Thursday 30 March 2017

கேட்டதும், பெற்றதும்- humour club- திருப்பூர் கிருஷ்ணன்

திருப்பூர் கிருஷ்ணன் ஒரு மிக சிறந்த பேச்சாளர்.  அவர் ஒரு முறை,  humour club என்ற ஒரு அமைப்புக்காக, சென்ற காந்தி ஜெயந்தி அன்று,  பாரதிய வித்யா பவனில், பேச வந்திருந்த போது, நகைச்சுவையுடன் பல அருமையான விஷயங்களை சொன்னார்.  அதில் சிலவற்றை கீழே கொடுத்திருக்கிறேன். எப்படியாவது அவருடைய, சொற்பொழிவை பதிவு செய்ய எண்ணினேன்.  அதனால் தான் “better late than never”

காந்திஜியைப் பற்றிச் சொல்லும்போது, அவர் உடல் நலத்தைப் பேணிக் காப்பதைப் பற்றிச் சொல்லி இருக்கிறார். அதில்

கொயாப்பழத்தின், விதையை அப்படியே முழுங்கினால், அது ஜீரணத்திற்கு மிகவும் நல்லது,  அதே விதையை கடித்துச் சாப்பிட்டால், அதில் ஒரு அமிலம் இருக்கிறது.  அது இதயத்திற்கு மிகவும் நல்லது.  Heart attack  வராமல் தடுக்கும்.

காந்திஜியைப் பற்றிச் சொல்லும்போதி. “காந்திஜியின், மனைவி இறந்த பிறகு, அவர் உடல் எரியூட்டப் படுகிறது.  திரும்பி வந்தபிறகு, ஒருவர் வந்து காந்தியிடம் “கஸ்தூரிபா காந்தி  தகனமான பின்பும் கூட, அவருடைய கையில் இருந்த கண்ணாடி வளையல்,  அப்படியே இருக்கிறது” என்று கொடுத்தாராம்.  அதப் பார்த்து, காந்திஜி நெகிழ்ந்து போய், கண்ணில் ஒற்றிக் கொண்டு சொன்னாரம்.  “உயர்ந்த பத்தினிப் பெண்களின் அடையாளம் இது” என்றாராம்.
வள்ளலாரைப் பற்றிச் சொல்லும்போது, “மனித வாழ்க்கையில், நோய் வருவதற்க்கு, முக்கிய காரணம்,  சிறுநீர், மலம், ஒழுங்காகப் போகாமல் அடக்கி வைத்திருப்பதால் தான். அந்தக் காலத்தில், ஆண்களை விட பெண்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதற்குக் காரணம், அவர்களுக்கு பொதுக் கழிப்பிடம், கிராமங்களில் இல்லாதது தான்.

தற்போது பாரதப் பிரதமர் மோடி அவர்களின், கழிவறை திட்டத்தின், முக்கியத்துவம் புரிகிறதல்லவா ?

காமராஜரைப் பற்றி, அருமையான ஒரு விஷயம் சொன்னார்- ஒரு முறை காமராஜர் டெல்லி சென்றிருந்தார்.  அப்போது “எடை பார்க்கும் இயந்திரம்” வந்திருந்த காலம் அது.  புதியதாக ஒரு Machine  வந்திருந்தது. எல்லோரும் ஒரு ரூபாய் போட்டு எடை பார்த்துக் கொண்டிருந்தனர்.  காமராஜர் பக்கத்தில் இருந்த ஒருவர் “நீங்களும் எடை பாருங்களேன்” என்று கூற அவர் “இருக்கட்டும், இருக்கட்டும், பிறகு பார்க்கிறேன்” என்றாராம்.  அவர், திரும்ப திரும்ப காமராஜரை வற்புறுத்த, பக்கத்தில் இருந்த நேரு “காமராஜரை விட்டு விடுங்கள், அவரிடம் சட்டைப் பையில் ஒரு ரூபாய் கூட இருக்காது, போடுவதற்கு” என்றாராம்

(என்னால் நினைத்தே பார்க்க முடியவில்லை- இப்படியும் ஒரு தலைவர் தமிழ் நாட்டில் இருந்தார் என்று.)

 தமிழில் நகைச்சுவை என்பது “சொற்களை மாற்றிப் போடுவதன் மூலம், சிறிய ஆங்கில வார்த்தைகள் மூலம்” கொண்டு வரலாம் என்பதை அழகாக விளக்கினார்
·        
     ஒருவர், மளிகை கடைக்காரருக்கு, கடிதம் எழுதுகிறார்- “எனக்கு ரவா வேணும்,  இது தான் என் பேரவா. நானே வரவா, என் பையனை அனுப்பித் தரவா ?”
    கடைகாரர்- “இது என்ன பெரிய தொந்தரவாப் போச்சு”

·        ஒருவர்- அருவி இருக்கு, நீர் வீழ்ச்சி இருக்கிறது என்று சொல்லி இங்கு வந்து பார்த்தால், ஒன்றுமே இல்லையே-
பதில்- சார், உங்களுக்கு யாரோ False (falls) information கொடுத்திருக்கிறார்கள்.

·        அப்பா, மகனிடம்- மகனே, உன்னை  “உளுந்து, பெருங்காயம் வாங்கச்சொன்னால், நீ கீழே உளுந்து  (விழுந்து), பெருங்காயப்பட்டு, வந்திருக்கிறாயே ?!”

·        ருத்தி, இன்னொருத்தியிடம்- “அடுக்கு மாடிக் கட்டிடத்தின் 10 வது மாடியிலில் இருந்து, மாமியார், மருமகளைக் கீழே தள்ளி விட்டாளாமே, இது அடுக்குமாடி ?

 திலகரைப் பற்றி ஒரு அருமையான தகவல் சொன்னார்
திலகர் சிறையில் தள்ளப்பட்டார்.  அது அவரது மனைவிக்கு ரேடியோ மூலம் தெரிய வந்தது.  அவர் மிகவும் அதிர்ச்சி அடைந்தார். அவருக்கு அழகு அழகாக மூண்று பெண் குழந்தைகள்.  அப்போது பெண் குழந்தைகளுக்கு கல்வி அறிவு கிடையாது. 

திலகரின் மனைவி, சத்தியபாமா,  சேதி கேட்ட அன்றே, இறந்து விட்டார்கள்.   சுதந்தர இந்தியா பெறுவதற்காக  இவர்கள் செய்த உயிர் தியாகத்தை  நாம் மறந்து விட்டது கொடுமை.  சுதந்திரக் கொடி, எத்தனை தாலிக் கொடியின் வலிமையில் பின்னப் பட்டது என்பதை மிகவும் ஆழமாக நம் மனதில் இருத்திக் கொள்ள வேண்டிய ஒரு விஷயம்.

திருப்பூர் குமரன்:   திருப்பூர் குமரன் தம் கையில் கொடி பிடித்துக்கொண்டு போராடும் போது,  ஆங்கிலேயர்களால் தலையில் “லத்தி அடி” வாங்கினார்.  அந்த அடி, அவரின் தலையின் “சில்லை” 2 cm பெயர்த்து விட்டது.  உடனே அவரை hospital லில் சேர்க்க, யாருமே வைத்தியம் பார்க்க முன் வரவில்லை.  ஆங்கிலேயர் பயம்.  கடைசியில் ரங்கநாதன் என்ற ஒரு மருத்துவர் வைத்தியம் பார்த்தார்.  (இப்பொழுதும் அவர் பெயரில் ரங்கநாதபுரம் என்ற ஒரு ஊர் திருப்பூரில் உள்ளது.). மருத்துவ சிகிச்சை பயனில்லாமல்,  குமரன் மரணமடைந்து விட்டார்.

ராமாயி என்ற அவரது மனைவிக்கு அப்போது 12 வயது. புஷ்பவதி ஆவதற்கு முன்பு விதவைக் கோலம். சுதந்திரப் போராட்டக் காலத்தில் நடந்த பல அவலங்களில் இதுவும் ஒன்று. வறுமை. அடுத்த வேளை சோறுக்கு வழி இல்லை. பத்து பாத்திரம் தேய்த்து பிழைப்பு நடத்தலாம் என்றால், பயந்து கொண்டு (வெள்ளைக்காரர்களை எதிர்த்த குடும்பம்) வேலை கொடுக்கக் கூட ஆளில்லை. 

அப்போது காந்தி மகான் திருப்பூருக்கு விஜயம் செய்தார்.  அவர்  வந்து முதலில் கேட்ட கேள்வி, குமரனின் மனைவி எப்படி இருக்கிறார் ? என்பதுதான் ? அவர் மகாத்மா,  சுதந்தரத்தின் வலி அவருக்குத் தெரியும். உடனே அவர் நடந்து வந்து ராமாயியைப் பார்க்க, பிறகுதான் பலரின் கவனம் ராமாயி மேல் திரும்பியது. 
ஓடக் காட்டில் ஒரு வீட்டில் ராமாயி குடியிருந்த பொது, திருப்பூர் கிருஷ்ணன் (தான்)  அடிக்கடி அவர் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்ததை நினைவ கூர்ந்தார்.

ஒரு முறை,  ராமாயி வீட்டுக்கு ஒரு நடிகர் வந்திருந்தார்.  அவர் மிகப் பெரிய நடிகர்.  ராமாயி அம்மாள், சினிமா பார்ப்பதில்லை என்பதால் அவருக்கு யார் வந்திருக்கிறார் என்று தெரிய வில்லை. உங்கள் பெயர் என்ன என்று ராமாயி அம்மாள் கேட்க அவர்  எம். ஜி . ராமச்சந்திரன் என்றார். உடனே, நன்கு சாப்பிடுகிறாயா ? என்று கேட்டார். அசந்து போன எம். ஜி, ஆர், தான் வறுமையில் இருந்த பொது கூட, விருந்தோம்பலில் எந்தக் குறையும் வைக்காத ராமாயி அம்மாளின் உயர்ந்த குணத்தைப் பார்த்து, போகும் பொது ரூபாய் 25,000 கொடுத்து விட்டுச் சென்றார்.

தலைமை செயலகம் திரும்பியவுடன், எம்.ஜி, ஆர் செய்த முதல் வேலை, அதுவரை “சுதந்திர போராட்டத் தியாகிகளுக்கு” என்று இருந்த பென்ஷனை,  முதியவர்கள் என்ற வகையில், அவர்களுடைய மனைவிகளுக்கும் உண்டு என்று சட்டம் கொண்டு வந்தார்.

எம்.ஜி,ஆர் மறந்த செய்தி கேட்டபோது, ராமாயி அம்மாள் மிகவும் வருத்தப்பட்டு “தன் பிள்ளை” இறந்து விட்டதாக எண்ணினார்.  “தாயாரை பொருளாதார ரீதியாக எவன் நன்றாக வைத்துக் கொள்கிறானோ அவன் தான் பிள்ளை. மற்றவர்கள் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன ?” என்றார். தன்னையும் ஒரு தாயாக மதித்து, பென்ஷன் திட்டத்தைக் கொண்டு, என் வறுமையை ஒழித்த அவர் என் மகன்.  அவருடைய மறைவு எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது என்றார்.

ஒரு முறை ராமாயி அம்மாள், ஒரு சினிமா பார்க்க ஆசைப்பட்டார்கள். திருப்பூரில் “டைமண்ட்” டாக்கீஸில் அந்த படம் ஓடிக்கொண்டிருந்தது.  அது சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த “ராஜபார்ட் ரங்கதுரை”.  அந்தப் படத்திற்கு அழைத்துச் சென்று பார்த்த போது, அதில் “திருப்பூர் குமரனாக” சிவாஜி நடிக்கும் ஒரு சீன் வந்தது.  அந்த சீனில், கடைசியில், குமரன், ஆங்கிலேயர்களால், அடி வாங்கும் காட்சியைப் பார்த்து, ராமாயி அம்மாள், மயக்கம் போட்டு விழுந்து விட்டார்கள்.

பிறகு மயக்கம் தெளிவித்து, வீட்டிற்க்கு, அழைத்துச் சென்று, “ஏனம்மா,
 உணர்ச்சி வசப்பட்டு விட்டீர்கள் ? என்று திருப்பூர் கிருஷ்ணன் வினவ, அவர், “நான் என் கணவரை சரியாகப் பார்த்தது கூட கிடையாது.  அவர். சுதந்தரப் போராட்டத்தில் இருந்ததால், வீட்டிற்கு வருவதே கிடையாது. அவர் மறைந்து விட்டார். இந்தப் படம் பார்க்கும்போது, என் கணவரையே, சிவாஜி கணேசன் அவர்களின் மூலம் பார்த்தேன்”  என்றார்.  இந்த விஷயத்தை, தான் இறக்கும் வரை யாரிடம் சொல்லக் கூடாது என்றும் சத்தியம் வாங்கிக் கொண்டார் (திருப்பூர் கிருஷ்ணனிடம்).  என்ன ஒரு பெண்மணி, என்ன ஒரு தூய வாழ்க்கை ?
இதை கேட்டப்போது அரங்கத்தில் எழுந்த கரகோஷம், அப்பப்பா....!!!
                                                                              (தொடரும்)



Monday 20 March 2017

சஹானா கல்யாண வைபோகமே.... (16-3-17)

புரந்தரதாசர் எழுதிய ஒரு பாடலில், மகாலக்ஷ்மியிடம் யாருக்கு  நீ 

மனைவியாகப் போகிறாய் என்று கேட்டு ஒரு  “பட்டியல்” கொடுக்கிறார்.  அதில்

ஸ்ரீ ராமச்சந்தர மூர்த்திக்கா

ஸ்ரீ அனந்த பத்மநாப சுவாமிக்கா

ஸ்ரீ ஜநார்தனுக்கா

ஸ்ரீ ஸ்ரீ ரங்கனாதருக்கா..   என்று பட்டியல் நீண்டுகொண்டே  போய், 

கடைசியில், தன்னுடைய, முத்திரை சரணமான, “புரந்தர விட்டலருக்கா” என்று முடிக்கிறார்.  இந்தப் பாடலை எனக்கு மிகவும் பிடித்த “மகாராஜபுரம் சந்தானம்”,  பெங்களூரில்,  சாம்ராஜ்பேட் என்ற இடத்தில், ஒரு கச்சேரியில் ராக மாலிகையில் பாட,  எனக்கு பக்கத்தில் இருந்த பெண்மணி  தாரை தாரை யாக கண்ணீர் விட்ட காட்சி என் நினைவில் பசுமையாக இருக்கிறது.

பத்மாவதி என்ற சஹானா, கல்யாணத்தை பார்த்திருந்தால், புரந்தர தாசர்
சிரஞ்சீவி. கீலகேஸ்வரனையும் சேர்த்திருப்பார்.

மிகவும் அருமையான ஒரு திருமண வைபவமாக அமைந்தது இது.  என் வாழ்க்கையில் நான் இழந்த ஒரு பெரிய பொக்கிஷம் என் தாத்தா, பாட்டி (நான் கூப்பிடுவது, அம்மா,  அப்பா )  அவர்களின் மறைவுக்குப் பிறகு, எங்கள் குடும்பத்தில் நடக்கும் முதல் வைபவம் என்பதால்,  அவர்களுடைய பிரிவு என்ற ஒரு சோகம், அவர்கள் ஆசீர்வாதம் என்ற ஒரு சந்தோஷமாக மாறி, எங்களை வாழ்த்தியது

இவர்கள்  பல சமயங்களில், எனக்கு ஒரு வழிகாட்டியாக இருந்து என்னை நடத்திச் செல்கின்றனர். அவர்கள் தங்களுடைய பேத்தி கல்யாணத்தையும் மிகவும் சிறப்பாக நடத்தி ஆசீர்வாதம் செய்தது, நிதர்சன உண்மை.  இது உணர்வு பூர்வமான விஷயம்.  எங்கள் செம்மங்குடி குடும்பத்திற்கே தெரிந்த, அறிந்த ஒரு சொத்து.  

இன்னும் “அசோக வனத்து” சீதை போல், அப்பா வரமாட்டாரா என்று ஏங்கிக் கொண்டிருக்கிறோம்- என்றாலும் சூக்ஷ்மமாக, பல ரூபத்தில் எங்களுடன் இருக்கிறார் என்பதுதான் சத்தியம்

கல்யாணத்தில் நாங்கள் கண்ட, ஒரு உண்மை, வைதீகர்கள் “ஒருமித்த கருத்துடன்” திருமணத்தை நடத்திக்கொண்டு போவதில்லை என்பதுதான்.  “professional jealousy” என்பது எங்களைப்போன்ற “வேலை செய்பவர்களுக்கு” இருக்கும்.  வைதீகர்களுக்கும் இருந்து, மிகவும் ஆச்சர்யமாகவும், வேதனையாகவும் இருந்தது.  சம்பந்திமார்களுக்கு பயந்த காலம் போய், வைதீகர்களுக்கு பயப்படும் காலம் வந்திருப்பது,  மிகவும் வருந்தத்தக்க ஒரு விஷயம். 

சட்டத்தைப் (law) பற்றிப் பேசும்போது, “landmark judgement” என்று சொல்லுவார்கள். நாங்கள் ஒவ்வொரு வைதீக கார்யத்திலும் எங்கள் அப்பா கொடுத்த “landmark judgement” ஐ புரிந்து கொள்ளாமல், எழுதியும் வைத்துக் கொள்ளாமல், இப்போது இருக்கும் வைதீகர்களிடம், சரியான தெளிவு இல்லாமல், நாங்கள் பட்ட அவஸ்தையை ஒரு 100 episode ல்  SUN TV ல் serial ஆக எடுக்கலாம்.

கல்யாணம் என்பது ஆயிரம் காலத்து பயிர், இப்போது இது ஏதோ என்று ஆகிவிட்டாலும்,  மிகவும் சிறப்பாக,  சிறந்த வைதீக முறைப்படி,  பத்திரிக்கை முதற்கொண்டு சம்ஸ்க்ருத்திலும் அடித்து,  பார்த்து, பார்த்து, ரசித்து, திருமணம் செய்து கொடுத்தின் மூலம், என் மாமாவும்,மாமியும், புண்ணியம் கட்டிக்கொண்டனர்.  இதில் என் பங்களிப்பு இல்லாததால் இன்னும் சிறப்பாக இருந்தது !!!!

முருகப்பா குழுமத்தில் உயர்ந்த பதவியில் இருக்கும்,  என் மாமா, தலை சிறந்த பாடகரின் சந்ததியில் வந்த என் மாமி, என்பதால்,  reception என்னமோ ஒரு மகாமக கூட்டமாக இருந்தது.

கல்யாணத்தில், உஞ்சல் ஏனோ தானோ என்று இல்லாலாமல்,  சேங்காலிபுரம் 
சிஸ்டர்ஸ் ஒரு புறம் வெளுத்து (பாட்டுதான்), வாங்க, நாராயண தீர்த்த பஜனை மண்டலி இன்னொரு புறம்.  அவாத்தில் ஒரு மாமி ஒரு “நீண்ட” LP லாலியைப் பாட திடீரென்று மடிசார் மாமிகள், உஞ்சலை சுற்றி ஆட,  பஞ்சகச்சம், கொஞ்சகச்சம் மாமாக்களும் ஒரு “round”  ஆட,  (சிதம்பரம் நடராஜர் தான் பாக்கி, ஆடுவதற்கு) மணமக்களுக்கே வெட்கம் வந்து தலை குனிந்து உட்கார வைத்துவிட்டார்கள்.

சதஸ், என்று ஒன்று வைத்து,  வேத பண்டிதர்கள் ஒரு 40-50 பேரை அழைத்து வந்து, கன பாடம் சொல்லச் சொல்லி, “உண்டு” என்று சம்பாவனை செய்ததன் மூலம், எங்கள் அப்பா “தன்” வாழ்க்கையில் மிக முக்கியமாக கருதிய “வைதீகம்” என்ற ஒரு சிகரத்திற்கு, வைர கிரீடம்  சூட்டிவிட்டார் என் மாமா.

நலங்கு என்ற ஒரு “ஜாலியான” ஒரு வைபவத்திலும், மலரும் நினைவாக, பல வயது முதிர்ந்த, “பெருசுகள்”  - பழைய பாடலை “எடுத்து விட”,  மாப்பிள்ளை சார்பாக,  ஜெயதேவரின் 19 வது அஷ்டபதியை, அஷ்டபாதியாக  பாடி அசத்தினார்.  இதில் காளிதசனைப் பற்றி “உபன்யாசம்” வேறு.

எனக்கு தெரிந்து, நலங்கில் அஷ்டபதியைப் பாடிய, மாப்பிள்ளை இவராகத்தான் இருப்பார்.

ஒரு வைதீக முறைப்படி, திருமணம் என்பது, ஏதோ “கடமைக்கு” என்று இல்லாமல், மடி சமையல், நான்கு நாட்கள் திருமணம், என்று “சாஸ்த்ரோத்தமாக” இருந்தது மிகவும் அழகு.  செம்மங்குடியில், எங்கள் கிராமத்தில் வீட்டில், எனது சித்திகளுக்கு  கல்யாணம் நடந்தது “flash back” ஆக வந்து போனது.

செம்மங்குடியில் இருந்து, இப்போது எங்கெங்கோ இருக்கும்,  பல பேர் கல்யாணத்தில் பார்த்தது, மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.  

இந்த தம்பதிகள் “சொல்லும் பொருளும்” போல இருந்து வாழ்கையை “ஜாம் ஜாம்” என்று நடத்திட, எல்லாம் வல்ல “வரகூர் பெருமாளை’  கை கூப்பி பிரார்த்திக்கிறேன்.




Wednesday 8 March 2017

மங்கையர் தினம்- இன்று - பெண்மையை போற்றுவோம் (கிறோமா ?)

மங்கையராகப் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா- என்ற பாரதியின் வரிகளுடன் இந்த கட்டுரையை ஆரம்பிக்கிறேன்.  நாம் உணர்ச்சி பூர்வமான எந்த ஒரு விஷயத்தையும் பெண்மையோடு ஒப்பிட்டுப் பேசினால் அதன் தன்மை பல மடங்கு கூடும். ஆகவே பாரதி, “தமிழ்த் திரு நாடு, தன்னைப் பெற்ற தாய் என்று கும்பிடடி பாப்பா” என்றான்.

இந்தக் கட்டுரையை ஆரம்பிக்கும் பொது, என் மகள், அவளுடைய எதிராஜ் காலேஜில், “ woman empowerment என்ற தலைப்பின், பாரதியின் பாடலை பாடிக்கொண்டிருக்கிறாள், என்பது ஒரு சந்தோஷமான விஷயம்.

காலையில் எழுந்தவுடன்  “What Sapp என்ற ஒரு “சித்திரவதையான”  மென் பொருளில் இருந்து “message” வர ஆரம்பித்து விட்டது.

மகளிர் தினம் கொண்டாடுகிறோமோ இல்லையோ, இதை வைத்துக்கொண்டு, மக்கள் “what Sapp”  மூலம் அனுப்பும் விஷயங்களுக்கு “எல்லையே இல்லாமல் போய் விட்டது.  அலுப்பு தட்டும் அளவுக்கு அனுப்புகிறார்கள்.

ஒரு தாயாக, ஒரு சகோதரியாக, ஒரு தாரமாக என்று பல விதங்களில் ஒரு ஆணுக்கு, பெண்ணின் துணை வேண்டி இருக்கிறது.

சமீபத்தில், பால பெரியவாளின், பூர்வஸ்ராம தயார், “நற் கதி அடைந்து விட்டார்கள்” என்று கேள்விப்பட்டு, பால பெரியவாளின், மன நிலையை எண்ணி “மெய் சிலிர்த்தது”. மூன்று நாட்கள், யாருடன் பேசாமல் மௌன விரதம் இருந்ததாக கேள்விப்பட்டேன். உலகம் உய்ய “கலியுகத்தில் கண் கண்ட தெய்வமாகிய, மகா பெரியவாளின், கண் பார்வையில், வளர்ந்த, இந்த நடமாடும் கடவுள், நமக்காகத்தானே, தன தாயாரை, பார்க்க முடியாமல் போனது,  என்று ஒரு புறம் நினைத்து, வருத்தப்பட்டாலும், “லோகத்துக்கு மாதாவாகிய” காமாக்ஷியின் பர்பூர்ண குழந்தையாக “பால பெரியவாள்” மாறிய பிறகு, பெற்ற தாயைப் பற்றி ஏன் கவலைப்படவேண்டும் ? என்று ஒரு பெருமிதமும் கூடவே இருந்தது.

உண்மையில் நம் மதத்தில், சகோதரர்-சகோதரிகளின் உறவை கொண்டாடுவதற்கு ஒரு நாளே வைத்திருக்கிறார்கள். 

பொங்கல் நன்னாளிலே, பொங்கல் சீர் என்று ஒன்று உண்டு. பொங்கலுக்கு ஒரு வாரம் முன்பு, சகோதரன், தன் சகோதரி வீட்டிற்குச் சென்று, பணம், பழ வகைகள் வைத்துக கொடுத்து, நமஸ்காரமோ, ஆசிர்வாதமோ, வாங்கி வருவார்.  இந்தக் காலத்தில் அது வழக்கொழிந்தால் கூட, சில இடங்களில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. 

என் தாயார், என்னிடம், “உனக்கு சகோதரிகள் இல்லை என்றால் கூட, பெரியப்பாவின் பெண்களுக்கு, வருடா வருடம், பொங்கல் சீர் கொடுக்க மறவாதே”, என்று சொல்ல நான், சென்னையில் இருக்கும், என்னுடைய பெரியப்பா சகோதரிகளுக்கு, பொங்கல் சீர் வருடம் தவறாமல் தருகிறேன்.  இதை என்னுள் ஊட்டிய, என் தாயாருக்கு என் அனந்த கோடி நமஸ்காரங்கள்.  இன்னும் பல வருடங்கள் வாழ்ந்து என்னை மேன் மேலும் நல்வழி படுத்த வேண்டும், என்பது என் விருப்பம்.
அதே போல் பொங்கல் முடிந்து “கனு” வைக்கும்பொது,  சகோதரிகள், தன்னுடைய பிறந்த வீட்டில் எல்லோரு “சௌக்கியமாக”  இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள். 

சகோதரத்துவத்தில் மகத்துவத்தை “தனியாக கொண்டாடச் சொன்னால், செய்ய மாட்டோம்” என்பதற்காக, ஒரு விழாவுடன், (பொங்கலோ, தீபாவளியோ, நோன்போ), சேர்ந்து வைப்பதன் மூலம், இந்து மதத்தில், எப்படியெல்லாம் யோசித்திருக்கிறார்கள், என்பதை நினைக்கும் பொது ஆச்சர்யமாக இருக்கிறது.

பெண்மையை போற்ற வேண்டும், பெண்களை வேண்டாம் என்று சொன்னால் கூட”- இது ஒரு முக்கியமான “statement”.   மகாபாரதத்தில் ஒரு அருமையான பாத்திரத்தில் மூலம், இது விளக்கப் படுகிறது.

பாரதத்தில், பீஷமரைப் போல ஒரு கதாபாத்திரம், எங்கும் பார்க்க முடியாது.  புலவர் கீரன், பீஷமரைப் பற்றிச் சொல்லும்போதி சொல்வார் “நான் பல இலக்கியங்களை படித்தவன், கிரேக்க, லத்தீன் மொழிகளில் இருந்து, வட மொழிகள் பலவும் பார்த்திருக்கிறேன். பீஷ்மர் போன்று ஒரு கதாபாத்திரம் நான் எங்கும் பார்க்கவில்லை”  என்று கூறுவார்.
தான் நினைத்தால் தான் மரணம் என்று ஒரு கதாபாத்திரம் இருப்பது என்பதும், அம்புப் படுக்கையில் இருந்த போதும் கூட, உத்தராயண புண்ய காலத்தில் தன் உயிர் போகவேண்டும் என்று முடிவு செய்து, அந்த நாளில் உயிர் விட்ட பீஷ்மர்- சந்தேகமே இல்லாமல் ஒரு மகத்தான கதா பாத்திரம்.

இப்படி இருந்தும் கூட, “தான் நினைத்தால் தான் மரணம் என்று முடிவு செய்த அவர், கூடவே மரணத்தையும், “பெண்மையை போற்றாததின்” மூலம்” அவரே தேடிக் கொண்டார்” என்பதே உண்மை.  !!!!!!. ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா ?

இனி கதைக்கு வருவோம்

காசி தேசத்து மன்னன் தன் மகள்களான அம்பா, அம்பிகா, அம்பாலிகா- இந்த மூவரின் சுயம்வரம், நடக்கும்போது, பீஷ்மர், நடுவில் புகுந்து, மூவரையும், கடத்திப் போக, அம்பிகா, அம்பாலிகாவுக்கு, திருமணம் நடக்க, அம்பா தனியே விடப்படுகிறாள்.

இவர் கடத்திப் போகும்போது, சுயம்வர ராஜாக்கள், பீஷ்மரோடு போர் புரிந்து தோற்று ஓடுகிறார்கள். அப்போது “சால்வ” தேசத்து மன்னன் அதிக வீரம் காட்டி போர் புரிய, அம்பா அவனை விரும்பிகிறாள். இதை கவனித்த பீஷ்மர் சால்வ தேசத்து மன்னனையும் தோற்கடித்து, அம்பாவிடம், “நீ சால்வ தேசத்து மன்னனை விரும்பியதை நான் பார்த்தேன். நீ அவனிடமே செல்வாயாக” என்று சொல்கிறார்

சால்வ தேசத்து மன்னனோ – “என்னை தோற்கடித்த பீஷமர் அனுப்பிய பெண் எனக்கு தேவையில்லை, போய் விடு” என்கிறான்

தன் தந்தையிடம் வருகிறாள் அம்பா.  தந்தையோ “எப்போது என் வீட்டைவிற்றுச் சென்றாயோ, பின்பு இந்த வீட்டில் உனக்கு இடம் இல்லை” அதனால் சென்று விடு” என்கிறார்.

திரும்பவும், அம்பா, பீஷ்மரிடம் வந்து, தன்னை திருமணம் செய்து கொள்ளச் சொல்கிறாள்.  பீஷம்ர், தன்னுடைய ‘”பிரம்மச்சர்ய” விரதத்தை சொல்லி திருமணம் செய்ய மறுக்கிறார்.

அம்பா, பீஷ்மரின் குருவான பரசுரமரைத் தேடி செல்கிறாள். பரசுராமரும், பீஷ்மருடன், போர் புரிந்து, தோற்று, “என்னால் முடியாது” என்கிறார்.

இப்போது அம்பா, கடும் கோபத்துடன், சிவ பெருமானை நோக்கித் தவம் செய்கிறாள். சிவ பெருமான் தோன்றி, என்ன வேண்டும் என்று கேட்க, 

அவள்,  “என் வாழ்க்கையை சீரழித்த பீஷ்மரைக் கொல்லவேண்டும்” என்கிறாள்.  சிவ பெருமான் “அது என்னால் இயலாது” என்று சொல்ல. 

திரும்பவும் அம்பா முருகப் பெருமானை நோக்கி கடும் தவம் புரிகிறாள்.
முருகனிடம், இதே கோரிக்கையை, அம்பா வைக்க, முருகப் பெருமான், ஒரு மாலையைக் கொடுத்து, இந்த மாலையை யார் அணிகிறார்களோ, அவர்கள் பீஷ்மரை கொல்வார்”  என்கிறார்.

யாரும் இந்த மாலையை அணிய முன் வராத போது, துருபத தேசத்து மன்னனின் மகள், விளையாட்டாக அந்த மாலையை அணிந்து கொள்ள, அவளை மன்னன் காட்டில் விடச் சொல்கிறான்.  அவள்தான், அடுத்த பிறவியில், சிகண்டி என்ற பேருடன், பீஷ்மரை, அம்பு படுக்கையில் சாய்க்கிறாள்

இதில் பீஷ்மர் செய்த குற்றமென்ன ?
-         அவர் அம்பைக்குக்கு நல் வாழ்கை கொடுத்திருக்க வேண்டும்
-          சால்வ தேசத்து மன்னனை வற்புறுத்தி, அம்பையை திருமணம் செய்து கொடுதிருக்க வேண்டும்
-         அல்லது வேறு ஒரு ராஜாவைப் பார்த்து திருமணம் செய்து கொடுத்திருக்க வேண்டும்
-         அம்பையை, சபையில் இருந்து, கடத்தி வராமலாவது இருந்திருக்க வேண்டும்.

பீஷ்மர் திருமணம் செய்து கொள்வதில்லை என்று பெண் சமீபத்தை வெறுத்தார். ஆனால் பெண்மையை மதிக்கத் தவறினார்

பீஷ்மர், அம்பையின் திருமணதிற்கு தடையாக இருந்தார். அதனால், இறப்பே இல்லை என்று வரம் பெற்றிருந்தால் கூட, ஒரு பெண்ணின் வாழ்வில் விளையாடினால், அவருக்கு மரணம் நிச்சயம்.

இந்து மதத்தில் தான் பெண் தெய்வத்தை, கொண்டாடும்போது, எப்படி வேணுமானாலும் கொண்டாடலாம் என்று இருக்கிறது..  தாயாக, மகளாக, தாரமாக, குழந்தையாக, கொனடாடுவதற்கு, நமக்கு உரிமை உண்டு.

கற்பகாம்பாள் அலங்காரம் பற்றி இங்கு சொல்லியே ஆக வேண்டும். கற்பகம்பாளுக்கு ஒவ்வொரு நாளும், அலங்காரத்துக்கு வரும் புடவைகள் கணக்கில் அடங்கா.  ஒவ்வொரு தடவையும், திரை போட்டு, முப்பது வினாடிகளில், புடவையை மாற்றி, திரையை விலக்கி விடுவார்கள். எப்படி இவ்வளவு சீக்கிரமாக அலங்காரம் செய்கிறார்கள், என்று ஆச்சர்யமாக இருந்தாலும் கூட, பாவாடையில் அம்பாள் இருக்கும்போது, சிறிய கன்னிப் பெண்ணாக, புடவை கட்டிக்கொண்டு இருக்கும் பொது, மங்கையாக, மடிசார் கட்டிக்கொண்டு இருக்கும்போது, சுமங்கலியாக, காசு மாலை போட்டிருக்கும் பொது, “சர்வாலங்கார பூஷிதையாக”  காட்சி தருவது, எனக்கு மங்கையரின் பல “ரூபங்களை” நினைவு படுத்துகிறது.

பீஷ்மர், அம்புப் படுக்கையில் படுத்துக்கொண்டு, ஸ்திரீ தர்மம் பற்றி சொல்கிறார், புருஷ தர்மம் பற்றி சொல்லவில்லை. ஏனெனில், அவருக்குத் தெரியும், ஸ்திரீ இல்லையென்றால் ஒரு “கப்” நல்ல COFFEE கூட புருஷனுக்கு (மனிதனுக்கு) கிடைக்காது என்பது.

மாதர் தம்மை “இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்”- என்றான் மீசை வைத்த மாமனிதன். இவரை நினைக்காமல் பெண்கள் முன்னேற்றம் இல்லை.

பாரதி பாஸ்கர், “கல்யாண மாலை” நிகழ்ச்சியில் “பெண்களுக்கு சம உரிமை கிடைக்கிறதா” என்ற தலைப்பில் பேசும் போது, அற்புதமான ஒரு விஷயத்தைச் சொன்னார்.  நாம் எல்லோரும் வெட்கித் தலை குனியும் ஒரு விஷயம் அது. “பெண்களை நாம் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் இதைப் படிக்கவேண்டும்.  பாரதி பாஸ்கர கூறுகிறார்.

“சென்னையில் உள்ள IT COMPANY யில் நிறைய பெண்கள் வேலை செய்து வருகிறார்கள். அவர்கள், சென்னையைச் சேர்ந்தவர்கள் அல்லர்.  மதுரை, திருச்சி, நெல்லை போன்ற பல நகரங்களில் இருந்து, சென்னை வந்து, தனியாக ஒரு ரூம் எடுத்துக் கொண்டு, சம்பாதிப்பதற்காக, தங்கியுள்ளனர். 
அவர்கள் வார இறுதியில், தன் சொந்த ஊர் சென்று வருவது வழக்கமாக கொண்டு உள்ளனர்.  ரயில் ரிசர்வேஷன் என்பது, இயலாத நிலையில், அவர்கள் நம்பி இருப்பது பஸ் தான். நாம் வெள்ளி இரவு, கோயம்பேட்டிலோ, பெருங்குளத்தூரிலோ, பல பெண்கள் நின்று கொண்டு இருப்பதை, இப்போதும் பார்க்கலாம்.  இவர்கள் தன் ரூமில் இருந்து கிளம்பி, பஸ்சுக்காக நின்னு பஸ் பிடித்து தன ஊருக்கு செல்வதற்கு சுமார் 10 மணி நேரமாவது ஆகும். எல்லோருக்கும் இருப்பது போல் “இயற்கை உபாதைகள்” பெண்களுக்கும் உண்டு.  அதனால் பெண்கள், மதியம் 12 மணிக்கு மேல் தண்ணீர் குடிக்க மாட்டார்கள். இரவு சாபிடமாட்டார்கள். ஏனெனில் பஸ் பிரயாணம் செய்யும் போது, அவர்களுக்கு இயற்கை ச்ரமங்கள் ஏற்பட்டால், அவர்கள் இறங்கி, உபாதையை போக்குவதற்கு நல்ல இடம் கிடையாது.  நல்ல கழிப்பக வசதிகள் கிடையாது. !!!  இதனால், அவர்கள் பசியோ, தாகமோ, பொறுத்துக் கொண்டு பிரயாணம் செய்கிறார்கள்.

நம் நாட்டில், பெண்களுக்கு, ஒரு நல்ல சுகாதார வசதிகள் கூட செய்ய முடியாமல் இருக்கிறோமே, எங்கே நாம் பெண்கள் முன்னேற்றத்தை அடைவது ?”  என்று முடிக்கிறார்.

விவேகனந்தர் சொன்னது போல்- சீதை பிறந்த நாட்டில் பிறந்ததற்காக
பெருமைப் படுகிறேன். என் வாழ்க்கையில், என் ஏற்றமே, என் தாய், மனைவி, மகள் தான் என்று சொல்வதில் எனக்கு கர்வமுண்டு