Tuesday, 12 May 2026

ப்ரும்மஸ்ரீ சுப்பிரமணிய தீக்ஷிதரின் உபன்யாசத்திலிருந்து – தேன் துளிகள் - 1

 

மரவுரி அழகு

 அழகில்லா ஒரு வஸ்து, அழகான ஒரு விஷயத்துடன் சேரும்போது அதுவும் அழகாக ஆகிவிடும்

மரவுரி கட்டிக்கொண்டு ராமன் கிளம்பியபோது, ஒரு ராஜாவாக, ஆபரணங்களும், ஆடைகளும்  கட்டிக்கொண்டு இருக்கும்போது எவ்வளவு அழகாக இருப்பானோ, அதைவிட பல மடங்கு அழகாக இருக்கிறான். அவன் அழகைப் பார்த்து, காட்டில் ரிஷிகளே ஆசை கொண்டு ஆலிங்கனம் செய்து கொள்ள ஆசைப்படுகின்றன.

காளிதாசன், சாகுந்தலத்தில் இந்த கருத்தை எடுத்து ஒரு உவமையில் சொல்கிறார்.

சாகுந்தல நாடகத்தில், “மரவுரியை உடுத்தி இருப்பதால், சகுந்தலையின் அழகு கொஞ்சம் கூட குறையவில்லை. மேலும் அழகு வாய்ந்தவளாக காணப்பட்டாள். சந்திரனில் காணப்படும் களங்கம், அதன் அழகைக் கெடுப்பதில்லை.”

सरसिजमनुविद्धं शेवलेनापि रम्यं

मलिनमपि हिमांशोः लक्ष्म लक्ष्मीं तनोति

इयं अधिकमनोज्ञा वल्कलेनापि रम्या

किमिव हि मधुराणां मण्डनं नाकृतीनाम् 

குளத்தில் பாசி பார்த்திருப்போம். பச்சையாக இருக்கும். அது குளத்தில் இறங்கும்போது காலில் ஒட்டிக்கொண்டு விடும். கஷ்டப்பட்டு எடுத்து எறிவோம். கடுப்பாக இருக்கும். அந்த பாசியே, குளத்தில் அலைகளால் லேசாக நகர்ந்து அங்கு இருக்கும் தாமரையில் ஒரு 3 அடிக்கு, தண்டில் ஒட்டிக்கொண்டிருக்கும். அது அந்த தாமரைக்கு மிக அழகாக இருக்கும். ஒரு பாசிக்கு அடித்த யோகம். 

மரவுரியின் அழகை அருணாச்சல கவிராயர், ராம நாடக கிருதியில் -- தரித்த மரவுரி இடையும் நடையும் கண்டு மனதையெல்லாம் உருக்கி வார்க்குமே --என்கிறார். “  

அதே போல் குருக்ஷேத்ர யுத்தத்தில், கிருஷ்ணர், தேரை லாவகமாக ஒட்டி, அர்ஜுனனுக்கு ஆபத்து வராமல் பார்த்துக் கொள்கிறார்  இது மிகவும் கஷ்டமான ஆயாசமான வேலை.  அப்படிப் பண்ணும்போது, யுத்த பூமியில், குதிரைகள் ஓட, அந்த புழுதி மேலே எழும்பி, பரமாத்மாவின் நெற்றியில் முத்து முத்தான வேர்வை- அதன் மேல் ஒட்டிக்கொண்டு இருக்கிறது.  

அதைப் பார்க்கும்போது, ஸ்ரீ ரங்கத்தில், பெருமாளுக்கு, முத்தங்கி சேவை நடக்கும். மிகவும் விலை உயர்ந்த முத்துக்கள், பவழம் இவைகளை வைத்து ரங்கநாதரை அலங்காரம் செய்வார்கள். இதைவிட, யுத்த பூமியில், கிருஷ்ணரின் இந்த கோலம் பல மடங்கு அழகாக இருக்கிறது.

”புழுதிக்கு வந்த பெருமை”  

இதே போல், “நயா பைசா” பிரயோஜனம் இல்லாத நாம். அவர் திருவடிகளை இறுக்கிப் பிடித்துக் கொள்ள வேண்டும். “பட்டி மாடான நான் உன்னை விட்டிராமே உலோகித, பத்ம சீர்பாத நீ இனி வந்து தாராய்” என்று திருசிராப்பள்ளி திருப்புகழில். அருணகிரிநாதர் பாடுகிறார்

தாயுமானஸ்வாமிக்கு, உபதேசம் செய்த முருகனாக பாவித்து செய்த அற்புதமான திருப்ப்கழ்

இதே போல் மெய் சிலிர்க்க வைக்கும் பல உபமானங்கள், முடிந்தபோது எழுதுகிறேன்.

 என்னுடைய எண்ணம்:

இதை நாராயண தீர்த்தர், தரங்கத்தில்.

உத்தவர் கிருஷ்ணனின் உத்தரவின் பேரில், கோபிகைகளிடம் சென்று, அவர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு திரும்பி வந்து, கிருஷ்ணரிடம், கோபிகளின் பக்தியை புகழ்ந்து சொல்லுவதாக ஒரு பாட்டு இருக்கிறது.

“இதி வததி ஹி கோபி..” என்று ஆரம்பிக்கும் தரங்கம். நாங்கள் காம்போதியில் பாடுவோம். அதில் சொல்கிறார்.

मणिनायक मणिरपि परमधुना

गुनयोगे सति काचमणीनाम

मरकतमणिरपि मध्ये घटितो

गणनीयह: किं नहि काचेषु ।

“இரத்தினங்களில் மிகவும் சிறந்தது என்று புகழப்படும் மரகதம், பாசி மணிகளின் நடுவே சேர்க்கப்பட்டாலும், அந்த மரகதத்தின் அழகு ஒரு போதும் குறையாது அல்லவா, அதே போல், கிருஷ்ணன் எங்களிடம் இருப்பதால் அவர் அழகு கொஞ்சம் கூட குறையாது. என்று கோபிகைகள் சொன்னதாக ....சொல்கிறார்

மேலே உபமானங்கள் ஒரு புறம் இருக்கட்டும். நாமே எப்போவாவது கோவிலுக்குப் போய், ஒரு வீபூதியோ, குங்குமமோ இட்டுக்கொண்டு வந்தால், வீட்டில், “என்னப்பா பளிச் னு இருக்கியே” என்கிறார்கள்.  என்ன இது கொஞ்சம் உல்டா.  அழகான வஸ்து அழகில்லாத நம்மை சேருகிறது.

 

No comments: