Tuesday 9 June 2020

வாமன அவதாரம் - 2


வமான அவதாரம் – ஒரு பார்வை – 2
முக்கியமான விஷயம் இந்த அவதாரத்தில், மஹா விஷ்ணு, மஹாலக்ஷ்மி இல்லாமல் போக வேண்டும். அதனால் சொல்லிக்காமல்  வைகுண்டத்திலிருந்து கிளம்ப நினைக்கிறார். ஆனால். மாட்டிக்கொண்டு விடுகிறார்.

டயலாக் இப்படிப் போகிறது !!
மஹா லக்ஷ்மி- எங்கே என்னை விட்டுவிட்டு கிளம்புகிறீர்கள் ஸ்வாமி ?

ம.விஷ்ணு -- ஒரு அவதார விஷயமாக கிளம்புகிறேன்

ம- நான் இல்லாமல் இதுவரை வெளியில் சென்றதே இல்லையே !

ம.வி – உண்மைதான். நீ இல்லாமல் போகக்கூடிய நிர்பந்தம். நான் போவது ஒரு அரசனிடம் இருந்து யாசகம் பெற்று அவனை ஏழையாக ஆக்குவதற்க்கு. நீ வந்தால், உன் கடாஷம் பெற்றால், எதிரே இருப்பவர் ஏழையாக ஆக முடியாது. அதனால் தான்.

ம- அதிர்ந்து- என்னது, நீங்கள். பிச்சை எடுக்கப் போகிறீர்களா ?  நீங்கள் பிச்சை எடுக்கலாமா ?  மகாலக்ஷ்மியின் கணவர் பிச்சை எடுத்தால், எனக்கு எவ்வளவு அவமானம் ?  உங்களை இவ்வளவு தாழ்த்திக் கொள்ளலாமா ?

ம.வி. உண்மைதான். ஆனால், நான் யாசகம் பெறப் போகும் ஆசாமி, அசுர குலத்தைச் சேர்ந்தவன் ஆனாலும், உத்தமன். தானம் கொடுப்பதில் சிறந்தவன். அவனிடம் தானம் பெறுவதின் மூலமாகத்தான், அவன் கர்வத்தை அடக்கி, தேவர்களுக்கு ஸ்வர்க்க லோகத்தை திருப்பிக் கொடுக்க முடியும்.
ம – ஒ அப்படியா. ஒரு அசுரனை புகழ்ந்து, அவனிடம் நீங்கள் யாசகம் வாங்க முடிவு செய்தது எனக்கு மிகவும் ஆச்சர்யம். அப்படியானால், நிச்சயம் நான் அந்த அசுரனை பார்த்தே ஆக வேண்டும்.  கட்டாயம் நான் வந்தே தீருவேன்.

ம.வி- என்னடா இது, இப்படி ஒரு இக்க்ட்டிடல் மாட்டிக்கொண்டு விட்டோமே என்று எண்ணும் போது, பூமிதேவி, காதில் வந்து “நீங்கள் வாமன அவதாரம் எடுத்து வரும்போது, உபநயனம் நடக்கும், அதற்கு நான் மான் தோல் தருகிறேன். அதை மார்பில் போர்த்திக் கொண்டு, ஸ்ரீதேவியை மறைத்து விடுங்கள். உங்கள் நோக்கம் நிறைவேறும்” என்றாள். (இதற்குத்தான்........)

தானம் கேட்க வரும்போது, வந்திருப்பவர் சாக்ஷாத் மகாவிஷ்ணு, எல்லா சொத்தையும் அபகரிப்பதற்கு வந்திருக்கிறான் என்று குல குரு சொன்ன பிறகும், பலியின் மனைவி “அர்க்யம்” விட்டு அந்த தானத்தை “மனமுவந்து” கொடுக்க ஒப்புகொண்டது மிகவும் ஆச்சர்யம். இந்தக் காலத்தில்  குடும்பத்தில் உள்ளவர்க்கு ஒரு பாடம்.  நாராயண பட்டத்ரி, நாராயணீயத்தில், இந்த நிகழ்வை வியந்து போற்றுகிறார்.

குரு கடாக்ஷம் இருக்கிற வரையிலும், பலியை ஒன்றுமே செய்ய முடியாது என்று தெரிந்து கொண்ட பகவான், சுக்ராசார்யாருக்கும், பலிக்கும் சண்டை வந்து. “உன் சொத்தெல்லாம் உன்னை விட்டுப் போகட்டும். என் பேச்சைக் கேட்காமல் தானம் செய்தால்” என்று சபிக்கும் வரை காத்திருந்து, பிறகு தன  “வேலையை” ஆரம்பிக்கிறார். குரு அவ்வளவு “பவர்புல்”

மூன்றாவது அடியை வைப்பதற்கு இடம் கேட்டதற்கு, தன் தலையின் மேல் வைக்கச் சொன்ன பலி, தலையை அழுத்தி, பாதாள லோகத்தில் சென்று விட்டபிறகு கதறுகிறான். “பாதாள லோகத்தில் நான் தனியே இருப்பதற்கு என்ன பாபம் செய்தேன்” ?  என்று. அதற்கு பகவான் மனமிரங்கி, கவலைப்படாதே, உனக்கு காவலாக, பாதாள லோகத்தில் நான் இருக்கிறேன் ?  என்கிறார்.

என்ன ஒரு ஆச்சர்யம். ஒரு அசுரனுக்கு அவன் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி காவல்காரனாக இருக்கும் ஒரு தெய்வம் !. கிருஷ்ணா அவதாரத்தில் பாண்டவர்களுக்கு வேலைக்காரனாக இருப்பதற்கு முன்பே, பலிக்கு காவற்காரனாக இருக்கிறார்.

ராவணன் பலி சக்ரவர்த்தியை பார்ப்பதற்க்காக பாதாள லோகத்திற்கு வரும்போது, பகவான் தன்னை மறைத்துக் கொள்கிறான் – என்று ஸ்ரீ சுப்பிரமணிய தீக்ஷிதர் உபன்யாசத்தில் சொல்கிறார்.

ராமாயணத்தில், வாமன அவதாரத்தை குறிப்பிட்டு ஜாம்பவான் சொல்கிறார். யார் கடலைக் கடப்பது என்ற பேச்சு ஆரம்பிக்கும்போது, ஒவ்வொரு வானரமும் ஒவ்வொரு தூரம் சொல்ல, ஜாம்பவான், நான் வாமன அவதாரத்தில், வாமன மூர்த்தி உலகத்தை அளந்த போது, அவரை மூன்று முறை வலம் வந்தேன். அவ்வளவு பெரிய தூரத்தை கடந்த நான், இந்தக் கடலை கடப்பேனா என்று பயமாக இருக்கிறது” என்கிறார்.

வாமன அவதாரத்தை முடிப்பதற்கு முன்பு:

இதில் ஒரு ஹாஸ்யமான விஷயத்தை, திருவானக்கோயில் சங்கர மடத்தில் இருந்த (சம்ஸ்ருத்தில் ஜனாதிபதி அவார்டு வாங்கியவர்) மறைந்த ஸ்ரீ சிவராம கிருஷ்ண சாஸ்த்ரிகள், ஸ்ரீ ரங்கத்தில் சப்தாகம் நடக்கும்போது இப்படிச் சொன்னார்.

“இந்த அசுரர் கூட்டம் எல்லாம் ரொம்ப நல்லவர்கள் ஆகா இருப்பார் போல. 3 அடி கேட்டு ஒருவர் வருகிறார். அவர் எப்படிப்பட்டவர் என்பதை குரு விளக்குகிறார்.  அவரை பார்க்க ஏழை பிராமணரைப் போல் தெரிய வில்லை. சாதாரணாமாக ஒரு பிச்சைக்காரன் 1 என்று கேட்டால், 1 ரூபாயைக் குறிக்கும், GOVT பியூன் 1 என்று கேட்டால் 1௦௦ ரூபாயைக் குறிக்கும். மேல் அதிகாரி 1 என்று கேட்டால் 1௦௦௦௦ ரூபாயை குறிக்கும். மினிஸ்டர் 1 ரூபாய் என்றால் 1 லட்ச ரூபாயைக் குறிக்கும்.

ஒரு பெரிய ராஜாவாக இருந்து, தேவலோகத்தையே வென்ற ஒருவனுக்கு 1 ரூபாய்க்கும் லட்ச ரூபாய்க்கும் வித்தியாசம் தெரியவில்லையே. 3 அடி கேட்டவுடன் அது பெரிய “அடி” என்று தெரியாமல் சம்மதித்தானே !” என்றார்



No comments: