Tuesday 19 December 2017

அபார கருணா சிந்தும் - இன்றும்

போன அனுஷ தினத்தில், எனக்கு நடந்த, அதற்கு முன்பு பெரியவா ஜெயந்தியில் என் குடும்பத்தில் ஒருவருக்கு நடந்த அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

நான், பெரியவாளின் கோடானு கோடி பக்தர்களின் ஒருவன். அனால் பெரியவாளுக்காக நடத்தப்படும் அனுஷ பூஜையில் கலந்து கொண்டு, தொண்டு செய்பவர்களில் ஒருவரோ,  அல்லது ஸ்ரீ பாதம் தாங்கிகளில் ஒருவரோ கிடையாது. அவரை அனவரதமும் நினைத்துக் கொண்டிருப்பவனும் கிடையாது. வாட்சப்பில், பெரியவாளைப் பற்றி வரும் பல குரூப்பில் நான் இருக்கிறேன். அதனால், அவரைப் பற்றி அடிக்கடி படிப்பதுண்டு. அவ்வளவுதான்.

பெரியவாளின் அத்யந்த பக்தரான, ஸ்ரீ கணேஷ் சர்மா அவர்கள் அனுஷ பூஜை மாதா மாதம் நடத்துகிறார். மயிலாப்பூர் வாசியான எனக்கு, இதில் எப்போதாவது கலந்து கொள்ளும் பாக்கியம் கிடைக்கும். அதாவது கடைசி 15 நிமிடம் போய், தீபாராதனை பார்த்து இருக்கிறேன் சில சமயம் பெரியவாளின் படம், மயிலாப்பூர் மாட வீதியில் (உலாவாக) வந்து காட்சி கொடுக்கும்போது, அவரை நமஸ்கரித்துச் சென்று இருக்கிறேன். அவர்களுடன் கூட போய் இருக்கிறேன். அவ்வளவது தான்.

குருவின் அணுக்ரஹம் என்பது கிடைத்தற்கரியது.  குருவைப் பற்றிச் சொல்லும்போது. இரண்டு விஷயங்கள் நினைவுக்கு வருகிறது.

கோபால சத்குருவைப் பற்றி சொல்லும் ஒரு ஸ்லோகத்தில், “எவருடைய பாத தூளியை அரை க்ஷணம் தரித்த மாத்திரத்தில், ஒருவரின் கலி தோஷங்கள் விலகி, பரிசுத்தமாகிரானோ, எவருடைய உள்ளம் ஸ்ரீ கிருஷ்ணனின் பாத கமலத்தில் மூழ்கி இருக்கிறதோ அந்த கோபால சத்குருவை, தினமும் வணங்குகிறேன்.  இதனுடைய ஸ்லோகம் வருமாறு:

யத் பாத பங்கஜ ரஜ சிரஸா க்ஷணார்த்தம், நருத்வா நர; கலிமலாத் ஸுபவித்ரா காத்ர:
தம் ருக்மீநீச சரனாப்த நிமக்ன சித்தம், கோபால சத்குருவரம் ப்ரணதோஸ்மி நித்யம்

க்ஷனார்தம்- அரை நொடி

இரண்டாவது, அருணகிரினாதரைப் பற்றிச் சொல்லும்போது, ஆரம்பத்தில் இருந்த நிலை, (திருப்புகழில் அவர் சொல்கிறார்)

சரண கமலாலயத்தில் அரை நிமிட நேரம் மட்டும் தவ முறை அறிய மூட, மட்டி”
ஒரு அரை நிமிட நேரம் கூட உன் பாத்தில் என் சிந்தனையை வைக்க முடியவில்லையே என்று ஏங்கிய அருணகிரிநாதர், அனுபூதி பெற்றவுடன்,

“எல்லாம் அற என்னை மறந்தேன்” என்று பாடுகிறார்.

எனக்கு இந்த சிந்தனை உண்டு. நான் செய்யும் நித்ய பூஜையில்- “அபார கருணா சிந்தும்,.....முதான்வஹம்” என்ற அவரது குரு காயத்ரி சொல்வது வழக்கம்.

சரி இப்போது விஷயத்திற்கு வருவோம்.

என் மனைவிக்கு போன வாரம் மிகவும் ஜுரமாக இருந்தது, சளித் தொல்லை வேறு. போன 13 ம் தேதி, உடல் நலம் மெதுவாக குன்ற ஆரம்பித்தவுடன், என் மனைவி, நாட்டு வைத்யம், என்று-- டப்பா செட்டி கடை பொடி, வெந்நீரில் ஆவி பிடிப்பது (வேப்பலை போட்டு), என் அம்மா சொன்ன வைத்தியம், என் மாமியார் சொன்ன வைத்தியம், என்று பல தரப்பட்ட மருந்து கலவைகளை, ஏதோ ஒரு டி. வீயில், healer Baskar  என்ற ஒருவர் சொன்னது என்று பல தரப்பட்ட விஷயங்களைப் பயன்படுத்தி வந்தாள், ஜுரம் குறைந்தாலும் சளி குறையவே இல்லை. நான் எவ்வளவு சொல்லியும், சளிக்காக, டாக்டரிடம் வர மாட்டேன் என்று உறுதியாக இருந்தாள். சனிக்கிழமை அனுஷம். வெள்ளிக்கிழமை இரவு மிகவும் ஜாஸ்தியாகப் போய் விட்டது. சனிக்கிழமை காலை 
எழுந்தவுடன் முகம் ஒரு சுற்று வீங்கி இருந்தது.

மேலும் போன திங்கள் கிழமை, அமாவாசை சோம வார பிரதட்சிணம் வேறு. அது மேற்கு மாம்பலத்தில் இருக்கும், கல்யாணம் ஆன மரத்தில் 108 தடவை பிரதட்சிணம் செய்ய வேண்டிய கட்டாயம். இந்த வ்ரதத்தை முன்பே ஆரம்பித்ததால், விடவும் முடியாது, என்னடா இது இப்படி ஒரு சோதனை என்று ஒரு கலக்கம்= இது அப்படியே இருக்கட்டும்.

என்னுடைய மகள், கர்நாடக சங்கீதம், ஸ்ரீமதி, பத்மா நாராயணசுவாமி அவர்களிடம் கற்றுக் கொண்டு இருக்கிறாள். இதை நான் முன்பே ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறேன். ஓரிக்கை, வித்வத் சமாஜம், மகாலிங்கபுரம் ஐயப்பன் கோவில், அகமதாபாத்தில், விமானத்தில் சென்று, சங்கர ஜெயந்தி உற்சவம் கூட பாடி இருக்கிறாள். அவளுக்கு, கற்பகாம்பாள் சன்னதியில், போன சனிக்கிழமை பாட ஒரு வாய்ப்பு வந்தது. சன்னதியில் சங்கீதம் என்று Giri trading banner ல். எனக்கு இதில் மிகவும் மகிழ்ச்சி, முதலில், எனக்கு மிகவும் பிடித்த கபாலி கோவில், பெரியவா அனுஷ நக்ஷத்ரம், மேலும், மார்கழி முதல் நாள். திருப்பாவை மிகவும் பிரபலப்படுத்தி, ராகம் போட்டு, எல்லா கச்சேரியில் பாடிய சங்கீத கல்லாநிதி திரு. கே.வீ நாராயணசுவாமி அவர்களின் பாடாந்திரமானதால், திருப்பாவை almost எல்லா பாட்டும் பாடுவாள் என்ற வகையில், மார்கழி முதல் நாள், திருப்பாவை பாடும் பாக்கியம்- இது இப்படியே இருக்கட்டும்
இப்போது பெரியவாளின் லீலையைப் பாப்போம்:

எனக்கு, ஒரு ஆசை வந்தது. முதலில் கற்பகாம்பாள் கோவிலில் பாடப்போகும் என் பெண், அனுஷ நக்ஷத்திரமாக இருப்பதால், ஸ்ரீ கணேஷ் சர்மா வீட்டிற்க்குச் சென்று, குரு சந்நிதானத்தில் திருப்பாவை பாடச் சொல்ல வேண்டும் என்று தோன்றியது. மார்கழி முதல் தேதி, என்பதும், காலையில், அவர் வீட்டில் என்ன ப்ரோக்ராம் என்று தெரியாததாலும், தனுர் மாச பூஜை போன்ற இத்யாதிகள் இருப்பதாலும், அனுமதி கிடைக்குமா என்று அறிந்து கொள்ள, ஒரு வாரம் முன்பு, ஸ்ரீ கணேஷ் சர்மா வீட்டிற்குச் சென்று, எல்லா விபரங்களையும் சொன்னேன். அவர் சனிக்கிழமை காலை 6 மணிக்கு வந்து விடுங்கள், பாடட்டும், என்று சொன்னார்.

நானும் தனுர் மாச பூஜை செய்வதால், 4 மணிக்கு எழுந்து, பூஜை முடித்துவிட்டு, பெண்ணையும் எழுப்பி, குளித்து, தாவணி இத்யாதிகளுடன், கிளப்பிக் கொண்டு ஸ்ரீ. கணேஷ் சர்மா அவர்களின் வீட்டுக்கு வரும்போது, மணி 6.10 am.

வீட்டை விட்டு கிளம்புவதற்க்கு முன்பு, மனைவியிடம், கொஞ்சம் படுத்துக் கொள், நான் பெரியவா பூஜைக்கு சென்று, திரும்பி வந்து உன்னை HOSPITAL  அழைத்துச் செல்கிறேன். – என்று சொன்னேன். எனக்கு வேறு வழி தெரியவில்லை, பாடுவதற்கு முன்பே சொல்லி வைத்ததால், அங்கு போக வேண்டிய சூழ்நிலை. அரை மனதோடு கிளம்பினேன். என் மனைவி- நான் “காமாக்ஷி, பெரியவா” என்று திருப்பி திருப்பி சொல்லிக் கொண்டிருக்கிறேன், சீக்கிரம் வந்து விடுங்கள்” என்று சொன்னாள்”.  அவளுக்கும் கூட வர வேண்டும் என்று ஆசை.

ஸ்ரீ கணேஷ் சர்மா வீட்டில் -பெரியவா பாதத்தை எடுத்துக்கொண்டு, ஸ்ரீ கணேஷ் சர்மா அவர்கள் வந்து, பாதுகையை வைத்து, அபிஷேகத்துக்கு உண்டான இத்யாதிகளை சரி செய்ய, ஹோம குண்டம், ஒரு பக்கம் வைத்து, அதற்கு உண்டான, கலசம் இத்யாதிகள் மற்றொரு புறம். அங்கு இருவர் தைத்ரீயம் பாராயணம் பண்ணிக் கொண்டிருந்தார்கள்,

நடுவில், என் பெண் பாட ஆரம்பித்து, பூஜை முடிந்த பின் 3 பாடல்கள் பாடி, சத்குரு சுவாமிக்கு என்ற ரீதிகௌள ராகத்தில் அமைந்த ஒரு பாடலை பாடி முடித்தாள். எப்போது பாடுவது என்று தெரியாததால், ஹோமம் முழுவதும், முடிந்து, பெரியவா விக்ராஹதுக்கு, எல்லா அபிஷேகமும் முடிந்து, தூபம், தீபம் எல்லாம் முடிந்து, பிரசாதம் வாங்கிக்கொண்டு செல்லும் வரை அங்கு இருக்க வேண்டிய கட்டாயம் எனக்கு வந்துவிட்டது

என் பிளான் – அங்கு 30 நிமிடம் பாடிவிட்டு, உடனே கிளம்பி, மனைவியை அழைத்துக் கொண்டு HOSPITAL  செல்லவேண்டும் என்பது தான். ஹோமம், அபிஷேகம் போன்றவை, நான் எதிர் பார்க்கவே இல்லை. கணேஷ் சர்மாவிடம் சொல்லிவிட்டு கிளம்பவும் மனம் இல்லை. அவரிடம் பேசுவதற்கே, ஒரு பயமாக இருந்ததால், அவரே “சரி போகலாம்” என்று சொல்வார் என்று பார்த்தால், அவரும் போக சொல்லவே இல்லை. எனக்கு சொல்லவும் முடியவில்லை, மெல்லவும் முடியவில்லை.

8.15 மணிக்குத் தான் முடிந்தது. பிரசாதம் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்து, படுத்துக் கொண்டு இருந்த மனைவியை அழைத்துக் கொண்டு மந்தவெளியில் இருக்கும் B.S.S HOSPITAL  சென்றேன்.

இப்போது தான் முக்கிய கட்டம்

B.S.S HOSPITAL  உடனே வைத்தியம் பார்த்து, மிகவும் சளியாக இருக்கிறது, என்று ஊசி போட்டு, மருந்து, மாத்திரை..மேற்படி.....எல்லாம் நடந்த்து. நான் அடிக்கடி அந்த ஆஸ்பத்திரிக்கு போவேன் 
என்பதால், DUTY DOCTOR எல்லோரும் பரிச்சயம்.

மேலும், நான் ரங்கா HOSPITAL செல்வதா என்ற குழப்பத்தில் இருந்து (ரங்கா HOSPITAL, டாக்டர் மாதவன் எனக்குத் தெரியும் என்பதாலும்), கடைசியில் B.S.S HOSPITAL சென்றேன்.

டாக்டரிடம், திங்கள் கிழமை, ஒரு கோவில் விசேஷம் இருக்கிறது என்பதாலும், ஸ்நானம் பண்ண வேண்டும் என்பதால், ஒரு நாளில் குணம் ஆகி விடும் என்றால், BETTER என்றேன். அவர் சொன்னார், “இன்று இரவே சரியாகிவிடும், மிஞ்சி போனால், அடுத்த நாள், SUNDAY, குனமாகிவிடும்.  இருந்தாலும், ஸ்நானம் செய்யாமல் MONDAY FUNCTION க்கு போனால் பெட்டர்” என்றார்

எல்லாம் முடித்துவிட்டு, RECEIPTION ல், பணம் கட்டிவிட்டு, - எனக்கு ஒரு ஆசை, அடிக்கடி வருகிறோமே, இந்த டாக்டரை பல முறை பார்த்திருக்கிறோமே, அவர் பேர் தெரிந்து கொள்ள ஆசை.. ஆகவே, RECEPTION ல் இருந்த பெண்ணிடம் அந்த டாக்டர் பெயர் கேட்டேன்;

அவள் சொன்னார் - அவர் பெயர்- டாக்டர்.சந்திரசேகரன்

நான் ஒரு நிமிடம், அப்படியே அசையாமல் நின்று விட்டேன். சற்று உணர்ச்சி வசப்படக்கூடிய என் மனைவி உடனே அழ ஆரம்பித்து விட்டாள். அபார கருணா சிந்தும் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கற்பிப்பவராக, பெரியவாளை அங்கு பார்த்தேன். எனக்கு அந்த இன்ப அதிர்ச்சி அடங்க பல நிமிடங்கள் ஆகியது

அது மட்டும் இல்லை. சண்டே உடல் 70%  பூரணமாகி, திங்கள் எழுந்து குளித்து, சோம வார பிரதக்ஷிணமும், செய்து வந்தாகி விட்டது.

இது என்ன சாத்தியமா. கனவா, அனுக்ரஹமா ? அதற்கு அருகதை எனக்கு இருக்கிறதா ? என்று தெரியவில்லை. அந்தப் பாதத்திற்கு அவ்வளவு மகிமையா ? அதுவம், அந்தப் பூஜைக்கு, ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாத எனக்கு இவ்வளவு அனுக்ரஹமா ? இன்னும் அந்த பிரமிப்பு அடங்கவில்லை

இதை இன்னொரு முக்கியமான விஷயம், என் பெண், பாடிவிட்டு வீட்டிற்க்கு வந்தவுடன், “கோவிலுக்குச் சென்று பாட முடியாதபடி” ஆகிவிட்டது. (பெண்கள் பிரச்னை)

என் பெண் அழ, நான் சொன்னேன்- பெரியவா “இந்தப் பிரச்னையை” முன்பே உணர்ந்துதான், உன்னை தன் சன்னதியில் பாட அழைத்துக் கொண்டார்”  - இது குரு அனுகிரகம். எத்தனை பேருக்குக் கிடைக்கும், பெரியவாளை, நெஞ்சில் ஏற்றிக் கொண்டாடும் ஸ்ரீ. கணேஷ் சர்மா மாதிரி ஒருவர வீட்டில், அபிஷேக ஆராதனைகளைப் பார்த்து, பாத தரிசனம் செய்து கொண்டே, பாடுவதற்கு எத்தனை புண்ணியம் செய்திருக்க வேண்டும்”

இந்த வார்த்தைகளைச் சொன்ன பிறகுதான் என் பெண் சாந்தமானாள். வேறு ஒரு தேதியில் கோவிலில் பாடுவதற்கு முயற்சிகள் – பெரியவா எடுப்பா – என்பதில் எனக்கு கொஞ்சம் கூட சந்தேஹமே இல்லை.

மகா பெரியவா சரணம். ஸ்ரீ கணேஷ் சர்மா பாதங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்.

இதை எழுத வைத்ததும் பெரியவாதான்.

-என்னுடைய சஹோதரின் மனைவிக்கு நடந்ததை நாளை எழுதுகிறேன்.


Wednesday 13 December 2017

ராமகிருஷ்ணன் மூர்த்தி என்கிற சங்கீத பிரவாஹம்

பிரம்ம கான சபா
10th December 2017

ராமக்ருஷ்ணன் மூர்த்தி- வாய் பாட்டு
நெய்வேலி நாராயணன்- மிருதங்கம்
சாருமதி ரகுராம்- வயலின்
சுந்தர் குமார்- கஞ்சிரா

பிரம்ம கான சபா இந்த வருட டிசம்பர் சீசனை வழக்கம் போல ஆரம்பித்து, மிக அருமையான பாடர்களின் கச்சேரியை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.  அதில் நேற்று, ராமகிருஷ்ண மூர்த்தியின் ஒரு “நெஞ்சை அள்ளும்” (இன்று, பாரதியின் பிறந்த/நினவு தினம்) கச்சேரியை கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

பி.கா,சபாவில் ஒரு வசதி உண்டு. இஷ்டத்திற்கு கச்சேரி என்று வைத்து, யார், யாரையோ பாடச் சொல்லி, கூட்டம் வராமல், வரும் ரசிகர்களையும் நோக அடிக்காமல், ஒரே ஒரு கச்சேரி, அதுவும் 6 மணிக்கு ஆரம்பித்து 9 மணிவரை 3 மணி நேர கச்சேரியாக வைத்துள்ளனர். 3 மணி நேர கச்சேரியில் ஒரு வசதி, ராகம் தானம் பல்லவி கேட்கும் பாக்கியம் உண்டு. மேலும் தனி ஆவர்த்தனம் சுமார் 7.45 மணிக்கு வருவதால் யாரும் எழுந்து போகாமல், தனி கேட்கும் வாய்ப்பும் உண்டு.

Online ல் டிக்கெட் book பண்ணும் வசதி இருப்பதால், அனாவசியமாக டிக்கெட் கிடைக்குமோ என்று கவலையும் படவேண்டாம்.

கொஞ்சம் off track  போய், பிறகு விஷயத்திற்கு வரலாம்:

இளையராஜா சொல்லுவார்

சிலரின் பாட்டு நம்மை அறியாமல் நம்மை உணர்ச்சி வசப்பட வைக்கும். அது இசையால் கூட இருக்கலாம். பாடுபவரின் குரலால் கூட இருக்கலாம். அல்லது அந்தப் பாடலின் பொருளாகக் கூட இருக்கலாம். அதற்கு அவர் “மாலைப் பொழுதின் மயக்கத்திலே” என்ற ஒரு பாடல் (பாக்ய லக்ஷ்மி என்ற படம்) உதாரணமாகச் சொல்வார்.  என் எலும்பை உருக்கிய பாட்டு என்பார். 

என்னைக் கேட்டால். “மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன” என்ற தில்லானா மோகனாம்பாள், படப் பாடலை இதே போல் சொல்வேன். ஷண்முகப்ரியா ராகத்தில் அமைந்த பாடலைச் சொவதா. இந்தப் படத்தில், நாயகன் பெயர் ஷண்முக சுந்தரம். அதனால் ஷண்முகப்ரியா ராகமா, இசை அமைப்பாளர் K.V.MAHADEVAN  சாதுர்யத்தைச் சொல்வதா. பாடலின் பொருள் மிகவும் சிறப்பாக, கதையின் வலிமையச் சொன்ன அதிசயத்தைச் சொல்வதா ? பல சிறப்புகள். சிவாஜி, பத்மினி –இவர்களின் கண்கள் பேசும் அழகைச் சொல்வதா ?

அதே போல் ஒரு நல்ல இசை நான் கேட்டது

இப்போது விஷயத்திற்கு வருவோம்

ராமகிருஷ்ணன் மூர்த்தியைப் பற்றி, கர்நாடக ரசிகர்கள் உலகில் தெரியாவதர்கள் இருக்க முடியாது. இங்கிருந்து அமெரிக்கா போய், மேல் படிப்பு படித்து, முடிந்தால் கொஞ்சம் சங்கீதமும் கற்றுக் கொள்ளும் மக்களின் இடையே, அமெரிக்காவில் படித்து, சந்கீததுக்காக, சென்னை வந்து, வந்த பிறகும், IT கம்பனியில் கிடைத்த வேலையை உதறி, சங்கீதத்தை மிகவும் பண் படுத்தி, அதை தன் வசமாக ஆக்கிக் கொண்டு, சங்கீதத்தின் உயிர் நாடி என்கிற ஜீவனைப் பிடித்துக் கொண்டு, ராஜ பாட்டையில் உலா வரும் ஒரு அற்புதமான கலைஞர்,

சென்னை வந்த பிறகு,. சங்கீதத்தை தன் உயிர் மூச்சாக கொள்ள நினைத்த அவருக்கு, கடவுள் ஒரு படி கீழே இறங்கி. R.K.Shriramkumar  என்ற ஒரு மகத்தான குருவைக் கொடுத்து, ராமகிருஷ்ணன் மூர்த்தியின், இசையை, மேலும் பலப்படுத்தியது, அதன் மூலம் ரசிகர்களை வசப்படுத்தியது என்பது சத்தியம்.

சுருதி மாத இதழில், அவருடைய பேட்டி வந்திருந்தது.  சாத்தூர் AG சுப்ரமண்யம் அவர்களின் நினைவாக, அவருடைய, படத்தை கவரில் போட்டு வந்த இதழ். அதில் ராமகிருஷ்ணன் மூர்த்தியின் ஒரு பேட்டி இடம் பெற்றிருந்தது. அதில் அவருடைய குரு வுடனான ஒரு பக்தியை மிக அழகாக சொல்லி இருந்தார். எல்லோரும் அவசியம் படிக்க வேண்டிய ஒரு பேட்டி.
இந்த சின்ன வயதில், கச்சேரி செய்து வரும் ராமகிருஷ்ணன் மூர்த்தியைப் பற்றி, என் ஒரு வரி விமர்சனம்- “சங்கீத தேவதை, இறங்கி வந்து ஒருவரின் உடலில் புக நினைத்து, அதன் மூலம் ரசிகர்களின் சங்கீத உணர்வுகளை மேம்படுத்த நினைத்து, புகுந்த உடல், ராமகிருஷ்ணன் மூர்த்தி”

நான் மகாராஜபுரம் சந்தானத்தின், குரலில் நுழைந்து, சஞ்சயின் இதயம் புகுந்து, இப்போது ராமகிருஷ்ணன் மூர்த்தியின், இசை என்ற உணர்வில் கலந்து நிற்கிறேன்.

கர்நாடக சங்கீதத்தைப் பற்றி, அவரே ஒரு INTERVIEW வில் சொன்னது:

Carnatic music is not just about entertainment… it elevates a person beyond that; it’s soul-lifting

இது தான் உண்மை. இதைதான் அவர் செய்து கொண்டிருக்கிறார்

மேலும், அவர் விமர்சனங்களைப் பற்றிச் சொல்லும்போது:

Personally, I don’t think a review alone can make or unmake an artist. It is the merit of the music that decides.

My opinion: His music has lot of merits

இனி விமர்சனத்திற்கு வருவோம்:

நேற்று, மயிலாப்பூர் சங்கீத ரசிகர்களுக்கு, ஒரு மிகப் பெரிய சவாலான நாள். நாரத கான சபாவில், கார்த்திக் பைன் ஆர்ட்ஸ்- க்காக சஞ்சய் பாட, ARKAY CONVENTION CENTRE  மல்லாடி சகோதரர்கள் பாட, ராஜரத்தினம் அரங்கில், அபிஷேக் ரகுராம், பாட BGS ல், நான்சென்ற ரா.மூ. கச்சேரி.
பாவம் ரசிகர்கள். !!!

நான் அரங்கத்துக்குள் நுழையும்போது, “நீ கேல”, என்ற ஒரு மோகன ராக வர்ணனை ஆரம்பித்து, துரித கதியில் பாடிக் கொண்டிருந்தார். சாருமதியும், ஈடு கொடுத்து வாசித்துக் கொண்டிருதார். கச்சேரி களை கட்டிவிட்டது.

முந்து வேணுக என்ற தர்பார் ராக, சத்குரு தியாகரஜர் கிருதியை எடுத்தார். “பாகவதப்ரிய பாக ப்ரோவவய்யா, த்யாகராஜ நுத” என்ற இடத்தில நிரவல் செய்தார். ஸ்வரம் பாடி, “பெத்தாச்சி” தர்பாரில், தர்பார் ராகத்தில் லயிக்கச் செய்தார்.

“நாரத குருஸ்வாமி”, “யோசனா” போன்ற பல பாடல்கள் இருக்க, இந்தப் பாடல், பல சிறப்புகள் நிறைந்த, தியாகரஜரின் பக்தியை மேம்படுத்தச் செய்யும் பாடல்:

“நீ என் முன்னே, பின்னே, இரு புறமும் என்னைக் காக்க வரவேண்டும் “ராரா” என்று பாடல் முழுவதும் சொல்கிறார். பாடல் ஆரம்பத்தில், கெஞ்சுகிறார், பல்லவியில், அவர் வீரத்தை புகழ்கிறார். அனுபல்லவியில். அவர் அழகை மெச்சுகிறார். சரணத்தில், அவர் இரக்க குணத்தை (கஜேந்திர மோட்சம்) பாராட்டும் தியாகராஜர் கடைசியில், பாகவதப் ப்ரியராகவும், தத்துவப் பொருளாகவும் ராமனை நினைக்கிறார்” – அழகான வரிகள். எனக்குத் தெலுங்கு தெரியாமற் போனாலும். தியாகராஜரின் பாடலுக்காகவது, தெலுங்கு கற்றுக் கொள்ள ஆசை. (நிறைவேறவில்லை என்பது வேறு விஷயம்)

மூன்றாவதாக, “ஜெயந்த சேனாவை” எடுத்தார். இந்த ராகத்தில், எனக்குத்தெரிந்த “வினதா சுதவா” எந்த வித குழப்பமும் இல்லாமல் ராகத்தை ஒரு 3 நிமிடம் பாடி, வயலின், அதை வழி மொழிய பாடினார். ஸ்வரம், “மத பேதமனே” என்ற இடத்தில பாடி நிறைவு செய்தார்.
ஜயந்த சேனாவைக் கூட அழகாக முத்துக் கோத்தது போல், பாடினார்.

தமிழ் பாடலான பருவம் பார்க்க ஞாயமா, பராத்பரி, என்ற ஆனை அய்யா அவர்களின் பாடல். இதை சாத்தூர் AGS அவர்கள் சொல்லித் கொடுத்தார் என்று அவர்களது புதல்விகனான, சாத்தூர் சகோதரிகள், ஒரு கச்சேரியில், பாடி முன்பு அசத்தி இருக்கிறார்கள்..  Recent ஆக சஞ்சய் கூட எங்கேயோ பாடியதாக ஞாபகம்.

ஆனை அய்யாவைப் பற்றிச் சொல்லும்போது, “அம்பா நன்னு ப்ரோ” என்று ஒரு தோடியில் ஒரு மிக அழகான சாஹித்யம் உண்டு. அது வரிகள் ஜாஸ்தி இல்லாமல், ராகத்தை வைத்தே, வரிகளை நிரப்புவது போன்ற ஒரு பாடல். செம்மங்குடி பாடிக் கேட்ட ஞாபகம். இந்தப் பாடலை மிகவும் கை தேர்ந்தார்கள் தான் பாடவேண்டும். இல்லாவிடில், வழுக்கிக் கொண்டு ஓடிவிடும்.

பிறகு, வேலைக்காரனாக இருக்கிறேன், என்னை ஏற்றுக்கொள் என்ற, தியாகராஜர் இயற்றிய, பண்டு ரீதி என்ற ஹம்சநாத ராக கீர்த்தனை, ராகத்தை, 3-4 நிமிடம் ராகம் பாடி பிறகு அழகாக முடித்து, 

மெயின் உருப்படியாக வாசஸ்பதி ராகத்தை எடுத்தார்...

இந்த ராகத்தை ராமகிருஷ்ணன் மூர்த்தி பாடிய விதம் மெய் சிலிர்க்க வைத்தது உண்மை. சாதரணமாக வாசஸ்பதி ராகம், எனக்கெல்லாம் 2-3 நிமிடம் தான். பிறகு ராமப்ரியாவா, சரஸ்வதியா என்று குழம்பி, “பராத்பரா பரமேஸ்வரா” என்று யாராவது பாடினால், உடனே அரங்கத்தை காலி செய்து விடுவேன். அலுப்பு தட்டும் ராகம் இது. அனால் அதை ரா.மூ கையாண்ட விதம் அபாரம்.

பாஹி ஜகஜ்ஜனனி என்ற மகாராஜா கிருதியை எடுத்து, விஸ்தாரமாக பாடினார். சம்ஸ்க்ருத 
சுத்தம், R.K.SRIRAMKUMAR என்ற குருவின் நேர்த்தியை பறை சாற்றியது.

சமலஜாதம் வாரய என்ற சரண வரிகளில், நிரவல் செய்து, தனி விட்டார்.

நெய்வேலியும், சுந்தரகுமாரம், தனியாக, மிகவும் சிறப்பாக வாசித்த பிறகு,

ஷ்யாமா சாஸ்திரி மாஞ்சி ராக கிருதியான, ப்ரோவம்மா வை பாடினார். அதை “நீவே அனாதரான ஜெசிதே” என்ற அனுபல்லவியில் எடுத்து குழைத்து கொடுத்தார்

பிறகு தான் ராகம் தானம் பல்லவி:

யதுகுலகாம்போஜி ராகத்தை ரா.தா.பல்லவி யாக பாடுவதற்கு ஒரு தைர்யம் வேண்டும். இந்த ராகம் 3 நிமிடத்திற்கு மேல் தேறாது. “காலை தூக்கி நின்று ஆடும் தெய்வமே” என்று மாரிமுத்து பிள்ளை அவர்களின் ஒரு பாடலை, சஞ்சய் பாடி, பாடி, கேட்டு கேட்டு, சிதம்பரம் நடராஜர் மேலே ஒரு “அலுப்பு”: வரும் அளவுக்கு ஆக்கிய ராகம் இது.

இதை மிக லாவகமாக கையாண்டு தானம் நாயகியிலும், மோகன கல்யாணியிலும், கொடுத்து, பாலவியை ஆரம்பித்தார்

“ஹரே, மாம் பாஹி யதுகுல காம்போஜ பத யுகள” என்ற பல்லவியை (குருநாதர் R.K.SRIRAMKUMAR சொன்ன பல்லவி என்று ரா.மூ சொல்லி ஆரம்பித்தார்)

ஆனந்த பைரவி, ஹிந்தோளம், பெஹாக், தர்பாரி கானடா, என்று ராஜ பாட்டையில் சென்று, பிறகு “U Turn” போட்டு, முடித்தார்.

“ச்ருத்வா குணா புவனசுந்தர” என்று ஸ்ரீமத் பாகவத வரிகளை வருத்தமாக பாடி, அரவிந்த பத மலர்” என்ற “காபி ராக” அம்புஜம் கிருஷ்ணாவின் பாட்டை பாடினார்.

இந்தப் பாடலில் எனக்கு ஒரு சந்தேஹம்.  “குறள் வடிவாக வந்து ஈரேழு உலகளந்தாய்” என்ற வரியில், ரா.மூ. “குரல்” என்று பாடினார். இதை திருப்பி, திருப்பி பாடி “குரல்” என்ற வார்த்தையை உறுதி செய்தார். அது தவறோ என்பது என் எண்ணம்.

இதை எழுதும்போது, எனக்கு, மல்லடி சஹோதர்கள், ஞாபாகம் வந்தது. அவர்கள் தமிழ் பாட்டு பாடுவதில் உள்ள அந்த முயற்சியை நான் மனதார பாராட்டினாலும், சில வரிகள், “சட்” என்று, ஒரு தமிழ் தவறு இருக்கும்போது, அது கவனிக்கப் படாவிட்டாலும் கூட, சிரிப்பை வரவழைக்கும்.

நாரத கான சபாவில், போன வாரம் ம.சகோ. பாடும்போது “சீதா மதி” (நவசித்தி பெற்றாலும் என்ற நீலகண்ட சிவன் பாடலை-கரஹரப்ரியா- மெயின் ஆக எடுத்து பாடினார்கள்).
குரல் கேட்கும்போது அது நினைவுக்கு வந்தது.

கடைசியில், தேவகி நந்தன நந்த முகுந்த- என்ற மாண்ட் ராக புரண்தர தாசர் தேவர் நாமாவை பாடி, “பவமான”, பாடி நிறைவு செய்தார்.

சாருமதி பற்றி சொல்லாமல் விட்டால், சம்பிரதாய பஜனையில், ஆஞ்சநேய உற்சவம் இல்லாமல் முடிப்பது போல..

சாருமதி போன்று ஒரு வயலின் வித்வான் இருக்கும்போதுதான், ரா.மூ கச்சேரி எப்படி, பரிமளிக்கிறது என்பது புரியும். சில சமத்தில், சுந்தரகுமார், ரா.மூ தாளத்தை சரியாக கவனிக்காமல் “பிசற” சாருமதியும் தவித்தது உண்மை. ஆனால், அதெல்லாம் தவிர்த்துப் பார்த்தால், எனக்கு மிகவும் மன நிறைவு தந்து, இப்படி ஒரு உன்னதமான கலைஞனை நமக்கு கொடுத்து, கொஞ்சம் சங்கீத ஞானமும் கொடுத்த அந்த இறைவனுக்கு நன்றி சொல்லி, அப்படியே ஒரு கொசுறாக, ரா.மூ க்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கவும் பிரார்த்திக்கிறேன்.







Friday 10 November 2017

என் சங்கீதத்தின் பரிணாம வளர்ச்சி !!

நானும் கடந்த 25 வருடங்களாக கர்நாடக சங்கீதக் கச்சேரிகள் கேட்டுக் கொண்டு இருக்கிறேன்.  எப்படி இதில் ஒரு INTEREST வந்தது என்று என்னை நானே சுய பரிசோதனை செய்யும் கட்டுரை இது

முதலில் நான் பிறந்த மண்ணிலிருந்து ஆரம்பிக்கலாம்::

கர்னாடக சங்கீதம் கேட்பதற்கும் அதை அனுபவிப்பதற்கும் நான் செம்மகுடி கிராமத்திற்கும், என் பெற்றோர்க்கும் மிகவும் கடமைப் பட்டு இருக்கிறேன்.

நான் பிறந்தது செம்மங்குடி என்ற கிராமம் என்பதை, என்னுடைய சில “பதிவேடுகளைப்” பார்த்தால் தெரியும்.  உடனே “த்வைதமு சுகமா, அத்வைதமு சுகமா” பாட்டு, பாடு என்று என்னைக் கேட்கக் கூடாது.
செம்மங்குடி என்ற ஒரு “பாட்டு பாடும்” மிக உயர்ந்த பாடகர்,  பிறந்த மண்ணில் பிறந்ததால், மற்றும் என் தந்தையின் சங்கீத DNA என் உடம்பில் இருப்பதால்......)

நான் செம்மங்குடியில் பிறந்தது என்னமோ உண்மைதான்.  ஆனால், பாட்டு பாடவோ, கற்றுக்கொள்ளவோ விரும்பவில்லை. எனக்கு அது சின்ன வயதில் வரவும் இல்லை.  இந்த லக்ஷணத்தில், செம்மங்குடி மாமாவாத்துக்கு எதிர்த்த வீடு எங்கள் வீடு. 

நாங்கள் சாஸ்த்ரிகள் குடும்பம். குடும்பதிற்க்கே உண்டான பொறுப்பு, கவலைகள், அதனால் படிப்பு மற்றும் ஒழுங்கான அனுஷ்டானம் என்றே ஓடி விட்டது.  அடிக்கடி செம்மங்குடி மாமா வின் ராக ஆலாபனை கூட, “அதிசய ராகம், ஆனந்த ராகம்” என்று புரியவில்லை.  (தலையில் எண்ணை வைத்துக்கொண்டு செம்மங்குடி மாமா “சங்கராபாரணம் ராகம், சுமார் 1 மணி நேரம் பாடுவாராம்). 

எனக்கு சங்கீத ஞானம் எப்போது வந்தது என்று ஞாபாகம் இல்லை, எப்படி வந்தது என்றால், அப்பா வுக்கு கர்நாடக் சங்கீதம் மிகவும் பிடிக்கும். மதுரை சோமுவின் பரம விசிறி.  சிதம்பரத்தில் பிறந்து வளர்ந்த என் அப்பா, மாயவரத்திற்கும், சிர்காழிக்கும், BOARD MAIL ஏறி, சோமுவின் கச்சேரியை கேட்கப் போவாராம்.  சித்தூர் சுப்பிரமணியப் பிள்ளையும்,சோமுவும் சண்டை சச்சரவுகளால், பேசாமல் இருந்தபோது, என் தந்தை, திருவையாறில், (வேலை பார்த்துக் கொண்டு இருந்த போது) இரண்டு போரையும், சமாதானப் படுத்துவதற்கு மிகவும் பிரயத்தனப் பட்டார். (வெற்றி பெறவில்லை என்பது வேறு விஷயம்). இரவு முழுவதும், சோமுவின் கச்சேரி கேட்டு விட்டும், காலையில், அவர் அப்பவிடம் உதை வாங்கி இருக்கிறார்.  சோமு ஒரு பெரிய ரசிகன். நல்ல ரசிகனால்தான், ஒரு நல்ல பாடகனாக இருக்க முடியும் என்று சொல்வார். சோமுவின் பக்க வாத்தியங்கள்:

மிருதங்கம்
வயலின்
கொன்னக்கோல்
கடம்
மோர்சிங்
கஞ்சிரா

அப்பா சொல்வார்- “இவர்கள் அத்தனை பேருக்கும் சோமு “தீனி” போடுவான். தாளத்தை மாத்தி, மாத்தி, போட்டு, பக்க வாத்தியக்காரர்களை எல்லாம் திணற அடிப்பான்  7 மணி நேரம் கச்சேரியில் ஒரு பயலும் (ரசிகனும்) எழுந்திருக்காதவாறு- பாடுவான்” என்பார்

என்னுடைய பெரியப்பா, சு. சுவாமிநாதன் (சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில், உயிரியிலில் டாக்டர் பட்டம் வாங்கியவர்) அவர்கள், மதுரை மணி அய்யரின் பரம ரசிகர். திடீரென்று “கந்தன் கருணை புரியும் வடிவே” என்று மதுரை மணி அய்யர் போல் பாடுவார். “எப்போ வருவாரோ எந்தன்” என்று கொஞ்ச தூரத்தில் இருக்கும் நடராஜரை கொஞ்சி அழைப்பார்

என் அப்பா ஒரு தடவை, தன்னுடைய அக்காவை, நிறை மாத கர்ப்பிணியாக, BOARD MAIL ல் அழைத்துக் கொண்டு வரும்போது, முதல் வகுப்புப் பெட்டியில் இருந்து GNB அவர்கள், வெளியில் வந்து நின்றதை, இப்பொழுதும் சொல்லி ஆச்சர்யப் படுவார்.

எனக்கு +2 வரையும், கர்நாடக சங்கீதம் என்றால் என்ன வென்று தெரியாது. ஆனால் சினிமா பாட்டு எல்லாம் அத்துப்படி. ஸ்கூலில், Music competition ல் ஏதாவது ஒரு பரிசு கிடைக்கும். அந்த அளவுக்கு ஒரு சுமாரான குரல் வளம்.

எனக்கு, முதலில் கர்நாடக சங்கீதத்தில் ஒரு நாட்டத்தை ஏற்படுத்தியது, யேசுதாஸ். அவருடைய “வாதாபி கனபதிம்பஜே” வும், பாவன குரு என்ற ஹம்சானந்தி ராக கீர்த்தனையும் எனக்கு கர்நாடக சங்கீதத்தின் அடித்தளமாக அமைந்தது: “பக்தியால் யான் உனை பல காலும்” என்ற ரேவதி ராக திருப்புகழ், இன்றும் வரி பிசகாமல் பாடுவேன் என்றால், அதற்குக் காரணம் யேசுதாஸ். ஹரிவராசனம் ஸ்லோகத்தில், என்ன இருக்கிறது என்று தெரியாமல், சீட்டு எழுதி பாடச் சொன்னவன். அவரின் பகல நிலபட்டியும்,  நீது சரணமுலேயும்- என்ன ராகம் என்னவென்று தெரியாமல்  கேட்டு கேட்டு உருகியவன்நான் சுமாராக அவரைப் போல், பேஸ் வாய்ஸில் பாடக் கூடியவன் என்பதாக இருக்கலாம். என்னை சினிமா பாட்டிலிருந்து, கர்நாடக் சங்கீதத்திற்கு மாறுவதற்கு ஒரு ஏணியாக் இருந்தார் என்று கூறலாம்.  அவருடைய பல மலையாள, கர்நாடக இசை தோய்ந்த பாடல்கள், என்னை இன்றும் மயக்குவது உண்மை

சென்னையிலிருந்து, பெங்களூர் போய், வேலை வேலை பார்த்த அந்த மூன்று, நான்கு வருடங்கள், என்னுடைய, கர்நாடக சங்கீதத்தின் வசந்த காலம் என்று கூறலாம்.

பிறகு, மும்பையில் இருக்கும்போது கூட, அணுசக்தி நகரில் இருந்துகொண்டு, அனுசக்திநகர் சபாவிலோ, செம்பூர் Fine ஆர்ட்ஸ் என்ற ஒரு சபாவிலோ, ஷண்முகானந்தா பைன் ஆர்ட்ஸ் என்ற ஒரு சபாவிலோ (எரிந்து போவதற்கு முன்பு இருந்த இடம்) எப்போதாவது நடக்கும், T.V.Shankara Narayanan,  Bombay Jaishree,  போன்றவர்களின்  கச்சேரியையும் கேட்டு ரசித்த காலம்
(தொடரும்)


Monday 16 October 2017

“சௌம்யாவின் கல்யாணியும், கேசவ பெருமாள் கோவிலில் நீலமணியும்”

இது, ரொம்ப வருடத்திற்கு முன், படித்த ஒரு கட்டுரை. இதை என்னுடைய, HARD DISK ல் பதிவு செய்து வைத்திருந்தேன்.

இது யாருடைய கட்டுரை என்று தெரியவில்லை. ஆனால், இப்போது இதைப் படித்தாலும், இதில் உள்ள SATIRE எனக்கு மிகவும் பிடித்ததால், இங்கே மறு பதிவேடு செய்கிறேன்.

இதை எழுதிய நபர் படிக்க நேர்ந்தால், அவர்களுக்கு ஒரு பெரிய THANKS.

இப்போது இந்தக் கட்டுரை

பஸ் பிடித்து பாரதீய வித்தியா பவனத்தை அடைகையில் உட்கார இடம் கிடைக்காதோ என்று மனதினுள் பதற்றம். அரங்கினுள் மெயின் கதவு வழியாக நுழையாமல் வலதுபுறம் திரும்பி ஸ்டேஜின் பக்கவாயில் வழியாக ஃபீட்பேக் ஸ்பீக்கர் இருக்கும் பகுதியில் கீழே உட்காரலாம் என்று நுழைந்தால் ஆச்சரியம். வழக்கமாக சௌம்யா கச்சேரிக்கு பவனத்தில் இருக்கும் கூட்டம் இன்று இல்லை.

திரும்பி மெயின் கதவு வழியாக அரங்கினுள் நுழைந்து இடம் பார்த்து முன்வரிசையில் அமர்கையில் வீணை குப்பையரின் ராகமாலிகை வர்ணமான வலஜி வச்சியை ஆரம்பித்து இருந்தார். பக்கத்தில் பக்கல ராமதாஸ் பாடகி விட்ட இடங்களை கவனமாக பூர்த்திசெய்து பொறுப்பாக தொடர்ந்தார். தெரிந்த வர்ணம் போலும்.

அடுத்ததாக நளினகாந்தியில் தியாகராஜர் கீர்த்தனை. இதை சௌம்யா உட்பட எல்லோரும் மனவ்யாலகிம் சரா தடே என்று ஆரம்பித்து பாடுகிறார்கள். பாலமுரளிகிருஷ்ணா மனவி ஆலகிம்பரா தகே என்று பிரிப்பார். எது சரி என்று பாலமுரளியின் குருவான பருபள்ளி ராமகிருஷ்ணய்ய பந்துலுவின் பேத்தியிடம் (நன்றாக வீணை வாசிப்பார்) ஒரு முறை கேட்டு இருக்கிறேன். தெலுங்கு தெரிந்த அவர் மனவி ஆலகிம்பரா என்பது ஒரிஜினல் என்றார்.

பிறகு ம க ரி ஸ ரிஎன்று ராக லக்ஷணத்துடன் சற்று ஒட்டாத வரிசையில் எடுத்து ஸ்வரம் பாடுகையில் ஏனோ அடிக்கடி ப நி ஸ கா, ப நி ஸ க ரி க, போன்ற மா சேராத கல்பனைகளை நிறய செய்தார். ஹம்ஸத்வனியோடு நிறைய முட்டிக்கொண்டது. மொத்தமாக நளினகாந்தியாக இருந்தது என்று சொல்லமாட்டேன். ஆனால் தடையில்லாமல் பாடினார்.

பிடில் சுமார்தான். வேண்டாத இடங்களில், கற்பனை ஒடவில்லை என்பதால், ராகத்தோடு ஒட்டாத பிருஹாக்களை எல்லாம் போட்டு வாசித்தார். மிருதங்கம் நெய்வேலி நாராயணன். இவரை பற்றி வேறு ஒரு கச்சேரியில் பார்ப்போம்.

அடுத்ததாக ஆலாபனை அரம்பித்ததும் ஹிந்தோளம் என்று நினைத்தேன். சற்று நேரம் கழித்து சுத்த தன்யாஸியோ என்று சற்றே குழப்பம். வயலின் வேறு ஆலாபனயில் ஒவ்வொரு வாக்கியத்தின் முடிவிலும் பெரிதாக கன்டின்யுடி எல்லாம் கொடுக்க முயற்சிக்காமல் பாடகி முடித்த கடைசி ஸ்வரத்தை மட்டும் வாசித்து வெறுப்பேற்றினார். அவர் ஆலாபனை சமயம் வந்ததும் முக்கால்வாசி சுத்ததன்யாசி வாசித்தார். நடுவில் மைல் நீளத்திற்கு ஸ்வரங்களில ஏதேதோ செய்தார். முடித்ததும் அநேகம் பேர் கை தட்டினார்கள்.

முடித்துவிட்டதற்காகவும் இருக்கலாம்.

நீரஜாக்ஷி காமாக்ஷி என்று ரூபக தாளத்தில் ஆரம்பித்து ஹிந்தோளத்தில் அருமையாக பாடினார் சௌம்யா. வாரிசபதே வரதே தாரகமாம் தத்வபதே என்ற இடத்தில் குறை சொல்ல முடியாத அழகிய நிரவல் செய்தார். பிறகு ஸ்வரங்களும் நன்றாகவே இருந்தது. கால்வாசி கூட்டம் பாட்டு முடிந்ததும் எழுந்து சென்றது.

ஆனால் ஒன்று, மிடுக்குடன் பார்வையாலேயே பக்கவாத்தியகாரர்களை தன் பாட்டுடன் முடிந்தவரையில் சௌக்கியமாக ஒருங்கிணைப்பதும் பின் கண்ணை மூடிக்கொண்டு பாட்டில் ஐக்கியம் ஆக முயற்சிப்பதுமாக, சௌம்யாவிற்கு ஒரு ஸ்டேஜ் ப்ரெஸன்ஸ் இருப்பது என்னவோ நிஜம்.
அப்பாடா சப்மெயின் பாடி கேட்டுப் பழகிய ராகத்தை பாடிவிட்டார். மெயின் நிச்சயம் எதோ ஒரு தூசிதட்டவேண்டிய ராகத்தை எடுத்து பிளக்கப்போகிறார் என்று நம்பிக்கை. சிவனின் “குமரன்தாள் பணிந்தே துதியும்”, தீக்ஷதரின் சந்திரம் பஜவும் (சதுஷ்ர மட்டிய தாளம்) முடிந்தகையோடு மெயின் ஆலாபனை.

கல்யாணி!

எழுந்துவந்துவிட்டேன்.

அடக்கமுடியாமல் வந்த கோபத்தை குறைக்க மைலை கற்பகாம்பாளினுள் சென்று இரண்டு கீரை வடை சாப்பிட்டுப்பார்த்தேன். காப்பி குடிக்கையில் அங்கு ஒலிபெருக்கியில் மனவ்யாளகிம் சரா தடே என்று ஒரு ஆம்பிளை குரல்.

அட போங்கப்பா என்று கால்போன போக்கில் ஆதிகாசவப்பெருமாள் கோயிலினுள் சென்றேன். பெருமாளுக்கு வாரணமாயிரம் சூழ வலம் செய்து கொண்டிருதார்கள். மெயின் உருப்படியாக மூவாயிரம் தடவை கல்யாணி கேட்ட காதுகளுக்கு சற்று இதமாக இருந்தது. வெளியே செல்ல எத்தனிக்கையில் ஒரு அதிசயம்.

கோயிலினுள் எங்கேயோ இரட்டை நாகஸ்வரத்தில் காப்பி ஆலாபனை பிரவாளமாக வந்துகொண்டிருந்தது.

பிரதக்ஷணமாக வந்து ஆண்டாள் சந்நிதியில் திரும்பினால், கன்ஸ்ட்ரெக்ஷன் கம்பிகளும் மூங்கில் கம்பிகளும் தாறுமாறாக கிடக்கும் பிரதேசத்தில் கோடியில் திட்டின் மேல் சுருதிபெட்டியை இருத்தி தூணில் சாய்ந்தபடி இருவது வயதே மதிக்க தக்க ஐயப்பன் கருப்பு வேட்டி கட்டிய ஒருவர் சத்தம் நிறைய வெளியே கேட்டு கோயில் வருபவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கக்கூடாது என்பதால் துணி அடைக்கப்பட்ட தன் நாகஸ்வரத்தில் காப்பியை பொழிந்து கொண்டிருந்தார். கூட இருந்த இளைஞர் அவரது மாணாக்கர் போலும். அவரும் இவர் விட்ட இடங்களில் தன் துணியடைக்கப்பட்ட வாத்தியத்திலிருந்து காப்பியை நிரப்பிக்கொண்டிருந்தார். சற்று தூரத்தில் இன்னொரு பெயர் தெரியாத நபர் மண்மூட்டையின் முன் உட்கார்ந்துகொண்டு அதில் இருபுறமும் ஒரு கையில் குச்சியவைத்துக்கொண்டு சப்டியூடாக தவில் வாசித்துக்கொண்டிருந்தார்.

காப்பி ஆலாபனை கேட்ட சந்தோஷத்தில் ஆண்டாள் சந்நிதி தூணில் சாய்ந்துகொண்டேன்.

ஆலாபனைக்குப்பிறகு பாரதியார் பாட்டை அபாரமான சங்கதிகளுடன் உருக்கி உருக்கி பழக்கினார் கற்றுக்கொடுத்தவர். கற்றுக்கொண்டவரும் கூடியவரையில் முயற்சித்தார். பிறகு நான் நிற்பதை பார்த்தாரோ என்னவோ கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்த இளைஞர் கிளாசை முடித்துவிட்டு தனியாக கண்ணை மூடிக்கொண்டு தூணில் சாய்ந்தபடி அநாயாசமாக ஆரம்பித்தார் ஆலாபனையை.நீலமணியில்!
நீலமணி, neelamaNi - S R2 M1 P D1 N3 S - S N3 D1 P M1 R2 S, 27ஆவது மேலகர்தாவான சரஸாங்கியின் (S R2 G3 M1 P D1 N3 S - S N3 D1 P M1 G3 R2 S) ஜன்ய ராகம். என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இரங்கவில்லைஎன்று ஒரு துக்கடா இருக்கிறது. முருகா முருகாஎன்று ஒரு முறை ஸ்ரீரங்கத்தில் எம்பார் ராகவஸிம்மன் ஒரு பாடலை இந்த ராகத்தில் பாடியதாக நினைவு.

வித்தியாபவனத்தின் பழகிய கல்யாணி ரீங்கரிக்கும் தூணிலிருந்து ஒரு இருநூறு அடி தொலைவில் இருக்கும் இந்த கேசவப்பெருமாள் கோயில் தூணில் இருந்து உருக்கமாகவும் அநாயாசமாகவும் வரும் நீலமணியின் நாதத்தில், அதுவரை நடந்தவைகளிலிருந்து இன்னும் மீளாத, இந்த முரண்பாடு சத்தியமாக புரியாத என் கண்ணில் எட்டிப்பார்த்தது ஜலம்.

அரைமணி நேரம் கழித்து முடித்துக்கொண்டார் அவருடைய எக்ஸ்டெம்போர் ஆலாபனைகள் மட்டுமே அடங்கிய கச்சேரியை.யார் அவர் என்று தெரிந்து கொள்ள மெதுவாக கச்சேரியெல்லாம் வாசிப்பீர்களா, செட் இருக்கிறதா என்று விசாரித்தேன். வாசிப்போம் சார். கல்யாணத்திற்கெல்லாம் வாசிப்போம். ஆனால் ரேட்டெல்லாம் என் குருவிடம்தான் கேட்க வேண்டும் என்றார் நீலமணியும், காப்பியும் ஜோராக ஆலாபனை செய்த இளைஞர். என்ன என்ன, உனக்கு ஒரு குருவா? ஐயகோ. திருவிளையாடல் ஹேமநாத பாகவதரைப்போல் உணர்ந்தேன். மனதினுள் பாலையா ஸ்டைலில் என்னடா இது, இந்த அருணுக்கு வந்த சோதனைஎன்று ஒருமுறை சொல்லிப்பார்த்துக்கொண்டேன்.

தமிழ்நாட்டில் நிஜமான கர்நாடக இசை எங்கு இருக்கிறது என்பது ஆண்டாள் முன்னிலையில் புரிந்துவிட, இருபது முப்பது பழகிய அழகிய சொற்ப ராகங்களுக்குள் முடக்கப்பட்டுவிட்ட மியூசிக் ஸீசன் என்பதெல்லாம் ஒரு பெரிய வியாபார மாயையோ (commercial hoax) என்று மனதில் உளைச்சல் ஏற்பட்டது.

கூர்ஜரியும், பூர்ணசந்திரிகாவும் இன்ன பிற விவாதிகளயும் புரட்டிப்போட்டு ஆலாபனை செய்த கலாநிதி எஸ். ராமநாதனிடம் பயின்றவர் எல்லாம், ஊரே மெச்சி பாப்புலர் ஆன பிறகும் கூட ஹிந்தோளத்தையும், கல்யாணியையும் கச்சேரிக்கு அடுத்து கச்சேரியாக உருக்கி உருக்கி பாடி புகழ் வெளிச்சத்தில் எதையோ தேடிக்கொண்டிருக்கையில், எந்தவித தலைப்பாகையும் இன்றி, முறையாக ஆச்சாரியர்களிடமெல்லாம் அப்பியாசம் செய்யாத (செய்யமுடிந்திராத), வெறும் வழிவழியாக வந்து கொண்டிருக்கும் கேள்வி ஞானத்திலும், கை சமிஞ்ஞை குறியில் கூறப்படும் ஸ்வரங்களிலும் (நாகஸ்வரத்தில் கை விரல் ஓட்டையை மூடினால் ஒரு ஸ்வரம் திறந்தால் ஒரு ஸ்வரம் என்று அப்பியாசத்தில் நினைவில் கொள்வர்) மட்டும் இசையை கற்றுக்கொண்டு வயிற்றுப்பிழைப்பிற்காக தொழிலாக, ஆனால் ஆனந்தமாக அதை வடித்துக்கொண்டிருக்கிறார்கள் சிலர்.

ரெக்கார்ட் செய்ததை அவருக்கு போட்டுக்காட்டினேன். கூட இருந்தவர்களுடன் ஆஹா என்று ரசித்தார். ஒரு சில இடங்களில் நாதம் சரியாக இல்லை என்று தன் வாசிப்பை குறை கூறிக்கொண்டார். கையெடுத்து, மானசீகமாக அவர் காலில் விழ இருந்த என்னை எதற்காகவோ கும்பிட்டார்.

கலா நிதி மிளிரும் இந்த இளைஞர் பிரபலம் அடையாமல் இப்படியே புகழ் கட்டுப்பாடு இல்லாமல், இசை தட்டுப்பாடு இல்லாமல் இருக்கவேண்டும் என்று மனதினுள் நினைத்துக்கொண்டு, இரவாகிவிட்டமையால் பூட்டப்பட்டுவிட்ட கோவில் கதவை திறக்கச்சொல்லி, மனதில் பலவிதமான குழப்பங்களுடன் குறுக்குத்தெருவெல்லாம் எம். ஆர். ஸி. நகர் வரை நடந்தே கடந்து, பிறகு பஸ் பிடித்து வீடு வந்து சேர்ந்தேன்.
படுத்து தூங்கும் முன் மனதில் அசை போடுகையில் ஒன்று புரிந்தது. இன்று பவனத்தில் வேறு யாரும் கேட்கக்கொடுத்துவைக்காத நீலமணியை நான் கேட்டது

சௌம்யா மெயின் உருப்படியாக பாடிய கல்யாணியால்.