Monday 1 June 2020

வாமன அவதாரம் - ஒரு பார்வை - 1 (2)


வாமன அவதாரம் – ஒரு பார்வை !  பாகம் 1

வாமான அவதாரத்தில் பல நல்ல வாழ்க்கை நடை முறைகள் விளக்கப் பட்டு இருக்கிறது. ஏதோ போகிற போக்கில் படித்துவிட்டு போகக் கூடியதில்லை ஸ்ரீமத் பாகவதம். ஒவ்வொரு அவதாரத்திலும் பல நல்ல விஷயங்கள்

ஸ்ரீமத் பாகவதம்- சிறு உரை:

ஸ்ரீ மத் பாகவதத்தின் உயர்வைப் பற்றிச் சொல்லும்போது, விஷ்ணு பக்தியில் சிவனைப் போலவும், சிவ பக்தியில் ராமனைப் போலவும் உயர்ந்தது என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. எப்படி என்று பார்த்தால், காசியில், காசி விஸ்வநாதர், உயிர் நீத்தவர்களின் காதுகளில், ராம நாமா சொல்கிறார். இதை ஆதி சங்கரர், ராம புஜங்க பிரயாக ஸ்தோத்ரத்தில் சொல்கிறார். விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் கடைசியில், பார்வதி கேட்க, ஸ்ரீ ராம ராமேதி ... சொல்கிறார்

சிவ பக்தியில், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி, தனக்கு மிகவும் பிடித்த சிவ லிங்க பூஜை செய்கிறார்.

வாமன அவதாரம் ஒரு வரியில்

வாமன அவதாரத்தை ஒரே வரியில் சொல்வதென்றால், பக்தி பண்ணும்போது குருவே தடுத்தாலும் கூட, குருவின் பேச்சைக் கேட்காமல், பக்தி பண்ண வேண்டும்- என்பதுதான்.  மற்ற அவதாரங்களிலும் இது மாதிரி, ஒரு வரி நீதி உண்டு. “பக்தி பண்ணும் நேரத்தில், சகோதரன் தடுத்தால், சகோதரனை, புறம் தள்ளி பக்தி பண்ணவேண்டும் (விபீஷணன்).  தந்தை தடுத்தால், தந்தையை புறம் தள்ளி பக்தி பண்ண வேண்டும் (தந்தை சொல் எல்லா நேரமும் மந்திரம் இல்லை)-பிரஹ்லாதன்-ஹிரண்யகசிபு.  தாயும் அப்படிதான்- துருவன்.

வாமன அவதாரம் எல்லோருக்கும் தெரிந்த கதை.

தேவ லோகத்தைப் போராடி ஜெயித்த பலிச் சக்ரவர்த்தியை, மகா விஷ்ணு வாமன அவதாரத்தில் வந்து மூன்று அடி நிலம் யாசகமாகப் பெற்று, மண்ணையும், விண்ணையும் இரண்டு அடிகளில் அளந்து, மூன்றாவது அடியாக பலியின் தலையில் வைத்து, அவனை பாதாள லோகத்தில் தள்ளுகிறான்

பிறப்பிற்கு முன்பு

மகாவிஷ்ணு அவதாரத்தில், வாமன அவதாரம் தான் பெருமாள், பிரமச்சாரியாக இருக்கிறார். இதில் தான் ரத்தமின்றி ஒரு அசுரனுடன் யுத்தம் நடந்து அழகாக முடித்தும் வைக்கப்படுகிறது.

தேவர்கள்,  தன் குருவான ப்ரஹஸ்பதியிடம் முறையிட, தேவ குருருவான ப்ரஹஸ்பதி, இரண்டு காரணங்களால், பலியை நீங்கள் ஜெயிக்க முடியாது.  ஒன்று அவன் குரு அனுக்ரஹத்தில், பெரிய யாகம் பண்ணி, பிராமணர்களின், பரி பூர்ண ஆசியுடன் வருகிறான். இரண்டாவது, தேவர்கள், நீங்கள் ஆனந்தமாக இருந்துகொண்டு, பகவானை மறந்து விட்டீர்கள். அவன் “விஸ்வஜித்” என்ற பெரிய யாகத்தை செய்ததன் மூலம் பகவானை சர்வ காலமும் நினைத்துக் கொண்டு இருந்து இப்போது, புது பலத்துடன் வந்திருக்கிறான்.

தேவ லோகத்தை பலி கைப்பற்றி தேவர்களை ஓட ஓட விரட்டிய பின்பு, தேவர்களின் தாயார், அதிதி மிகவும் மனக்கலக்கமுற்று தேவர்கள் கஷ்டப்படுவதை பார்த்துக்கொண்டு இருக்க முடியவில்லை என்று கஷ்யபரிடம் புலம்பினாள். தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் அப்பா ஒருவர்தான். அம்மா தான் வேறு.

கஷ்யபர், நான் எவ்வளவோ சொன்னேன், கேட்கவில்லை. தேவர்கள் பகவானை பறந்து விட்டார்கள். அதற்கு உண்டான பலனை அனுபவிக்கிறார்கள் என்றார்.   (எந்த காலத்திலும் அப்பா சொல்வதைக் கேட்காத குழந்தைகள் கஷ்டப்படும் என்பது கஷ்யபர் காலத்திலேயே உண்டு) அப்போது அதிதி, நீங்கள் தந்தையார், நீங்கள் அப்படிப் பேசலாம். நான் தாயார். கவலைப்படத்தான் வேண்டும்.

In the present generation, no kid is listening to their parents. They take their own decisions. When they could not succeed, they feel bad.  For that Atiti says – you are the father of Devas. You can take this lightly.  But Iam the  Monther of all. I cannot…
This is very important dialogue which fits even today’s world. 

அப்போது, கஷ்யபர், உன்னுடைய இந்த கஷ்டத்திற்கு, பகவான் ஒருவன்தான் அரு மருந்து. வ்ரதங்களை அனுஷ்டிக்கச் சொல்லி  “பயோ வரதம்” 12 நாட்களுக்கு அனுஷ்டிக்கச் சொன்னார். பயோ வரதம் என்பது பால் மட்டும் சாப்பிட்டுக் கொண்டு உபவாஸம் இருப்பது. சுமங்கலிகள்/ஸ்திரீகள் உபவாசம் இருக்கக் கூடாது. மஹா பாபம் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. அக்னி ஹோத்ரிகளுக்கும் இது பொருந்தும். பாலாவது சாப்பிடவேண்டும். “கொலைப் பட்டினி” எல்லாம் இருக்கக் கூடாது..

உபநயனம் பற்றி மிகவும் விசேஷமாகச் சொல்லப்படுகிறது. 

5 வயதில் உபநயனம் ஆகிவிட்டது. சாதாரணமாக 7 வயதில் பூணல் போடா வேண்டும் என்று சொல்வார்கள். எப்பொழுது மந்திர உச்சாடனம் அழகாக சொல்ல வந்துவிட்டதோ, மழலை போய் விட்டதோ, அப்பொழுதே பூணல் போட்டுவிடலாம் – என்ற சித்தாந்தம் இங்கே குறிப்பிடப்பட்டு இருக்கிறது.  (7 வயதுக்குப் பிறகு கூட, சிலருக்கும் மந்திர உச்சாடனம் ஒழுங்காக வராது. அது வேறு கதை )

உபனயத்தில் யார் யார் வந்தார் என்பது ஒரு அழகான லிஸ்ட் !!

குள்ளமான ப்ராஹ்மண சிறுவனின் வடிவில் தோன்றிய பகவான் வாமனருக்கு, ப்ரஹஸ்பதி பூணல் அணிவித்தார். பூமாதேவி மான் தோல் வழங்கினார். கஷ்யபர் தர்ப்பைப் புல்லை அணிவித்தார். சந்திரன் பிரம்ம தண்டத்தை வழங்கினார். அதிதி தேவி உள்ளாடைகளை வழங்கினார். சூர்யன் காயத்ரி மந்த்ரத்தை அருளிச் செய்தார்.  இந்திரன் குடை கொடுத்தான். பிரம்மா கமண்டலம் கொடுத்தார். சரஸ்வதி ருத்ராக்ஷ மாலை கொடுத்தாள். குபேரன் பிச்சை பாத்திரம் கொடுக்க, பார்வதி அதில் முதலாக பிச்சை போட்டாள்.

குபேரன் பிச்சை பாத்திரம் கொடுத்தது தான் “செம” – எதிர் காலத்தில், ஸ்ரீனிவாச கல்யாணத்தில், நம்மிடம் “கடன்” கேட்க வருவார் என்று முன்பே தெரிந்தால்..... முன்னேற்பாடாக, பிச்சை பாத்திரம்

பார்வதி, அன்னபூரணியாக வந்து பிக்ஷை போடுகிறாள். இப்படி ஒரு சான்ஸ் கிடைக்காது என்பதால்.  எப்படி சம்பந்தப் பெருமான், குழந்தையாக இருந்தபோது, மனமிரங்கி, பால் கொடுத்தாளோ, அந்தத் தாய், மஹாவிஷ்ணுவே, வாமனராக வந்த போது வராமலா இருப்பாள் 

பிள்ளைகள், அம்மாவுக்கு அபிவாதயே சொல்லவேண்டும், இது பல பேருக்குத் தெரிவதில்லை. (அபிவாதயே வே தெரிவதில்லை என்பது வேறு விஷயம்,  இதை வைதீகஸ்ரீ ஸ்ரீ ராஜு கனபாடிகள் பல முறை என்னிடம் சொல்லி இருக்கிறார்.

அப்பாதான் பூணல் (பிரம்மோபதேசம்) போட வேண்டும் என்று அவசியமில்லை. யார் நிறைய அனுஷ்டானம் செய்கிறார்களோ, அவர்கள் தான் குழந்தைக்கு உபநயனம் செய்ய வேண்டும். அப்போதுதான் குழந்தையும் “காயத்ரி ஜபம்” ஒழுங்காக பண்ணுவான் என்பதால்.

முக்கிய கட்டம்

பலி சக்ரவர்த்தி, நர்மதா நதிக்கரையில், குரு சுக்ராச்சர்யாரின் மேற் பார்வையில் மிகப் பெரிய யாகம் செய்கிறான்.

சிறிய (சம்பந்தமில்லாத) விஷயம்:
சுக்ராச்சர்யாரின் குரு, ப்ருகு முனிவர்,  தன் சிஷ்யரின் யாகத்தைப் பார்பதற்க்காக, ஆமை மேல் வருகிறார் என்று பாகவதத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது.  ஏன் ஆமை மேல் வந்தார் ?  எப்போது வந்தார் ?  என்பது இருக்கட்டும்.  ஆமைக்கு சம்ஸ்க்ருதத்தில், கச்சம் என்று பெயர். ப்ருகு முனிவர் ஆமையில் மேல் வந்ததால், அந்த இடத்திற்கு, ப்ருகு கச்சம் என்று பெயர் வந்து, நாளடைவில் மருவி, Bharuch – என்று பெயர் பெற்றது. !!!!

அந்த யாகத்தில் தானம் பெறுவதற்காக வாமனர் வருகிறார்

பலி, மிகவும் தேஜசான வாமனரைப் பார்த்து, மிகவும் மகிழ்ந்து, மெய் சிலிர்த்து, திருவடிகளைக் கழுவி, புண்ணிய தீர்த்தங்களையும் புனிதமாக்கும் அத்திருவடி தோயந்த நீரை தன் தலை மேல் தெளித்துக் கொண்டார். இதை நாராயண பட்டத்ரி, நாராயணீயத்தில் இப்படிச் சொல்கிறார்.

“தங்கள் பாத கமலத்தில் தோய்ந்த புனலே, பரமசிவன் தலையில் விளங்கும் கங்கை, அசுரனாக இருந்த போதிலும் அவனுக்குக் கிடைத்ததே, குருவாயூரப்பா  !!! இது, பலி, ப்ரஹ்லாத வம்சத்தில் பிறந்தாலோ  (பலி, ப்ரஹ்லாதனின் பேரன்), யாகங்களைச் செய்ததாலோ, பிராமணர்களிடம் இருந்த பக்தியாலோ தான் இந்த பாக்கியம் கிடைத்திருக்கும்.?”

இதை ஸ்ரீ மத் பாகவதத்தில், சுகாசார்யார், பரீக்ஷித் மகாராஜாவிடம் சொல்கிறார். “ஏ ராஜாவே, எந்த பாதத்தை, வேதங்களும். புராணங்களும் தேடுகிறதோ, எந்த பாதத்தை, ரிஷிகளும், முனிவர்களும், ஹ்ருதயத்தில் வைத்து பூஜித்து காண ஆசைப்படுகிறார்களோ,  இலையையும், காயையும், கனியையும் தின்று, காட்டிலும், மேட்டிலும் நடந்து, எந்த முனிவர்கள்,  பாத கமலங்களைப் தரிசிக்க ஆசைப்படுகிறார்களோ, அந்த பாதத்தை சர்வ சாதாரனமாகப் பார்த்து அதற்கு அபிஷேகம் செய்து, அந்தத் தீர்த்தத்தை தலையில் பரோக்ஷித்துக் கொண்டானே, அந்த அசுரன் செய்த பாக்கியம் தான் என்ன ?”

(தொடரும்)


No comments: