Thursday, 4 June 2026

நான்கையும் பிடி, ஒவ்வொன்றாக விடு

 

குஞ்சு ஸ்வாமிகள் -ரமணர் இடையே நடந்த உரையாடல். அதன் மூலம் கிடைத்த உபதேசம்....

குருஜி. முரளீதர ஸ்வாமிகள் சொற்பொழிவின் ஒரு பகுதி - இது YOU TUBE ல் இருக்கிறது. கேட்கலாம். நான் எழுத்து வடிவில் தருகிறேன். அவ்வளவுதான்......

ரமண மகரிஷியிடம் சில விஷயங்களை நாம் கவனித்து இருக்கலாம். அவர் கண்ணை மூடிக்கொண்டு ஒரு போட்டோ விலும் இருக்க மாட்டார். யாருக்கும் உபதேசம் பண்ணமாட்டார். ஓரிரு வார்த்தைகள் பேசினால் அரிது.

குஞ்சு ஸ்வாமிகள், கேரளாவில் பிறந்து, திருவண்ணாமலை வந்து, பகவானிடம் எதாவது உபதேசம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்தார். பகவானைப் பற்றிக் கேள்விப்பட்டவுடன், அவர் முதலில் எதை சொல்கிறாரோ, அதையே உபதேசம் என்று எடுத்துக் கொள்வது என்று முடிவு பண்ணினார்.

நாராயண தீர்த்தர், பெரும் வயிற்று வலியால் துடித்து, நடுக்காவேரியில் உள்ள பிள்ளையாரைப் பிரார்த்திக்க, கனவில், “காலை எழுந்தவுடன் எது முதலில் உன் கண்களில் படுகிறதோ, அதை தொடர்ந்து போ ! உன் வயிற்று வலி தீரும் என்று சொல்ல, அவர் காலையில் எழுந்து பார்க்க ஒரு வெள்ளைப் பன்றி ஒன்று நிற்க, அதை பின் தொடர்ந்து சென்று, பூபதிராஜபுரம் என்ற வரஹூரை அடைந்தார்.  பிறகு தரங்கிணி பாடினார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

அது போல் குஞ்சு சுவாமிகளும், முதலில் அவர் என்ன சொல்கிறாரோ அதுதான் உபதேசமாக எடுத்துக் கொள்வது என்று தீர்மானித்தார்.

ரமண மகரிஷி இடம் வந்தவுடன் அங்கு ஒரு நிகழ்ச்சி நடந்தது. ஒரு கொட்டாங்கச்சியில் சூடாக கஞ்சி இருந்தது. அதை 4 நாய் குட்டிகள் சாப்பிட ஓடி வந்ததன. இதை பார்த்த குஞ்சு ஸ்வாமிகள் பதற,  பகவான், குஞ்சு சுவாமிகளிடம் “இந்த நான்கையும் பிடிச்சுக் கட்டு, ஒவ்வொன்றாக விடு” என்றார்.

சாதாரணமாக இந்த வரிகளைப் பார்க்கும்போது, நாய்குட்டி, சூடு கஞ்சி, குடித்தால் நாய்க்கு சுட்டுவிடும்... என்று தான் பார்ப்போம். ஆனால், குஞ்சு ஸ்வாமிகள் எவ்வாறு புரிந்து கொண்டார் ? 

ஜீவன் முக்தி அடைவதற்கு நான்கு நிலைகள்

பாராயணம்

ஜபம்

த்யானம்

ஆதம விசாரம்

நாம் எதை ஆழ்ந்து படிக்கிறோமோ, அதில் மனது லயித்துவிடும். நாம் வேதாந்த விசாரம் சம்பந்தமாக படிக்கும்போது. “உடல் நம்மது இல்லை. உடல் வேறு ஆத்மா வேறு. நீ மனசு இல்லை, அறிவு இல்லை” .....என்று அறிய - நிறைய வேதாந்த சமாசாரங்களை படித்துக் கொண்டே இருக்கவேண்டும். ராமனைப் போன்ற ஒரு ராஜா, ஒரு மனிதன், ஒரு சஹோதர பாசம், பணிவு, கருணை என்று ராமாயணத்தை படிக்கும்போது, நம் மனது பக்குவப்படும் – அதற்காக பாராயணம்.

ஊண் உறக்கமின்றி ஏழு நாள் ஸ்ரீ மத் பாவதம் கேட்டு முக்தி அடைந்த பரீக்ஷித் மகாராஜாவின் கதை கேட்கும்போது, மனது பக்தி மார்கத்தில் பக்குவப்படுகிறது – அதற்காக சப்தாக பாராயணம். ஒரு ராஜா “எழு நாட்களில் பாம்பு கடித்து இறக்கப் போகிறாய்” என்று தெரிய வர, உடனே, மோக்ஷ சாதனத்தை தேடுகிறான். எத்தனை பேருக்கு இந்த தெளிவு வரும் ?

கந்த சஷ்டி கவசம், விஷ்ணு சஹஸ்ரநாமம்,  லலிதா ஸ...எல்லாமே பாராயணம் தான் ..

அதனால் பாராயணம். ஏனெனில், மனது பல பிறவிகளில், உலகத்தோடு போய் பல விஷயங்க ளை உள் வாங்கிக்கொண்டு திரும்ப மாட்டேன் !!!! என்கிறது. அது திரும்பனும் என்றால் பாராயணம் மூலம் ஸ்திரப்படுத்தவேண்டும்.  

அடுத்தது ஜபம் – ஒரே மந்த்ரம். அதையே திருப்பி திருப்பிப் பண்ணிக்கொண்டே இருக்க வேண்டும். (உ.ம்)  ராம நாம ஜபம் பண்ணிக்கொண்டே இருப்போம் என்று வைத்துக்கொள்வோம்.  ஒரு 10 நிமிடம் கழித்து, ஹரே ராம ஹரே ராம ராம ஹரே ஹரே என்று ஆரம்பித்து.  இன்னுமொரு 30 நிமிடம் கழித்து, நமச் சிவாயா அன்று குழப்பிக்க கூடாது. இதில் இருந்தே என்ன தெரிகிறது, “மனது சஞ்சலப்படுகிறது” என்று. ஏனெனில், சஞ்சலம் இல்லாமல் இருக்கத்தானே ஜபம். ?!! ஒரு ஜபத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டு, அதை எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். கோடி ராம நாமம் ஜபித்த, ஸத்குரு த்யாகராஜருக்கு, நேரே “வைதேஹி சஹிதம், ஆஞ்சநேயரோடு, ராம லக்ஷ்மணர்கள் காட்சி கொடுத்தார்கள். இது ஏதோ 1000 வருஷங்களுக்கு முன்பு இல்லை  200 வருடங்களுக்கு முன்பு, திருவையாறில்... 

அடுத்தது, த்யானம். மனதை அமைதியாக வைத்துக் கொள்வது. முருகப் பெருமான் அருணகிரிநாதரை காப்பற்றி, “சும்மா இரு, சொல் அற” என்று உபதேசம் செய்து விட்டு மறைந்து விட்டார். 

சும்மா இருப்பது அவ்வளவு எளிதா என்ன ? தவிக்கிறார். உருகுகிறார்.

அதை பாடலாகவே சொல்கிறார்:

சரண கமலாலயத்தை அரை நிமிட நேரமட்டில்

தவ முறை த்யானம் வைக்க அறியாத

சட கசட மூட மட்டி, பவ வினையிலே ஜெனித்த.

தமியன் மிடியால் மயக்கம் உறுவேனோ !!!!

என்று திருப்புகழில் பாடுகிறார்.

நமக்கும் அதுதான். மனது அடங்காது. சிந்தையை அடக்கியே சும்மா இருத்தல் மிக அரிது. என்று தாயுமானவர் கூறுகிறார்.

அடுத்தது ஆத்ம விசாரம். நாம் ஏன் பிறந்தோம்.: ? நல்ல கதி அடைவதற்கு என்ன செய்ய வேண்டும் ? தப்பான வழியில் போனவர்களின் கதி  என்ன ஆச்சு ? என்ற பல பேர்களின் மூலம் இந்த ஜென்மத்திலேயே நமக்கு பகவான் காண்பித்துக் கொடுக்கிறான். அதை வைத்து நாம் கற்றுக் கொண்டு இந்த ஜன்மம் கடைத்தேறுவதர்க்கு உண்டான உபாயங்கள். !!!

நாம் எதிரில் உள்ளவர்களைப் பற்றி அறிவதற்கு பெரும் முயற்சி பண்ணிக் கொண்டிருக்கிறோம். அதில் பல முறை தோல்விதான். ஆனால், முயற்சியை கை விடுவதில்லை. அதற்க்கு, முன்பு, உன்னை உள்ளே சுய பரிசோதனை செய்ய வேணும். நான் யார்.. என்று, !!!!

மேற்கூறியவற்றை, பண்ணிக் கொண்டே வா ?  உனக்கு ஜபம் வந்துவிட்டதா. ரொம்ப ஈசியாக ஜபம் உள்ளே உட்காருகிறதா ? அப்போ பாராயணத்தை விட்டுவிடு.

பிறகு, ஏகாக்ரமா, ஒரே நினைவோடு மனது இன்னும் ஒன்றிப் போய் ஒரு சமாதி நிலை போன்று மனது லயிக்கிறதா !! த்யானம் சித்திக்கத் தொடங்கி விட்டது. அப்போ ஜபத்தை விட்டுவிடு.

த்யானம் என்பது மூன்று வகை. த்யானம் பண்ணும் அந்த பொருள். த்யானம் பண்ணும் முறை, த்யானம் பண்ணும் நான்.......உதாரணம் – நான் கிருஷ்ணரை த்யானம் பண்ணுகிறேன். அதை பண்ணும் முறை (process)   பண்ணும் நான்.

இந்த மூன்றும் ஒன்று சேர்வதுதான் சமாதி. சகஜம். இந்த நிலை வந்துவிட்டதா. த்யானத்தை விட்டுவிடு.

இதுதான், நான்கையும் கட்டு, ஒவ்வொன்றாக அவிழ்த்து விடு.....

நான்கு நாய்க்குட்டிகளை வைத்துக் கொண்டு பகவன் ரமணர் சொன்ன உயர்ந்த விஷயம் இது. .......இதை விட எளிதாக விளக்கவே முடியாது.

இந்த நான்கில், பாதியில் நாம் இருந்தோமென்றால், அடுத்த ஜன்மத்தில் மற்றதை முடிப்போம். ஆக ஜன்மம் நிச்சயம்.

ஏன் இவ்வளவு வழி முறைகள், என்றால் நாம் LKG, UKG படிக்கும்போதே என்னவாக ஆக வேண்டும் என்று மனதில் ஒரு சங்கல்பம் செய்து கொள்ளவேண்டும்....

அப்போ கோவிலுக்கு போக வேண்டாமா ? 

கோவில், சிலைகள் என்பது பக்தியின் ஆதாரம். ஒரு பிள்ளையார் இப்படி இருக்கிறார், முருகன் இப்படி, தக்ஷிணாமூர்த்தி, பெருமாள் இவர்கள் எல்லோரையும் பார்த்து, மனதில் அந்த சிலா ரூபத்தைப் பதித்தால் தான், மேற்கூறிய நான்கும் நமக்கு வரும்.  இது தான் எல்.கே.ஜீ, யூ கே ஜீ.

இல்லாவிட்டால், யாரை நினைத்து த்யானம் செய்வது ?

கோவிலில் போய் ஸ்வாமியே மனம் உருக பிரார்த்திக்கலாம். இந்த புடவை அம்பாளுக்கு அழகா இருக்கே ? எங்க வாங்கி இருப்பார்கள் என்று யோசிக்கலாம். வாசலில் போட்டு வந்த புது செருப்பு, பத்திரமாக இருக்குமா ? என்று யோசிக்கலாம். இல்லாவிட்டால், சுவாமியை கவனிக்காமல் யாருடனோடு அரட்டை அடிக்கலாம்......

இது தான் ஆரம்பம்.... நமக்கே தெரியாமல் பக்திக்கு அச்சாரம் கோவிலில் போடுகிறோம். அதனால் தான் கோவிலுக்குப் போகவேண்டும்.

குஞ்சு ஸ்வாமிகள் ஒரு முறை, பகவானுக்காக, சாப்பாடு வாங்கிக் கொண்டு வந்தார். கொடுத்தவர், ஒரு டப்பாவில் போட்டுக் கொடுத்தார். அதை எடுத்துக் கொண்டு வரும்போது, சேஷாத்ரி சுவாமிகளைப் பார்த்தார். அவர், கேரளாவில் இந்த கிராமமா ?  கிடாரங்கா ஊறுகாயா ? 100 வயது, மோக்ஷம் கிட்டும்” என்று சொன்னார்.

குஞ்சு சுவாமிகளுக்கு ஒன்றுமே புரியவில்லை. பகவானிடம் வந்து அந்த டப்பாவைத் திறந்தால், அதில் கிடாரங்காய் ஊறுகாய் இருந்தது. இவர் கேரளாவில் இருந்த ஊரையும் சரியாகச் சொன்னார்.  இதை பகவானிடம் கேட்டபோது, சேஷாத்ரி சுவாமிகளுக்கு “தெரியாதது ஒன்றுமில்லை” என்றார் பகவான். குஞ்சு ஸ்வாமிகள் 100 வயது வரை வாழ்ந்தார் ..

கடைசியில்”

ஒருவர் ரமணரிடம், நான் சரீரத்தை போஷிக்க வேண்டாமா ? என்று கேட்டார். அதற்க்கு ரமணர் சொன்னார். “நீ ஒன்னும் போஷிக்க வேண்டாம். உன்னுடைய பிராரப்தம் அதைச் செய்யும். இந்த ஜன்மமே நீ போன ஜனமத்தில் செய்த பாபம் புண்ணியத்தில் பலன் தான். நீ இந்த ஜன்மத்தில் புண்ணியம் செய். அது போதும் என்றார்.

Saturday, 30 May 2026

தீட்சிதர் தேன் துளிகள் - 5- விஸ்வாமித்ரர்

 

விஸ்வாமித்ரரை பல கோணங்களில் நாம் படித்து இருக்கிறோம். க்ஷத்ரியராக இருந்து தன் தபஸால் “ப்ரஹ்ம ரிஷி” யானவர். ஒரே ஜன்மத்தில் இப்படி ஒரு கீர்த்தி அடைந்தவர் யாரும் கிடையாது.

தீக்ஷிதர் கோணத்தில் இவரைப் பற்றிய தேன் துளிகளைப் பருகலாம்

தசரதர் அரண்மனைக்கு வருகிறார். தான் யாகம் பண்ணுவதற்காகவும், யாகத்தை கெடுக்கும் அசுரர்களை அழிக்க ராமனை அனுப்ப வேண்டுகிறார். “நான் சகல ஸ்ரேயசையும் தருகிறேன். “என்னை நம்பி அனுப்பு. நான் யாகத்திற்காக சில நியமங்களை வைத்திருக்கிறேன். நான் போர் புரிய முடியாது., அதனால் ராமர் வேண்டும்” என்று கேட்கிறார்

தசரதன் கொடுக்க மாட்டேன் என்று அடம் பிடிக்க, குல குரு வான வசிஷ்டர் வேண்டிக் கொள்ள, ஒரு மனதாக – லக்ஷ்மணனோடு அனுப்பிகிறார்.

விஸ்வாமித்ரர் – அழைத்துக் கொண்டு போகிறார். பலா-அபலா- என்ற மந்த்ரம் எடுத்து வைக்கிறார். அம்பை விடுவதற்கும், விடுத்த அம்பை திரும்பி எடுப்பதற்கும் மந்த்ரம், அகஸ்தியரிடம் இருந்து விசேஷ அஸ்தரங்கள். அகலிகை சாப விமோசனம். பல உப கதைகள், பகீரதன் கங்கையைக் கொண்டு வந்தது, ஸ்கந்த ஜனனம் போன்ற பல. தன் யாகத்தைப் பூர்த்தி செய்கிறார்.  மிதிலைக்குப் போகிறார், ஜனகள் பெண் சீதையை பிடித்து, ராமர் கையில் ஒப்படைக்கிறார்.

“போயிட்டு வரேன் ராமா ! என்று விந்திய மலையை நோக்கிச் செல்கிறார். அதன் பிறகு, பட்டாபிஷேகம் வரை ஒரு இடத்தில் கூட ஏன்- ராமர் பட்டாபிஷேகம் போது கூட -சம்பந்தா சம்பந்தம் இல்லாத ரிஷிகள் வந்திருந்தார்கள் - ஆனால் விஸ்வாமித்ரர் – தென்படவே இல்லை.

விச்வாமித்ரரோ, நடுவில் வந்து “என்ன ராமா ! “ஞாபகம் இருக்கா, நான் உனக்கு கல்யாணம் பண்ணி வைத்தேனே, கொஞ்சம் இது பண்ணி கொடு, அது பண்ணி கொடு” என்று கேட்டதாக இல்லை. ராமரும், சீதையைத் தொலைத்த பின், ஆஞ்சநேயரைப் பார்த்து, கொஞ்சம் தெற்கே போகாமல், வடக்கே போய், விஸ்வாமித்ரரைப் பார்த்து, “நீங்கள் கல்யாணம் பண்ணிக் கொடுத்த சீதை காணாமல் போய் விட்டாள். கொஞ்சம் கண்டு பிடிக்க “க்ளூ” கொடுங்கள்” என்று கேட்கவும் இல்லை.

“நான் நிறைய பேருக்கு நிறைய செய்தேன். என்னை யாரும் மதிக்க வில்லை. நன்றி கெட்ட உலகம். என்று புலம்பும் நிறைய பேருக்கு இது பாடம்.

இது மிக உயர்ந்த ஒரு எண்ணம். நாம் உதவி செய்துவிட்டு அதை மறந்து விட வேண்டும். “ஏன் அடிக்கடி வந்து உயிரை வாங்கறான்” என்று உதவி பெற்றவர்கள் நினைக்க,  உதவி பெற்றவர்களும், அதற்கு பிரதி உபகாரம் முடிந்தால் செய்யலாம் ஆனால் - படுத்தக் கூடாது. “செய்நன்றி கொன்ற மகற்கு” எல்லாம் சரிதான்.

திரும்பி விஸ்>

ஏன் விஸ்வாமித்ரர் அப்படி செய்தார் என்பதை ராமாயணத்தை கூர்ந்து படித்தவர்களுக்குத தெரியும்.  சூரிய வம்சத்தில், ராஜா ஹரிச்சந்த்ரனை படாது பாடு படுத்தி, அவனை மனைவியிடம் பிரித்து,  அவனை கஷ்டப்படுதியதற்கு, பிரதி பலனாக, ராமனுக்கும் சீதை க்கும் கல்யாணம் பண்ணி புண்யம் கட்டிக் கொண்டார் !!!

ஹரிச்சந்த்ரன் கதையை தீட்சிதர் சொல்லும் அழகே தனி

ஒரு முறை, வஸிஷ்டரிடம், இந்திரன், இந்த உலகத்திலேயே ஸத்யவான் என்று சொல்லக்கூடிய ஒரு மனிதன் இருக்கிறானா ? என்று கேட்க. வசிஷ்டர், என்னுடைய சீடன் அரிச்சந்திரன் ராஜாவாக சூர்ய வம்சத்த்தை ஆண்டு கொண்டிருக்கிறார். அவர் சத்தியம் நேர்மை தவறாதவர். என்று கூற, கூட்டத்தில் இருந்து,, தப்பு, தப்பு -வசிஷ்டர் சொல்வது தப்பு என்று ஒரு குரல் கேட்டது.

பார்த்தால், விஸ்வாமித்ரர் கூட்டத்தில் இருந்து வெளியில் வந்தார். அவருக்கு வசிஷ்டர் என்ன சொன்னாலும் மறுத்து பேசவேண்டும் என்ற ஒரு “கொள்கை” வைத்து இருந்தார். அதனால் அரிச்சந்திரனைப் பற்றி சொன்னது தவறு என்று சொன்னார்.  அவன் ஒன்றும் ஸத்ய ஸந்தன் இல்லை. என்றார்...

இந்த விவகாரம் போய் கொண்டே போனது. கடைசியில், அரிச்சந்திரனை பொய் பேச வைத்தால், வசிஷ்டரை, கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி, கழுதை மேல் ஏற்ற வேண்டும், என்றும், கடைசி வரை உண்மையே பேசினால், விஸ்வாமித்ரருக்கு அந்த “மரியாதை”. என்றும் முடிவாயிற்று

விச்வாமித்ரர் அரிச்சந்த்ரனை சந்தித்து தன் வேலையை காட்டத் துவங்கினார். செல்வச் செழிப்புடன் இருந்த அரிச்சந்திரனைப் பார்த்து “ நான் யாகம் செய்யப்போகிறேன், அதற்க்கு “மலை அளவு” செல்வம் வேண்டும் என்று ஆரம்பித்து, அந்த நாட்டில், தன் தபஸால், பஞ்சம் வரும்படி செய்தார். 

அரிச்சந்திரன், வேறு வழியில்லாமல, விச்வாமித்ரருக்காக வைத்திருந்த செல்வத்தை செலவு செய்ய, கரெக்டாக வந்து, “வாக்கு தவறிவிட்டாய்” என்று சொல்லி, ராஜா, நாடு இழந்து, மனைவி இழந்து, கடைசியில் காசியில் “பிணம் எரிக்கும் “வெட்டியானாக” வேலை செய்யும் அளவுக்கு, அவனை “த்வம்ஸம்” செய்தார்.

தான் பெற்ற மகனே “உயிரிழந்து” வந்த போது கதறுகிறான். அப்போது கூட பொய் சொல்லவில்லை.

எந்த நிலையிலும் பொய் சொல்லக்கூடாது என்று ஸத்ய சந்தனாக வாழ்ந்த ஒரு ராஜா.

இப்போது கூட நாம் காசி போய் “அரிச்சந்திரா காட் (Ghat)”  என்று சொல்லும் அந்த இடுகாட்டில் சென்று ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தால் நமக்குக் கண்ணீர் வரும். எப்படி இருந்த ஒரு ராஜா, பொய் சொல்லமாட்டேன் என்று ஓரு வைராக்யத்தினால், படாத பாடு படுத்தப்பட்டார்.

இதில் என்ன ஆச்சரியம் என்றால் “பிரச்னை வஷிஷ்டருக்கும், விச்வாமித்ரருக்கும் தான்., தேவையே இல்லாமல் அரிச்சந்த்ரனை மாட்ட வைத்து......

கடைசியில், வ்ருஷபா ரூடராக...பார்வதி, பரமேஸ்வராள் காட்சி கொடுக்க, சிரஞ்சீவியாக இன்றும் அரிச்சந்திரன் நம்மிடையே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.

கடைசியில் என்ன வரம் வேண்டும் என்று ஈசன், அரிச்சந்திரனைக் கேட்டார்.

இப்படி ஒரு சம்பவம் நம் வாழ்வில் நடந்து, அட... நம் உண்மையே பேசி, கடைசியில், ஈசன் நம்மிடம் இந்த கேள்வியை கேட்டால். ?!!!!

“கையை பலம் கொண்ட மட்டும், இறுக்கி கொண்டு நம்மைக் காயப்படுத்திய அந்த நபரை.....ஒரே.........:  “....து”

அனால் அரிச்ச்சந்திரன் சொன்னார்.  “எந்த நிலையிலும், விஸ்வாமித்ரருக்கு “”கழுதை ஊர்வலம் வேண்டாம்” என்று சொன்னார். “அவர் பெரிய ரிஷி. ஏன் பிராரப்தம் நான் அனுபிவிக்கிறேன். அவரை விட்டு விடுங்கள்” என்றார்.

இப்படியும் நம் நாட்டில் அரசர்கள் இருந்திருக்கிறார்கள்.

அதனால் தான் ராமன், ராவணனை, இன்று போய் நாளை வா என்றார். ....

எந்த நிலையிலும தன் நிலை மறக்காமல் ஒரு குணம்.......

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Sunday, 24 May 2026

தீட்சிதர் உபன்யாச தேன் துளிகள் - 4 - பீஷ்மர் உபதேஸம்

 

அம்புப் படுக்கையில் பீஷ்மர்.  கிருஷ்ணர், பஞ்ச பாண்டவர்களிடம், பீஷ்மரிடம் போய், தர்மம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்” என்கிறார்

சொன்னவர் யார். பகவத் கீதை சொன்ன பரமாத்மா !!! 

பீஷ்மர் யார் ?  தன் மரணத்தை தானே நிர்ணயம் செய்து கொள்ளும் வரம் பெற்றவர். இப்படி ஒரு கதாபாத்திரம் எந்தப் புராணத்திலும் பார்க்க முடியாது. அந்தக் காலனையே நிற்கவைத்து “நான் சொன்ன போது தான் வர வேண்டும்” என்று ஒருவர் சொன்னார் - என்றால் எவ்வளவு தபஸ் இருக்கவேண்டும் ?

இப்படி ஒரு வரம் நமக்கு கிடைக்காததனால் தான், நாம் இந்த ஆட்டம் ஆடிக்கொண்டு இருக்கிறோம். இல்லாவிட்டால் LIC  18 மாடி கட்ட முடியுமா என்ன ?!!!!  நம் வாழ்வை நம்பித்தான் எல்லா இன்சூரன்ஸ் கம்பனிகளுக்கும் சாப்பாடு !!! அவர்களுடைய ஷேர் விலை உயர்வதற்கு நம் “Expiry Date” தான் காரணம் என்பது விசித்திரமான உண்மை.

அவர் அம்புப் படுக்கையில் படுத்துகொண்டு உத்தராயண புண்ய காலத்தில் உயிரை விட வேண்டும் என்று நினைப்பவர்.

போகிறார்கள். பீஷ்மரிடம், எங்களுக்கு தர்மோபதேசம் செய்யவேண்டும் என்று தர்மபுத்திரர் கேட்க, அதிர்ச்சியுடன் கலந்த ஆச்சர்யத்துடன் “நான் இருக்கும் இந்த நிலையைப் பார்த்தீர்களா !!!. அம்புப் படுக்கை, ரத்தம் அம்பு வழியாக கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறிக்கொண்டு இருக்கிறது. மேலும், தர்மத்தின் உருவாக, பரமாத்மா கிருஷ்ணன் எதிரில், நான் என்ன தர்மம் சொல்ல முடியும்” என்று சொல்கிறார்

அதற்கு, கிருஷ்ணர், “நீங்கள் பெரியப்பா வாக இல்லாமல், குருவாக இருந்து இதுவரை பஞ்ச பாண்டவர்களையும் கவனித்துக் கொண்டிருக்கிறீர்கள். அதே குருவாக இருந்து, குழந்தைகளுக்கு தர்மம் சொல்லவேண்டும்.” என்று கேட்க. அதற்க்கு, பீஷ்மர், “நான் சொல்கிறேன், ஆனால் நீ என்மேல் உன் குளிர்ந்த பார்வை படும்படி இருக்கவேண்டும்” என்று சொல்ல, கிருஷ்ணர் “நான் அதற்காகத்தான் வந்திருக்கிறேன்” என்று சொல்கிறார்

யுதிஷ்டிரர், “கோதர்மஸ் சர்வதர்மானாம் பவத: பரமோ மத: என்று ஆரம்பிக்க......

பீஷ்மர் ஆரம்பிக்கிறார். தர்மம் சொல்வதற்கு, உடலும், மனமும் ஒத்துழைக்க வில்லை என்று சொன்னவர்- 8000 ஸ்லோகங்கள் தர்மம் சொல்கிறார் !!!

 ஜகத் ப்ரபும் தேவ தேவம் ஆனந்தம் புருஷோத்தமம்” என்று சொல்லும் விஷ்ணு சஹஸ்ரநாமம் என்ற ரத்னத்தை நமக்குத் தருகிறார்.

விஷ்ணு சஹஸ்ரநாமம் ஏன் உசந்தது ?  பீஷ்மர் என்ற பக்தன் சொல்ல, எதிரில் இருக்கும் பகவான் அதை ஆமோதித்து எழுதப்பட்ட கிரந்தம். இது போல் எனக்குத் தெரிந்து வேறு எந்த ஸ்லோகமோ, காவியங்களோ இல்லை. நாராயணீயம் எழுதிய பட்டத்ரீயோ, தரங்கம் எழுதிய நாராயண தீர்தருக்கோ, அவர் ஒரு சமயத்தில் காக்ஷி கொடுத்தாரே தவிர, இப்படி பூரா கேட்டு அனுபவிக்கவில்லை. 

கொஞ்சம் என் நினைவுகள்

இதில் நான் மறக்கமுடியாத நினைவு. ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 25 வரஹூரில் அகண்ட விஷ்ணு சாஹஸ்ரநாமம் சொல்லுவோம். அதாவது காலையில் 6 மணிக்கு ஆரம்பித்து, அடுத்த நாள் காலை 6 மணி வரை. மேலும் லக்ஷம் ஆவர்த்தி விஷ்ணு சஹஸ்ரநாமம், 10  பட்டாச்சார்யர்கள் வந்து, நிறைய புஷ்பங்கள் சமர்ப்பிக்க, கோலாகலாமாக நடக்கும்

இதை நான் ஒரு தடம் தீக்ஷிதர் மாமாவிடம் சொன்னேன். அவர் ஆச்சர்யப்பட்டு சொன்னார். “பெருமாள் நினைத்தால் தான் இது தான் நடக்கும். வரஹூர் வாசிகளின் ஆத்மார்த்தமான அன்புக்கு அவர் எப்போதுமே கட்டுப்பட்டவர். மாணிக்கவாசகர் சொன்னது போல் “வேண்டத்தக்கது அறிவோய் நீ, வேண்ட முழுதும் தருவோய் நீ” என்ற வாசகம் பெருமாளுக்கும் முழுவதும் பொருந்தும். அவர் கருணை இல்லாமல், ஒரு 5 ரூபாய் வாழைப்பழம் கூட கொடுக்க முடியாது” என்றார்

பெருமாள், தீட்சிதர் மீது சொல்லமுடியாத அனுக்ரஹ மழை பொழிந்தார் என்று பல உதாரணங்கள் சொல்ல முடியும். ஒன்று சொல்கிறேன்

சாதாரணமாக, ஸ்வாமி புறப்பாடு என்பது, வரஹூரில் பெரிய வைபவம், ஸ்வாமி புறப்பாடு என்று வெளியில் வந்தால், ஸப்த பிரதக்ஷிணம், சதுர் வேதம், உபநிஷத். அஷ்டபதி, தரங்கம், ராமத்யானம், கிருஷ்ண, வெங்கடேச த்யானம், கடைசியில் கோணங்கி – இவைகள் இல்லாமல் உள்ளே போகமாட்டார். உள்ளை “ஏகாந்த சேவை வேறு” இது இஷ்டத்துக்கு பண்ண முடியாது. கட்டளை உண்டு

போன ஜனவரி வரஹூர் சப்தாஹத்தில், திடீரென்று கருட சேவை (கருடர் அலங்காரத்தில் சுவாமி புறப்பாடு) என்று தீட்சிதர் மாமாவுக்குத் தோன்ற, அது சரிப்படுமா என்று யோசித்தார்.  அந்த 7 நாட்களில் நடந்த வைபவத்தில் திடீரென்று கட்டளைக் காரர்கள் வர முடியாத காரணத்தினால், கருட சேவை தீட்சிதர் “மண்டகப்படியாக நடந்தது” 

இன்னொரு ஆச்சர்யம், புறப்பாடுக்கு முன்பு ஒரு மணி நேரம் நல்ல மழை. மழை என்றால் புறப்பாடு பண்ண மாட்டார்கள். உள்ளே வைத்து பாடி முடித்துவிடுவார்கள்.என்னடா இது சோதனை என்று நினைத்தபோது,  “ஜம்” என்று மாமா வந்தார். ஒரு துளி மழை இல்லை. அழகாக புறப்பாடு ஜாம் ஜாம் என்று

இதில் என்ன ஆச்சர்யம் என்றால், அன்று இரவு நல்ல மழை.

திருப்பியும் (தீட்சிதரின்) பீஷ்மர்:

எம்.எஸ் சுப்புலக்ஷ்மி அவர்கள், விஷ்ணு சஹஸ்ரநாமம்   சொல்லி, மஹா பெரியவாளிடம் அந்த ரெகார்ட், ரிலீஸ் செய்வதற்கு கேட்டபோது, “சந்திர சூரியர்கள் இருக்கும் வரை உன் புகழ் இருக்கும் மா” என்று சொன்ன அற்புதமான ஸ்லோகங்கள் இது.

கொஞ்சம் நாம் யோசித்துப் பார்க்கவேண்டும். “முந்த நாள் படித்த செய்தித்தாளில் வருகின்ற, 2 செய்திகள் நமக்கு நினைவு வருவதில்லை. காலையில் பேப்பரை பிரிக்கிறோம், அது நேற்றைய பேப்பர் என்றால் அப்படியே போட்டு விடுகிறோம், மடித்து கூட வைப்பது கிடையாது. அதை பூரா கூட படித்திருக்க மாட்டோம்.  ஆனால் விஷ்ணு சஹஸ்ரநாமம் இன்றும் நம் கூட இருக்கிறது. 

பீஷ்மர், மேலும் “ராஜ தர்மம், மோக்ஷ தர்மம், தனி மனித ஒழுக்கங்கள், தான தர்மம் என்று தர்மத்தைக் கொட்டுகிறார், ஸ்திரீ தர்மம் முதற்கொண்டு சொல்கிறார். இதில் ஆச்சர்யமாக, புருஷ தர்மம் பற்றிச் சொல்லவில்லை.

ஏனெனில், புருஷனுக்கு என்று ஒரு தர்மமும் இல்லை. அவன் வீட்டில் ஸ்திரீ யைப் பொறுத்து தான் அவன் தர்மம். எந்த நல்ல கார்யங்களும், கெட்ட கார்யங்களுக்கும், பின்னே ஸ்திரீ நிற்க வேண்டும்.

தர்மத்தை விடுங்கள். ஸ்திரீ சரியில்லை என்றால் விருந்துக்கு வருபவருக்கு ஒரு கப் காப்பி கூட கிடைக்காது.......

Thursday, 21 May 2026

சத்குரு தியாகராஜரும் சிவனடியார் முத்துத்தாண்டவரும்

 

ஸுஜாதா விஜயராகவன் அவர்கள் எழுதிய புத்தகத்தில், ஸத்குரு த்யாகராஜர் ஸ்ரீரங்கம் விஜயத்தை விவரிக்கிறார்.

திருவரங்கத்தின் சித்திரை வீதி, அதில் குதிரை வாகனமேறி திருவரங்கள் வலம் வருகிறார்.

இந்தக் காட்சியைக் கண்டவுடன் தியாகராஜரின் கவியுள்ளம் பொங்கி எழுகிறது. நாத யோகி அல்லவா...

தோடியில் “ராஜு வெடல ஜூதா முராரே”  ஆரபியில் ஜூதா முராரே, தேவகாந்தாரியில் “வின ராதனா மனவி” காம்போதியின் “ஒ ரங்கசாயி” என்று பாடித் தள்ளுகிறார்.

பல பேர் பாடினாலும், செம்மங்குடி பாடிய “வின ராதனா” ரொம்ப அழகு.

திகாராஜர் எப்படி ஏன் திருவரங்கம் வந்தார் என்ற கதை சுவாரஸ்யமானது.

சென்னையை அடுத்த கோவூர் கிராமத்தில், சுந்தர முதலியார் என்ற செல்வந்தர் வாழ்ந்து வந்தார். அவர் தியாகராஜர் தன் ஊருக்கு வர வேண்டும் என்று ஆசைப்பட்டார்.  அதற்க்கு காஞ்சீபுரம் உபநிஷத் ப்ரஹ்மம் என்ற தியாகராஜரின் தந்தையான இராமப் பிரம்மத்தின் மிக நெருங்கிய நண்பர். 100 வயதைக் கடந்தவர். அவரின் வேண்டுகோளுக்கு இணங்கி, தியாகராஜர், திருவரங்கம் லால்குடி, கோவூர், திருப்பத்தை என்று சென்று பாடி இருக்கிறார்.

ஜூதா முராரே – எல்லோரும் சேவிப்போம் வாருங்கள் ... திவ்யமான நவரத்னங்கள் அணிந்து கஸ்தூரி ரங்கன் பவனி வருகிறான். அவனை சேவிப்போம் வாருங்கள்.....

ஸுததுலார ரங்கபதிநி ஜூதா முராரே – அழகிய பல் வரிசையுடன் இளம் பருவ மங்கையரே – ரங்கபதியை சேவிப்போம் வாரீர்.

அப்படி என்ன ரங்கனிடம் தனி பிரேமை.

கோசலை பூஜித்த, தன் குல தெய்வமான ரங்கநாதன் பள்ளி கொண்ட ரங்க விமானத்தை  பட்டாபிஷேக சமயத்தில், விபீஷனணுக்கு வழங்கினார், ஸ்ரீ ராமர்.  இலங்கைக்குத் திரும்பும் வழியில், சற்று இளைப்பாற விபீஷணன், அவ்விமானத்தை இறக்கி வைத்தார். மீண்டும் பெயர்த்து எடுக்க முடியவில்லை. அங்கேயே எழுந்தருள திருவுள்ளம் கொண்டான் ரங்கன்.

வினராதனா மனவி – என்ற பாடலில் என் விண்ணப்பத்தைக் கேட்கப்டாதா என்று கொஞ்சம் “நிந்தா ஸ்துதி” கலந்து பாடுகிறார்.

பெண்கள் அழைத்தல், அரச குலப் பெண்கள் அழைத்தல் செவி மடுக்கும் நீ, நான் அழைத்தால் “கண்டுக்காமல்” இருக்கியே ?  ஏம்பா !!!

 

வினராதனா மனவி பாடலை – நா மனவி என்ற பொருளுக்கு அர்த்தம், என்னை முறையீடு கேகப்படாதா ? என்று கெஞ்சுவதால், கீழ் ஸ்தாயில் பாட வேண்டும். மிரட்டும் தொனியில் மேலே போகக் கூடாது.

 

முத்துத்தாண்டவர்

 

இதே போல் முத்துத்தாண்டவர், தெருவில் வரும் நடராஜரை துதித்து அருமையான பாடல் -பதம்- பாணியில் பாடி இருக்கிறார். நடனம் ஆடுபவர்களுக்கு ஏற்ற பாட்டு.

நடராஜார் வீதி உலா வருகிறார். வீட்டை கடந்து போய் விட்டார். ஒரு தோழி மிகவும் வருத்தமுற்று.

“தெருவில் வாரானோ, எனை சற்றே திரும்பிப் பாரானோ” என்று பாடுகிறார்.

உருவிலியோடு, திரிபுரத்தையும் உடன் எரி செய்த நடராஜன் (தெரு)

கடைசி சரணத்தில் “மெய் என்று இருந்தேனே, அவனிட சைகை அறிந்தேனே – என்று பாடல் வரிகள். என்ன சைகை....

“என் இடது கை எங்கே இருக்கிறது பார் ? தூக்கிய திருவடியைக் குறிக்கிறது. பக்தர்கள் என்னை பணியும்போது அவர்களை காப்பது என் கடமை. அதை விட்டுவிட்டு, உன்னைக் கொஞ்ச முடிமா ?

என்று சொல்கிறார்.

 

 

 

Wednesday, 20 May 2026

சங்கீத கலாநிதி 2026

 

இந்த வருட ஸ.க விருது வீணை ஜெயந்தி குமரேஷ் அவர்களுக்கு கொடுத்ததின் மூலம் சங்கீத வித்வத் சபை, ஒரு விதத்தில், பிராயச்சித்தம் செய்து விட்டது என்று சொல்லல்லாம்.

கொஞ்சம் வீணை பற்றி:

சரஸ்வதி வீணை என்று வழங்கப்படும் தென்னிந்தியா வீணை. சங்கீத வித்வத் சபை, லோகோ (logo) வில் இருக்கும் ஒரு வாத்தியம்.

மாணிக்க வீணாம்”” என்று காளிதாசன் நேரே அம்பாளைப் பார்த்து பாடிய வாத்தியம்

ஏன் வீணை என்று AI ஐ தேடினால் அற்புதமான விளக்கங்கள் கிடைக்கும். வேண்டுமென்றால் தேடிப் பார்க்கவும்

சபாவுக்குச் சென்று கேட்பதற்கு முன்பே, இரண்டு ரெகார்ட் (Record Player – Record),  45 RPM.  அதில் சிட்டிபாபு அவர்களின் ஒரு ரெகார்ட் அடிக்கடி கேட்டு இருக்கிறேன். ஒரு ஹம்சனாதமும், குந்தலவராளி யும். அவர் அழகாகவேறு இருப்பார், அந்த கவரில்.

இரண்டாவது, எஸ். பாலச்சந்தர், மேலே பார்த்துக்கொண்டு வீணையுடன் உட்கார்ந்து இருப்பார். அவருடைய பல வாசிப்புகள் அசர வைப்பவி. எப்படி மாலியை புல்லாங்குழலில் இருந்து பிரிக்க முடியாதோ, அது போல், அவருடைய ஒரு lec-dem கூட கேட்டிருக்கிறேன்.

வீணையும் நாதஸ்வரமும் எனக்கு மிகவும் பிடித்த வாத்தியம். நல்ல வித்வான் வீணை வாசித்தாலே மனம் மிகவும் சந்தோஷமாக இருக்கும்.

இப்போது இருக்கும் ரமணா பாலச்சந்திரன் என்ன வாசிப்பு, அட அட. நம் சங்கீதக்காரர்கள் பாக்கியம் செய்து இருக்கிறோம் நிச்சயமாக

போன சீசனில் கூட, மியூசிக் அகாடெமியில், காலை ஒரு வீணை கச்சேரி கேட்டேன். மிகவும் அருமை. ரஞ்சனி ராகம் தனம் பல்லவி. பின்னி எடுத்தார்.

இப்போது இவர்:

வீணை என்ற ஒரு வாத்யம்தான், நாதம், லயம் இரண்டையும் கையாளக் கூடியது.

8 வது படிக்கும்போதே வீணை வாசிக்க தொடங்கிவிட்டார்

வீணை வாசிப்பில் பல பாணிகளின் ஒப்பீடு என்னும் தலைப்பில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் வாங்கயிருக்கிறார்.

வாசிக்காத மேடை இல்லை. போகாத நாடு இல்லை. ஆத்மார்த்தமான வாசிப்பு

இரண்டு வீடியோ நீங்கள் பார்த்தே ஆக வேண்டும். ஒரு ஜெ.குமரேஷ் உடன் ஜாகிர் உசேன் வாசிக்கும் காபி ராக ஸ்வர பிரசாதம். இரண்டாவது மாண்டலின் ஸ்ரீநிவாஸ், திருவையாரு உற்சவத்தில், ஜாகிர் உசேனுடன் வாசிக்கும் சாருகேசி. 

.எனக்கு முன்னமே சொன்னாற்போல், எஸ். பாலச்சந்தர் என்ற ஒரு இரு முகம் கொண்ட கலைஞனை மிகவும் பிடிக்கும். மிகச் சிறந்த டைரெக்டர், மிகச் சிறந்த வீணை வித்வான். டைரக்டர் ஸ்ரீதர் தன் படங்களில் புதுமைகள் புகுத்தும் முன்பே இவர் பல சாதனைகளை செய்திருக்கிறார்.

எஸ். பாலச்சந்தரை இவர்  குருவாகக் கொண்டது மிகவும் உசத்தி.

“என்ன வாசிக்கலாம்” என்று ஒரு கச்சேரியில் எஸ்.பாலச்சந்தர் ஜெயந்தி குமரேஷைக் கேட்டார். வர்ணத்திலிருந்து தொடங்குவது மரபு என்பதால், நவா வர்ண மாலிகை வர்ணம் என்று சொல்ல, எஸ். பாலச்சந்தர், ஒன்பது ராகங்களில், ஆலாபனை, தானம், ஸ்வரப்ரஸாதம் என்று மூன்று மணி நேர கச்சேரி, ஒரே வர்ணம் ஆக்ரமித்துக் கொண்டுவிட்டது.

ஜெயந்தி குமரேஷ், மிருதங்கம் போன்ற பக்க வாத்தியங்கள் எதுவும் இல்லாமல் நாற்பத்தைந்து ராகங்கள் தானம், ஸ்வரப்ரசாதம் மட்டுமே அடங்கிய முழு கச்சேரி செய்து இருக்கிறார்.

வாய்ப்பாட்டுக்கு நிறைய கலைஞர்கள் இருக்கிறார்கள். வீணைக்கு அத்தனை பேர் இல்லை. நீ வாய்ப்பாட்டை விட்டு விட்டு முழு மூச்சாக வீணையில் ஈடுபடவேண்டும் என்று எஸ். பாலச்சந்தர் கேட்டுக் கொண்டதன் பேரில்- இன்று நமக்கு ஒரு சங்கீத கலாநிதி.

கடைசியாக:

சங்கீத கலாநிதி கொடுத்தும் சில பேரை ப்ரைம் ஸ்லாட்  4 PM – 9.15 PM ல் பாட வைத்து படுத்துவது என்று ஸ.வி.சபை உறுதியாக இருக்கிறது. இன்னும் சுதா ரகுநாதன், சௌம்யா பாடிக் கொண்டிருக்கிறார்கள். வரும் வருடம் 100 வயது கொண்டாடப் போகிறது.

மிகவும் உசத்தியான கௌரவம் பெறும் ஜெயந்தி குமரேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

 

 

Saturday, 16 May 2026

பிரஹ்மஸ்ரீ சுப்பிரமணிய தீட்சிதர் உபன்யாசம் - தேன் துளிகள் 3

 

கிருஷ்ணாய வாஸுதேவாய...

நமக்கு பரிச்சயமான இது குந்தி ஸ்துதி. குந்தி கிருஷ்ணரைப் பார்த்து சொன்ன ஸ்துதி.

குருக்ஷேத்ர யுத்தம் முடிந்து, தர்மபுத்திர பட்டாபிஷேகம் ஆகிறது. கிருஷ்ணர் முன்னர் இருந்து, அழகாக முடித்து வைக்கிறார். இத்தனை வருட கஷ்டங்களுக்கு விடிவு காலம்.

வைபவம் முடிந்தவுடன், ஒரு 18 படி கீழே இறங்கி உட்கார்ந்து கொள்கிறார். தர்மபுத்ரர், அர்ஜுனன், மற்றும் சகோதர்கள் மேலே அரியாசனத்தில் அமர்ந்திருக்க, கீழே பரமாத்மா.

அப்போது இவர்கள் தாயாரிடம் ஆசீர்வாதம் வாங்க வேண்டும் என்று நினைத்ததால், குந்தியை அழைத்து வருவதற்கு உத்தர விடுகிறார்.

குந்தியைப் போல் ஒரு “மிகவும் வருந்தத்தக்க” பாத்திரம், இதிகாச புராணத்தில் எங்குத் தேடினாலும் கிடைக்காது.  மணி மணியாக 5 குழந்தைகளைப் பெற்றும், அவள் குழந்தைகளோடு சேர்ந்து இருக்கவில்லை. இருந்தாலும், ஒரே சோகம்தான்.  பஞ்ச பாண்டவர்கள் ஓட ஓட விரட்டப்படுகிறார்கள். அரண்மனையில் உட்கார்ந்து, தன் பிள்ளைகள் உயிரோடு இருக்கிறார்களா ? இல்லையா ? என்று தெரியமால் பரிதவிக்கும் தாய்  !!!!

குந்தி வருகிறாள். அந்தச் சபையைப் பார்த்து ஆச்சர்யப்படுகிறாள். மேலே தன் குழந்தைகள் உட்கார்ந்து இருக்க, கீழே பரமாத்மா.

ஓடி வந்து கிருஷ்ணர் காலை பிடித்து கதறுகிறாள்.

கிருஷ்ணர். “என்ன அத்தை இது. எழுந்திருங்கள்.. சந்தோஷமாக இருக்கும் நேரத்தில் அழுகிறீர்களே” என்று கேட்கிறார்.

குந்தி “கிருஷ்ணா, உன்னை அண்டி வாழும் குடும்பம் நாங்கள். நீ இல்லாவிட்டால், நாங்கள் எங்கே ? அப்படி இருக்கும் நீ, அண்டி இருக்கும் எங்களை மேலே உட்கார வைத்து, நீ கீழே உட்கார்ந்து இருக்கிறாயே ?”.  இது சரியா ?   

நம் நிஜ வாழ்க்கையில் நினைத்துப் பாருங்கள்.  நம்மை அண்டி ஒருவர் இருக்கிறார். அவர் நமக்கு மேலே கூட இல்லை. நமக்கு சமமாக உட்கார அனுமதிப்போமா ?  அனால் இங்கே கிருஷ்ணனைப் பாருங்கள் ...

4 காசு இருக்கிறது என்று நம்மிடம் வேலை செய்பவர்களை எப்படி அலட்சியம் செய்கிறோம். ஓடித்த் வெண்டைக்காயை அப்படியே திருப்பிப் போடுவது, “என்னப்பா கறிகாய் நல்லாவே இல்லை” என்று சொல்லி வாங்கி பேரம் பேசுவது.

கிருஷ்ணன் நான் என்னம்மா பெரிசா பண்ணினேன் என்று கேட்க, குந்தி “எங்களை எப்படி எப்பெல்லாம், காப்பாற்றினாய் .. என்று லிஸ்ட் குடுக்கிறாள்.  பீமனுக்கு விஷம் கொடுத்தது, அரக்கு மாளிகை, திரௌபதி சபை அவமானம். துர்வாசர், சாப்பிடாமலே ஏப்பம் விட்ட கதை. குருக்ஷேத்ர வெற்றி.......

பாண்டவர்களை காப்பாற்றுவேன் என்ற ஒரு சத்யத்திறக்காக கிருஷ்ணன் பண்ணிய வேலைகள்.....

கிருஷ்ணனின் காருண்யம்.  அப்படிப் பேசும்போது சொன்ன ஸ்லோகம் தான்

கிருஷ்ணாய வாசுதேவாய, தேவகி நந்தனாய ச

நந்தகோப குமாராய கோவிந்தாய நமோ நம:

அப்போதுதான் குந்தி சொல்கிறாள். “எனக்கு கஷ்டத்தையே கொடு” அப்போதுதான் நான் உன்னை நினைப்பேன். நீ என்னையும் ஏன் குடும்பத்தையும் காப்பாற்றுவாய்.

எப்படிப்பட்ட பிரார்த்தனை பாருங்கள் !!