனக்கு, இந்தக் காட்சியெல்லாம் அப்படியே போட்டோ மாதிரி ஒட்டிக்கொண்டுவிட்டது. 1967 ல் கே. பாலச்சந்தர், அனுபவி ராஜ அனுபவி படம் எடுக்கும்போது, இப்படித்தான், நாகேஷயும், முத்துராமனையும், ஸ்டில் போட்டோ மாதிரி காட்டி. “அழகிருக்குது உலகிலே” பாட்டைப் போட்டு இருப்பார்.

இரண்டாம் அழகு – ரவிச்சந்திரன், “உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா” என்ற பாடல் பாடும் சீன்.  இது காஞ்சனாவையும், ராஜஸ்ரீ யையும் பார்த்து பாடுவதாக அமைந்த பாடல். இதில் முதல் சீனில், ஒரு காரை தலை கீழாக காண்பிப்பார். பிறகு ரவிச்சந்திரன் அந்தப் பாடலை பாட ஆரம்பிப்பார்.  இது ஒரு புது யுக்தி. ரவிச்சந்திரன், காரில் பானெட்டில் தலை கீழாகப் படுத்து இருப்பார். அவர் அந்தப் காரை பார்ப்பது போல் (தலை கீழாக) காண்பித்து இருப்பார் டைரக்டர். அந்தக் காலத்தில் இது எத்தனை பேருக்குத் தோன்றும்.

பிறகு, பாட்டில் கூட, முத்துராமனுக்கு,  கே.ஜே.யேசுதாஸ்,   ரவிச்சந்திரனுக்கு, பீ.பி. ஸ்ரீநிவாஸ்/  அதில் கூட ஒரு நேர்த்தி. “காதலிக்க நேரமில்லை, காதலிப்பார் யாருமில்லை” சாமியார் பாட்டு என்பதால் சீர்காழி. சீர்காழி யின் பாட்டை இவ்வளவு காதலுடன் யாரும் பாடி இருக்கமுடியாது.

  பிறகு. நாகேஷ் பாத்திர வடிவமைப்பு. அவர் பேசும் வசனம்..

உன் பேர் என்ன ?

மீன லோசனி

மீன ?

லோசனி

இனிமேல் உனக்கு லோஷன் எதுவும் வேண்டும். வெறும் மீனாதான்.

இன்னும் ஒன்று

மீனா. உனக்கு சினிமாவில் நடிக்க இஷ்டமா ?

ஆமா சார், நான் கலைக்கு சேவை செய்ய ஆசைப் படறேன்.

அத இப்ப சொல்லாத, அடுத்த படத்துக்கு ஒன்கிட்ட,  நொந்து போய் ஒரு producer வராம் பார் அவன்ட சொல்லு.

இன்னும் ஒன்று

சார். நீங்க படம் எடுத்து முடிக்கறதுக்குள்ள நான் கிழவி ஆயிடுவேன்.

ஆனா என்ன. ஒன்ன வச்சு அழகா, கலர்ல அவ்வையார் படம் எடுக்கிறேன்....

இப்படிப் பல “டான் டான்” வசனங்கள்...

இந்தப் பாடத்தில் இன்னொரு அழகு, ஒவ்வொரு சீனையும் தனித்தனியாக ரசிக்கலாம், சேர்ந்தும் ரசிக்கலாம். உதாரணமாக, ரவிச்சந்திரன்-நாகேஷ் கதை சொல்லும் காட்சி, சாப்பிடும் இடத்தில், பாலையா-நாகேஷ் வசனம்.

நாகேஷ்-பாலையா விடம் கதை சொல்ல, அதை வேர்த்து, விறுவிறுக்க, கண்ணில் மிரட்சியுடன் கேட்கும் பாலையா. அசகாய சூர நடிப்பு.

என்ன பார்வை பாட்டை வேகமாக ஊட விட்டால், “மலரென்ற முகம்” ஒன்று பாட்டின் சாயல் தெரியும். ஆனால் வி.ரா.. இசை ஜோடி அவர்கள் ஜித்தர்கள். 60 களிலும்   70 களிலும் அவர்களின் இசை மூலமாக என்னை வாழ வைத்த தெய்வங்கள்.

நான் படித்த பள்ளியிலும் சரி, மேற் படிப்பு படித்த திருச்சி யிலும், சரி, எத்தனை முறை இவர்கள் இசை அமைத்த பாடலகளை கேட்டு இருப்பேன். கர்நாடக சங்கீதம் என் வாழ்க்கையில் புகுந்து “கோலோச்சியதர்க்கு” முக்கிய காரணம் வி.ரா அவர்களின் மெல்லிசைதான்.  அதனால்தான், விஸ்வநாதன் அவர்களின் மறைவின் போது “எங்கேயும் எப்போதும், சங்கீதம் சந்தோஷம்” என்று ஒரு கட்டுரை எழுதி இருந்தேன்.

தமிழ் தந்த தவப் படம் இது, தவப் புதல்வர்கள் ஸ்ரீதரும், விஸ்வநாதன் ராமமுர்த்தி அவர்களும்.

இந்தப் பதிவில் கண்ணதாசனைப் பற்றிக் குறிப்பிடவில்லை.  அவரைப் பற்றி என்ன என்று எழுத !!! எங்கள் இளமைப் பருவத்தை இனிமையாக்கியவர். 

“கால் நடந்த நடையிலே, காதலையும் அளந்தாள்”.

“அவள் கண்ணிரண்டில் ஆடுதம்மா காதல் கொண்ட மனசு”

எண்ணிரெண்டு பதினாறு வயது, பாடலின் வரியில் வரும் வரிகள். ஏதோ ஒரு நிலையில், ஒவ்வொரு ஆண்மகனும், மேலே சொன்ன வரியை அனுபவித்து கடந்து போய் இருப்போம்.....

இந்த ரெண்டு வரியும் போதும்.  திருவள்ளுவராவது ஒன்று அரை  வரி எழுதி விளக்கினார்.  கண்ணதாசன் ஒரே வரி தான்.