Tuesday, 12 May 2026

ப்ரும்மஸ்ரீ சுப்பிரமணிய தீக்ஷிதர் உபன்யாசம் - தேன் துளிகள் - பகுதி 2

 

நாரதர் உபதேசித்த ராமாயணம்

முதல் ஸர்கம், நாரதர் வால்மீகிக்கு உபதேசம் செய்த ராமாயணம். ராமாயணத்தை முழுவதுமாக சுருக்கி சொன்ன அற்புதமான ஒரு ஸர்கம்

இதை மையமாக வைத்துத்தான், வால்மீகி 24000 ஸ்லோகங்கள் கொண்ட ராமாயணம் எழுதுகிறார்...

ராமாயணத்தில் பல இடங்களில், ராமாயணம் முழுவதும் சொல்லப்பட்டிருக்கிறது. சுந்தர காண்டத்தில் சில இடங்களில் ஆஞ்சநேயர், முழு ராமாயணத்தைச் சொல்கிறார்.

சாதாரணமாக் ஒரு ஸர்கம் முடிந்தவுடன், பல ஸ்ருதி என்று ஒன்று உண்டு. பல இடங்களை கேட்பவர்க்கு, சகல செல்வங்களும், புகழும் கிடைக்க வேண்டும் என்று தான் இருக்கும்.

அனால், நாரதர் உபதேசித்த இந்த முதல் ஸர்க்கத்தில், , படிப்பவர்க்கு சகல ஸௌபாக்யங்களும் கிடைக்கும் என்று கூறுகிறார். இப்படி சொல்கிறார்   

“ராமாயணம் என்ற கதையைக் படிப்பவர்க்கு, மகன்கள், பேரன்கள், உறவினர்கள் கூட சேர்ந்திருக்கும் நீண்ட ஆயுள் கிடைக்கிறது அவர் உயிர் துறந்தபின் ஸ்வர்க்கத்திர்க்குச் சென்று அங்கே கௌரவிக்கப்பட்டு நிலையாக தங்கி விடுவார்”

இது மிகவும் விசேஷமாகும். விஸ்வாமித்ரர், ஸ்கந்த ஜனனம் பற்றி சொல்லும்போது பல ஸ்துதியில், கேட்பவர்களுக்கு சர்வ மங்களமும் உண்டாகட்டும் என்று சொல்கிறார். இப்படி பல இடங்கள்.

ஏன், நாரதர் சொல்லும் ஸங்க்ஷேப ராமாயணத்தில்,
“சொல்பவரை” ப் பற்றி குறிப்பிடுகிறார் என்றால் “நாரதர் குணத்தைப் பொறுத்து, -அவர் சொல்லும்  இருக்கிறது.” அவருக்கு சொல்லி சொல்லி பழக்கம். அவர் ஒன்று தம்புராவை மீட்டிக்கொண்டு “கல்யாண குணங்களை” பாடிக் கொண்டு இருப்பார். இல்லையென்றால் “யாருக்காவது உபதேஸம்”. இதை கலகம் என்று நாம் நினைத்தால், அது நமது அறியாமை

 அதனால் தான் படித்தால் பெருமை என்கிறார்.

 

ப்ரும்மஸ்ரீ சுப்பிரமணிய தீக்ஷிதரின் உபன்யாசத்திலிருந்து – தேன் துளிகள் - 1

 

மரவுரி அழகு

 அழகில்லா ஒரு வஸ்து, அழகான ஒரு விஷயத்துடன் சேரும்போது அதுவும் அழகாக ஆகிவிடும்

மரவுரி கட்டிக்கொண்டு ராமன் கிளம்பியபோது, ஒரு ராஜாவாக, ஆபரணங்களும், ஆடைகளும்  கட்டிக்கொண்டு இருக்கும்போது எவ்வளவு அழகாக இருப்பானோ, அதைவிட பல மடங்கு அழகாக இருக்கிறான். அவன் அழகைப் பார்த்து, காட்டில் ரிஷிகளே ஆசை கொண்டு ஆலிங்கனம் செய்து கொள்ள ஆசைப்படுகின்றன.

காளிதாசன், சாகுந்தலத்தில் இந்த கருத்தை எடுத்து ஒரு உவமையில் சொல்கிறார்.

சாகுந்தல நாடகத்தில், “மரவுரியை உடுத்தி இருப்பதால், சகுந்தலையின் அழகு கொஞ்சம் கூட குறையவில்லை. மேலும் அழகு வாய்ந்தவளாக காணப்பட்டாள். சந்திரனில் காணப்படும் களங்கம், அதன் அழகைக் கெடுப்பதில்லை.”

सरसिजमनुविद्धं शेवलेनापि रम्यं

मलिनमपि हिमांशोः लक्ष्म लक्ष्मीं तनोति

इयं अधिकमनोज्ञा वल्कलेनापि रम्या

किमिव हि मधुराणां मण्डनं नाकृतीनाम् 

குளத்தில் பாசி பார்த்திருப்போம். பச்சையாக இருக்கும். அது குளத்தில் இறங்கும்போது காலில் ஒட்டிக்கொண்டு விடும். கஷ்டப்பட்டு எடுத்து எறிவோம். கடுப்பாக இருக்கும். அந்த பாசியே, குளத்தில் அலைகளால் லேசாக நகர்ந்து அங்கு இருக்கும் தாமரையில் ஒரு 3 அடிக்கு, தண்டில் ஒட்டிக்கொண்டிருக்கும். அது அந்த தாமரைக்கு மிக அழகாக இருக்கும். ஒரு பாசிக்கு அடித்த யோகம். 

மரவுரியின் அழகை அருணாச்சல கவிராயர், ராம நாடக கிருதியில் -- தரித்த மரவுரி இடையும் நடையும் கண்டு மனதையெல்லாம் உருக்கி வார்க்குமே --என்கிறார். “  

அதே போல் குருக்ஷேத்ர யுத்தத்தில், கிருஷ்ணர், தேரை லாவகமாக ஒட்டி, அர்ஜுனனுக்கு ஆபத்து வராமல் பார்த்துக் கொள்கிறார்  இது மிகவும் கஷ்டமான ஆயாசமான வேலை.  அப்படிப் பண்ணும்போது, யுத்த பூமியில், குதிரைகள் ஓட, அந்த புழுதி மேலே எழும்பி, பரமாத்மாவின் நெற்றியில் முத்து முத்தான வேர்வை- அதன் மேல் ஒட்டிக்கொண்டு இருக்கிறது.  

அதைப் பார்க்கும்போது, ஸ்ரீ ரங்கத்தில், பெருமாளுக்கு, முத்தங்கி சேவை நடக்கும். மிகவும் விலை உயர்ந்த முத்துக்கள், பவழம் இவைகளை வைத்து ரங்கநாதரை அலங்காரம் செய்வார்கள். இதைவிட, யுத்த பூமியில், கிருஷ்ணரின் இந்த கோலம் பல மடங்கு அழகாக இருக்கிறது.

”புழுதிக்கு வந்த பெருமை”  

இதே போல், “நயா பைசா” பிரயோஜனம் இல்லாத நாம். அவர் திருவடிகளை இறுக்கிப் பிடித்துக் கொள்ள வேண்டும். “பட்டி மாடான நான் உன்னை விட்டிராமே உலோகித, பத்ம சீர்பாத நீ இனி வந்து தாராய்” என்று திருசிராப்பள்ளி திருப்புகழில். அருணகிரிநாதர் பாடுகிறார்

தாயுமானஸ்வாமிக்கு, உபதேசம் செய்த முருகனாக பாவித்து செய்த அற்புதமான திருப்ப்கழ்

இதே போல் மெய் சிலிர்க்க வைக்கும் பல உபமானங்கள், முடிந்தபோது எழுதுகிறேன்.

 என்னுடைய எண்ணம்:

இதை நாராயண தீர்த்தர், தரங்கத்தில்.

உத்தவர் கிருஷ்ணனின் உத்தரவின் பேரில், கோபிகைகளிடம் சென்று, அவர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு திரும்பி வந்து, கிருஷ்ணரிடம், கோபிகளின் பக்தியை புகழ்ந்து சொல்லுவதாக ஒரு பாட்டு இருக்கிறது.

“இதி வததி ஹி கோபி..” என்று ஆரம்பிக்கும் தரங்கம். நாங்கள் காம்போதியில் பாடுவோம். அதில் சொல்கிறார்.

मणिनायक मणिरपि परमधुना

गुनयोगे सति काचमणीनाम

मरकतमणिरपि मध्ये घटितो

गणनीयह: किं नहि काचेषु ।

“இரத்தினங்களில் மிகவும் சிறந்தது என்று புகழப்படும் மரகதம், பாசி மணிகளின் நடுவே சேர்க்கப்பட்டாலும், அந்த மரகதத்தின் அழகு ஒரு போதும் குறையாது அல்லவா, அதே போல், கிருஷ்ணன் எங்களிடம் இருப்பதால் அவர் அழகு கொஞ்சம் கூட குறையாது. என்று கோபிகைகள் சொன்னதாக ....சொல்கிறார்

மேலே உபமானங்கள் ஒரு புறம் இருக்கட்டும். நாமே எப்போவாவது கோவிலுக்குப் போய், ஒரு வீபூதியோ, குங்குமமோ இட்டுக்கொண்டு வந்தால், வீட்டில், “என்னப்பா பளிச் னு இருக்கியே” என்கிறார்கள்.  என்ன இது கொஞ்சம் உல்டா.  அழகான வஸ்து அழகில்லாத நம்மை சேருகிறது.

 

Friday, 8 May 2026

.....मानिषाद ......

 

ப்ரும்மஸ்ரீ சுப்பிரமண்ய தீக்ஷிதர்

எங்கள் மதிப்புக்கும் மரியாதைக்குரியும் உரிய உபன்யாஸகர், ப்ரும்ஹஸ்ரீ சேங்காலிபுரம் ஸுப்ரமண்ய தீக்ஷிதர், கடந்த 29.4.2026, அவர் மிகவும் நேசித்த, எங்களை நேசிக்க வைத்த, ஸ்ரீ மத் ராமாயணம், ஸ்ரீ மத் பாகவதம் இந்த இரண்டு இதிகாசங்களோடு இரண்டற கலந்து விட்டார்.

ப்ரும்மஸ்ரீ அனந்தராம தீக்ஷிதர் அவர்களிடமும், ப்ரும்ஹஸ்ரீ நாராயண தீக்ஷிதர் அவர்களிடம் நேராகவே மந்த்ரோபதேசம் பெற்று, அவர்கள் உடனேயே உபன்யாசம் செய்தவர்.

இன்னொரு தடவை அவரை வரகூருக்கு கூப்பிட்டு என் குடும்பத்தில் அத்துணை பேர் சார்பாகவும் ஒரு நவாஹமாக ராமாயணம் உபன்யாசம் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டு. நிறைவேறவில்லை. எனக்கு இதில் நிச்சயம் வருத்தம் உண்டு.

எங்கள் வரஹூர் பெருமாளிடம் அவர் கொண்ட பக்தி அளவிட முடியாது. அவர் முதல் சப்தாஹம் வரஹூரில் பண்ணினார்.  ஸ்ரீ. ப்ரேமி அண்ணா அவருக்கு தங்க தோடா போட்டு கௌரவித்ததும் வரஹூர். 100 வது சப்தாஹம்  செய்ததும் வரஹூர் தான்.

ஸ்ரீ. ராமனுடைய 16 குணங்களை கூறவேண்டும் என்று கேட்க, 64 குணங்களைக் கூறிய நாரதர். தீக்ஷிதர் எங்களுக்கு நாரதர், வால்மீகி, ஸுகப்ருஹ்மம், வியாசர் எல்லாமே.

என் செம்மங்குடி வாழ்க்கையில், பள்ளி நாட்களில் நிறைய உபன்யாசம் கேட்டு இருக்கிறேன், பல வாஜபேயயாஜிகள், பண்டிதர்கள். அந்த வாசனை இப்பவும் ஸ்ரீ. சுந்தரகுமார், ஸ்ரீ. அண்ணா, ஸ்ரீ விட்டல் தாஸ், போன்ற மகான்களின் உபன்யாசம் கேட்க ஆசையை தூண்டிவிடும் ஒரு கருவியாக இன்னும் இருக்கிறது. அதில் தீக்ஷிதர் மிக முக்கியமானவர்

சப்தாஹ சாம்ராட் என்று காஞ்சி பெரியவாளால் ஆசீர்வதிக்கப்பட்டவர். ஸரஸ பாஷி என்று பல பட்டங்கள் பெற்றாலும், என் குடும்பத்தில் ஒருவர்.

என்ன மேதா விலாஸம்,  நாரயணீயம் என்ன, சப்தாஹத்தில் எத்தனை கிளைக் கதைகள்  என்ன ?  ராமாயணம் ? எவ்வளவு மேற்கோள்கள்,

காளிதாசன், விஷ்ணு புராணம், க்ஷேத்ர மாஹாத்மியங்கள் .....இவ்வளவையையும் நான், இந்த ஜன்மத்தில், நேரே கேட்க வைத்த பெரிய குருவாஹ வந்த அவர் மறைவு ஆன்மிக உலகத்துக்கு பெரிய இழப்பு.

அதில் ப்ருமஸ்ரீ தீட்சிதர் ஒரு தனி. எங்கள் குடும்பத்தில் ஒருவர். ஆப்தாள் என்று அன்புடன் அழைக்கப் படுபவர்/

எங்கள் குடும்பத்தில் என் செம்மங்குடி தாத்தா. ஸ்ரீ. ராமமூர்த்தி சாஸ்த்ரிகள்      ஸ்ரீ ரங்கத்தில்  நவாஹம் இராமாயண பராயணம் நடந்ததது. இவர் மேடையில் உட்கார்ந்து அவர் உபன்யாசம் செய்த காக்ஷி இன்னும் என் மனதில் இருக்கிறது,  என் தாத்தாவைப் பற்றி பல முறை அவர் உபன்யாசத்தில் ஆத்மார்த்தமாக புகழ்ந்து பேசியது ..எல்லாம் சத்தியம்.

கிருஷ்ண லீலா தரங்கிணியில் - முஹூர் முஹூர் நமன் நமன் முகுந்த பாதபத்மயோஹோ... என்று ஒரு சுலோகம் வருகிறது.  (ஹே ராம ஹே கிருஷ்ணா என்ற பாடலின் சுலோகம்)  அக்ரூரர், கம்சனால் அனுப்பப்பட்டு, கிருஷ்ணனைப் பார்த்தவுடன் நமஸ்காரம் பண்ணி கொண்டே இருந்தாராம். கிருஷ்ணன் அவரை ஆலிங்கனம்

செய்து கொண்ட பிறகு கூட திருப்பி நமஸ்காரம் செய்தாராம்.

அதே மாதிரி என் அம்மா எப்போது அவரைப் பார்த்தாலும் என் குடும்பத்தில் எல்லோரையும் நமஸ்காரம் செய்யச் சொல்லி தானும் செய்வாள்.  தீக்ஷிதரோ, என் தந்தையையும், தாயையும் வாய் கொள்ளாமல் வர்ணிப்பார்.

என் அம்மா மேல் அவர் கொண்டிருந்த அன்பு பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. என் அம்மா அவருக்கு ஒன்று விட்ட சஹோதரி.  கூடப் பிறந்த சஹோதரியை விட அவ்வளவும் கனிவும் அன்பும். கடந்த முறை சப்தாஹம் சொல்ல வரஹூர் வந்த போது, புடவை வேஷ்டி வாங்கி கொடுத்து ஆசீர்வாதம் செய்தார். கனு வைத்தால் என் அம்மா முதலில் அவருக்குப் போன் செய்து ஆசீர்வாதம் வாங்கி கொள்வார்

சாப்பாடு என்றால், என் அம்மாதான் அவருக்கு பரிமாற வேண்டும். அவர் சாப்பிடும் முறையே அழகாக இருக்கும். அவருடைய பாஷையிலே சொல்ல வேண்டும் என்றால் “கல்யாணத்தில் சில பேர் சாப்பிடுவதைப் பார்த்தால் பயமாக இருக்கும், அவன் சாப்பாட்டோடு சண்டை போட்டுக் கொண்டு இருப்பான். கடைசி வரை சாப்பிட மாட்டான்” 

அப்படி இல்லாமல் மிகவும் நேர்த்தி. 

என் பெற்றோர்களின் சதாபிஷேக நினைவாக, சில தரங்கிணி பாடல்களை தொகுத்து ஒரு சிரிய புத்தகமாக வெளியிட்டேன். அதற்கு முன்னுரை எழுத தீட்சிதர் மாமாவுக்கு போன் செய்து கேட்டேன். உடனே “பேஷா சொல்றேனே.. என்று போன் லேயே எனக்கு சொன்னார்”

அவருடைய குடும்பத்தில் ஸ்ரீ. ராம்ப்ரசாத். ஸ்ரீ வித்யா அவர்களுடைய குழந்தைகள் எல்லோரும் எனக்கு மிகவும் பரிச்சயமான அருமையான குடும்பம்.

ஒருமுறை திருப்பதியில் சப்தாஹம். நான் சென்றிருதேன். என்னமோ தெரியவில்லை. செம ஜுரம். மிகவும் கஷ்டப்பட்டேன். அப்போது ஒவ்வொரு மணிக்கு ஒரு தடவை. ஸ்ரீமதி வித்யா வே நேரே வந்து எனக்கு, மாத்திரை, ரஸம் எல்லாம் கொடுத்து அவர் வீட்டில் ஒருவராக என்னைப் பார்த்துக் கொண்டார். இதை மறக்கவே முடியாது.

அவர் மறைந்த அந்த தருணங்கள் மிகவும் குறைவு. 7-8 மணி நேரத்தில் எல்லாம் முடிந்து விட்டது. ஆனால் அவர் உபன்யாசங்கள் மூலம் நம்மோடு வாழ்ந்த வாழ்க்கை மிக மிக அதிகம். அதை நாம் நினைத்து சந்தோஷப்படவேண்டும்

ஒரு மஹா பெரியவா, ஒரு ஹரிதாஸ் கிரி, ஒரு தீக்ஷிதர் – நம் கண் முன்னாலேயே இருந்து, நம்மை மேலே தூக்கி விட்டு சாதாரணமாக கடந்து சென்றவர்கள்.

கடைசியில் ... மா நிஷாத என்று இருந்த என்னை மாநிஷாத என்று மாற்றியவர்.  இதற்கு அர்த்தம் தெரியாதவர்கள், வால்மீகி ராமாயணம் முதல் 10 பக்கம் படிக்கவும்)

மறைந்த விஷயம் கேட்டு குரோம்பெட் ஓடி வந்தேன். சற்றே இதழ் மூடிய தாமரை புஷ்பம் போல இருந்தார்.  உடலில் ஒரு சிறிய காயம், தழும்பு ஒன்றுமே இல்லை. எவ்வளவு ஆச்சரியங்கள், எவ்வளவு உபன்யாஸங்கள், எத்ததனை இடங்கள், குருவாயூர் என்ன, குணசீலம் என்ன, திருப்பதி, வரஹூர், அயோத்யா, பூரி..... எத்தனை இடங்கள். எத்தனை பேரை பக்தி மார்கத்தில் ஈடுபடுத்தி பக்தி மார்கத்தில் ஈடுபட வைத்து இருக்கிறார்.

அவர் அருகில் அவர் என்னை அடிக்கடி பாடச் சொல்லும் சில தரங்கங்கள் பாடினேன். தைத்ரீய உபநிஷத் வாத்யார் சொல்ல, ராம் பிரசாத் சித்தம் கலங்கி உட்கார்ந்து இருக்க  தீக்ஷிதர் சோம யாகம் பண்ணியதால், பெரிய ப கனபாடிகள், வாத்யார்கள் வந்து, மந்த்ரங்கள் ஆரம்பிக்க....

திரும்பி வரும்போது, அவர் உபன்யாசங்களில் சில நீதிகளை (moral values) எழுத வேண்டும் என்று நினைத்தேன்.

இந்த ஜென்மத்தில், எங்கள் குடும்பத்திற்க்கு, விதுரன் க்ருஹத்திற்கு வந்த கிருஷ்ணர் மாதிரி, வந்த மஹான்

 

(இன்னும் வரும்)

 

 

 

 

 

Monday, 13 April 2026

அப்பைய தீக்ஷிதரின் கடைசி நிமிடங்கள்

 

இது ஏதோ ராஜேஷ் குமார் மர்ம நாவல் தலைப்பு என்று எண்ண வேண்டாம்

அப்பைய தீட்சிதர் 15 ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். சுமார் 104 கிரந்தங்கள் எழுதி இருக்கிறார்.  அவருடைய சம்ஸ்க்ருத ஞானம் அபாரமானது. அவர் சிவ பரமாக நிறைய கிரந்தங்கள் செய்திருக்கிறார். தேவி மகாத்மியத்தை சுருக்கி “துர்கா சந்திர கலா ஸ்துதி” என்ற ஒரு படைப்பு மிகவும் விசேஷமானது.

மேலும்  हरि हर अभेद स्तुति: என்று “பேதமற்ற சிவா விஷ்ணு” என்று சம்ஸ்க்ருதத்தில் ஒரு கிரந்தம் எழுதி இருக்கிறார். அதில் ஆரம்பதில் “மா ரமணம் உமா ரமணம்” என்று ஆரம்பிக்கிறார். அதைதான் பாபநாசம் சிவன் பின்னால், ஹிந்தோள ரகத்தில் “மாரமணன் உமா ரமணன்-மலரடி” என்று பாடினார்.

எனக்கு, எங்கள் வரகூரில், பெருமாளுக்கு, ஸ்ரீ ருத்ரம் சொல்லி அபிஷேகம் பண்ணுவதால், இது “பேத சமாசாரம்” ஒரு பெரிய விஷயமாக இல்லை என்றாலும், அப்பைய தீட்சிதரின்,  வாழ்க்கை,  பக்தி மற்றும்அவர் படைப்புக்களைப் பார்க்கும்போது  பிரமிப்பாக இருந்தது.

இரண்டு உதாரணங்கள்- இவர் எவ்வளவு பெரிய மகான் என்பதற்கு:

அவர் எண்ணுகிறார்  இப்போது நினைவு (ம) ஆரோக்கியம் இருக்கும்போது சிவ உபாசனை பண்ணுகிறேனே நாளை “ஒரு வேளை” பைத்தியம் ஆகி விட்டால் “பக்தி” பண்ணுவேணா என்று நினைத்து “ஊமத்தங்காயை அரைத்து குடித்து “பைத்தியம் ஆகிவிடுகிறார்” அப்போது அவர் சொல்லி அவர் சிஷ்யர்கள் எழுதிய “உன்மத்த பஞ்ச ஷதி” என்ற 50 ஸ்துதிகள் ரொம்பவும் உஸத்தியானது.  மஹா பெரியவா இதைப் பற்றி சொல்லும்போது “இது அவர் எழுதிய மற்ற நூல்களை ஒத்தது” என்கிறார். (பிறகு மாற்று மருந்து கொடுத்து சாதாரணமாக ஆகிவிட்டார்).

இதில் ஒரு பாடல் அர்த்தம் இப்படிப் போகிறது.  “நான் உனக்கு என்னமோ, எருக்கம்பூ, தும்பைப் பூ என்று அர்ச்சனை செய்கிறேன். நீ என்னமோ எனக்கு
சாயுஜ்யம் என்கிற மோக்ஷ பதவி கொடுக்கிறாய். இது தெரியாமல் என் ஜன்மாவை வீணடிக்கிறேனே. நான் எவ்வளவு பெரிய முட்டாள் ?”

 இரண்டாவது, இவர் அந்திமக் காலத்தில் மிகவும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார், அதுவும் சிவ பூஜை பண்ணும்போது வலி இருக்கிறதே என்று மிகவும் வருந்தி, “சிவன் அருளால்” வயிற்றில் ஒரு துணியைக் கட்டிக்கொண்டு, அந்த வலியை ஒரு உருண்டையாக வெளியில் எடுத்து, ஒரு பாத்திரத்தில் நீர் நிரப்பி அதில் மிதக்க விடுகிறார்.  பூஜை முடிந்தவுடன் அதை உள்ளே அனுப்பி விடுவார். இப்படி தன்னுடைய ப்ராரப்த்ததை தான் அனுபவிக்க வேண்டும் என்று நமக்கு சொல்லும் பாணியில்....

இப்படி நினைத்தே பார்க்கமுடியாத மகான்கள் எல்லாம் நம் தமிழ் நாட்டில் இருந்திருக்கிறார்கள்.

சிதம்பரத்தை நாம் மனக்கண்ணில் கொண்டு வந்தோம் என்றால், பெருமாளின் 108 திவ்ய க்ஷேத்ரங்களில் ஒன்று இருப்பது தான் ஆச்சர்யம் சிதம்பர நடராஜ மூர்த்தியை நேரில் பார்க்கும் நாம். இடது புறம் பார்த்தால், கோவிந்தராஜப் பெருமாள் இருப்பார். இப்படி பக்கத்தில் இருவரையும் வைத்துக்கொண்டு, தீட்சிதர் “ஹரி ஹர அபேத ஸ்துதி”  என்று சில ஸ்லோகங்கள் எழுதாமல் இருந்தால் தான் ஆச்சர்யம். !!! 

முத்துஸ்வாமி தீட்சிதர் சிதம்பர க்ஷேத்ரத்தில் உள்ள கோவிந்தராஜரைப் பற்றி பாடும்போது, भासमान चिदम्बर पुरि विलसितेन – one giving darshan in the Glorious city of Chidambaram  என்கிறார்.

அப்பைய தீட்சிதர் காசிக்குப் போய் தான், தன் கடைசி காலம் இருக்க வேண்டும் என்று ஒரு வைராக்யத்தோடு இருக்க, ஏனோ சிதம்பர க்ஷேத்ரத்தில் இருந்து அவருக்கு நடராஜரை விட்டு மனம் வராமல் தவிக்கிறார். தன் கடைசி காலத்தில் ஒரு சுலோகம் எழுதுகிறார்.

चिदम्बरमिदं पुरं प्रथितमेव पुण्यस्थलं

सुताश्च विनयोज्ज्वला: सुकृतयश्च काश्चित्कृता:

वयश्च मम सप्ततेरुपरि नैवे भोगे स्पृहा

न किञ्चित् अहमर्थये  शिवपदं दिदृक्षे परम् 

அர்த்தம்:  சிதம்பரம் என்கிற க்ஷேத்ரம் புன்யஸ்தலம் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். அதுதான் உண்மை கூட. என்னுடைய வம்சாவளியினர் குழந்தைகளும் அதே வினயத்தோட இருக்கிறார்கள். ஏதோ எனக்குத் தெரிந்த சில கிருதிகள்/ஸ்லோகங்கள் பண்ணி இருக்கிறேன் என்கிறார். !!!

என்ன ஒரு பவ்யம் பாருங்கள் !!!. 

மேலும் சொல்கிறார்.- எனக்கு எழுபது வயதுக்கு மேல் ஆகிவிட்டது எனக்கு பெரிய ஆசை ஒன்றும் கிடையாது. ஆனால் ஒரே ஒரு சின்ன “கடைசி ஆசை” இருக்கிறது.  அந்த நடராஜருடைய பாத பத்மம் மட்டும் பார்க்க வேண்டும். அது கிடைக்குமா  !!!” என்று ஏங்குகிறார்.

கண்டிப்பாக நடராஜ மூர்த்தி நடனம் பண்ணி இருக்கவேண்டும் என்று உறுதியாக நம்பும் தீட்சிதர், அடுத்த ஸ்லோகத்தில் நம் கண் முன்னே அந்த நடராஜர் இருக்கும் காட்சியை விளக்கி “மெய் சிலிர்க்க வைக்கிறார்”

आभाति  हाटकसभानटपादपद्म

ज्योतिर्मयं मनसि मे तरुणारुणोअयं

என் கண் முன்னே “கனக சபையில் வீற்றிருக்கும்” நடராஜருடைய  அந்த பாத பதமம் ஜொலிக்கிறதே -ஆஹா என்ன அழகு ! என்ன அழகு !!

என் மனசிலே “ஜ்யோதிர் மயமான “இளம் சூரியன்” போன்ற அந்த பாதங்கள்  தெரிகிறதே” என்று புளகாங்கிதம் அடைகிறார்.. “ஆஹா” என்று கதறுகிறார்

அப்பைய்ய தீட்சிதர் உயிர் பிரிந்து விடுகிறது. அப்படியே அந்த ஜோதியுடன் கலந்து விடுகிறார்

அதற்குப் பிறகு வரும் இரண்டு ஸ்லோகங்கள் அவர் சிஷ்யர்கள் என்றும் சொல்கிறார்கள், நீலகண்டதீட்சிதர் என்றும் சொல்கிறார்கள். அவர் அந்த ஸ்லோகத்தை முடிக்கிறார்.

नूनं जरiमरण घोर पिशाच कीर्णा

संसार मोह रजनी विरतिं प्रयाता

நிச்சயம் அப்பைய தீட்சிதர், கோர சம்சார துக்கங்கள், கிழடு  என்ற இருட்டில்  இருந்து விடுபட்டு சூரியன் போன்ற அந்த பாதத்தில் இரண்டற கலந்து விட்டார்.

இப்படி பாதி ஸ்லோகம் இவர் சொல்ல, மற்ற பாதி சுலோகம் மற்றவர் முடிக்க, நடுவில் அந்த சபாபதியுடன் ஒன்றாக கலந்தது, ஒரு பிரமிக்கத்தக்க விஷயம்.

நூனம் - என்ற பதத்திற்கு நிச்சயம் என்று பொருள்

நாராயண தீர்த்தர் – தரங்கத்தில் அகரூரர், கம்சன் கிருஷ்ணனை அழைத்து வரச் சொல்லி” கிளம்பும்போது, நான் கிருஷ்ணனை நிச்சயம் பார்ப்பேன் என்ற கருத்தில் – த்ரஷ்யாமி கோகுல நிலையம்- நூனம் ” என்ற கிருதியில்
“நிச்சயம் அந்த கிருஷ்ணனைப் பார்ப்பேன்: என்ற அர்த்தத்தில் எழுதிகிறார்.

ஆலயம் ஆயிரத்து எட்டினில் நேத்ரம் என்கிறார், சிதம்பரத்தைப் பற்றி, கோபாலக்ருஷ்ண பாரதி. நாம் பிறப்பது எங்கே (திருவாரூரா ?) என்பது நம் கையில் இல்லை. கடைசில் காலம் எங்கே (காசியா ?)  என்பது நம் கையில் இல்லை, அண்ணாமலையாரை நினைப்போமா கடைசி காலத்தில், - உத்திரவாதம் இல்லை. ஆனால் நிச்சயமாக ஒரு தடவை அந்த “கிருபாநிதியை” தரித்தளவில் முக்தி என்று நிச்சயமாக பல மகான்கள் சொல்லி/பாடி -, போய் பார்க்க முடியும்.

“தரிசித்தளவில் முக்தி பெறலாம்” என முத்து தாண்டவரும், இரு கண்ணிருக்கும் போதே விண்ணுயிர் கோபுரம் காண வேண்டாமா என பாபநாசம் சிவனும், பரந்தனை அடைய வேண்டுமென்றால், சிதம்பரம் தனை அடையுங்கள் என்று மாரிமுத்தாப் பிள்ளையும்.  -பாடிய ஸ்தலம்.

என் தந்தை பிறந்த ஸ்தலம். என் தாய் அஞ்சல் துறையில் பணி புரிந்தபோது, தபால் ஆபிஸ் எதிர் புரம் இருக்க, தினமும் கோவில் வழியே சென்று "கண் குளிர" தரிசனம் செய்த ஸ்தலம். என் குடும்பத்தில் எல்லோருக்கும் அழியாத பல கதைகளை சொல்லும் ஸ்தலம். 

சிற்சபேசா,  சிவ சிதம்பரம்.....

 


Sunday, 12 April 2026

என் பள்ளி நாட்கள் – ஸ்ரீமதி வஸந்தா

 

இதை நான் எழுதுவதற்கு முன்பு, எனக்கு கல்வி அறிவு புகட்டிய செம்மங்குடியின், ஆரம்ப நிலைப்பள்ளியில் இருந்து, உயர் நிலைப்பள்ளி வரை இருந்த ஒவ்வொரு ஆசிரியருக்கும் சிரம் தாழ்ந்த நமஸ்காரங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அந்தக் காலத்தில் படிப்பு என்பது பெண்களுக்கு எட்டாக் கனிதான். “வயத்தில நெருப்பு” கதைதான். இருந்தாலும், தன் குழந்தைகள் படிக்கவேண்டும் என்று “மல்லு கட்டி” என்னையும் பள்ளியில் சேர்த்து அழகு பார்த்த, ஏன் அப்பா  கோ.ராமமூர்த்தி சாஸ்திரிகளையும், எவ்வளவோ கஷ்டங்கள் இருந்தும், துளி கூட அதை தன் அடுத்த தலைமுறைக்குத் தள்ளாமல், என் தந்தைக்கு நிழலாக இருந்த ஸ்ரீமதி, அலமேலு அம்மாள்.. . எப்போதும் ஏன் சிந்தையில்..

பெண்கள் வீட்டை விட்டு வெளியே போவது என்பதே மிகவும் கஷ்டம். ஏதோ நவராத்திரி, கோவில் திருவிழா என்றால் தான் அனுமதி.

1953-54 Batch மாணவி நான்.  நான் படிக்கும்போது 6 ம் வகுப்ப இந்தப் பள்ளியில் தான் இருந்தது.  பிறகுதான் செம்மங்குடி உயர்நிலைப்பள்ளிக்கு மாறியது.

நான் ஆரம்ப நிலைப் பள்ளியில் படிக்கும்போது சீனி சார் தான் ஹெட் மாஸ்டர். அவர் ஒரே வாத்யார் தான்.

பிறகு, கம்பௌண்டர் பெண் சரோஜா அவர்கள் டீச்சர் ஆக சேர்ந்தார்கள்

இன்றும் எனக்கு நினைவு இருக்கிறது. கரும்பலகையில் “ஜெய விஜய” என்று தமிழ் புத்தாண்டின் பெயர் எழுதி இருக்கும்.

வானமே எல்லை. SKY is the Limit. என்று ஆயிரம் வார்த்தையில் விளையாடினாலும், எங்கள் தமிழ் ஆசிரியர்

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் மற்றது

தள்ளினும் தள்ளாமை நீர்த்து.

என்று அர்த்தத்துடன் சொன்ன அந்த குறள், எங்கேயோ ஒரு கிராமத்தில் பிறந்த என்னை, SSLC யில் முதல் மார்க் வாங்க வைத்து,

 நான் பணி புரிந்த அஞ்சல் துறையில், அகில இந்திய அளவில் சிறந்த அதிகாரி என்று விருது வாங்கியது எல்லாவற்றிற்கும் காரணம் இந்தப் பள்ளியில் நான் முதலில் எழுதிய “அ” தான்.

நான் SSLC முழுப் பரிசை, குடவாசல் அருகில் உள்ள “ஓகை” என்ற இடத்தில் உள்ள பள்ளியில் எழுதினேன். நான் குடவாசல் வரை அந்த வயதில் போனதே, பெரிய சாதனை என்றே கூறலாம்.

நான் 1962-63 SSLC முடித்தேன்.  அடுத்த வருடம் திருமணம் ஆகிவிட்டதால், நான் முதல் மாணவியாக வந்த அந்த பரிசை என் தங்கை வாங்கினாள்

கற்க கசடற என்ற அந்த வள்ளுவனின் வார்த்தையை மெய்யாக்கிய பள்ளி இது, எப்படி மறக்க முடியும் ?

நான் மட்டும் அல்ல, என் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் நீங்காத  நினைவுள்ள பள்ளி இது. 

என் பையனும் இங்கு படித்தான் என்பது இரட்டிப்புப் பெருமை.

எங்கள் வீடு என்ற சொர்க்கம்- பத்தாயம் முழுவதும் நெல், பின் கட்டில் முழுவதும், தேங்காய், பலாப்பழம், ரூம் முழுவதும் பட்சணங்கள், ஒரு 10 பேருக்குக் குறையாமல் தினமும் சாப்பாடு. உறவுகள் பொக்கிஷமாக பார்க்கப்பட்ட காலம் அது. இப்போது நினைத்தாலும் நெஞ்சு இனிக்கிறது.

எங்கள் பள்ளி என்ற போதிமரம் மூலம் எனக்குக் கிடைத்த ஞானம் அளப்பரியது.

ஒரு வருடம் முன்பு உயர் நிலைப் பள்ளிக்கு சென்று அங்கு இப்போது இருக்கும் தலைமை ஆசிரியருடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டது மிகவும் மகிச்சியாக இருந்தது.

நூறாவது ஆண்டு கொண்டாடும் இந்தப் பள்ளிக்கு எனது மனப்பூர்வமான ஆசிகளும், ஏன் சிரம் தாழ்ந்த நன்றிகளும் உரித்தாகுக  இதைக் கொண்டாடும் இந்த வருடத்தில் என்னையும் பங்கு கொள்ள வைத்தமைக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்

Thursday, 9 April 2026

செம்மங்குடியில் சுவாஸினி பூஜை.

 

செம்மங்குடியில் சென்ற பிப்ரவரி 22 முதல் மார்ச் 7 வரை 28 ம் ஆண்டு, கும்பாபிஷேக தினமான, சம்வத்ஸராபிஷேக மகோற்சவம் இனிதே நிறைவேறியது.

செம்மங்குடி ஆனந்தவல்லி எங்கள் கிராமத்து ஜனங்களுக்கு மிகவும் ஸ்பெஷல். அபிராமி பட்டர் சொன்னது போல்,

“பதத்தே உருகி, நின் பாதத்திலே மனம் பற்றி உன்றன் இதத்தே ஒழுக அடிமை கொண்டாய்”

அவளை பார்த்துக் கொண்டிருதால் போதும், அப்படியே உருகிப் போய்விடுவோம்.

ஆனந்தவல்லி க்கு ஒரு சிறப்பு பூஜை என்றால் அது நிஜமாகவே கோலாகலமாக கொண்டாடப்படும்.  நவாவர்ண பூஜை என்ன ! ஆனந்தவல்லி உடனுறை அகஸ்தீஸ்வரர், திருக்கல்யாணம் என்ன, வீதி உலா என்று ஸ்ரீ வித்யா உபாஸகர்களால் மிகவும் பக்தி பரவசத்துடன் கொண்டாடப்பட்டது.

எல்லாவற்றிர்க்கும், மேலாக, வரும் எல்லாருக்கும் மூன்று வேளையும் வயிறார சாப்பாடு. இதற்கு எவ்வளவு செலவு ஆகிருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்

செம்மங்குடி என்ற சிகரத்தின் மகுடமாக, எங்கள் ஏகாம்பர மாமாவும், ஸ்ரீ. செல்வ கணேஸ சிவ குருக்கள் அவர்களும் மற்றும் சிவஸ்ரீ ஹரிஹர சிவம் அவர்களும் இவர்களின் வம்சாவளியான பால ஆனந்த பிரசாத் மற்றும் ஆனந்த குருக்கள் எலோரும் சேர்ந்து, அசேஷ கிராமத்து ஜனங்களோடு, மற்றும் பல “உழவாரப்பணி” பக்தர்களுடன்  சேர்ந்து நடத்திய  மிகச் சிறந்த வைபவம் இது.

இதில் 4.3.26 அன்று நடந்த் ஸுவாசினி பூஜை பற்றி கொஞ்சம் சொல்லலாம் என்பதுதான் இந்த பதிவு:

சுவாஸினி (அ) சுமங்கலி பிரார்த்தனை என்பது ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மங்களகரமான விசேஷங்கள் வருவதற்கு முன்பு செய்யும் நிகழ்வு. காஞ்சி மகான் பல சந்தர்ப்பங்களில் இதன் பெருமையை சொல்லி இருக்கிறார்.

ஸுவாஸின்யர்ச்சனா ப்ரீதா.. என்று லலிதா சஹஸ்ரநாமத்தில் ஒரு ஸ்லோகம் வருகிறது.  அதாவது ஸுமங்கலிகளின் வழிபாட்டில் மகிழ்ச்சி அடைபவள் என்று பொருள்.  செம்மங்குடியில் அன்று இந்தக் கண் கொள்ளாக் காட்சியைப் பார்த்தவர்கள், பாக்கியம் செய்தவர்கள் என்றே சொல்லலாம்

 

வேதமே, சுமங்கலிகளை கொண்டாடுகிறது.

“ஸுமங்கலீரியம் வதூரிமாம் ஸமேத பஸ்யத  I

சௌபாக்யமஸ்மை தத்வா யா தாஸ்தம் விபரேதன” II

 

என்ற ஆசீர்வாத மந்திரத்தில். “கல்யாணமான பெண்ணிற்கு, சுமங்கலி என்ற அந்தஸ்து கொடுத்து, அனைத்து ஸௌபாக்யங்களும் கொடுக்குமாறு வேதம் தேவர்களைப் பிரார்த்திக்கிறது”

 

ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படும் இந்த ஸுவாசினி பூஜை என்பது மற்ற பூஜைகளுடன் ஒப்பிடும்போது சற்றே மாறுபட்டது.

ஒரு கிராமத்தில், 300   சுமங்கலிப் பெண்களோ அல்லது 100 பேரையோ, அழைத்து வந்து, அவர்களை ஒரு மூன்று மணி நேரம் உட்கார வைத்து, அம்பாளாக வரித்து, அஷ்டோத்திரம் சொல்லி, கற்பூரம் காண்பித்து, எல்லாம் முடிந்தவுடன், அவர்களுக்கு வாழை இல்லை போட்டு, விருந்தோம்பல் செய்து,, நலங்கு இட்டு, திருப்பி அனுப்பி வைக்கும் வைபவம் இது

இதில் சொல்லப்பட்ட அஷ்டோத்ரம், எங்கள் ஊரின் மிகவும் பிரஸித்தி பெற்ற வரகூர் ஸ்வாமிகள் அவர்கள் எழுதிய மூல மந்த்ரம். ஓலைச்சுவடியில் இருந்து அவரே அதைக் கொடுக்க, தலைமுறை தலைமுறையாக “சிவாசாரியார்” வம்சாவளியில் கொண்டு சென்று இன்று இதை சுமங்கலிகளுக்கு அஷ்டோத்திரமாக பூஜை செய்வது என்பது மிகவும் பிரமிப்பூட்டும் விஷயம்.

இந்த முறை 108 சுமங்கலிகளை அழைத்து அவர்களுக்கு மேற்சொன்னாபடி, எல்லா உபசாரங்கள் செய்து அனுப்பி வைத்தார்கள். இதற்க்கு முந்திய வருடம் 300 சுமங்கலிகளை அழைத்து வந்து பூஜை செய்தார்கள்.

முதலில் செம்மங்குடி கிராமத்தில் பிறந்த சுமங்கலிப் பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து, பிறகு வெளியில் இருந்து.  இதில் ஆச்சர்யம் என்ன வென்றால், இதில் பங்கு பெறுவதற்கு, எதிர்பார்த்ததற்கு மேலாக பெண்கள் பேர் கொடுக்க, மிகவும் திண்டாடி இந்த பைனல் லிஸ்டை, ரெடி பண்னியது என்பதே, ஒரு மிகப்பெரிய சவால்.

கிராமத்தில் இவர்களை முதலில் பதிவு செய்து,  அழைத்து வருவது, தங்க வைப்பது, மற்ற உபசாரங்கள், எல்லாம் முடிந்து, திருப்பி ஜாகிரதையாக அனுப்பி வைப்பது என்பது மிகவும் கடினம். 

ஒரு குழு இரவு பகலாக வேலை செய்து, ஒவ்வொரு சுமங்கலிக்கும் சகல வசதிகளும் செய்து கொடுத்து, அவர்கள் முகம் கோணாமல், வெற்றிகரமாக நடத்தியது தான் ஒரு பெரிய சாதனை.  இதை நகரத்தில் கூட  நினைத்தே பார்க்க முடியாது.

மேலும் இந்த நாட்களில் நடந்த கோலாட்டம் அழகாக ஒத்திகை செய்யப்பட்டு, மிகவும் பிரமாதமாக நடந்தது. நவராத்திரி சமயத்தில் நடக்கும் “தாண்டியா” என்கிற வட நாட்டு  நடனத்தை நினைவு படுத்தியது.

கோலாட்டம் என்பது எத்தகைய முக்கியம் வாய்ந்தது என்பதற்கு ஒரு குறிப்பு எனக்குக் கிடைத்தது.

“ஹல்லீச லாஸ்ய சந்துஷ்டாயை நமஹா.... என்று லலிதா திரிஷதியில் ஒரு நாமம் உண்டு.  ஹல்லீசம் என்பது கோலாட்டம்.  லாஸ்யம் என்பது ஆட்டம்.  விசித்ரமான கோலாட்டக் குச்சிகளைக் கொண்டு பெண்கள் ஆடும் இந்த அற்புத நடனத்தை செம்மங்குடியில் பார்க்க வேண்டும்”

இதில் டிரஸ்டி ஸ்ரீ. சேதுராமன் அவர்களின் அர்ப்பணிப்பு, ஸ்ரீ. கௌரி ஷங்கர் அவர்களின் பங்களிப்பு எல்லாம் அபாரம். ஊர் கூடி தேர் இழுக்கவேண்டும் என்பார்கள், அது இங்கு நடந்தது

சௌந்தர்ய லஹரியில், பகவத்பாதாள் “உன் கருணையை என் மேல் கொஞ்சம் தெளி” என்கிறார் (ஸ்நபய க்ருபயா மாமபி ஷிவே). செம்மங்குடிக்கு நீங்கள் வந்தால், அந்த கருணை சுமுத்திரத்தில் நீங்கள் நனையலாம்.

எங்கள் ஆனந்தவல்லி யைப் பற்றி எழுதுவதென்றால் எனக்கு மிகவும் குஷி யாகிவிடும். நான் பிறந்த செம்மங்குடியில், “இதுதான் அம்பாள், இவளை இறுக்கிப் பிடிச்சுக்கோ” என்று  எனக்கு காட்டப்பட்டு, அவளுடனேயே வாழ்ந்த பள்ளி நாட்கள். வெள்ளிக்கிழமை வராதா என்று ஏங்கி, என் அம்மா குமுட்டியில் வைத்த பயத்தம் பருப்பு பாயஸமும், வடையும்  எடுத்து ஆனந்தவல்லிக்கு நைவேத்யம் பண்ணி, அதில் கொஞ்சம் சாப்பிட்டப்போது நான் அடைந்த இன்பம், இப்போதும் அடைகிறேன் என்றால் “அவள்” என்னிடம் காட்டும் கருணைதான்.

Seeing is believing என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். ஒரு கிராமத்தில் இத்தனை விமர்சியாக நடக்கும் இந்த வைபவத்தை எவ்வளவு எழுதினாலும் போதாது. எல்ல்லோரும் வந்து பார்த்து அனுபவிக்கவேண்டும்.

ஒவ்வொரு வருடமும் மிகுந்த ஸ்ரத்தையுடன், மிகுந்த பக்தியுடன் செய்யப்படும் இந்த சம்வத்ஸர அபிஷேகம், எல்லோருக்கும் மங்களத்தைக் கொடுக்கட்டும்.