Thursday 28 September 2017

சஞ்சய் சுப்ரமண்யன் என்கிற சங்கீத ராக்ஷஸன் (ர்)

மெயின் உருப்படிக்கு வருவதற்கு முன், நேற்றைய அவரது கச்சேரியைப் பார்ப்போம்

நேற்று, (27-9-2017) நாரத கான சபாவில்,  பாபநாசம் சிவன் அவர்களின் நினைவாக நடந்த விழாவில் பாடினார்.

கச்சேரி நடந்து கொண்டிருக்கும்போது,  DMK ன், முக்கிய அரசியல் வாதியான, துரை முருகன் வந்து உட்கார்ந்தார்.   சஞ்சய், மெயின் உருப்படியாக, காம்போதி ராகம் பாடிகொண்டிருக்கும்போது,  பக்கத்தில் இருந்த மாமா, காணக் கண் கோடி வேண்டும், பாடுவார் என்று கூற, பின்னாலிருந்து, “சிக்கல் மேவிய தேவா” என்று ஒருவர் சொல்ல, நான் ஆடும் தெய்வம் நீஅருள்வாய் என்ற பாடலத் தான் பாடுவார் என்று சொன்னேன்.  – நான் சொன்ன பாடலை தான் பாடினார்.

அதில் தான் “துரை” வருகிறது.  பாடலில் “தரும் துரையே சபை நடுவில்” என்று ஒரு வரி வரும். அதைப் பாடும்போது, துரை முருகன் இருந்த இடத்தை நோக்கி கை காமித்து வேறு பாடினார்.  எத்தனை பேருக்குப் புரிந்தது என்று தெரியவில்லை. அனால் எனக்குத் தெரியும்.
மேலும், துரை முருகனுக்கு பிடித்த பாடகர் சோமு. அதனால் சஞ்சய் பாடிய காம்போதி ராகம் முழுவது, சோமு பிடிதான்.  நாதஸ்வர மயம். பயில்வான் சோமு “பிடி” யை, சஞ்சய் ஒரு “புடி” புடித்தார் என்று சொல்லலாம்.

அதனால் துரை முருகன் தான் என்று தமிழைப் போட்டுத் தாக்கவில்லை. காம்போதிக்கு முன்னால், ஒரு சம்ஸ்க்ருத பாடலும் பாடினார். அதை அசோக் ரமணி கேட்டதே இல்லை என்று சொன்னார்.  (இப்படி சொல்லாமல், உடனே கற்றுக் கொண்டால், அசோக் ரமணி அவருடைய தாத்தா, பாபநாசம் சிவனுக்கு செய்த பெரிய புண்ணியமாகப் போகும்)

அது தான் சஞ்சய்Instant rapport with the audience.  அவருடைய கச்சேரி விமரசனத்திற்கு அப்பாற்பட்டது.

சங்கீத கலாநிதி விருது வழங்கிய பிறகு, அவருக்கு ஒரு சிறிய விழா எடுத்தோம். திருவல்லிக்கேணியில் ஒரு சிறிய இடத்தில நடந்தது. இனிய நண்பர், எஸ்ஸல் அவர்கள் மூலமாக ஏற்பாடு செய்திருந்தார். அதில் சஞ்சய் பேசும்போது, “இன்னிக்கு ஒரு கச்சேரிக்கு நான் பாடினால், இந்த கச்சேரி தான் கடைசி கச்சேரி. நாளையிலிருந்து, யாரும் கூப்பிடமாட்டார்கள், என்று நினைத்து கச்சேரி செய்வேன்” என்றார்.

“யாருக்கு அடங்காத நீலி”, என்று ஒரு பாட்டு பாடுவார்  அதில் “காளி” என்று ஒரு வார்த்தை  வரும். அதை, மேலே பாடுவார்.  காளி, சூலாயுதத்துடன், கோரைப் பற்களோடு, வருவது போலவே இருக்கும்

எழுத்தாளர் ஜெயமோகன், சஞ்சய் பற்றி எழுதும்போது,
“பைத்தியத்தின் விளிம்புகளில் உலவ விடுகின்ற பல குறுந்தகடுகள் உங்களுடையவை” – என்று சொல்வார்.

சஞ்சய் என்ற அசகாய சூரர்- இன்றைய கர்நாடக சங்கீதத்தின் ஒரு பெரிய வரப்ரசாதம். 

நேற்று, எதேச்சையாக YOU TUB நோண்டும் பொது, கமாஸ் ராகத்தில், திருமயிலை கபாலி பற்றி ஒரு பாட்டு கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. “திருவளர் மயிலையில்” என்று ஆரம்பிக்கும் பாட்டு அது. எப்போதோ upload  செய்யப்பட்ட வீடியோ

அந்தப் பாடலில் உள்ள ஒரு சரணத்தையே, விருத்தமாக பாடுவார். “அகில சராசர பசுபதியாகிய” என்று ஆரம்பிக்கும். முதல் 2 நிமிடத்தில்
கமாஸை, பிழிந்து கொடுப்பார் பாருங்கள்.  அட அட அடா. அறுசுவை. அதில் “பகவ” என்று ஒரு இடம் வரும். அதை வரதராஜனுடன் ரசித்து, லயித்து பாடுவார்.  “பகவ” மட்டும் கேளுங்கள்”- இந்த சங்கீத ராக்ஷஸனைப் புரிந்து கொள்வீர்கள்.  இப்படியெல்லாம் “நகாசு” வேலை செய்யும்போது, தன் உடலை “பாம்பு” மாதிரி நெளிவார், பாருங்கள். அது கொள்ளை அழகு.
 

இந்தப் பாடலில், 2 இடங்களில், அவருடைய “ஸ்டைல்” ஐ காட்டுவார் பாருங்கள்.
-அடி முடி தொடர் வரும்
-எனை உனதற்புத சரண மலர்பத

அதுதான் சஞ்சய்.  Timing sense (TS) நிறைய உண்டு. உனதற்புத என்ற இடத்தில, ஒரு சொழட்டு சொழட்டுவார் பாருங்கள். அட அடா.....

அவர் தமிழ் விருத்தம் பாடுவதுபோல, வேறு யாரும், அவ்வளவு, ராகத்தையும், உச்சரிப்பையும் சரி சமமாக குழைத்து கொடுப்பதில்லை.

“இன்னமும் ஒரு தலம்” என்ற ஒரு “பெஹாக்” ராக பாடல் பாடும்போது, அதற்கு முன் , “உப்பும் கற்பூரமும்” என்ற ஒரு விருத்தம் பாடுவார்.

கற்பகாம்பிகை நீ அல்லவோ என்ற பாபநாசம் சிவன் பாடல் பாடுவதற்கு முன் “ஆடும் மயிலாய் உருவெடுத்து” என்று ஒரு விருத்தம் பாடுவார்.

“என் தாய் வாழ் எனும் மந்திர” என்ற பாரதிதாசன் பாடலைப் பாடிய பிறகு, இப்படி கூட அட்டகாசமாக ஒரு பாடல், தமிழில் இருக்கிறதா என்று தோன்றும்.

“ஆடுகளும் மாடுகளும்” என்று பாடினார், வாயப் பிளந்து கேட்டுக் கொண்டு இருக்கும் அவரது ரசிகர்கள் ஏராளம்

எல்லாவற்றையும் விடுங்கள். போன டிசம்பர் சீசனில், “பணமே உன்னால் என்ன குணமே” என்ற பாடலைக் கேட்டு, புளகாங்கிதம் ஆகாத ரசிகர் கிடையாது.

சங்கீதத்தின் மேல் இருக்கும் தீராக் காதல்.- உழைப்பு – இவையெல்லாம் சேர்ந்த கலவை- சஞ்சய்

மகாராஜபுரம் சந்தானத்திற்குப் பிறகு, தமிழ் பாடல்களை, ஒருவர் பாடி, நான் வேலை மெனக்கெட்டு, கற்றுக் கொண்டேன் என்றால், அது சஞ்சயின் தமிழ் பாட்டுக்கள்தான்.

கற்பகாம்பிகை நீ அல்லவோ என்ற ஒரு பாட்டை, இதுவரை சுமார் 20-25 தடவை, கற்பகாம்பாள் சன்னதியில் பாடி இருப்பேன். அரி, மகிழ் சகோதரி, கபாலி... என்று ஒரு இடம் வரும். அற்புதமாகப் பாடி இருப்பார். அதை அவர்மாதிரியே சன்னதியில் பாடுவேன்.  (அதில் ஒரு அற்ப சந்தோஷம்)

சஞ்சய், அவருடைய வீட்டில் CHARTERED ACCOUNTANCY படித்துதான் ஆக வேண்டும். மியூசிக் பிறகுதான் என்று சொல்ல, வெறி வந்தவர் மாதிரி CA படித்து முடித்து, இப்போது பாடப் போகிறேன் என்று கிளம்பி விட்டார். அந்த வெறிக்குணம் தான் அவர் “தொட்டதெல்லாம் துலங்க” காரணமாக இருக்கிறது- என்று எனக்குத் தோன்றுகிறது

சஞ்சய் எனக்குத்தெரிந்து, தன புகழை, தலைக்கு ஏற்றிக் கொள்ளாதவர், அந்தக் காலத்து மிகப் பெரிய பிரபலமான பாடகர்களை “வஞ்சகமில்லாமல்” புகழ்ந்து, அவர்கள் பாணியை அடிக்கடி தன பாட்டில் “லாவகமாக நுழைப்பார்”. நாதஸ்வரப் பிடிகள் ரசிகர்களுக்கு புதுசு, அதனால், INSTANT ஆக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார்.

ராம்நாடு கிருஷ்ணன், GNB, SOMU, மதுரை மணி அய்யர் – அடிக்கடி அவரின் கச்சேரியில், உயிர்த்து எழுவார்கள்.  ஆலத்தூர் சகோதர்களைப் பற்றி அவர் சொன்னதை YOU TUBE ல் பார்க்கும்போது, நமக்குப் புரியும், அவர் ஏதோ ஆ.சகோ பாடல்களைக் கேட்டுப் பேசவில்லை. அதை அனுபவித்து இருக்கிறார். ஊறி இருக்கிறார். அப்போதுதான், சகோதரர்களைப் பற்றி, அவர்களுடைய சங்கீதத்தைப் பற்றி, அவ்வளவு நன்றாகப் பேச முடியும்.

TS கல்யாணராமன் அவர்களின் சார்பாக விழா எடுத்தபோது, அவரைப் பற்றி அருமையாகச் சொல்லி இருந்தார்..

BRAHMA GANA சபாவில்- கான பத்மம் அவார்ட் வாங்கும்போது, “சங்கீத வித்வான் கச்சேரி பண்ணும்போது, சுதந்தரமாக இருக்க வேண்டும். QUARANTINE பண்ணக் கூடாது” என்று சொன்னார்.  நாதஸ்வர கலைஞரிடம் அவர் கற்றுக்கொண்டது, பறந்து விரிந்த அவர் சங்கீதத்திற்கு, ஒரு முக்கிய காரணம்- என்றும் கூறலாம்

T.M.KRISHNA, while giving a speech on Ramnad Krishnan’s centenary, recently, made this point about Ramnad Krishnan

What is it about this man’s music?

Something spectacular going on in his music- What is this ?

We have to analyse what he invested in his music to turn it to Gold !!

No vagueness the way it which he conceptualised music.

Youtube ல் இந்த வீடியோ இருக்கிறது. அவசியம், ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய ஒரு பதிவு
  
My view after seeing the video:

May be, down the line, someone will talk  on Sanjay’s music in line with Ramnad Krishnan.

(அப்பாடா. T.M.Krishna வை சஞ்சய் கட்டுரையில் கொண்டு வந்துவிட்டேன்)

அவருடைய நண்பர்களை மறக்காமல், அடிக்கடி உதவி செய்து, ஒரு மிகச் சிறந்த நண்பர்கள் குழு, அவர் உருவாக்கி வைத்து இருக்கிறார்.  அவரது நண்பருக்கு முதல் ROW வில் உட்கார இடம் இல்லை என்று, அந்த சபாவுக்கு பிறகு பாட மறுத்திருக்கிறார்.

தமிழ் இசை சங்கத்தில், 3 மணி நேரம் கச்சேரி, செய்து விட்டு, அடுத்த நாள், பார்த்தசாரதி சபாவில், 3 மணி நேரம் கச்சேரி செய்வார். எந்த விதத்திலும், பாடல்களில். COMPROMISE  கிடையாது.  கடைசி பாட்டு வரையும், ஒரே TEMPO. EXUBERANCE, POURING OF PRISTINE MUSIC.

பாட ஆரம்பிக்கும் முன்பே, தண்ணீர் குடிக்கும் பாடகர்களின் நடுவில், எப்படித்தான், ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்காமல் பாடுகிறாரோ என்று ஆச்சரியமாக இருக்கும் !!!  .

ஸ்கூல் புத்தகங்களை தூக்கிக் கொண்டு வரும் குழந்தைகளைப் போல, பாட்டுப் புத்தகங்களைத் தூக்கிக் கொண்டு வரும் சங்கீத வித்வான்களிடையே, ஒரு பேப்பர் கூட இல்லாமல் பாடுவது இவருடைய பெரிய பலம்.

கை நிறைய மோதிரம் போட்டுக்கொண்டு, சட்டைக்கு வெளியே  செயினை விட்டுக் கொண்டு, வாட்ச் கட்டிக் கொண்டு, பாடும் பாடகர்களிடையே, இது ஒன்று கூட இல்லாமல், ரசிகர்கள், அவர்களுக்காக நான், எனக்காக அவர்கள் என்றே ஒரே குறிக்கோளுடன் சக்கை போடு போடும் ஒரு மிகப் பெரிய கலைஞர்.

இவருக்கு சங்கீத கலாநிதி “அவசியமா” “தகுதியானவர்தானா, 2-3  வருடம் கழித்து கொடுத்திருக்கலாமே ? SENIOR ARTISTS  பலர் இருக்கும்போது இவருக்குக் கொடுக்க என்ன அவசரம் ? இப்படி பல கேள்விகள் இன்றும் உண்டு. எனக்கே அந்தக் கேள்வி மனதிற்குள் எழுந்தது உண்மை தான். ஆனால் சில நாட்கள் கழித்து சஞ்சய் கச்சேரி வந்தபோது, முதல் ஆளாக, சபாவில் உட்கார்ந்து கொண்டிருந்தேன்.  அதுதான் நான் சஞ்சய் மேல் நான் வைத்திருக்கும் அபிமானம்

அதற்கு என் பதில்- ரசிகர்கள், அவரை, தன் மனமென்ற சிம்ஹாசனத்தில் எப்போதோ அமர்த்தி விட்டனர். ஒரு சங்கீத கலாநிதி AWARD அவருக்கு வராவிட்டாலும் கூட, நாரத கான சபா- 4 PM மணி கச்சேரி, (ON A WORKING DAY) உட்கார இடம் இல்லாமல் இருக்கும் ஒரே கச்சேரி, சஞ்சய் சுப்ரமணியம் அவர்களது தான்.- என்று நான் அடித்துச் சொல்வேன். அதை பார்த்து வியந்தவன் நான்.

சஞ்சய்க்கு நான் எப்போதும் நன்றி சொல்வேன். என்னுடைய சந்கீதத்தின் பரிணாம வளர்சிக்கு சஞ்சயும் காரணம் அவர்தான், அதனால்.  

மகாராஜபுரம் சந்தானம் மறைவுக்குப் பிறகு, கர்நாடக சங்கீதக உலகமே, அஸ்தமித்துப் போயிருந்த எனக்கு புனர் ஜன்மம் கொடுத்தது, சஞ்சய்.

நேற்று கூட, கச்சேரி முடிந்தவுடன் என்னைப் பார்த்து அவர் செய்த புன்னகை ஒன்று போதும். சஞ்சய் என்ற கலைஞனை, அருகில் சென்று பார்த்து, பேச முடியும். ஆனால் நான் தள்ளி நிற்கிறேன். அதில் கிடைக்கும் சுகம் அலாதியானது.

பாரதியார் பாடியது போல் “ஈடு உனக்கோர் தெய்வம் உண்டோ, எனக்கு உனையன்றி சரணமுண்டோ” (இந்த பாட்டையும் சஞ்சய் பாடித்தான் எனக்குத் தெரியும்).

அந்த வார்த்தைகளை மாற்றி- “ஈடு உனக்கோர் வித்வான் உண்டோ, எனக்கு உன் பாடல்கள் அன்றி வேறு சங்கீதம் உண்டோ” என்று பாடுவேன்

இவ்வளவையும் படித்த பிறகு, சங்கீத ராக்ஷஸன் (ர்) என்பதை ஒத்துக் கொள்வீர்கள்.....





Wednesday 20 September 2017

பாலா (திரிபுரசுந்தரியும்), செம்மங்குடியில் நவராத்திரியும்

இதோ, வரும் வியாழக்கிழமையில் இருந்து நவராத்திரி ஆரம்பிக்க இருக்கிறது(21-9-2017)

வரும் ஒன்பது நாட்களும், கொலு, பாட்டு, சுண்டல் என்று திமிலோகப்படும். மயிலாப்பூர் வாசியான எனக்கு, காபாலீஸ்வரர் கோவில் கண் கவர், கொலு பொம்மை அலங்காரமும், இந்த சந்தோஷத்தில், ஒரு சுற்று பெருத்திருக்கும், கற்பகாம்பாளை காண்பதும் இனிய சுகம். மேலும் சாய் பாபா கோவில் உற்சவமும் சேர்ந்து கொள்ள, (உடையாளூர், சுகி சிவம், சுதா ரகுநாதன் அவர்களின் பாட்டு/சொற்பொழிவு), ஏக அமர்க்களம் தான்.

கொலு பொம்மை விற்பவர்கள், மயிலாப்பூர் நான்கு வீதியிலும் ஆக்ரமித்திருக்க, சின்ன பொம்மை, Rs.400-500 வரை விற்கப்படுவதும், அதை, பேரம் பேசாமல், வாங்கிச் செல்லும் மக்களைப் பார்க்கும்போது, இன்னொரு, demonetisation  வந்து விடுமோ, என்று பயமாக இருக்கிறது.

செம்மங்குடி:

செம்மங்குடி, பல விஷயங்களில், என் மனதை விட்டு அகலாத ஒரு கிராமம். எந்த வித கவலையுமில்லாமல், 10 பேரோடு, கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த அந்த வாழ்க்கை, காலம் கடந்து, என் மனதில் நிறைந்து இருக்கிறது.  நானும், பல ஊர், தேசங்களுக்கு சென்று வந்து, ஓய்ந்து பொய் செட்டில் ஆகி விட்டேன். ஆனாலும், என் மனது, செம்மங்குடியை நோக்கி அடிக்கடி ஒடி விடும்.

பல சம்பவங்கள், பல நிகழ்வுகள். அதில் ஒன்று, எதிர் வீட்டு பாலா என்கிற பெண்.

பாலா:

முன்னமேயே, நான் “செம்மங்குடி” கிராமத்தைப் பற்றி எழுதியதை போல், பெருமாள் கோவில் அருகில் இருக்கும், முதல் வீடு, எங்கள் வீட்டில் எதிர் வீட்டில் இருந்தவர்கள் வீட்டில் பிறந்த குழந்தை தான் பாலா. 

கடவுளால் ஆசீர்வதிக்கப் பட்ட குழந்தை. தெய்வக் குழந்தை என்பதால் பெற்றோர்களின் பெயர் இங்கு அவசியமில்லை.
இந்தக் குழந்தைக்கு இப்போது 57 வயது.  நேற்று, கடவுள், இந்தக் குழந்தயை தன்னுடன் அழைத்துக் கொண்டு விட்டார், என்பதுதான் இந்தப் பதிவின், முக்கிய அம்சம்.

57 வயது, குழந்தையை நான், இழந்துவிட்டேன் என்று தாயார் கதறிய பொது, தாய்மையின் உன்னதத்தைப் புரிந்து கொண்டேன். அந்தக் குழந்தை இருந்தபோது, பெற்றோர்களை படுத்திய பாடு ஒரு பக்கம் இருக்கட்டும்.  ஒரு நிமிடம் கூட, முகம் சுளிக்காமல், பெற்றோர்கள் அந்தக் குழந்தையை வளர்த்த விதம், அப்பாவிடம், அந்தக் குழந்தையிடம் இருந்த ஸ்வாதீனம், நான் பார்த்திருக்கிறன். அதனால் எனக்கு அந்த இழப்பு ஒரு “சொல்லொண்ணா தாக்கத்தை” உண்டு பண்ணியது நிஜம் தான்.

என் குடும்பதை சேர்ந்த அனைவருக்கும், பாலா,  PET என்றே சொல்ல வேண்டும். எங்கள் எல்லா பெயரும் அத்து படி. என் மனைவியின் பெரும் நினைவில் வைத்துக் கொண்டு கேட்பாள். பல ஆச்சர்யங்கள் நிறைந்த பாலா அவள்.

அந்த வீடு மிகவும் பிரபலமான ஒருவரின் வீடு என்பதால் அந்த வீட்டுக்கு எல்லோரும் போக முடியாது.  அம்மா என்று நான் அழைக்கும் என் பாட்டி, போவாள். குடும்பத்தில் உள்ள எல்லோரும் எப்பவாவது போவார்கள். இவர்களுடன் நானும் போவேன். பாலாவைப் பார்த்து, நான் “இப்படியும் ஒரு உலகம் இருக்கிறது” என்று புரிந்தபின், நான், பாலாவின் மிக அருகில் சென்று பேசி, அவள் பதிலில், பொறுமை காத்து, ஒரு சந்தோஷத்தை அனுபவித்தேன்.

பல வருடங்கள் கழித்து, சென்னைக்கு வந்த பிறகு, அடிக்கடி பாலாவை, சென்னையில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. என்னை சரியாக நினைவு வைத்துக் கூப்பிட்டாள். பாலா தன்னுடைய சகோதரிகளிடம் வைத்திருந்த அன்புக்கு ஈடாக, எங்கள் குடும்பத்தில் அன்பு வைத்திருந்தாள்.

இந்த அன்புக்கு என்ன பெயர் ? எதற்கு இப்படி ஒரு ஜனனம் ? எதற்கு இப்படி ஒரு இறப்பு ? பாலா என்ற என் உடன் பிறவா சகோதரி, தன பெற்றோர்களுடன் மரணிக்கும் தருவாயில் என்ன சொல்ல நினைத்தாள் ?  பெற்றோர்கள் இந்த பாரத்தை எப்படி தாங்கப் போகிறார்கள் ? –  பல கேள்விகள்......?!!!  அபூர்வ ராகங்கள் படத்தில் கண்ணதாசன் எழுதியது போல், “மனிதன் இன்ப துன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்”

மனிதனாகப் பிறந்தவன், கடவுளை அடைகிறான். கடவுளாகவே பிறந்த குழந்தை, கடவுளிடம் திருப்பிப் போவது, -- பாலாவில் வாழ்க்கையை இப்படித்தான் முடிக்க முடியும். அதனால் தான் தலைப்பில் “பாலா திரிபுரசுந்தரி” என்று எழுதினேன்.

மிகவும் முக்கியமான ஒரு விஷயம். கமலாம்பா நவா வர்ண கிருதியில், பாலாவுக்கு மிகவும் ஆர்வம் உண்டு. அதை அவர்கள் வீட்டில் பாடும்போது, சமத்தாக, பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொள்வாள்.  அதை அடிக்கடி பாடு என்று, எங்கள் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்வாள். என் அம்மா (பாட்டி), பாலாவின் தந்தையுடன் பாட்டு கற்றுக் கொள்வதற்கு ஒரு காரணம் பாலா என்று கூட சொல்வேன்.  இதை என் மனைவி சொல்லி வருத்தப்பட்டாள்.

மறைந்த என் அம்மா (பாட்டி), பாலாவை சொர்க்கத்தில் பார்த்திருப்பாள். சந்தோஷமாக இருவரும் பேசிக்கொண்டிருப்பார்கள்

நவராத்ரி சமயத்தில், திருவாரூர், கமலாம்பாவிடம் ஐக்கியமான பாலா, நம்மை ஆசிர்வதிக்கட்டும்.

செம்மங்குடியில் நவராத்திரி:

எத்தனை நவராத்திரி வந்தாலும், செம்மகுடி நவராத்திரி போல வராது என்பது வழக்கமான வார்த்தை அன்று, சத்தியமான வார்த்தைகள்.
செம்மங்குடியில் நவராத்திரி என்பது ஒரு உற்சவம். இது ஒரு பெரிய ப்ராஜெக்ட். என் வீட்டில் 5 பெண்கள்,  சேங்காலிபுரத்தில் இருந்து, பெரியம்மா பெண்கள் வந்தால் எண்ணிக்கை கூடும்.  மொத்தமாக செம்மங்குடியில் இருக்கும் எங்கள் ஆக்ரஹாரத்தில் சுமார் 40 வீடுகள் உண்டு.  அதில் 25  வீடுகளில் கொலு இருக்கும்.

என் அம்மா, ஒரு வாரம் முன்பேயே, மச்சிலில் இருந்து, கொலு பொம்மைகளை எடுத்து வைத்து விடுவாள். நான்தான் உதவி. எடுத்து, உடைந்தது, உடையாதது என்று பிரித்து கொலு வைப்பதற்கு உண்டான ஆயத்தங்களை செய்வேன். 5 படி, 7 படி கூட போகும். அத்தனை பொம்மைகள் இருக்கும். மரப்பாச்சி தான் பெரிய பொம்மை. பொம்மைகள் காசு கொடுத்து வாங்கி கட்டுப்படியாகாது என்பதால், பத்திரமாக உடையாமல், பழைய பொம்மைகளை வைத்திருப்போம். இன்றும், சில பொம்மைகள் என் மாமா வீட்டில் இருக்கிறது. 

நவராத்திரியில், என்னப்போல ஆண்களுக்கு, ஒரே வேலைதான். ஒரு பாத்திரம் எடுத்துக் கொண்டு, எங்கள் வீட்டில் உள்ள பெண்கள், கொலு பாடுவதற்காக போகும்போது அவர்கள் பின்னால் போகவேண்டும்.

பெண்கள் அழகான தாவணிகள், பாவாடை, சட்டை அணிந்து கொண்டு இருப்பார்கள்.

என் DRESS CODE சொல்லி விடுகிறேன்

சட்டை கிடையாது. வெறும் டிராயர் தான். இடுப்பில் துண்டு இருக்கும். 
அது மூக்கு சளி, மற்றும் வேர்வை துடைப்பதற்கு,  டிராயர் நடுவில் “முக்கியமான இடத்தில், பட்டன் இருக்கும் இல்லாவிட்டால், ஊக்கு போட்டு இருப்பார்கள். சில சமயம் “காத்து வாங்கிக் கொண்டிருக்கும்”.  என் ஒரே குறிக்கோள்- சுண்டல் தான்” அதனால் “DRESS CODE” பற்றிய அதிக கவலை எனக்கில்லை,

கொலு இருக்கும் வீட்டில் இவர்கள் பாடிய பிறகு, சுண்டல் கொடுப்பார்கள். அந்த சுண்டலை இந்தப் பாத்திரத்தில் வாங்கிக் கொண்டு, வீட்டிற்கு வந்து, பிரித்துச் சாப்பிட வேண்டும்.  முதலில் யார் யார் வீடுகள் என்று ஒரு லிஸ்ட் போடலாம்

மேற்கில் இருந்து ஒரு ரவுண்டு வருவோம்....
அப்புவாம்
கிருஷ்ணமூர்த்தி மாமாவாம்  (தட்டாதிமூலை)
எங்கள் வீடு
நாகராஜன்-வெங்குட்டு சாஸ்த்ரிகள்
மில்காரர் வீடு. ஜெயராமன் வீடு
PS Sir வீடு
ஹெட் மாஸ்டர் வீடுபெரிய பண்ணை வீடு
PT Sir வீடு
குருக்கள் வீடு
சுப்பையன்/சீனி மாமா வீடு
முருகன் பாட்டி (மாலா)
பட்டாமனியாக்காரர் வீடு
சீனி சார்
கோபாலகிருஷ்ணன் (மகாதேவா) வீடு
Correspondent sir வீடு
ஐயங்கார் சார் வீடு
கணக்குப் பிள்ளை வீடு
பாடுக்கார அய்யா வீடு

என்னிடம் இருக்கும் “அக்ஷய பாத்திரம்” நவராத்திரி முழுவதும் சுண்டலால் நிரம்பி வழியும்.  இதில் என்ன பிரச்சினை என்றால், ஒவ்வொரு வீட்டிலும் வேறு வேறு சுண்டல் இருக்கும்.  கொண்ட கடலை, பயத்தம் பருப்பு, (சில வீட்டில், தேங்காய் போட்டு) பருப்பு சுண்டல், நிலக் கடலை சுண்டல், என்று பல வித சுண்டல் (கள்) 
என்னுடைய அக்ஷய பாத்திரத்தில் இருக்கும், 

வெள்ளிக்கிழமை ஆனால் “புட்டு” பண்ணுவார்கள். எல்லா வீட்டிலும் புட்டு தான்.  இருந்தாலும், ஒவ்வொரு புட்டிலும, ஒரு சுவை இருக்கும், ஒரு வீட்டு புட்டில் வெல்லம் ஜாஸ்தி இருக்கும். ஒரு வீட்டில் வெல்லம் குறைந்து இருக்கும், ஒரு வீட்டில் வெல்லமே இருக்காது. ஒரு வீட்டில் மாவு மாதிர் இருக்கும். புட்டு என்பது “மணல் மணலாக” இருக்க வேண்டும்.  எல்லா புட்டும் என் அக்ஷய பாத்திரத்தில் இருப்பதால், சாப்பிடும்போது ஒரு different taste.

என் வீட்டுப் பெண்கள் எல்லோரும், சுமாராக பாடுவார்கள் என்பதால், ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு பாடல் பாடுவார்கள்.  4-5 பாடல்கள் முக்கியமாக

1)      ஸ்ரீ சக்ரராஜ சிம்ஹானேஸ்வரி
2)      எப்போதான் இரங்குவாயோ
3)      வெங்கடாசல நிலையம்
4)      முருகனைப் பற்றி சில பாடல்கள்
5)      பூராய மம காமம்
6)      பிரபோ கணபதே
7)      ஆடாது அசங்காது வா
8)      தாயே யசோதா

இந்தப் பாடல்களைப் பாடும்போது, நான் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு, எப்படா பாட்டு முடியும் ? சுண்டல் கிடைக்கும் என்று ஏங்கிக் கொண்டு உட்கார்ந்திருப்பேன்.

பல ஆச்சர்யங்கள் கொலுவோடு கூட இருக்கும். ஜெயாராமன் ஆத்தில் train வைத்து, ஓட விட்டார்கள்.  உஞ்சல் வைத்து, சிறு பொம்மையை ஆட வைத்தார்கள்.  சில வீட்டில், “பார்க்” கட்டி இருப்பார்கள். ஒரு சிறிய குழாயில், தண்ணீர் கொட்டிக் கொண்டிருக்கும். 

முத்தாலத்தி என்று ஒன்று உண்டு. ஒரு தட்டில், மைதா மாவு வைத்து கோந்து செய்து, கோலம் போடுவார்கள். கோலம் என்பது யானை உருவமோ, மயில் போன்ற அழகான படங்கள் OUTLINE மட்டும் போடுவார்கள். பிறகு, முழு முழு அரிசி கொண்டு. அந்த லைன் ல் ஓட்டிக்கொண்டே வரவேண்டும்.  அது முடிந்தபிறகு, கலர் பவுடர் போட்டு அந்த கோலத்தை மேலும் அழகு படுத்தவேண்டும்.  முழு அரிசிக்கு பதிலாக, அரிசி மாவை ஊர வைத்து, சிறு உருண்டைகளாக உருட்டி, போடலாம்.

இதில், என் ரோல் என்னவென்றால், முழு அரிசி, பொறுக்க வேண்டும். முத்தாலத்தியை – அந்த தட்டுடன், சிவன் கோவிலுக்கு எடுத்துச் சென்று கொடுக்க வேண்டும். கற்பூர ஆரத்தி காட்டி, பிறகு கலைத்துவிடுவார்கள். 

கற்பனை வளம், பொறுமை – இரண்டும் கற்றுக் கொடுக்கும் ஒரு கலை. முத்தாலதியைப் பற்றி, மஹா பெரியவாள், “தெய்வத்தின் குரலில், எழுதி இருப்பது இன்னும் விசேஷம்

என் வீட்டில், இந்த முத்தாலதி, பல் வகைகளில், பல வண்ணங்களில் மின்னும்.  என் குடும்பத்து, சித்திகள், சகோதரிகள் எல்லோரும் கலை அரசிகள்..  அவர்கள் போட்டி போட்டுக்கொண்டு முத்தாலதி போட, ஆனந்தவல்லி அதை புன்னகையுடன் ஆசிர்வதித்த அற்புதமான நாட்கள்.

இத்தனை சுண்டல், புட்டு எல்லாத்தையும் பங்கு போட்டுக்கொண்டு தின்றாலும் கூட, என் அம்மா, எங்கள் வீட்டில் சுண்டல் பண்ணி, நிறைய வைத்திருப்பாள். நாங்கள் அதையும் சாப்பிடுவோம். என் அம்மா பண்ணிய சுண்டல் சுவையே தனி. அதற்கு ஈடாக, எழேழு உலகமும் கொடுத்தாலும் ஈடாகாது. 

கோடி கொடுத்தாலும் செம்மங்குடி நாட்கள் வருமா ?!

இன்று, நான் அன்போடு வாய் நிறைய கூப்பிடும், அம்மா என்ற என் பாட்டியின் நினைவு தினம் (20-9).  5 மணிக்கு (5 pm) மறைந்தாள். நான் இந்தக் கட்டுரையை முடிக்கும் டைமும் அதே தான்