Wednesday, 20 November 2019

அரிய புலையர் மூவர் பாதம் -: யார் அந்த மூவர் ? ( சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா ?) )



எப்படி செம்மங்குடி என்றார் என் மனதில் பல பட்டாம்பூச்சிகள் பறக்குமோ, அதே போல் சிதம்பரம் என்றால், இன்னும் பல பட்டாம்பூச்சிகள் பறக்கும். என்னுடைய அப்பாவின் பூர்விகம் என்பதாலோ,  செம்மங்குடி பாட்டியின் பூர்விகம் எம்பதாலோ இருக்கலாம்.  

சிதம்பரம் பல ஆச்சர்யங்களின் பிறப்பிடம்.  அள்ள அள்ள குறையாத அதிசயங்கள்,  தோண்டத் தோண்ட பல "கீழடிகளை" பார்க்கலாம்.

ரொம்ப நாளாகவே, கோபாலக்ருஷ்ண பாரதி பாடிய “நந்தனார் சரித்திரத்தில், வரும் ஆபோஹி ராகப் பாடல் “சபாபதிக்கு வேறு தெய்வம், சமானமாகுமா”  என்ற பாடலில் “அரிய புலையர் மூவர் பாதம் அறிந்தே என்றே புராணம்...” வரி வரும்,  இந்த மூவர் யார், என்பதை என் "BLOG" ல் எழுத வேண்டும் என்பது தான்......நான் இதைப்பற்றி யாரும் விரிவாக எழுதியதாக நினைவில்லை அதனால் நானும் கொஞ்சம் எழுதலாம் என்றுதான்....

சங்கீதம் தெரிந்தவர்கள், கோ.பா பற்றி தெரியாதிருக்க வாய்ப்பில்லை. சிதம்பர நடராஜரைப் பற்றி உருகி உருகி எழுதி இருக்கிறார். மதுரை மணி அய்யரின், மறக்க முடியாத “எப்போ வருவாரோ, எந்தன் கலி தீர”, “மறுபடியும் கருவடையும் குழியில் தள்ளி, வருத்தப்டுத்த வேண்டாம்”-என்று பொட்டில் அடித்தால் போல் ஒரு பாட்டு. இந்தப் பாட்டைக் கேட்டால், சிதம்பரம் போக வேண்டாம் என்பது போல், “எந்நேரமும் உந்தன் சந்நிதியிலே, இருக்க வேண்டும் அய்யா.” என்று எனக்கு மிகவும் பிடித்த, “ஆடிய பாதத்தை காணாரே, பிறந்து ஆனந்தம் பூணாரே”.  மாஞ்சி ராக “வருகலாமோ” – கே.வீ நாராயணசுவாமி அவர்களால் மெருகேற்றப்பட்ட பாட்டு.  என்னுடைய தேவகி பெரியம்மாவுக்கு மிகவும் பிடித்த, அடிக்கடி பாடும் "யாராடினார் இனி எவர் ஆடுவார்". இரு வினை பிணிகளை கருவறுத்து விடுகிறேன், பயப்படாதே"- என்று ஒரு audacity பாட்டு.  நந்தனார் என்ற ஒரு character மூலம், அந்த நடராஜப் பெருமானை உருகி உருகி கொண்டாடி நம்மையும் உருக வைக்கிறார்.

இப்போது மெயின் டாபிக்குக்கு வருவோம்:

அந்த மூவர்:

நந்தனார் (திருநாளைப் போவார்)
பெற்றான் சாம்பன்
தில்லை வெட்டியான்

இந்த மூவரும், சிதம்பரத்தை சுற்றி இருந்த ஊரில் இருந்தவர்கள். தன்னுடைய, மனம் தளராத பக்தியினால், தில்லை நடராஜருடன் இரண்டற கலந்தவர்கள்.

கண்ணப்பர், மூவரில் ஒருவரோ என்ற சந்தேஹம் சிலருக்கு உண்டு. அவர் ஒரு வேடுவ குலத்தைச் சார்ந்தவர்.  புலையர் அல்லர். – என்றும் ஒரு தியரி உண்டு

மூவரில் பெ.சாம்பனை  சற்று விரிவாகத்தான் பாப்போமே !

பெற்றான் சாம்பன் :  சிதம்பரத்தில் உமாபதி சிவம் தீக்ஷிதர் என்பவர் இருந்தார். நடராஜப் பெருமானை பூஜை செய்யும் உரிமை கொண்டவர். அவர் தன குருவாக      மறைஞான சம்பந்தர் என்பவரை  கொண்டவர். அவர் ஒரு ஞானி போல் வாழ்ந்து வந்ததால், பல குலத்தவரிடம், கூழ் வாங்கி குடித்து தன் வாழ்க்கையை நடத்தி வந்தார். அவரை குருவாகக் கொண்டதால், உமாபதியார், பலரின் இழிச்சொல்லுக்கு ஆளானார்.

ஆகவே ஊரிலிருந்து சற்று ஒதுங்கி “கொற்றவன் குடி” என்ற இடத்தில், (தற்போது அண்ணாமலைப் பல்கலைகழகம் இருக்கும் இடம்) இருந்தார்.

பெற்றான் சாம்பன் என்ற ஒரு சிவ பக்தர் இருந்தார். அவர் விறகு வெட்டிப் பிழைப்பு நடத்துபவர். அளப்பரிய சிவ பக்தி உடையவர். உடம்பு முடியாத போது கூட, சிவலோக நாதனை பார்க்க முடியாவிட்டால், அன்று பட்டினி தான். தினம்தோறும் விறகு வெட்டி வந்து, கோவிலில் சேர்ப்பது தான் அவர் வேலை. “துதிக்கின்ற இதழ்களை விட, தொண்டு செய்யும் கரங்கள் உயர்ததல்லவா” இவரின் பணியக் கண்டு மகிழ்ந்த கூத்தன், இவர் கனவில் தோன்றி, தில்லை வாழ் அந்தணர்களால், தீண்டத்தகாதவர், என்று ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள, உமாபதியாரிடம் விறகு வெட்டிக்கொண்டு கொடுக்கச் சொன்னார். அவ்வண்ணமே செய்து வந்தார் பெற்றான் சாம்பன். இது உமாபதியாருக்குத் தெரியாது.

ஒரு நாள், நல்ல மழை பெய்ய. சாம்பன், விறகு வெட்டிக்கொண்டு வர முடியாமல் போகவே, சமையல் தாமதாகப் போனது. உமாபதியார், ஏன் என்று வினவ, “நாளும் விறகு கொண்டு வரும் சாம்பன் அன்று வரவில்லை” -என்றார்கள். மிகவும் ஆச்சர்யப்பட்ட, உமாபதியார், சாம்பன் வந்ததும், தன்னிடம் அழைத்து வரச் சொன்னார். மறு நாள், சாம்பன் விறகு கொண்டு வந்தார்.

அவர் இங்கு வருவதற்கு முன், தில்லை அம்பலத்தான், ஒரு பெரியவர் வடிவில் தோன்றி, சாம்பனிடம், எதோ எழுதி ஒரு ஓலையைக் கொடுத்து, அதை உமாபதியாரிடம் கொடுக்கும்படி சொன்னார். வந்தவுடன், அவரை, உமாபதியாரிடம் அழைத்து வர. சாம்பன், விறகு கட்டை கீழே வைத்துவிட்டு, ஒலையை அவரிடம் கொடுத்தார். அதை வாங்கி படித்த உமாபதியார், மிகவும் ஆச்சரியம் அடைந்தார். அது இறைவன் ஓலை அல்லவா ? அதில் எழுதி இருந்த வரிகள், கீழே ...


அடியாற்(கு) எளியன் சிற்றம்பலவன் கொற்றங்
குடியாற்(கு) எழுதிய கைச்சீட்டுப்- படியின்மிசை
பெத்தான் சாம்பானுக்குப் பேதமறத் தீக்கைசெய்து
முத்தி கொடுக்க முறை."
  
என்று வெண்பா யாப்பில் பாடல் ஒன்று வரையப்பட்டிருந்தது.


இதன்பொருள்

அடியவர்களுக்கு எல்லாம் எளியவனான சிற்றம்பலவன், கொற்றங்குடியார்க்கு- உமாபதி சிவத்துக்கு- எழுதியனுப்பிய சீட்டு. இச்சீட்டினைக்கொண்டுவரும் பெற்றான் சாம்பானுக்கு, வேறுபாடு கருதாது சிவதீக்ஷைசெய்து, அவனுக்கு முறையாக முத்திகொடுக்க என்பதாம்.

அவர் படிக்காத பாமரனாக, தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவராயினும், இறைவன்மேல்பேரன்புகொண்டதனாலும், அவ்வன்பு வெறும் அன்பாக இல்லாது, செயல்படும் அன்பாக ஆகித் தில்லைநடராசனுக்கும், அவரின் அடியாரான உமாபதிசிவத்துக்கும் பலன்கருதாது தொண்டுப்பணியாக மலர்ந்ததாலும் அவர் வீடுபேறு எய்துதற்கு உரியபக்குவத்தினைப் பெற்றிருந்தார். எனவே முத்திபெறத்தகுதி குலப்பிறப்போ, பெரும் படிப்பறிவோ இல்லை, மாறாக அன்பு அவ்வன்பும் எவ்விதப்பலனையும் கருதாத தொண்டாக மாறும்நிலையே முக்கியம்.

இதனைத் தன் ஞானத்தால் உணர்ந்த உமாபதிசிவம் அவருக்கு முறையாக சிவதீக்ஷை செய்து அருள்செய்தவுடன் அவர் முத்திஅடைந்தார்;

அதாவது, ஒளிப்பிழம்பாகத் தீத்தோன்றி, அவ்வொளிப்பிழம்பினுள் அனைவரும் பார்க்கப் பெற்றான் சாம்பான் மறைந்துபோனார்.

இதற்குப் பிறகு, நடந்த anti-cliamx ஐ பார்ப்போம்

 இதனைக் கண்ட அவர் சுற்றத்தார், உண்மை உணராது, மன்னவனிடம் சென்று, உமாபதிசிவம் பெற்றான் சாம்பனை எரித்துக் கொன்றுவிட்டதாக “போட்டுக கொடுக்க”. மன்னன் அவரை அழைத்து வினவியபோது, அவர் நிகழ்ந்ததைக் கூறினார். சிவதீட்சையின் மேன்மையையும், இறைவன் ஆணையையும் விளக்கினார். அதனை முழுதும் நம்பாத மன்னன், அப்படிஎன்றால் இங்குள்ள வேறு யாராவது ஒருவருக்கு முத்தியளித்துக் காட்டுக என்று கூறினான். அதனைக்கேட்ட உமாபதிசிவம், அங்கிருந்த அனைவரையும் உற்றுநோக்கினார், அவர்களுள் எவர் ஒருவருக்கும் முத்திபெறும் தகுதியில்லை. தகுதியான 'சந்நிதிபாதம்'  பெற்ற நிலை அடைந்தவர் இல்லை என்பதைக் கண்ட உமாபதிசிவம், வருந்தி மீண்டும் ஒருமுறை பார்க்கும்போது, அங்கு சிவனுக்கு அபிஷேகம் செயயும் இடத்தின் பக்கத்தில், நாளும் இறைவனுக்குச் செய்யும் திருமஞ்சனத்தின் நீரை (அபிஷேக நீரை) உண்டு வளர்ந்த அரளிச்செடியே தக்க பக்குவநிலையில் இருந்ததனைக்கண்டார் உமாபதிசிவம். தம் அருட்பார்வையினால் அச்செடியை நோக்க, அச்செடி ஒளிப்பிழம்பாக மாறி விசும்பில் எழுந்து மறைந்தது. அதனைக்கண்ட மன்னனும், சுற்றத்தாரும் உண்மையுணர்ந்து உமாபதிசிவத்தைப் பணிந்து வணங்கினர்.

தில்லை வெட்டியானைப் பற்றி, ஒரு குறிப்பும் இல்லை. அவருடைய பெயரைப் பார்க்கும்போது, தன் தொழிலைச் செய்து கொண்டு, இறைவனிடத்தில் அபரிமிதமான பக்தி கொண்ட இன்னொருவர் என்று சொல்லலாம்

நந்தனார் சரித்திரம் பிரசித்தம், அதனால், விளக்கமாக இங்கு கூறப்போவதில்லை

இந்த மூவரும் தான் கோ.கி பாரதி சொல்லும் மூவர்.


கொசுறு- புலையன் என்ற வார்த்தையை வேறு கோணத்தில் பார்ப்போம்

அப்பர் சுவாமியின் வாக்கிலிருந்து வரும் கீழ்க்கண்ட  வரிகள் அற்புதமானவை

குபேரன், சிவபெருமானின் நண்பன். குபேரனின் செல்வக் குவியல்களை சங்க நிதி, பதும நிதி என்று பிரிப்பார்கள்.

அப்பரிடம், ஒரு ராஜா, ஒரு ஓலையில் “சங்க நிதி, பதும  நிதி” இரண்டும் உனக்குத் தருகிறேன், இந்த மண்ணுலகம் இருக்கும் வரை, மண்ணுலகமும், அதற்குப் பிறகு, விண்ணுலகமும் தருகிறேன்” என்று எழுதி கொடுக்க, அப்பர் ஸ்வாமி ராஜாவிடம் “ஏம்பா ! உனக்கு தெய்வ பக்தி உண்டா” என்று கேட்க, அதற்கு ராஜா “அதேல்லாம் கிடையாது”  என்றான்.

உடனே, அப்பர், அந்த ஓலையை சுருட்டி அவன் முகத்தில் விட்டெறிந்துவிட்டு, சற்று தூரம் சென்று பார்த்த போது, அங்கு உடலெல்லாம் தொழு நாயால் பாதிக்கப்பட்டு, மாட்டின் தோலை உரித்து உண்ணக்கூடிய புலையன் ஒருவன் நின்றிருக்க, அவனிடம் அப்பர் ஸ்வாமிகள் சென்று அவனிடம் “ஏம்பா உனக்கு தெய்வ பக்தி உண்டா” என்று கேட்க, அவன் அப்பர் ஸ்வாமியிடம் “அதெல்லாம் இல்லை சாமி, எப்போவாவது “சங்கரா சங்கரா” என்று சொல்வேன்” என்று சொல்ல, தடாரென்று, நெடுஞ்சாண்கிடையாக அவன் காலில் விழுந்து, கீழே கூறப்பட்டுள்ள செய்யுளைக கூறுகிறார்.


சங்க நிதி பதும நிதி இரண்டும் தந்து, தரணியொடு வானாளத் தருவரேனும், மங்குவார், அவர் செல்வம் மதிப்போம் அல்லோம், மாதேவர்க்கு ஏகாந்தர் அல்லார் ஆகில்......

அதற்கு மாறாக,

அங்கமெல்லாம்  குறைந்து அழுது தொழு நோயராய்
ஆவுரித்து தின்று உழலும் புலையரேனும், கங்கை வார் சடைக் காந்தர்க்கு அன்பராகில், அவர் கண்டீர் நான் வணங்கும் கடவுளாரே

இந்கு புலையன் என்பது வட மொழியில் சண்டாளனைக் குறிக்கும். அவன் தொழு நோயால் பாதிக்கப் பட்டவனாக இருந்தாலும், கங்காதரனாகிய சிவ பெருமானுக்கு பக்தனாக இருந்தால் அவனே நான் வணங்கும் கடவுள் என்கிறார்- அப்பர் பெருமான்.

இந்த அழகெல்லாம், தமிழில் தான் பார்க்க முடியும்

தை புலவர் கீரன் சொல்லக் கேட்கவேண்டும். பட்டையைக் கிளப்பும்வார்.

நடராஜின் பாடல்களைப் பற்றி ஒரு சிறு குறிப்புடன், இந்தக் கட்டுரையை முடிக்கிறேன்.

சிதம்பரத்தைப் பற்றி, மாத்தி யோசிக்கும்போது,  நிறைய பேர், இந்த கோவிலைப் பற்றி பாடி இருக்கிறார்கள்.  பொன்னையா பிள்ளை,  மாரி முத்தாப் பிள்ளை, நீல கண்ட சிவன், பாபநாசம் சிவன் என்று பலர். எனக்குத் தெரிந்து, சிதம்பரதைப் போல், இத்தனைப் பேர் பாடிய க்ஷேத்ரம் வேறு எனக்கு நினைவில்லை.  இதில் முத்து சுவாமி தீட்சிதர், அப்பையா தீட்சிதர் போன்ற ஸம்ஸ்கருத பண்டிதர்கள் வேறு.

பாப விநாச முதலியார் என்று ஒருவர் "நடமாடித் திரிந்த உமது இடது கால் உதவாமல், முடமாகிப் போனதென்று சொல்லுவீரையா ?! என்று ஆச்சரியமுடன், சிறிது நக்கலுடன் ஒரு பாட்டு எழுதி இருக்கிறார். இவர் எழுதிய வேறு பாட்டு எனக்கு தென் படவில்லை. இதை என் அம்மா, பாட்டி, தாத்தாக்கள் பாடி கேட்டு இருக்கிறேன்

அதில் ஏன் முடமாகியது என்று ஒரு லிஸ்ட் கொடுக்கிறார்

- நெருப்பான மேனியில் திரு நீரை சுமந்ததினால், வாதம் வந்ததனால்
- மார்கண்டேயனுக்கு வக்காலத்து வாங்கி எமனை உதைத்தால், கால் சுளுக்கியதா ?
- சுந்தரருக்காக, திருவாரூரில், பரவை நாச்சியாருக்காக, காதல் தூது நடந்ததால் கால் வலியோ (நடையாய் நடந்தாராம்....)
- அர்ஜுனனுடன் சண்டை போட்டு, காலில் "முட்டி பிசகியதோ"
- தாருகா வனத்தில் அலைந்ததில், முள் குத்தி விட்டதோ...

என்று அடுக்குகிறார். கடைசியில் அபாரமான "கண்ணீர் வர  வழைக்கும், வரிகளில் முடிக்கிறார்

பக்தி செய்யும் பெரியோர்கள், பாப நாசனமாகும் பரம பதம் இதுவென்று தூக்கி நின்றதுவோ !! என்று முடிப்பதற்கு முன்பு, அம்பாளைப் வைத்து ஒரு வரி எழுதுகிறார்  பாருங்கள் - அது "டாப் க்ளாஸ்"

"சக்தி சிவகாமவல்லி தன் பாகம் நோகுமெஎன்றே, தரையில் அடி வைக்க தயங்கி நின்றதுவோ !!"

You tube ல், இந்தப் பாடலை காம்போதி ராகத்தில் பல பேர் பாடிக் கேட்கலாம். முடிந்தால் கே.வீ. நாராயணசுவாமி அவர்கள் பாடியிருக்கிறார் கேளுங்கள்.  விஜய் சிவா- சக்தி சிவகாமவல்லி யில் நிரவல் பாடி, பாடியிருக்கிறார்.  ஆஹா... அற்புதம்

சிதம்பரம் க்ஷேத்ரம் போய், சந்நிதி முன்பு நின்று,  இடது காலை தூக்கி வைத்துக் கொண்டு இருப்பது, அம்பாளுக்கு கால் வலிக்கும் என்றா ? என்று ஒரு கேள்வி கேட்டு,  அவரை உற்று நோக்குங்கள்.  நீங்கள் மெய் சிலிர்க்க - நடராஜப் பெருமான் "ஆமாம்" என்று, ஜடா முடி அழகாக அசைய தலையை ஆட்டுவார்.




Monday, 11 November 2019

செம்மங்குடியும் அன்னாபிஷேகமும்


இன்று 12.11.2019 அன்னாபிஷேகம். மயிலாப்பூரில் இருக்கும் எனக்கு, சுற்றி வர இருக்கும் நிறைய சிவன் கோவிலில் அன்னாபிஷேகம் பார்க்கும் பாக்கியம் உண்டு. சிகரம் வைத்தால் போல் இருக்கும் கபாலி கோவிலில் கேட்கவே வேண்டாம். இன்று முழுவதும் திமிலோகப்படும். கூட்ட்டம் நெறியும்.

இருந்தாலும் என் மனசில் என்னால் என்றுமே மறக்க முடியாத செம்மங்குடியில் உள்ள ஆனந்தவல்லி உடனுறை அகஸ்தீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் இன்றும் பசுமையாக நினைவிருக்கிறது.

பாரதி வார்த்தையை சற்று மாற்றிப் பாடினால், “அன்னாபிஷேகம் என்ற போதினிலே, செம்மங்குடி சிவன் கோவில் பிரசாதம் சுவை வந்து “மோதுது” நாக்கினிலே”. என்று சொல்லலாம்.

ஐப்பசி என்றால் எங்கள் செம்மங்குடி வீட்டில் கவலை வந்து விடும், “ஐப்பசி என்றால அடை மழை” எனற வார்த்தையை சற்றும் பொய்க்காமல் மழை கொட்டும். மழைக்காலம் என்பதால், பத்தாயத்தில் (பத்தாயம் என்பது என்ன என்று தெரியாதவர்கள், செம்மங்குடி product  அல்லர், அதனால் அவர்களுக்கு தெரிய வேண்டாம் பத்தாயம், சப்பரம், முத்தாலத்தி- இவையல்லாம் எங்கள் ஊரில் பிரசித்தம்).  நெல் கொட்டி வைக்கவேண்டும், வீட்டில் மழை ஒழுகாமல், கூரையை சரி செய்ய வேண்டும். சாக்கு தைத்து பெரியதாக பண்ணி அதை தரையில்போட்டு ஈரப்பசையை சரி செய்ய வேண்டும், மாடு, கன்று, வைக்கோல் போர், என்ற பல கவலைகள்.

ஆனால் எனக்கு ஐப்பசி பௌர்ணமி அன்று வரும் அன்னாபிஷேகம் மிக முக்கியம். எனக்கு என்றால், நான், நாகராஜன், எதுத்த வீட்டு கணக்கு பிள்ளை அவர்களின் பையன், வாசு, அய்யங்கார் சார் வீட்டுப் பையன், (பல பெயர் மறந்து விட்டது) தட்டாத்தி மூலை வெங்குட்டு, பிச்சை சாராத்து (சேங்காலிபுரம்) சுந்தரராமன் இவர்கள் மல்லையா, நிரவ் மோடி மாதிரி, திடீரென்று வந்து காணாமற் போய் விடுவார்கள்.)

எங்களுக்கு சீனியர், என் மாமா, அப்புவாது ராமதுரை, போஸ்ட் மாஸ்டர் ஆத்து கோபால கிருஷ்ணன், பக்கத்தாத்து எக்கு. ராமமூர்த்தி, சுப்பய்யன், சீனு, மில் காராத்து ஜெயராமன், பிச்சை சார் பையன், ஹெட் மாஸ்டர் வீட்டு ராமமூர்த்தி மற்றும் பலர்- இவர்கள் அன்னாபிஷேக volunteers – (இவர்கள் என் மரியாதைக் குரியவர்கள்)

மண்டகப்படி, - ஹெட் மாஸ்டரோ, கரெஸ்பாண்டெனடோ, பட்டாமனியக்காரரோ – தெரியாது. தெரிந்து என்னமோ சாப்பாடு தான்

என் வீட்டில் சாப்பாட்டு மெனு என்பது சிறிய வட்டம். ஒரு சாஸ்த்ரிகள் குடும்பத்தில் 10 பேர் இருந்து கொண்டு, (இதில் அடிக்கடி வரும் கெஸ்ட் வேறு)  தனக்கு இல்லாவிட்டாலும், தன் குழந்தைகள் வயிறு நிறைய சாப்பிடவேண்டும் என்று பார்த்து பார்த்து சமைத்து என்னை வாழ வைத்த என் தாத்தா பாட்டி வாழ்ந்து என் மனதில் நிறைந்த இடம் 

சாம்பார், ரசம், கறிகாய் வகைகள் வாரத்திற்கு இரண்டு நாள் (அ) ஐந்து நாள் தான்.  மோர் சாதம்,, வெத்தகுழம்பு, மாவடு, கடாரங்காய் ஊறுகாய்.. இவைகளுடன் சந்தோஷமாக இருந்தாலும், அன்னாபிஷேகம் என்றால் எங்களுக்கு சாப்பிட “வடை, சக்கரைபொங்கல், தேங்காய் சாதம், புளி சாதம் போன்ற “சித்ரான்னங்கள்” இத்யாதி – கிடைக்கும் என்பதால் இந்த எதிர்பார்ப்பு.

வைகுண்டம் வருகிறாயா என்று யாராவது கூப்பிட்டால் ”இருங்கோ, அன்னாபிஷேகம் அன்று சிவன் கோவிலில் சாப்பாடு சாப்பிட்டு விட்டு வந்து விடுகிறேன் என்று சொல்வது போல் இருந்தது என் வாழ்க்கை     

செம்மகுடியில் சிவன் கோவில் அன்னத்தால் அபிஷேகம் செய்வது என்பதோ, அம்பாளுக்கு அபிஷேக ஸகிதம், அன்னத்தால் பட்டுப் பாவாடை போல, ஏகாம்பர சிவாச்சாரியார் அற்புதமாக அலங்காரம் செய்கிறார் என்பதோ, போஸ்ட் மாஸ்டர் மாமா. “மகாதேவா” என்று மனமுருக அழைக்கும் போது கிடைக்கும் அற்புத சுகமும், ஸ்ரீ. ராமமூர்த்தி சாஸ்த்ரிகளும், சிவகுரு மாமா, குமாரு தீட்சிதர் மாமா மற்றும் பல சாஸ்திர பண்டிதர்கள் சொல்லும் மகான்யாசம், ருத்ரம், சமகம் அதில் ஜ்வலிக்கும் அகஸ்தீச்வர், பாவாடை கட்டிய பெண்கள்
“ஸ்ரீ சக்ர ராஜ சிம்ஹானேஸ்வரி” என்று “செஞ்சுருட்டி” ராகத்தில் பாடுவதோ -– எல்லாம் எனக்கு ஒரு பொருட்டே அல்ல. எனக்கு வேண்டியது அன்றைய தினம் இரவு கிடைக்கும் சர்க்கரைப்பொங்கல் தான். 

இந்த scnene ஐ சொல்லியே ஆக வேண்டும். சிவன் கோவிலில் தீபாராதனை முடிந்தவுடன், பிரகாரத்தை சுற்றி வாழை இல்லை போட்டு உட்கார வைத்து விடுவார்கள். கொஞ்சம் லேட் ஆக வந்தால் உங்கள் இடம், துர்க்கை அம்மன் சன்னதிக்கு எதிரே போய் விடும். எனக்கே நடந்து இருக்கிறது. ஒவ்வொரு பதார்த்தமாக வரும்போது, திகில் படம் பார்க்கும் பயம் இருக்கும்.  நம் இலைக்கு வரும்போது, பதார்த்தங்கள் இருக்குமா, நமக்கு பக்கத்தது இலையை விட “நிறைய போடுவார்களா”. குறைத்துப் போடுபவரை கேட்டால் “கம்......டி. எல்லோருக்கும் போடா வேண்டாமாடா ?” – என்று திட்டு கிடைக்கும். ஸ்வீட் வந்தால், ஜாக்கிரதையாக இடது கையில் வாங்கி, பத்திரப்படுத்திக் கொள்வேன். அடுத்த நாளைக்கு, அதுதான் என் சொர்க்கம்

இலையில் வயிறு முட்ட முட்ட சாப்பிட்டுவிட்டு, குளத்தில் கையை அலம்பி, ஒரு வாய் ஜலம் குடிக்கும்போது, வரும் அந்த சுகம் இருக்கிறதே.............அந்த சுகம் -ஆள்காட்டி விரலையும், ஒரு மொபைலையும் வைத்துக்கொண்டு, உலகத்தையே விலை பேச முடியும் என்றாலும் இன்று எனக்கு வீட்டில் ஸ்வீட் பண்ணி சாப்பிடும்போதும், வலது பக்கம் Swiggy,  இடது பக்கம் zomato, கபாலி கோவிலை சுற்றி இருக்கும் சரவண பவன் முதல், போன மாதம் திறந்த “வெற்றி விலாஸ் – இவ்வளவு இருந்தும் – - வரவில்லை

எனக்குத் தெரிந்து, பெருமாள் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை அன்று எங்கள் தாத்தா மண்டகப்படியில், மிகவும் பிரமாதமாக நடக்கும். அது இன்றும் அடுத்த ஜெனரேஷனிலும் தொடருகிறது


ராம நவமி அன்று, நீர் மோர், பானகமும், விசிறியும் கொடுப்பார்கள். அதுவும் எனக்கு பானகம் வரும்போது “உத்தரிணி” பானகமும், கொஞ்சம் கரையாத வெல்லமும் கிடைக்கும்.  கலரே இல்லாத மோர் தான்.....



.

Wednesday, 30 January 2019

காற்றில் கலந்து என் மனதில் நிறைந்த அம்மம்மா:


நான் அம்மா என்று அழைக்கும் எனது மாமியாரின் தாயார்,   ஸ்ரீமதி பிரகதாம்பாள்  என்ற “அம்மம்மா” 28.1.2019 அன்று கும்பகோணத்தில், சிவலோகப் ப்ராப்தி அடைந்தார். அவருக்கு வயது சுமார் 95. 

அம்மம்மா இறப்பதற்கு சற்று முன்/ இறந்த பிறகு என்ன என்ன நடந்தது என்று நினைத்தால் மிகவும் ஆச்ச்சர்யமாக இருக்கும்:

28.1.19 அன்று மதியம், அம்மம்மாவிற்கு பணிவிடை செய்யும் லக்ஷ்மி, (இவரைப் பற்றி கடைசியில் எழுதி இருக்கிறேன்) அம்மாவிடம் “இன்று இரவு தாண்டாது” என்று சொல்ல, மதியமே, கொஞ்சம் மண், துளசி, தீர்த்தம் சேர்த்து பிசைந்து  மண்ணாசை, பொன்னாசை “போகவேண்டும்“ என்ற ஐதீகத்தில் சாப்பிட கொடுக்கப்பட்டது. இது லக்ஷ்மி ஐடியா.

இரவு, உயிர் பிரியும் நேரத்தில், மூச்சு இறைக்க, கண் விழித்துப் பார்த்த அம்மம்மா, தனக்குத் தாயாய் இருந்து பணிவிடை செய்த அம்மாவையும், தனக்குப் பெண்ணாய் இருந்து பணிவிடை செய்த லக்ஷ்மியையும் “நன்றாகப்” பார்த்து கண்ணை மூடிக்கொண்டு விட்டாள். எல்லாம் முடிந்தது.

விட்டல் போட்டுக்கொண்டிருந்த சட்டை (பேரனின் சீதனாமாக) இருக்க, தன் உயிரினும் மேலாக அன்பு வைத்திருந்த கணேசனின் வீட்டில் இருந்து “புதுப் புடவை” எடுத்து வந்து கட்டி விட, மகேஷ் என்கிற “செல்ல” பேரன் கடைசி கார்யங்கள் செய்ய, மோகன் அண்ணாவின் மேற்பார்வையில், ஜாம் ஜாம் என்று இறுதி யாத்திரை.

மிகவும் ஆச்சர்யப்பட்ட ஒரு விஷயம், செய்தி கேட்டு மகேஷ், சென்னையில் இருந்து கும்பகோணம் கிளம்பிய காரின் driver பெயர், நீலகண்டன்.  அம்மம்மா அந்த நீலகண்டனை அடைவதற்கு, இந்த நீலகண்டன் உதவி  செய்தார். என்ன ஒற்றுமை ?

நான் வருத்தப்படப்போகிறேனே என்று, முதல் நாள் என்னை வரவழைத்து, என் கையால் ஒரு ஸ்பூன் பால் வாங்கியும் குடித்துவிட்டாள். அதைப் பற்றி அடுத்த பாராவில்:

27.1.2019 அன்று என்ன நடந்தது என்று கேட்டால் ஆச்சர்யப்படுவீர்கள்

நான் தரங்கிணி மஹோத்ஸவத்திற்காக வரகூர் சென்றிருந்தேன் (25-27) அங்கிருந்து கும்பகோணம் சென்று, “உடம்பு முடியாமல்” இருக்கும் அம்மம்மாவைப் பார்த்துவிட்டு சென்னை செல்லலாம் என்று நானும் நிஷாவும் 27.1.2019 அன்று சுமார் மாலை 5 மணிக்குச் கும்பகோணம் சென்றோம்.

கால்கள் மட்டும் லேசாக ஆட, நினைவு தப்பி, 4 நாடகள் அன்ன ஆகாரமின்றி, கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் அம்மம்மாவைப் பார்க்க மனசு கனத்துப் போனது. குடும்பத்தில் எல்லோரையும் அரவணைத்து, ஒரு பெரிய வழிகாட்டியாக இருந்தவர், அவர் நடையின் வேகத்துக்கு யாருமே ஈடு கொடுக்க முடியாது.  ஒரு பெரிய கூட்டுக்குடும்பத்தை, சர்வ சாதாரணமாக நிர்வகித்தவர், இப்போது கடைசி தருணங்களில்...

நான் மிக அருகில் உட்கார்ந்து 2-3 spoon பால் வாயில் விட்டேன். பால் கொஞ்சம் வெளியில் வந்தது. கூப்பிட்டுப் பார்த்தேன், உணர்ச்சியே இல்லாமல் கண்கள் மூடி இருந்தார். சாயம் ஸந்த்யாவந்தனம் செய்யும்போது, அம்மம்மாவின் பக்கத்தில் உட்கார்ந்து “காயத்ரி மந்த்ரம்” ஜபித்தேன். கும்பேஸ்வரன், கோவிலுக்குச் சென்று பிரசாதம், வீபூதி, நெற்றியில் இட்டு விட்டேன், கடந்த 1 வருடங்களாக அந்த ஜீவன் பட்ட பாடு நினைவுக்கு வந்து, கொஞ்சம் அழுகை வந்தது. குருநாதரிடம் வேண்டிக் கொண்டேன், “போறும், இந்த ஜீவனை “தாத்தப்பாவிடம்” சேர்த்து விடு” என்று லலிதா நவரத்தின மாலை, அம்மம்மாவின் காது அருகில் சொன்னேன்..

நேற்று காலை, சென்னை வந்து, ஆபீஸ் சென்று,  இரவு 7 மணிக்கு வித்வத் சமாஜத்தில், வர்ஷிணி பாடி முடிக்கும்போது, SMS வந்தது மகேஷிடம் இருந்து...........

இதை நான் என்ன என்று சொல்ல ? நான் பார்க்க வேண்டும் என்பதற்காக, உயிரை வைத்துக் கொண்டிருந்தாள் என்று தான் சொல்ல வேண்டும்.  கடைசி நாட்களில், யாரையும் ஸ்ரமப்படுத்தாமல், ICU என்று உடல் முழுவதும் ஊசியால் குத்திக்கொள்ளாமல், மெதுவாக குருநாதரிடம் ஐக்கியமானது அந்த ஜீவன்.

“சிந்து: ஸரித் வல்லபம்” என்று சிவானந்தலஹரியில், ஒரு ஸ்லோகம் உண்டு.  பக்தி எப்படி இருக்கவேண்டும் என்று சொல்லும்போது, ஆதி சங்கரர், “நதி உற்பத்தி ஆகும் இடத்திற்கு சென்று பார்த்தால், அது “ஹோ” என்ற பேரிரைச்சலுடன், மலையிலிருந்து உற்பத்தி ஆகும், அது, பல இடங்களுக்க்குச் சென்று கடைசியில் கடலுக்கு வரும்போது அமைதியாக வந்து கடலில் சேர்ந்து விடும், (ஏனெனில் நாம் கடைசி கட்டத்தில் இருக்கிறோம்- என்று தெரிவதால்)”- என்று சொல்கிறார்.
அம்மம்மாவில் அந்த அமைதியை, நான் அப்படித்தான் பார்த்தேன்.

இது கல்யாண இறப்பு (மரணம்} என்பதால், ரொம்ப உணர்ச்சி “கொப்பளிக்க” எழுதப் போவதில்லை. நான் பார்த்த அந்த ஒரு உன்னதமான பெண்மணியப் பற்றி சில வரிகள்:

இந்த அம்மம்மா, அப்பப்பா போன்ற வார்த்தைகள், சிலோன் வானொலியில் கேட்டாற்போல் இருந்தாலும், இந்த உறவுகள் நம்மை விட்டு போய், அம்மா அப்பாவையும் மதிக்காது, இந்தக் காலத்து குழந்தைகள் வாழும் “வாட்ஸ்அப்” வாழ்க்கையை நினைத்தால், பாவமாக இருக்கிறது. அத்தங்கா, அத்தா மன்னி போன்ற பல உறவுகளுடன் எனக்கு பழக்கம் உண்டு.

எனக்கு சின்ன வயதில் செம்மங்குடியில் என்  பாட்டியோடு (அம்மாவின் அம்மா) இருந்ததால் (நான் என் பாட்டியை அம்மா என்றுதான் கடைசி வரையில் கூப்பிட்டேன்), பாட்டியின் “அளப்பரிய” அன்பு என்றால் என்ன என்று தெரியும். எனக்கு கல்யாணம் ஆன பிறகு, அம்மம்மா ரூபத்தில் இன்னொரு பாட்டி என் வாழ்க்கையில் வந்து, அதே அ.அ காண்பித்தது நான் செய்த பாக்கியம்.

மாப்பிள்ளை என்று என் மேல், ஒரு மரியாதை இருந்தாலும், ஒரு மகனுக்கு சமமான அன்பை என் மீது பொழிந்தவர் அம்மம்மா.

நான் மடிசார் கட்டி நிறைய பேர் பார்த்திருக்கிறேன்.  மடிசார்  கட்டிக்கொண்ட, அம்மம்மாவைப் பார்க்கவேண்டும். மிகவும் அழகாக, தெய்வீகமாக இருக்கும். மடிசாருக்கு பெருமை என்று கூட சொல்லலாம். இதை என் அம்மாவே சொல்லி பெருமைப் படுவாள். நான் நினைப்பதுண்டு, யாராவது, மடிசார் கட்டிய மங்களாம்பாளைப் பார்க்க வேண்டும் என்றால், “சரக்” என்று திரும்பி அம்மம்மாவைப் பார்த்தால் போறும். வைர மூக்குத்தி மின்ன, இரண்டு மூக்கும் குத்திய அம்மம்மா, மங்களாம்பாளாக, ஜொலிப்பாள்.

கிராமத்துப் பாட்டி (களிடம்) யிடம் சில குணங்கள் உண்டு:
வீட்டையே தன் Control ல் வைத்திருப்பாள். எது எது எங்கே இருக்கிறது. வேலைக்காரர்களை, எப்படி வேலை வாங்க வேண்டும், கொல்லையில் மாடு பால் கறப்பதில் இருந்து, மச்சிலில், எத்தனை பித்தளை பாத்திரங்கள் இருப்பது வரை. ஏதன் மத்தியில்,  கிராமத்து மகளிர் பஞ்சாயத்து வேறு.

குழந்தைகளை எப்படி அரவணைக்க வேண்டும், அதே சமயத்தில் “வெளுக்கும்” சமயத்தில் எப்படி அடிக்க வேண்டும். – எல்லாம்  அத்துப்படி. 2 குழந்தைகளை வைத்து சமாளிக்க முடியாமல் திணறும் இந்தக் காலத்தில், சர்வ சாதாரணமாக 5-6  குழந்தைகளை வளர்த்து, (கோடை விடுமுறை என்றால் 5, 10 ஆக உயர்ந்து விடும்), வெற்றி கண்டவர். தினமும் பெரிய விருந்தோ, தடல் புடல் எதுவும் இல்லை. வெறும் பழேது தான், அதை எதோ “பண்ணி”- அறு சுவை விருந்தாக கொடுத்தவர். – இப்போது அந்தப் பழேதுக்கு ஏங்குகிறோம், அதுதான் அவர்களின் வெற்றி.

சாதாரணமாக, எல்லா வீட்டிலும் தாத்தா என்பவர் ஒன்றுமே தெரியாமல் இருப்பார், பூஜை செய்வார், வயலுக்குப் போய் அறுவடையை கவனிப்பார்.  சாஸ்த்ரிகளாக இருந்தால், பெரிய மனிதர்கள் வீட்டுக்குப் போய் பூஜை செய்துவிட்டு, வாழைப்பழமும், தக்ஷிணையும் வாங்கி வருவார். வந்து சாப்பிட்டுவிட்டு தூங்குவார். ஆனால், தவறாமல் வீட்டுக் கணக்கு எழுதி, நிறைய செலவு ஆகிறது என்று புலம்புவார். அடுத்த நாளே 4 பேரை அழைத்துக் கொண்டு சாப்பாடு போடச் சொல்லுவார். மடிப்பு கலையாமல் சட்டை போட்டுக் கொண்டு வெளியில் போவார்.

அப்பளம் இட்டாளா ? மாவடு போட்டாளா ?  மாகாளிக் கிழங்கு 
கிடைத்ததா ? கொல்லையில் மாட்டுக்கு வைக்கல்/புல்லு இருக்கிறதா ?  ம்ஹூம், கவலையே கிடையாது- இது எல்லாம், சர்வ சாதாரணமாக செய்வாள், பாட்டி.

இந்த அம்மம்மாவும் அப்படித்தான்.

நான் நினைத்துப் பார்க்கிறேன். எதோ படிப்பு படித்து, தினமும் ஆபீசில் ஒரு 100 பேரையும், 50 e-mail ம் சமாளிக்க முடியாமல் திணறி, எப்படா Sunday வரும் என்று நினைக்கின்ற எனக்கு, சுமாராக படித்து, 365 நாளும், தன் குடும்பத்திற்காக ஓயாமல் உழைத்து வெற்றி கண்ட, அம்மம்மா, சத்தியமாக என் Management Guru.

மனமேற்குடியில், (“நிஷா சொல்வாள்) தினமும் வீட்டில் சமாராதனை போன்று தினமும் சாப்பாடு, தாத்தப்பா “கர்ணம்” (அந்த காலத்து VAO range) பதவியில் இருந்ததால், வீட்டிற்கு வருபவர், நிறைய உண்டு. அவர்கள் எல்லோருக்கு சாப்பாடு. அன்ன பூரணியாக வலம் வந்தவர்.  இந்த புண்ணியம் எப்படி அவருடைய கடைசி காலத்தில் உதவி செய்தது என்பதை நான் கண்கூடாகப்  பார்த்தேன்.  கடைசி பாராவில் இதைப் பற்றி எழுதி இருக்கிறேன்.

கடைசி காலத்தில், தன் பெண் வீட்டில் (என் மாமியார் வீட்டில்) தான் இருக்க வேண்டும் அம்மம்மா  முடிவு செய்து, கும்பகோணத்தில் தங்கி விட்டாள் உடம்பு முடியாமல், படுத்த படுக்கையாய் ஆன பிறகு, தன் “காரியங்கள்” கும்பகோணத்தில் தான் நடக்க வேண்டும் என்று திடமாக இருந்தாள்.

என் நினைவுகள் சற்று பின்னோக்கி விரிகிறது. கல்யாணம் ஆகி, முதலில் நிஷாவுடன், அம்மம்மாவை அழைத்துக் கொண்டு, மும்பை செல்கிறேன். தாதரில் இறங்கி, வாஷி சென்று (குடித்தனம்) வாழ்கையை ஆரம்பிக்கிறோம்.  நிஷாவுக்கும் கொஞ்சம் ஹிந்தி வரும் (கறிகாய் கடையில்- வெண்டைக்காயைக் காட்டி- ய கித்னா ஹை ? என்று கேட்பாள்), அம்மம்மாவுக்கு, தமிழை தவிர ஒன்றுமே தெரியாது. சொன்னால் நம்பமாட்டீர்கள், அந்தத் தெருவில் இருந்த மராட்டி, ஹிந்தி பேசும் எல்லா வீட்டிலும், ஒரு மாதத்தில் அம்மம்மா famous ஆகிவிட்டாள். என்ன பாஷை பேசினாள், என்ன செய்தாள் ? என்று எனக்கு இன்று வரை புரியவில்லை. மாதாஜி ! மாதாஜி !! என்று அவனவன் “அமிர்தாநந்தமயி” ரேஞ்சுக்கு அம்மம்மாவை உயர்த்தி விட்டார்கள். கறிகாய் தள்ளு வண்டிக்காரன், (இந்த அழகில் அவன் ஹிந்தி கூட இழுத்து இழுத்து பேசும் bhaiyaa வகுப்பைச் சேர்ந்தவன். அவன் பேசும் ஹிந்தி எனக்கே புரியாது) அம்மம்மா வாங்கிய பிறகுதான், (கருவேப்பலையாவது) மத்த வீட்டுக்குச் செல்வான் என்றதைக் கேட்டு எனக்கு தலை சுற்றியது.

அந்த ஊர் மராட்டி பெண்கள், கட்டிக்கொள்ளும் மடிசார், கொஞ்சம் “எசகு பிசகாக” இருக்கும். தலையில் வேறு அரை தொப்பி மாதிரி இருக்கும். அம்மம்மா மடிசார், அங்கு மிகவும் famous.  அம்மம்மா மடிசாரில் மயங்கிய மகாராஷ்ட்ர மங்கையர் பலர். !!!

இன்று இதை நினைத்துப் பார்க்கும்போது, அன்பு என்ற மொழிக்கு, பாஷையே தேவையில்லை. (Ammaamma had “that”unconditional love).

அம்மம்மாவிடம் இருந்த அந்த focus, facing any situation head-on, determination, excellent attitude, equally loving every one she meets..  – It is a lesson.

எனக்கு பழைய சாதம் நிஷா போடுவது, அம்மம்மாவுக்கு சுத்தமாக பிடிக்காது. எனக்கு சாப்பாடு போடும்போது அம்மம்மா பார்த்துக் கொண்டே இருப்பாள். நிறைய சாப்பிடவேண்டும், “அந்த ஊறுகாயும் கொஞ்சம் போடு” – என்பாள். நல்ல சாப்பாடு, நாள் கிழமை என்றால், சம்படம் நிறைய பக்ஷணங்கள்- எல்லாக் குழந்தைகளும்நன்றாகச் சாப்பிடவேண்டும்- அது தான் அம்மம்மாவின் முதல் குறிக்கோள்..
விக்னேஷ் பிறக்கும்போது, குழந்தையை யார் முதலில் வாங்கிக் கொள்வது என்ற போது “ரிஷி பஞ்சமி’ விரதம் முடித்து இருந்ததால், என் அம்மா வாங்கிக் கொள்ள முடியாமல் இருந்த நிலையில், சற்றும் யோசிக்காது, முந்தானையில், குழந்தையை அம்மம்மா வாங்கிக் கொண்டதை நினைக்கும் போது, என் மனது கனக்கிறது.  நான் வசித்த எல்லா இடத்திற்கும் அம்மம்மா வந்திருக்கிறாள். 

கையால், வாயை லேசாக மூடிக்கொண்டு சிரிக்கும் அந்த சிரிப்பு. “நிஷா எப்போதும் சமத்துதான்” என்று வக்காலத்து வாங்கும் அந்த லாவகமும், Present Generation விட்டல், ஞாநேஸ்வரி வரை அவர் காட்டிய அன்பு, இனிமேல் யாரும் காட்டவே முடியாது.

யாரையும் அவர் குறை சொல்லி நான் பார்த்ததே இல்லை. அவருடைய வாழ்க்கையில் கடந்து வந்த சோகங்கள் பல. பிறப்பிலேயே சில குழந்தைகளை பறி கொடுத்தவர். மேலும், தாத்தப்பாவின்  மரணம் அவரை மிகவும் உலுக்கியதை கண்ணால் கண்டவன் நான். என் மாமனார், திண்டுக்கல் மற்றும் முத்து சித்தப்பாவின் மரணங்கள், அவர் மனதில் ஒரு வெறுமையைத் தோற்றுவித்தது.  இருந்தாலும், குழந்தைகளிடம் புலம்பி, அவர்களையும் வருத்தப் பட வைக்க வேண்டாம் என்று எல்லாவற்றையும் பூட்டி வைத்து, ஒரு “சித்தர்” போன்ற வாழ்கை வாழ்ந்தவர்.

நல்ல காலம் சுகந்தா சித்தி மரணத்தின் போது நினைவில்லை. இல்லாவிட்டால், மிகவும் ஒடிந்து போயிருப்பாள்.

இரண்டு பேரைப் பற்றி எழுதாமல் இந்த கட்டுரையை முடிக்கவே முடியாது.

முதலில் அவரது பெண்ணான என் அம்மா, கோகிலா அம்மாள். தன் தாயின் பணிவிடையே முக்கியம் என்று எல்லா சுகங்களையும் தியாகம் செய்து, அம்மம்மாவுடன் கடைசி வரை இருந்தவர்.  அவர் நினைத்திருந்தால், அம்மம்மாவை சென்னை கூட்டிச் சென்று, தன் மகன் வீட்டில் இருந்திருக்கலாம்.  ஆனால் அப்படிச் செய்யவில்லை. கும்பகோணத்தில் தான் இருக்க வேண்டும் என்று சொன்ன ஒரு வார்த்தைக்காக கடைசி காலம் வரையிலும் கூடவே இருந்தவர்.  தனக்கே உடம்பு முடியாவிட்டாலும், பெற்ற தாய்க்காக, எல்லா கஷ்டங்களையும் பொறுத்துக் கொண்டு, இரவு பகல் என்று பாராமல் கவனித்துக் கொண்ட கோ.அ என் மனதில் எப்போதுமே உயர்ந்து இருக்கிறாள்.

இரண்டாவது, லக்ஷ்மி என்ற, அம்மம்மாவுக்கு கடைசி நிமிடம் வரை இருந்து கவனித்துகொண்ட மங்கை. ஒவ்வொரு நாளும் இரவு சுமார் 7 மணிக்கு வந்து, காலை செல்வாள். ஒவ்வொரு முறையும் பொறுமையாக உணவு ஊட்டி விட்டு, இரவு முழுவதும் அருகிலேயே படுத்துக் கொண்டு, முனகல் சத்தம் வந்தாலும் உடனே எழுந்து, புடவை மாற்றி, முகம் துடைத்து, ஒரு பர்சனல் நர்ஸ் ஆக இருந்தாள்.  அம்மம்மா செய்த அன்ன தானம், கடைசியில் லக்ஷ்மி உருவில் வந்து, சேவை செய்ததோ என்று தோன்றியது.  லக்ஷ்மயிடம் இருந்த “அமானுஷ்ய நெருக்கம்” – லக்ஷ்மி கொடுத்தால் தான் சாப்பிடுவேன் என்று பிடிவாதம் பிடிக்க வைத்தது. இன்று இரவு தாண்டாது என்று 28.1.2018 அன்று மாலை சொல்ல வைத்தது. அதன் படியே நடந்தது.  லக்ஷ்மியிடம் பல கதைகள் இருக்கிறது.  பல நாட்கள் இரவு தன் பெண் “சுகந்தாவுடன்” (சுகந்தா சித்தி) பேசிக்கொண்டிருந்தாள், என்று லக்ஷ்மி  சொன்னதை நிஷா சொன்ன  போது ஆச்சர்யமாக இருந்தது

கடைசியில், காற்றில் கரைந்த உன்னதமான அம்மம்மாவிடம், நான் கையெடுத்து கும்பிட்டு, “எங்களை விழுதாக நிற்க வைத்து, ஆலமரமாக உயர்ந்து நிற்கும் நீங்கள், மறுபடியும் ஒரு விழுதாகப் பிறந்து, நாங்கள் உங்களுக்குப் பணிவிடை செய்யும் பாக்கியம் தந்தருள வேண்டும்” என்று பிரார்த்தனை செய்தேன்.

Saturday, 19 January 2019

சிறகு விரித்து பறந்து செல்லத் துடிக்கும் என் கிராமம்- செம்மங்குடி


கு. ராமகிருஷ்ணன் (ராம்கி என்று எனக்கு இன்னொரு பெயர் உண்டு)
தினம்- 19-1-2019

அடுத்த மாதம் செம்மங்குடியில் உள்ள ஆனந்தவல்லி உடனுறை அகஸ்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் என்று கேளிவிப்பட்ட உடனேயே, என் மனது, உடனே என் கிராமத்தைப் பற்றி சில வரிகள் எழுத வேண்டும், என்று துடித்தது. எனவே இந்த சிறு கட்டுரை.
செம்மங்குடியைப் பற்றி எழுத தொடங்கியவுடன் எனக்கு ராமாயணத்தில் வால்மீகியின் ஸ்லோகம் ஒன்று ஞாபகம் வருகிறது
अपि स्वर्णमयी लङ्का न मे लक्ष्मण रोचते |
जननी जन्मभूमिश्च स्वर्गादपि गरीयसी ||
இதன் அர்த்தம்:
“லக்ஷ்மணா, எனக்கு இந்த தங்கமயமான ஸ்வர்க்கம் போல இருக்கும் இலங்கை கொஞ்சம் கூட ஆச்சர்யத்தையோ, ஒரு பிடிப்பையோ ஏற்படுத்தவில்லை. என்னுடைய தாயும், தாய் நாடும் சுவர்க்கத்தை விட உயர்ந்ததாக கருதுகிறேன்” என்று .ராமர் சொல்வதுபோல்...
என்னைக் கேட்டால், என் தாயும், செம்மங்குடியும் என்று சொல்லி இருப்பேன்.

செம்மங்குடி சிவன் கோவில் என்றதும் எனக்கு ஞாபகம் வருவது இளம் வயதில் நான் சந்தித்த ஏகாம்பரம் குருக்கள் மாமா. எனக்கு பக்தி மார்க்கத்தைக் காண்பித்த முதல் குரு. இவரிடம் இரண்டு விஷயங்கள் எனக்கு மறக்க முடியாது.

நான் போதாயனம் (சூத்ரம்) என்பதால், எனக்கு ஆவணி அவிட்டம் போது பிரம்ம யக்ஞம், ஏகாம்பர மாமா தான் பண்ணி வைப்பார். (என் தாத்தா ஆபஸ்தம்பம் என்பதால்). இன்றும் நான் பிரம்ம யக்ஞம் பண்ணிக் கொண்டிருப்பது இவரின் ஆசீர்வாதம்தான்

இரண்டாவது, அவர் கோபப்பட்டு தலையில் ஒரு குட்டு வைப்பார்- பாருங்கள். உயிரே போய் விடும். இதுவும் நான் வாங்கியிருக்கிறேன்.

செம்மங்குடியில் ஸ்ரீ.ராமமூர்த்தி சாஸ்த்ரிகள், ஸ்ரீமதி அலமேலு அம்மாள் என்ற ஒரு உன்னதமான தம்பதிகளின் பெண் வயிற்றுப் பேரனான நான், இங்கேயே பிறந்து 10 வது வரை படித்தேன். இவர்கள், எனக்கு சாப்பாடு ஊட்டிய நாட்களை விட, பக்தியை ஊட்டிய நாட்கள் தான் அதிகம். பாட்டி என்னைக் கொஞ்சியதை விட, “வெளுத்ததுதான்” அதிகம். (கடைசி காலத்தில் பாட்டி “உடலை” வண்டியில் ஏற்றிக் கொண்டு, இடுகாடு செலும்போது, “என்னை ஒரு அடி அடிக்க மாட்டாளா” என்று மனது ஏங்கி, அவரது கையப் பிடித்து அழுதேன்)

எல்லோருக்கும் தன இளமைப் பருவம் மறக்க முடியாது.  கடவுள், யாரையாவது,  “நீங்கள் கழித்த வாழ்க்கையில், ஒரு 10 நாட்கள் உங்களுக்குத் திருப்பித் தருகிறேன், “எந்த நாட்கள்” வேண்டும்” என்று கேட்டால், சற்றும் யோசிக்காமல், பள்ளி நாட்கள்” என்று சொல்லுவோம்

கிராமத்து அனுபவம் சுகம். அதிலும் இளமைக் காலத்தை கிராமத்தில் கழித்து இருந்தால் பரம சுகம்.  நான் சொல்வது, கோடை விடுமுறைக்காக கிராமம் செல்வது இல்லை. அங்கேயே இருந்து, படித்து,  கிராமத்து சூழல்களை அணு அணுவாக ரசித்து வாழும் வாழ்க்கை தான் சிறந்த வாழ்க்கை. அங்கு சண்டை போட்டு பறித்த நெல்லிக்காய், நாவல் பழம், விளையாடிய, கிட்டிப் புல், பம்பரம் போன்ற விளையாட்டுக்கள். போட்ட சண்டைகள், ஏறிய கூரைகள், எந்த வித கவலையும் இல்லாமல் வலம் வந்த பொற்காலம்.

பாத்திரம் எடுத்துக்கொண்து (சுண்டலுக்காக) சகோதரிகளுடன் சென்ற நவராத்திரி கொலு, (ஸ்ரீ சக்ர ராஜ சிம்ஹாஸனேஸ்வரி, ஹிமகிரி தனயே, கற்பக வல்லி நின்” போன்ற பல பாடல்கள்), நண்பர்களுடன், மணக்கால் அய்யம்பேட்டை சென்று பார்த்த திருட்டு சினிமா போன்ற பல (சாதனைகள்) !!!

நவராத்திரி என்று நினைக்கிறேன். என் வீட்டுப் பெண்களும் சரி, கிராமத்தில் உள்ள மற்ற பெண்களும் சரி. “முத்தாலத்தி” என்று ஒன்று செய்வார்கள். அதாவது ஒரு தட்டில், கலரில் கோலம் போட்டு, அதன் கோட்டில் லேசாக மைதாவினால் தயாரிக்கப்பட்ட கோந்து வைத்து, அதன் மேல் அரிசி, ஜவ்வரிசி வைப்பார்கள்.  அந்தக் கலர் கோலத்திறக்கும், நடுவில் தண்டு போல இருக்கும் இந்த தான்யங்களும், மிகவும் நேர்த்தியாக இருக்கும். என் வேலை, இந்தக் கோலத்தாம்பாளத்தை எடுத்துக் கொண்டு, சிவன் கோவில் சென்று, குருக்களிடம் கொடுக்க, அவர் நடுவில் சூடம் ஏற்றி, அம்பாளிடம், காண்மித்து விட்டு, வீபூதி, குங்குமம் கொடுத்து அனுப்புவார்.  அதை நான் திருப்பி வீட்டிற்கு எடுத்துக் கொண்டு வந்தவுடன், அந்த முத்தாலத்தி அழிக்கப்படும், மறு நாள், புதுக் கோலம், புது முத்தாலத்தி.
என் வீட்டில் இருக்கும் பெண்கள் போடும் முத்தாலத்தி தான் மிகச் சிறந்தது என்று நான், மற்ற வீட்டு நண்பர்களுடன், “அடி தடியில்” இறங்கி இருக்கிறேன்.

பெருமாள் கோவிலில் அவ்வப்போது நடைபெறும், கோபால வாஜபேயாஜி மற்றும்  சேங்காலிபுரம் என்ற பக்கத்து கிராமத்திலில் இருந்த இங்கு வந்து உபன்யாசம் செய்த அனந்த ராம தீஷிதர் மற்றும் பெரிய பண்டிதர்கள் என் பக்தி மார்கத்திற்கு “ராஜ பாட்டை” போட்டுக் கொடுத்தவர்கள்.  பெருமாள் கோவிலில் நான் கேட்ட ராமாயணம், மகாபாரதம், ஸ்ரீ மத் பாகவதம் என் வாழ்க்கையில் மறக்க முடியாது.

நான் 1௦ வது படிக்கும் வரை, ரயில் வண்டியில் பயணித்ததே இல்லை.  அதற்காக நான் இன்று வரை வருத்தப் படவும் இல்லை.   செம்மங்குடி போல ஒரு கிராமத்தில் இருந்திருந்தால், நீங்களும் வருத்தப் பட்டிருக்க மாட்டீர்கள்.  10 வது முழுப் பரீட்சையில், English Grammar, கேள்வித் தாளில், 3 tier, 2 tier என்ற கேள்விக்கு, பதில் தெரியாமல் முழித்து,  tyre க்கும் tier க்கும் வித்தியாசம் தெரியாமல் வாழ்ந்த சந்தோஷ நாட்கள் அவை.

நல்ல சாப்பாடு என்பது சில நாட்கள்:

அண்ணா அபிஷேகம் அன்று சிவன் கோவிலில் (ஹெட் மாஸ்டர் மண்டகப்படி) பிராகரத்தில் இல்லை போட்டு, பரிமாறப்படும், சுண்டல், சரக்கரைப் பொங்கல் மற்றும் இதர வகையறாக்கள்.

சபரி மலைக்குப் மாலை போட்டுக் கொண்டு, கோபால் சார் (செம்மங்குடி ஸ்ரீனிவாச அய்யரின் புதல்வர்), வீட்டில் நடக்கும் ஐயப்ப பஜனை, தொடர்ந்து பல பதார்தங்களுடன் சாப்பாடு,

ஆவணி அவிட்டம் வந்தால் எனக்கு “பயங்கர ஜாலியாக” இருக்கும். ஏனெனில், சிவன் கோவில் குளத்தில் இரு முறை குளிக்கலாம். குளத்தில் குளிப்பது என்பது நீங்கள் நினைப்பது போல் கிடையாது, எத்தனை உயரத்தில் இருந்து, எத்தனை குட்டி கரணம் அடித்து குளத்தில் விழுவது என்பது தான் உசத்தி. எங்கள் உலகமே அது தான். அதன் பிறகு வீட்டுக்கு வந்து கிடைக்கும் வடை பாயச சாப்பாடு.

மகர சங்கராந்தி போன்ற நாட்களில் கிடைக்கும், வடை பாயச சாப்பாடு. குறிப்பாக கச்சட்டியில், சுட சுட சுண்ட வைத்து, ஒரு வாரம் 
கழித்து கூட அருமையாக இருக்கும் “எரிச்ச கறி.”

வெள்ளிக்கிழமை, என் பாட்டியின், ஆனந்தவல்லி அம்பாளுக்காக செய்யும், கொஞ்சம் பாயசம். எப்போவாவது செய்யும், ஆஞ்சநேயர் வடை.

தீபாவளி என்றால், ஒரு மாதம் முன்பிருந்தே எங்களுக்கு கனவுதான்.

ஆடி பதினெட்டு- விதம் விதமான சாதங்கள் . அப்போது ஆற்றங்கரையில் எங்களுக்கு சிறப்புக் குளியல். குளியல் என்றால், வளைந்து ஆற்றின் மேல் நிற்கும் மரத்தின் மீது ஏறி, “தொபுக்கடீர்” என்று குதிக்க வேண்டும்.

சப்பரம் கட்டி (சப்பரம் என்றால் என்ன என்று தெரியாதவர்கள்,--- தெரியாமல் இருப்பதே நல்லது) அந்தத் “தேரை” உருட்டிக் கொண்டு போய், ஆற்றங்கரையில் வைத்து அழகு பார்ப்போம்.- அதில் உள்ள சந்தோஷம் தனி.

“வந்துத் தொலைடா, ராம்கி, ரொம்ப  குளிக்காதேடா, குதிக்காதேடா, சனியனே !!! ஜலதோஷம் பிடிக்கும், இரு இரு அப்பாவிடம் சொல்றேன்.” – போன்ற பல சம்பாஷனைகளை இப்போது நினைத்தாலும், நெஞ்சு நெகிழ்கிறது.

மார்கழி மாதத்தில், விடியற்காலை, ஆசாரி விஸ்வநாதன் மற்றும் சைவ அன்பர்களின் “தோடுடைய செவியன்” என்று வாசலில், தேவாரம் பாடிக்கொண்டு” பெருமாள் கோவிலில் இருந்து விடியற்காலை 5 மணிக்கே (சே, பாட்டை போட்டான்டா, தூங்கவிடாமல் !!! என்று திட்டிக்கொண்டே, போர்வையை இழுத்துப் போத்திக்கொண்டு தூங்கும் அந்த மார்கழி விடியற்காலை- மகோன்னதம்) ஒலிக்கும் (Gramaphone record ல் இருந்து), சூலமங்கலம் சகோதரிகளின், சியாமளா தண்டகம், அனந்த ராம தீட்சிதர் அவர்களின், ஆனந்த லஹரி, ஆதித்ய ஹ்ருதயம், மகிஷாசுர மர்த்தனி ஸ்தோத்ரம். T M சௌந்தரராஜனின், “திருப்பதி மலை வாசா” மற்றும் முருகன் பாடல்கள். என் இசை ஞானத்திற்கு வித்திட்ட அருமையான நாட்கள் அவை. மார்கழி மாதத்தின் கடைசி நாளில், சினிமா பாட்டு போடுவார்கள்- பாருங்கள்.. அதற்காக நாங்கள் “முழு மார்கழியின்” “ஸ்ரமங்களைப்” பொறுத்துக் கொள்வோம்.

எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியாது.  மகா பெரியவா ஒரு தடவை செம்மங்குடி விஜயம் செய்யும் போது, அம்மை போட்டு விட்டதால், 2 மாதம் "பெரிய மாடி" மாமாவாத்தில் தங்கிஇருந்தாராம்.  அப்போதுதான், மகமாயி கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்யச் சொன்னாராம்.  (என் அம்மா சொன்ன செய்தி).

எங்கள் தெருவில் சுமார்  100 வீடுகள் இருந்தது என்றால், அதில் குறிப்பிடும் படியாக சொல்வது

ஹெட் மாஸ்டர் வீடு

கரஸ்பாண்டன்ட் வீடு (Correspondent house),  சீனி மாமா என்று மிகவும் மரியாதையாக அழைக்கப்பட்டவர். என் தாத்தா மீது மிகுந்த மரியாதை வைத்து இருந்தவர். நான் வசித்த செம்மங்குடி நாட்களில், இவர் வீட்டுக்கு, மற்றும் ஹெட் மாஸ்டர் வீடு, மற்றும் பட்டாமணியார் வீட்டுக்குப் போவதற்கே பயப்படுவேன்/வோம்.

எங்கள் கிராமத்திற்கு பெருமை சேர்த்த, சங்கீத கலாநிதி செம்மங்குடி ஸ்ரீனிவாச அய்யர் வீடு (பாட்டுக்கார அய்யா)

என்னால் மறக்க முடியாத செம்மங்குடி மாந்தர்கள்:

எனக்கு, விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லிக் கொடுத்த, சம்ஸ்க்ருத பண்டிதர், தேதியூர் கிருஷ்ணமூர்த்தி சாஸ்த்ரிகள்.

நான் எப்போதும் "மோர்" வாங்க பருத்தியூர் பருத்தியூர் ராமமுர்த்தி அய்யர் ஆத்துக்குப் போகும்போது,  குடிக்க ஏதாவது கொடுத்த, மாமி. அது போல் ஒரு அழகான முகத்தை நான் இன்று வரை பார்க்க வில்லை

"வாடா குழந்தை" என்று வாய் நிறைய கூப்பிடும் ஜெயா மாமி.

அப்புவாத்து மாமா, மாமி

ஐயங்கார் மாமா, எனக்கு பெருமாள் பக்தியை உண்டு பண்ணியவர். எத்தனை முறை கோவிலில் பிரகாரத்தில் ஓடி ஓடி, விளையாடி இருப்பேன். எத்தனை முறை கோவில் மணி அடித்திருப்பேன். ?!

சிவன் கோவில் குருக்களும் அவர் ஆனந்தவல்லிக்கு செய்யும் அழகான அலங்காரமும்.

கணக்குப்பிள்ளை- எதிர் வீடு. அவர் வீட்டில் யாரும் எங்கள் கூட பேசமாட்டார்கள். ஏன் என்று இன்று வரை தெரியவில்லை

மில் காராத்து ஜெயராமன்- எப்படி மறக்கமுடியும். கர்லா கட்டையை சுற்றிக் கொண்டு, எங்கள் "Mr. செம்மங்குடியாக்கும்". ஜெயராமன் என்ற "கண்ணனை" மிகவும் நேசித்த ராதை. நான் கன்னித் தீவின் மீது காதல் கொண்டதே, ஜெயராமன் ஆத்துக்கு தினம் வரும் "தினத் தந்தி" பார்த்துதான் !!

"மகாதேவா" என்று எப்போதும் சொல்லிக்கொண்டு, இந்த வார்த்தையை என் மனதில் ஆழமாக பதித்த, post master mama.  அவர்களுடைய குமாரர்களும், நான் மிகவும் மரியாதை வைத்து இருக்கும், கோபாலக்ருஷ்ணன், ராமமூர்த்தி.

நான் மிகவும் மரியாதை வைத்திருந்த/க்கும்  Head master மாமா

வெங்குட்டு (அய்யா சாமி அவர்களது மகன்)  பக்கத்துக்கு வீட்டுக்கு வரும்போது என்னையும் கூப்பிட்டு, அவனுடன் உட்கார வைத்து தோசை போடும் மங்களாம்பா மாமி.

ஒரு தடவை ஒளிந்து பிடித்து விளையாடுகிறேன் என்று "சொக்கபானை" உள்ளே ஒளிந்து கொள்ள, என் "உயிரை" காப்பாற்றிய மகாலிங்க மாமா

எனக்கு கல்வி போதித்த செம்மங்குடி உயர் நிலைப் பள்ளியில் பணி புரிந்த, என் ஆசான்கள்:

பாடம் எடுத்ததை விட, நோட்ஸ் கொடுத்தே கையை ஓடித்த கோபால் சார்

டியூஷன் சொல்லிக்கொடுத்த ஐயங்கார் சார். அவர் வீட்டுக்கு தினமும் காலை 7 மணிக்கு போய் விடுவேன்.

எல்லோரும், கிண்டலும் கேலியும் பண்ணினாலும், sincere ஆக பாடம் நடத்திய பி. எஸ் சார்

எல்லா பாடங்களும் எடுத்தாலும், அருமையான கதைகள் சொன்ன திருமலை சார்

கந்தக அமிலம், கந்தச அமிலம் என்பதற்கு, எனக்கு இன்று வரை வித்தியாசம் தெரியா விட்டாலும்,  தன்னுடைய சன்னமான குரலில், கெமிஸ்ட்ரி பாடம் எடுத்த லா லா சார்.

இங்க்லீஷ் பாடம் எடுத்த, என் குடும்பத்தில் இருந்து படித்த அத்தனை பேருக்கும் பிடித்த V G சார்

முத்து முத்தாக எழுதி, கணக்கை மிகவும் சுலபமாக சொல்லிக் கொடுத்த கே.என் சார்.  Sin theettaa, Cos theetta போன்ற சாதுர்யமான கணக்குகள்,  இவரிடமிருந்து, எளிமையாக பிரவாஹமாக வரும்.  "தீட்டா" என்று எழுதி அதன் பிறகு ஒரு  ? குறியை போட்டு, நக்கலாக சிரிப்பார்.  பெண்கள் வெட்கித் தலை குனிந்து கொள்வார்கள்

தமிழில் வல்லவர் என் பெரியப்பா சேங்காளிபுரம் - எஸ் எஸ். பி சார்

சேங்காளிபுரம் பிச்சை சார்

ஒரு Science டீச்சர் இருந்தார். அவரி பரீட்சைக்கு முதல் நாள், கேள்வி தாளை வேகமாகப் படிதுவிடுவார்.  (அவுட் பண்ணி விடுவார்).  அந்தக் கேள்விகளை மனதில் வாங்கிக் கொண்டு. படித்து, நிறைய மார்க் வாங்க வேண்டும்  (அப்படியும், நான் தேற வில்லை என்பது வேறு விஷயம்)

தமிழ் இலக்கணத்தின், எழுவாய், பயனிலை, செயப்படு பொருள், என்பதை மக்கு மாணவர்களிடம்,  எழுவாய் (எழுந்திரு), பயனிலை (நீ பிரயோஜனமில்லை), செயப்படு பொருள் (செய்ய வேண்டிய காரியத்தை பார்- வெளியில் போ- என்று அழகாக சொல்லி வெளியில் அனுப்பிய - தமிழ் ஆசிரியர். 

இவர்களிடம் நான் கற்றுக் கொண்டதை விட, அடி வாங்கியது அதிகம்.  ஆனால என் வாழ்கையின், ஒவ்வொரு (முன்னேற்ற) அடியிலும், இவர்களது, “அடி.”, படியாக நின்று என்னை ஏற்றி விட்டு இருக்கிறது.

எல்லா ஓட்டப் போட்டியிலும் first வந்த மரிய ஜோசப் விக்டர் பிரட்ரிக், என்னை எப்போதும் பாட்டில், ஜெயித்த,  எதிர் வீட்டு பத்மா போன்ற பலர் என் வாழ்க்கையில் மறக்க முடியாதவர்கள்.
நான் முடிப்பதற்கு முன்பு, நான் இன்றும் நினைவில் வைத்து இருக்கும், 

முருகன் (ம்) பாட்டி.

இவர் முருகனுக்கு நேவைத்யம் செய்து கொடுக்குக்கும் ஞானப் பால் குடித்த, பல “செம்மங்குடி திருஞான சம்பந்தர்களில்” நானும் ஒருவன். என்னுடைய பேனா, பென்சிலை முருகன் பாதத்தில் உருட்டி, என்னிடம் திருப்பி கொடுப்பார்.  அவருடைய முருகன் மற்றும் ஆஞ்சநேய ஸ்லோகங்கள் இன்றும் என் நினைவில் நிற்கிறது. 

நான்  பள்ளியில் வாங்கிய மதிப்பெண்களில், முருகன் பாட்டியின் பங்கு மிக அதிகம்.

என் உயிரின் உயிராய் கலந்த, என் சித்திகள், ஸ்ரீtமதி கோமதி, எப்போதும் பலாப்பழத்தை தூக்க முடியாமல் தூக்கி வரும் என் மைதிலி சித்தி.  நான் லூட்டி அடித்ததற்கு உறு துணையாக இருந்த சசி. வேலைக்காரர்கள், கந்தப்பூ, உத்திராபதி  மற்றும் பலர்.

செம்மங்குடி அப்பா அம்மா இருவரின் முழு வடிவமாக இன்றும், செம்மங்குடி குடும்பத்திற்கே வழி காட்டியாக இருக்கும், என் பெரியம்மா மற்றும் என் ஆருயிர் அம்மா.

5 பெண்களைப் பெற்று, மானம் அவமானம், கிராமத்திற்க்கே உண்டான கேலிப் பேச்சு,  (பெண்ணை பெத்தியோன்னோ, கல்யாணத்திற்கு சேத்து வைக்கத் தெரியவேண்டாமா சாஸ்திரிகளே?) பெண் கல்யாணத்திற்காக ஆருயிராய்  வைத்து இருந்த நிலத்தை அடகு வைத்து  கல்யாணத்தை நடத்திய, தனக்கென்று ஒரு கல்கண்டுக்கு கூட ஆசைப்படாமல்,  சிவ பூஜை ஒன்றையே நம்பி ஒரு பெரிய குடுமபத்தை கரையேற்றிய, நான் அப்பா என்று வாய் நிறைய கூப்பிட்ட, என் தாத்தா ஸ்ரீ. ராமமூர்த்தி சாஸ்த்ரிகள், அவரின் நிழலாய் இருந்து, கடைசி காலம் வரை கணவர், குழந்தைகளுக்காகவே வாழ்ந்த அவர் பத்னி, எனாக்கு எப்போதும் அம்மாவான, பாட்டி ஸ்ரீமதி. அலமேலு அம்மாள். 

கடைசியில் இவர்கள் இருவரையும், கடைசி காலம் வரையிலும் ராஜ வாழ்க்கை வாழ வைத்து, சிவ சாயுஜ்ய பதவி அடைய வைத்த, சஷ்டி அப்த பூர்த்தி காண இருக்கும், என் மாமா மற்றும் மாமி.

இவர்களை நான் எப்படி மறக்க முடியும்

என் செம்மங்குடி நண்பர்கள், பக்கத்தாத்து நாகராஜன், இந்தப் பக்க வெங்குட்டு, பிச்சை சார் பையன் சுந்தரராமன் மற்றும் மில் காராத்து கணேஷ், என் தாத்தாவின் "வைதீகத் தொழிலை" சற்று அவதூறாகப் பேசி, நான் குளத்தில் முக்கிய வாசு. மற்றும் பெயர் தெரியாதவர்கள், 

Girls என்று 4 அடி தள்ளியே நடக்கும், என்றும் மறக்கமுடியாத கோபால் சார் அவர்களது பெண்கள், P.T சார் ஆத்துப் பெண் மற்றும் பலர்.  இன்றும் இவர்களோடு தொடர்பில் இருப்பது நான் செய்த புண்ணியம்.

கடைசியாக, எனக்கு பக்தி என்ற பதத்தின் அர்த்தத்தை விளக்கிய, ஸ்ரீ தேவி பூ தேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலும், (இன்றும், இந்தக் கோவிலில் உள்ள ஆஞ்சநேயரை மானசீகமாக வணங்காமல் நான் ஒரு நாளும் வெளியே கிளம்புவது இல்லை) ஆனந்தவல்லி உடனுறை அகஸ்தீஸ்வர சுவாமி கோவிலும், (நான் தினமும் செய்யும் "சால்யான்னம்" நேவைத்யத்தில், முதலில் சொல்வது இவரைத்தான்) பெரிய பள்ளிக் கூடத்திற்கு அருகில் உள்ள மகமாயி கோவிலும், என் வீட்டுக்கு அருகில் இருக்கும் கரும்பாயிரம் ஸ்வாமி கோவிலும் இன்று வரை எனக்குத் துணை இருக்கிறார்கள் என்பது சத்தியம்