Sunday, 24 May 2026

தீட்சிதர் உபன்யாச தேன் துளிகள் - 4 - பீஷ்மர் உபதேஸம்

 

அம்புப் படுக்கையில் பீஷ்மர்.  கிருஷ்ணர், பஞ்ச பாண்டவர்களிடம், பீஷ்மரிடம் போய், தர்மம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்” என்கிறார்

சொன்னவர் யார். பகவத் கீதை சொன்ன பரமாத்மா !!! 

பீஷ்மர் யார் ?  தன் மரணத்தை தானே நிர்ணயம் செய்து கொள்ளும் வரம் பெற்றவர். இப்படி ஒரு கதாபாத்திரம் எந்தப் புராணத்திலும் பார்க்க முடியாது. அந்தக் காலனையே நிற்கவைத்து “நான் சொன்ன போது தான் வர வேண்டும்” என்று ஒருவர் சொன்னார் - என்றால் எவ்வளவு தபஸ் இருக்கவேண்டும் ?

இப்படி ஒரு வரம் நமக்கு கிடைக்காததனால் தான், நாம் இந்த ஆட்டம் ஆடிக்கொண்டு இருக்கிறோம். இல்லாவிட்டால் LIC  18 மாடி கட்ட முடியுமா என்ன ?!!!!  நம் வாழ்வை நம்பித்தான் எல்லா இன்சூரன்ஸ் கம்பனிகளுக்கும் சாப்பாடு !!! அவர்களுடைய ஷேர் விலை உயர்வதற்கு நம் “Expiry Date” தான் காரணம் என்பது விசித்திரமான உண்மை.

அவர் அம்புப் படுக்கையில் படுத்துகொண்டு உத்தராயண புண்ய காலத்தில் உயிரை விட வேண்டும் என்று நினைப்பவர்.

போகிறார்கள். பீஷ்மரிடம், எங்களுக்கு தர்மோபதேசம் செய்யவேண்டும் என்று தர்மபுத்திரர் கேட்க, அதிர்ச்சியுடன் கலந்த ஆச்சர்யத்துடன் “நான் இருக்கும் இந்த நிலையைப் பார்த்தீர்களா !!!. அம்புப் படுக்கை, ரத்தம் அம்பு வழியாக கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறிக்கொண்டு இருக்கிறது. மேலும், தர்மத்தின் உருவாக, பரமாத்மா கிருஷ்ணன் எதிரில், நான் என்ன தர்மம் சொல்ல முடியும்” என்று சொல்கிறார்

அதற்கு, கிருஷ்ணர், “நீங்கள் பெரியப்பா வாக இல்லாமல், குருவாக இருந்து இதுவரை பஞ்ச பாண்டவர்களையும் கவனித்துக் கொண்டிருக்கிறீர்கள். அதே குருவாக இருந்து, குழந்தைகளுக்கு தர்மம் சொல்லவேண்டும்.” என்று கேட்க. அதற்க்கு, பீஷ்மர், “நான் சொல்கிறேன், ஆனால் நீ என்மேல் உன் குளிர்ந்த பார்வை படும்படி இருக்கவேண்டும்” என்று சொல்ல, கிருஷ்ணர் “நான் அதற்காகத்தான் வந்திருக்கிறேன்” என்று சொல்கிறார்

யுதிஷ்டிரர், “கோதர்மஸ் சர்வதர்மானாம் பவத: பரமோ மத: என்று ஆரம்பிக்க......

பீஷ்மர் ஆரம்பிக்கிறார். தர்மம் சொல்வதற்கு, உடலும், மனமும் ஒத்துழைக்க வில்லை என்று சொன்னவர்- 8000 ஸ்லோகங்கள் தர்மம் சொல்கிறார் !!!

 ஜகத் ப்ரபும் தேவ தேவம் ஆனந்தம் புருஷோத்தமம்” என்று சொல்லும் விஷ்ணு சஹஸ்ரநாமம் என்ற ரத்னத்தை நமக்குத் தருகிறார்.

விஷ்ணு சஹஸ்ரநாமம் ஏன் உசந்தது ?  பீஷ்மர் என்ற பக்தன் சொல்ல, எதிரில் இருக்கும் பகவான் அதை ஆமோதித்து எழுதப்பட்ட கிரந்தம். இது போல் எனக்குத் தெரிந்து வேறு எந்த ஸ்லோகமோ, காவியங்களோ இல்லை. நாராயணீயம் எழுதிய பட்டத்ரீயோ, தரங்கம் எழுதிய நாராயண தீர்தருக்கோ, அவர் ஒரு சமயத்தில் காக்ஷி கொடுத்தாரே தவிர, இப்படி பூரா கேட்டு அனுபவிக்கவில்லை. 

கொஞ்சம் என் நினைவுகள்

இதில் நான் மறக்கமுடியாத நினைவு. ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 25 வரஹூரில் அகண்ட விஷ்ணு சாஹஸ்ரநாமம் சொல்லுவோம். அதாவது காலையில் 6 மணிக்கு ஆரம்பித்து, அடுத்த நாள் காலை 6 மணி வரை. மேலும் லக்ஷம் ஆவர்த்தி விஷ்ணு சஹஸ்ரநாமம், 10  பட்டாச்சார்யர்கள் வந்து, நிறைய புஷ்பங்கள் சமர்ப்பிக்க, கோலாகலாமாக நடக்கும்

இதை நான் ஒரு தடம் தீக்ஷிதர் மாமாவிடம் சொன்னேன். அவர் ஆச்சர்யப்பட்டு சொன்னார். “பெருமாள் நினைத்தால் தான் இது தான் நடக்கும். வரஹூர் வாசிகளின் ஆத்மார்த்தமான அன்புக்கு அவர் எப்போதுமே கட்டுப்பட்டவர். மாணிக்கவாசகர் சொன்னது போல் “வேண்டத்தக்கது அறிவோய் நீ, வேண்ட முழுதும் தருவோய் நீ” என்ற வாசகம் பெருமாளுக்கும் முழுவதும் பொருந்தும். அவர் கருணை இல்லாமல், ஒரு 5 ரூபாய் வாழைப்பழம் கூட கொடுக்க முடியாது” என்றார்

பெருமாள், தீட்சிதர் மீது சொல்லமுடியாத அனுக்ரஹ மழை பொழிந்தார் என்று பல உதாரணங்கள் சொல்ல முடியும். ஒன்று சொல்கிறேன்

சாதாரணமாக, ஸ்வாமி புறப்பாடு என்பது, வரஹூரில் பெரிய வைபவம், ஸ்வாமி புறப்பாடு என்று வெளியில் வந்தால், ஸப்த பிரதக்ஷிணம், சதுர் வேதம், உபநிஷத். அஷ்டபதி, தரங்கம், ராமத்யானம், கிருஷ்ண, வெங்கடேச த்யானம், கடைசியில் கோணங்கி – இவைகள் இல்லாமல் உள்ளே போகமாட்டார். உள்ளை “ஏகாந்த சேவை வேறு” இது இஷ்டத்துக்கு பண்ண முடியாது. கட்டளை உண்டு

போன ஜனவரி வரஹூர் சப்தாஹத்தில், திடீரென்று கருட சேவை (கருடர் அலங்காரத்தில் சுவாமி புறப்பாடு) என்று தீட்சிதர் மாமாவுக்குத் தோன்ற, அது சரிப்படுமா என்று யோசித்தார்.  அந்த 7 நாட்களில் நடந்த வைபவத்தில் திடீரென்று கட்டளைக் காரர்கள் வர முடியாத காரணத்தினால், கருட சேவை தீட்சிதர் “மண்டகப்படியாக நடந்தது” 

இன்னொரு ஆச்சர்யம், புறப்பாடுக்கு முன்பு ஒரு மணி நேரம் நல்ல மழை. மழை என்றால் புறப்பாடு பண்ண மாட்டார்கள். உள்ளே வைத்து பாடி முடித்துவிடுவார்கள்.என்னடா இது சோதனை என்று நினைத்தபோது,  “ஜம்” என்று மாமா வந்தார். ஒரு துளி மழை இல்லை. அழகாக புறப்பாடு ஜாம் ஜாம் என்று

இதில் என்ன ஆச்சர்யம் என்றால், அன்று இரவு நல்ல மழை.

திருப்பியும் (தீட்சிதரின்) பீஷ்மர்:

எம்.எஸ் சுப்புலக்ஷ்மி அவர்கள், விஷ்ணு சஹஸ்ரநாமம்   சொல்லி, மஹா பெரியவாளிடம் அந்த ரெகார்ட், ரிலீஸ் செய்வதற்கு கேட்டபோது, “சந்திர சூரியர்கள் இருக்கும் வரை உன் புகழ் இருக்கும் மா” என்று சொன்ன அற்புதமான ஸ்லோகங்கள் இது.

கொஞ்சம் நாம் யோசித்துப் பார்க்கவேண்டும். “முந்த நாள் படித்த செய்தித்தாளில் வருகின்ற, 2 செய்திகள் நமக்கு நினைவு வருவதில்லை. காலையில் பேப்பரை பிரிக்கிறோம், அது நேற்றைய பேப்பர் என்றால் அப்படியே போட்டு விடுகிறோம், மடித்து கூட வைப்பது கிடையாது. அதை பூரா கூட படித்திருக்க மாட்டோம்.  ஆனால் விஷ்ணு சஹஸ்ரநாமம் இன்றும் நம் கூட இருக்கிறது. 

பீஷ்மர், மேலும் “ராஜ தர்மம், மோக்ஷ தர்மம், தனி மனித ஒழுக்கங்கள், தான தர்மம் என்று தர்மத்தைக் கொட்டுகிறார், ஸ்திரீ தர்மம் முதற்கொண்டு சொல்கிறார். இதில் ஆச்சர்யமாக, புருஷ தர்மம் பற்றிச் சொல்லவில்லை.

ஏனெனில், புருஷனுக்கு என்று ஒரு தர்மமும் இல்லை. அவன் வீட்டில் ஸ்திரீ யைப் பொறுத்து தான் அவன் தர்மம். எந்த நல்ல கார்யங்களும், கெட்ட கார்யங்களுக்கும், பின்னே ஸ்திரீ நிற்க வேண்டும்.

தர்மத்தை விடுங்கள். ஸ்திரீ சரியில்லை என்றால் விருந்துக்கு வருபவருக்கு ஒரு கப் காப்பி கூட கிடைக்காது.......

No comments: