Sunday, 16 August 2026

ஸ்ரீ குருப்யோ நமஹ.. ஸ்ரீ மாத்ரே நமஹ.. சாதுர்மாஸ்யம்......

 

மதுரையில் உள்ள ஸ்ரீ சக்ர ராஜ ராஜேஸ்வரி பீடத்தின் ஸத்குருவாக இருக்கும்  பூஜ்யஸ்ரீ  ஸ்ரீ. ராமானந்த சரஸ்வதி ஸ்வாமிகள்.  சாதுர்,மாஸ்ய விரதம் அனுஷ்டிக்கும் இந்த மாதத்தில், அவருக்கு பாத பூஜை பண்ணும் பெரும் பாக்கியம் எங்கள் குடும்பத்திற்கு கிடைத்த்து.

சாதாரணமாக, மதுரையில் வருடா வருடம் அனுஷ்டிக்கும் இவர், இந்த முறை. சென்னையில்.

நங்கநல்லூர், ஆஞ்சநேயர் கோவில் அருகில், மாருதாத்மஜம் (பேரே எவ்வளவு அழகாக இருக்கிறது) என்ற கட்டிடத்தில் அவருடைய பிரவேசம். மொட்டை மாடியில் மேலே பந்தல் போட்டு, பூஜை, கீழே அவர் வாசம்.

இந்த முறைதான், அவர் உபாஸனை மூர்த்தியான அம்பாளை (மதுரை மீனாக்ஷி என்று நினைக்கிறேன்) எடுத்து வந்திருந்தார்.  அத்தனை அழகு.

ஸ்ரீ பெரும்புதூரில் இதுக்கும் என்னுடைய மச்சினன், பாத பூஜை செய்கிறேன் என்று வேண்டிக்கொண்டதன் பேரில், ராஜா அண்ணாமலை புரத்தில் இருக்கும் நானும் ஒட்டிக்கொள்ள, அங்கு போய் நானும் பாத பூஜை பண்ணும்படி அமைந்துவிட்டது (பிக்ஷா வந்தனம் போதும் என்றுதான் போனேன்)

எல்லாம் குரு அணுக்ரஹம்

 அங்கே சென்றவுடன் லலிதா சஹஸ்ரநாமம் சொல்லி கொண்டு இருந்தார்கள்  மூன்று முறை சொல்வார்கள் போலும்.  பிறகு லலிதா நவரத்ன மாலை, பின் காமாக்ஷி வ்ருத்தம்..  (பத்து விரல் மோதிரம்....). பிறகு சோடசோபசாரம்.... பிறது பாத பூஜை, மஹா தீபாராதானை...

குருஜியில் பூர்வீகம் - பூஜ்யஸ்ரீ ஸ்ரீ. கோபாலக்ருஷ்ண பாகவத சுவாமி அவர்களின் குமாரர், ஸ்ரீ. சஞ்சீவி பாகவதர் அவர்களின் புத்திரன் இவர்.

எங்கள் கருமண்டபத்தில் ராதா கல்யாணம் பண்ணும்போது, ஒரு முறை சஞ்சீவி பாகவதர் வந்திருக்கிறார்.  என் அம்மா, மாடியில் வலது புர ரூமில் தங்க வைத்து மடியாக சமைத்துப் போட்டது இன்றும் நினைவு இருக்கிறது

அம்மா பண்ண அந்த புண்யம்தான், இவரின் சா.மா வரதம் வேளையில் என்னையும் பங்கு கொள்ள வைத்தது.  நான் அடிக்கடி பல நாம சங்கீர்த்தன நிகழ்ச்சியில் பார்த்திருக்கிறேன். நன்கு பாடுவார் கூட.

கருமண்டப நிகழ்வை அவரிடம் சொன்னபோது மிகவும் சந்தோஷப்பட்டார்.  நாம சங்கீர்த்தனம், பூஜை, தியானம் மூன்று விஷயத்திலும் மிகவும் ஆழமான உணர்வு பூர்வமான கீர்த்தி.  தினமும் விடியல் காலை 3  முதல்   இரவு 9 மணி வரை.  பூஜை, வேத பாராயணம், என்று மிகவும் அருமையாக  ஸ்ரவணம் பண்ணி தேஜஸுடன் இருக்கும் மகான்.

 தபோவனம் ஸத்குரு   போல் ஒரு தோற்றம்.  மிகவும் அமைதியான பேச்சு, ஒவ்வொருவரிடம் தனித்தனியாக பேசி.  நான் வரகூர் என்று சொல்லவுடன் “அப்படி சொல்லுங்கோ” வரகூரா என்றார்.

அருமையான சாப்பாடு.

அன்றைய தினத்தில் ஆச்சர்யமான ஒரு விஷயம் நடந்தது.

கொஞ்சம் தபோவனம் செல்வோம்:

தபோவனம் என்பது, திருக்கோவிலூர் அருகே திருவண்ணாமலை போகும் வழியில் இருக்கும் குருநாதர் என்று அழைக்கப்படும் ஸத்குரு ஞானாநந்தரின் அதிஷ்டானம்.

ஞானானுபவம்  என்ற ஒரு புத்தகம் நாமாஜி அவர்களால் எழுதப்பட்டது.  தபோவன ஸத்குருவுடன் குருஜி என்று அன்புடன் அழைக்கப்படும் ஹரிதாஸ் கிரி மற்றும் நாமாஜியும் இருவரும் ஸத்குருவுடன் கட்டளையின் படி நாமப் பிரசாரம் செய்வது என்பதை முழு மூச்சாகக் கொண்டார்கள்

குருஜி ஜல சமாதி ஆனவுடன், நாமாஜி அவர்கள் தேசம் முழுதும் நாமப் பிரச்சாராம் செய்து, குருநாதர் கட்டளையை நிறைவேற்றினார். 

ஸத்குரு ஞானானந்தர் எப்படியெலாம் அவர்களுக்கு அணுக்ரஹம் பண்ணினார் என்பதை பற்றி எழுதிய அற்புதமான புத்தகம்.  இன்னும் தபோவன பக்தர்கள், சாய் சரிதம் போன்று, நிதமும் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.  

இந்தப் புத்தகம் படிக்கிறேன் என்று மனைவி ஸ்ரீ ஸ்ரீ. ராமானந்த சரஸ்வதி அவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்க, பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒருவர் “நான் தான் இந்தப் புத்தகத்தை எழுதினேன்” என்றார்.

எங்களுக்கு தூக்கி வாரி போட்டது.

அவர் பெயர் ஸ்ரீ பால குரு என்கிற ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹன்.

ஸ்ரீ பால குருவை நான் அன்று சந்திக்கும் பெரும் பாக்கியம் கிடைத்தது.  குருஜியையும், நாமாஜியையும்  பக்கத்த்தில் இருந்து பார்த்து, அவரகள் சொல்லிய அனுபவங்களை எழுதி இருக்கிறார்

அவர் சொன்ன ஆச்சர்யமான விஷயம் தான் எனக்கு பிரமிப்பும் குருநாதரின் அளப்பறியா கருணையையும் எனக்குப் புரிய வைத்தது. 

அவர் சொன்னார் “எனக்கு தமிழ் அவ்வளவாகத் தெரியாது, குறிப்பாக ல ள வித்தியாசம் தெரியாது,  மிகவும் ஸ்ரமப்பட்டு தான் ஒரு வரி எழுதுவேன்.  இந்தப் புத்தகம் முழுவது நான்தான் எழுதினேன்” என்றார் 

மேலும் சொன்னார் “யாரோ என் அம்மாவிடம் சென்று, உன் மகன் குருநாதரின் அனுபவங்களை தமிழில் எழுதுகிறான்” என்று சொல்ல என் அம்மா சிரித்து, “இதற்க்கு வாய்ப்பில்லை, அவனுக்கு தமிழ் அவ்வளவாகத் தெரியாது” என்றார்.  

“நான் எழுதியதை நினைத்துக் கொண்டு தபோவனம் சென்றால் அந்தக் காட்சிகள் குறிப்பாக, சத்குரு, குருஜி, நமாஜி சம்பாஷனைகள் நேரே நடப்பது போன்று தோன்றும்” என்றார்.

நான் மானசீகமாக அவருக்கு நமஸ்காரம் செய்தேன். குருஜி, நாமாஜி யை நேரில் பார்த்த ஒரு மகான் சர்வ சாதாரணமாக் எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் ஸ்ரீ. ஸ்ரீ ராமானந்த சுவாமிகளிடம் பேசிக்கொண்டிருந்தார்.

இப்படியும் ஒரு அனுபவம்.

 

 

 

 

 

 

No comments: