Wednesday 8 March 2017

மங்கையர் தினம்- இன்று - பெண்மையை போற்றுவோம் (கிறோமா ?)

மங்கையராகப் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா- என்ற பாரதியின் வரிகளுடன் இந்த கட்டுரையை ஆரம்பிக்கிறேன்.  நாம் உணர்ச்சி பூர்வமான எந்த ஒரு விஷயத்தையும் பெண்மையோடு ஒப்பிட்டுப் பேசினால் அதன் தன்மை பல மடங்கு கூடும். ஆகவே பாரதி, “தமிழ்த் திரு நாடு, தன்னைப் பெற்ற தாய் என்று கும்பிடடி பாப்பா” என்றான்.

இந்தக் கட்டுரையை ஆரம்பிக்கும் பொது, என் மகள், அவளுடைய எதிராஜ் காலேஜில், “ woman empowerment என்ற தலைப்பின், பாரதியின் பாடலை பாடிக்கொண்டிருக்கிறாள், என்பது ஒரு சந்தோஷமான விஷயம்.

காலையில் எழுந்தவுடன்  “What Sapp என்ற ஒரு “சித்திரவதையான”  மென் பொருளில் இருந்து “message” வர ஆரம்பித்து விட்டது.

மகளிர் தினம் கொண்டாடுகிறோமோ இல்லையோ, இதை வைத்துக்கொண்டு, மக்கள் “what Sapp”  மூலம் அனுப்பும் விஷயங்களுக்கு “எல்லையே இல்லாமல் போய் விட்டது.  அலுப்பு தட்டும் அளவுக்கு அனுப்புகிறார்கள்.

ஒரு தாயாக, ஒரு சகோதரியாக, ஒரு தாரமாக என்று பல விதங்களில் ஒரு ஆணுக்கு, பெண்ணின் துணை வேண்டி இருக்கிறது.

சமீபத்தில், பால பெரியவாளின், பூர்வஸ்ராம தயார், “நற் கதி அடைந்து விட்டார்கள்” என்று கேள்விப்பட்டு, பால பெரியவாளின், மன நிலையை எண்ணி “மெய் சிலிர்த்தது”. மூன்று நாட்கள், யாருடன் பேசாமல் மௌன விரதம் இருந்ததாக கேள்விப்பட்டேன். உலகம் உய்ய “கலியுகத்தில் கண் கண்ட தெய்வமாகிய, மகா பெரியவாளின், கண் பார்வையில், வளர்ந்த, இந்த நடமாடும் கடவுள், நமக்காகத்தானே, தன தாயாரை, பார்க்க முடியாமல் போனது,  என்று ஒரு புறம் நினைத்து, வருத்தப்பட்டாலும், “லோகத்துக்கு மாதாவாகிய” காமாக்ஷியின் பர்பூர்ண குழந்தையாக “பால பெரியவாள்” மாறிய பிறகு, பெற்ற தாயைப் பற்றி ஏன் கவலைப்படவேண்டும் ? என்று ஒரு பெருமிதமும் கூடவே இருந்தது.

உண்மையில் நம் மதத்தில், சகோதரர்-சகோதரிகளின் உறவை கொண்டாடுவதற்கு ஒரு நாளே வைத்திருக்கிறார்கள். 

பொங்கல் நன்னாளிலே, பொங்கல் சீர் என்று ஒன்று உண்டு. பொங்கலுக்கு ஒரு வாரம் முன்பு, சகோதரன், தன் சகோதரி வீட்டிற்குச் சென்று, பணம், பழ வகைகள் வைத்துக கொடுத்து, நமஸ்காரமோ, ஆசிர்வாதமோ, வாங்கி வருவார்.  இந்தக் காலத்தில் அது வழக்கொழிந்தால் கூட, சில இடங்களில் நடந்து கொண்டு தான் இருக்கிறது. 

என் தாயார், என்னிடம், “உனக்கு சகோதரிகள் இல்லை என்றால் கூட, பெரியப்பாவின் பெண்களுக்கு, வருடா வருடம், பொங்கல் சீர் கொடுக்க மறவாதே”, என்று சொல்ல நான், சென்னையில் இருக்கும், என்னுடைய பெரியப்பா சகோதரிகளுக்கு, பொங்கல் சீர் வருடம் தவறாமல் தருகிறேன்.  இதை என்னுள் ஊட்டிய, என் தாயாருக்கு என் அனந்த கோடி நமஸ்காரங்கள்.  இன்னும் பல வருடங்கள் வாழ்ந்து என்னை மேன் மேலும் நல்வழி படுத்த வேண்டும், என்பது என் விருப்பம்.
அதே போல் பொங்கல் முடிந்து “கனு” வைக்கும்பொது,  சகோதரிகள், தன்னுடைய பிறந்த வீட்டில் எல்லோரு “சௌக்கியமாக”  இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள். 

சகோதரத்துவத்தில் மகத்துவத்தை “தனியாக கொண்டாடச் சொன்னால், செய்ய மாட்டோம்” என்பதற்காக, ஒரு விழாவுடன், (பொங்கலோ, தீபாவளியோ, நோன்போ), சேர்ந்து வைப்பதன் மூலம், இந்து மதத்தில், எப்படியெல்லாம் யோசித்திருக்கிறார்கள், என்பதை நினைக்கும் பொது ஆச்சர்யமாக இருக்கிறது.

பெண்மையை போற்ற வேண்டும், பெண்களை வேண்டாம் என்று சொன்னால் கூட”- இது ஒரு முக்கியமான “statement”.   மகாபாரதத்தில் ஒரு அருமையான பாத்திரத்தில் மூலம், இது விளக்கப் படுகிறது.

பாரதத்தில், பீஷமரைப் போல ஒரு கதாபாத்திரம், எங்கும் பார்க்க முடியாது.  புலவர் கீரன், பீஷமரைப் பற்றிச் சொல்லும்போதி சொல்வார் “நான் பல இலக்கியங்களை படித்தவன், கிரேக்க, லத்தீன் மொழிகளில் இருந்து, வட மொழிகள் பலவும் பார்த்திருக்கிறேன். பீஷ்மர் போன்று ஒரு கதாபாத்திரம் நான் எங்கும் பார்க்கவில்லை”  என்று கூறுவார்.
தான் நினைத்தால் தான் மரணம் என்று ஒரு கதாபாத்திரம் இருப்பது என்பதும், அம்புப் படுக்கையில் இருந்த போதும் கூட, உத்தராயண புண்ய காலத்தில் தன் உயிர் போகவேண்டும் என்று முடிவு செய்து, அந்த நாளில் உயிர் விட்ட பீஷ்மர்- சந்தேகமே இல்லாமல் ஒரு மகத்தான கதா பாத்திரம்.

இப்படி இருந்தும் கூட, “தான் நினைத்தால் தான் மரணம் என்று முடிவு செய்த அவர், கூடவே மரணத்தையும், “பெண்மையை போற்றாததின்” மூலம்” அவரே தேடிக் கொண்டார்” என்பதே உண்மை.  !!!!!!. ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா ?

இனி கதைக்கு வருவோம்

காசி தேசத்து மன்னன் தன் மகள்களான அம்பா, அம்பிகா, அம்பாலிகா- இந்த மூவரின் சுயம்வரம், நடக்கும்போது, பீஷ்மர், நடுவில் புகுந்து, மூவரையும், கடத்திப் போக, அம்பிகா, அம்பாலிகாவுக்கு, திருமணம் நடக்க, அம்பா தனியே விடப்படுகிறாள்.

இவர் கடத்திப் போகும்போது, சுயம்வர ராஜாக்கள், பீஷ்மரோடு போர் புரிந்து தோற்று ஓடுகிறார்கள். அப்போது “சால்வ” தேசத்து மன்னன் அதிக வீரம் காட்டி போர் புரிய, அம்பா அவனை விரும்பிகிறாள். இதை கவனித்த பீஷ்மர் சால்வ தேசத்து மன்னனையும் தோற்கடித்து, அம்பாவிடம், “நீ சால்வ தேசத்து மன்னனை விரும்பியதை நான் பார்த்தேன். நீ அவனிடமே செல்வாயாக” என்று சொல்கிறார்

சால்வ தேசத்து மன்னனோ – “என்னை தோற்கடித்த பீஷமர் அனுப்பிய பெண் எனக்கு தேவையில்லை, போய் விடு” என்கிறான்

தன் தந்தையிடம் வருகிறாள் அம்பா.  தந்தையோ “எப்போது என் வீட்டைவிற்றுச் சென்றாயோ, பின்பு இந்த வீட்டில் உனக்கு இடம் இல்லை” அதனால் சென்று விடு” என்கிறார்.

திரும்பவும், அம்பா, பீஷ்மரிடம் வந்து, தன்னை திருமணம் செய்து கொள்ளச் சொல்கிறாள்.  பீஷம்ர், தன்னுடைய ‘”பிரம்மச்சர்ய” விரதத்தை சொல்லி திருமணம் செய்ய மறுக்கிறார்.

அம்பா, பீஷ்மரின் குருவான பரசுரமரைத் தேடி செல்கிறாள். பரசுராமரும், பீஷ்மருடன், போர் புரிந்து, தோற்று, “என்னால் முடியாது” என்கிறார்.

இப்போது அம்பா, கடும் கோபத்துடன், சிவ பெருமானை நோக்கித் தவம் செய்கிறாள். சிவ பெருமான் தோன்றி, என்ன வேண்டும் என்று கேட்க, 

அவள்,  “என் வாழ்க்கையை சீரழித்த பீஷ்மரைக் கொல்லவேண்டும்” என்கிறாள்.  சிவ பெருமான் “அது என்னால் இயலாது” என்று சொல்ல. 

திரும்பவும் அம்பா முருகப் பெருமானை நோக்கி கடும் தவம் புரிகிறாள்.
முருகனிடம், இதே கோரிக்கையை, அம்பா வைக்க, முருகப் பெருமான், ஒரு மாலையைக் கொடுத்து, இந்த மாலையை யார் அணிகிறார்களோ, அவர்கள் பீஷ்மரை கொல்வார்”  என்கிறார்.

யாரும் இந்த மாலையை அணிய முன் வராத போது, துருபத தேசத்து மன்னனின் மகள், விளையாட்டாக அந்த மாலையை அணிந்து கொள்ள, அவளை மன்னன் காட்டில் விடச் சொல்கிறான்.  அவள்தான், அடுத்த பிறவியில், சிகண்டி என்ற பேருடன், பீஷ்மரை, அம்பு படுக்கையில் சாய்க்கிறாள்

இதில் பீஷ்மர் செய்த குற்றமென்ன ?
-         அவர் அம்பைக்குக்கு நல் வாழ்கை கொடுத்திருக்க வேண்டும்
-          சால்வ தேசத்து மன்னனை வற்புறுத்தி, அம்பையை திருமணம் செய்து கொடுதிருக்க வேண்டும்
-         அல்லது வேறு ஒரு ராஜாவைப் பார்த்து திருமணம் செய்து கொடுத்திருக்க வேண்டும்
-         அம்பையை, சபையில் இருந்து, கடத்தி வராமலாவது இருந்திருக்க வேண்டும்.

பீஷ்மர் திருமணம் செய்து கொள்வதில்லை என்று பெண் சமீபத்தை வெறுத்தார். ஆனால் பெண்மையை மதிக்கத் தவறினார்

பீஷ்மர், அம்பையின் திருமணதிற்கு தடையாக இருந்தார். அதனால், இறப்பே இல்லை என்று வரம் பெற்றிருந்தால் கூட, ஒரு பெண்ணின் வாழ்வில் விளையாடினால், அவருக்கு மரணம் நிச்சயம்.

இந்து மதத்தில் தான் பெண் தெய்வத்தை, கொண்டாடும்போது, எப்படி வேணுமானாலும் கொண்டாடலாம் என்று இருக்கிறது..  தாயாக, மகளாக, தாரமாக, குழந்தையாக, கொனடாடுவதற்கு, நமக்கு உரிமை உண்டு.

கற்பகாம்பாள் அலங்காரம் பற்றி இங்கு சொல்லியே ஆக வேண்டும். கற்பகம்பாளுக்கு ஒவ்வொரு நாளும், அலங்காரத்துக்கு வரும் புடவைகள் கணக்கில் அடங்கா.  ஒவ்வொரு தடவையும், திரை போட்டு, முப்பது வினாடிகளில், புடவையை மாற்றி, திரையை விலக்கி விடுவார்கள். எப்படி இவ்வளவு சீக்கிரமாக அலங்காரம் செய்கிறார்கள், என்று ஆச்சர்யமாக இருந்தாலும் கூட, பாவாடையில் அம்பாள் இருக்கும்போது, சிறிய கன்னிப் பெண்ணாக, புடவை கட்டிக்கொண்டு இருக்கும் பொது, மங்கையாக, மடிசார் கட்டிக்கொண்டு இருக்கும்போது, சுமங்கலியாக, காசு மாலை போட்டிருக்கும் பொது, “சர்வாலங்கார பூஷிதையாக”  காட்சி தருவது, எனக்கு மங்கையரின் பல “ரூபங்களை” நினைவு படுத்துகிறது.

பீஷ்மர், அம்புப் படுக்கையில் படுத்துக்கொண்டு, ஸ்திரீ தர்மம் பற்றி சொல்கிறார், புருஷ தர்மம் பற்றி சொல்லவில்லை. ஏனெனில், அவருக்குத் தெரியும், ஸ்திரீ இல்லையென்றால் ஒரு “கப்” நல்ல COFFEE கூட புருஷனுக்கு (மனிதனுக்கு) கிடைக்காது என்பது.

மாதர் தம்மை “இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்”- என்றான் மீசை வைத்த மாமனிதன். இவரை நினைக்காமல் பெண்கள் முன்னேற்றம் இல்லை.

பாரதி பாஸ்கர், “கல்யாண மாலை” நிகழ்ச்சியில் “பெண்களுக்கு சம உரிமை கிடைக்கிறதா” என்ற தலைப்பில் பேசும் போது, அற்புதமான ஒரு விஷயத்தைச் சொன்னார்.  நாம் எல்லோரும் வெட்கித் தலை குனியும் ஒரு விஷயம் அது. “பெண்களை நாம் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் இதைப் படிக்கவேண்டும்.  பாரதி பாஸ்கர கூறுகிறார்.

“சென்னையில் உள்ள IT COMPANY யில் நிறைய பெண்கள் வேலை செய்து வருகிறார்கள். அவர்கள், சென்னையைச் சேர்ந்தவர்கள் அல்லர்.  மதுரை, திருச்சி, நெல்லை போன்ற பல நகரங்களில் இருந்து, சென்னை வந்து, தனியாக ஒரு ரூம் எடுத்துக் கொண்டு, சம்பாதிப்பதற்காக, தங்கியுள்ளனர். 
அவர்கள் வார இறுதியில், தன் சொந்த ஊர் சென்று வருவது வழக்கமாக கொண்டு உள்ளனர்.  ரயில் ரிசர்வேஷன் என்பது, இயலாத நிலையில், அவர்கள் நம்பி இருப்பது பஸ் தான். நாம் வெள்ளி இரவு, கோயம்பேட்டிலோ, பெருங்குளத்தூரிலோ, பல பெண்கள் நின்று கொண்டு இருப்பதை, இப்போதும் பார்க்கலாம்.  இவர்கள் தன் ரூமில் இருந்து கிளம்பி, பஸ்சுக்காக நின்னு பஸ் பிடித்து தன ஊருக்கு செல்வதற்கு சுமார் 10 மணி நேரமாவது ஆகும். எல்லோருக்கும் இருப்பது போல் “இயற்கை உபாதைகள்” பெண்களுக்கும் உண்டு.  அதனால் பெண்கள், மதியம் 12 மணிக்கு மேல் தண்ணீர் குடிக்க மாட்டார்கள். இரவு சாபிடமாட்டார்கள். ஏனெனில் பஸ் பிரயாணம் செய்யும் போது, அவர்களுக்கு இயற்கை ச்ரமங்கள் ஏற்பட்டால், அவர்கள் இறங்கி, உபாதையை போக்குவதற்கு நல்ல இடம் கிடையாது.  நல்ல கழிப்பக வசதிகள் கிடையாது. !!!  இதனால், அவர்கள் பசியோ, தாகமோ, பொறுத்துக் கொண்டு பிரயாணம் செய்கிறார்கள்.

நம் நாட்டில், பெண்களுக்கு, ஒரு நல்ல சுகாதார வசதிகள் கூட செய்ய முடியாமல் இருக்கிறோமே, எங்கே நாம் பெண்கள் முன்னேற்றத்தை அடைவது ?”  என்று முடிக்கிறார்.

விவேகனந்தர் சொன்னது போல்- சீதை பிறந்த நாட்டில் பிறந்ததற்காக
பெருமைப் படுகிறேன். என் வாழ்க்கையில், என் ஏற்றமே, என் தாய், மனைவி, மகள் தான் என்று சொல்வதில் எனக்கு கர்வமுண்டு




No comments: