Wednesday, 19 April 2017

THE CELL- ஆங்கில படத்தில் விமர்சனம். (தேவையா !!!!?) - திருட்டு DVD தான்....

திருட்டு டிவிடி என்று ஒன்று இருக்கோ, பிழைத்தோமோ, சில ஆங்கில படங்கள், சென்னை மாநகரத்தை அடைவதற்கு முன்பாகவோ, அல்லது வரவே வராவிட்டாலும், பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கிறது.  திருட்டு டிவிடியை ஒழிப்பது என்பது சாத்தியமே இல்லை. கொசு கூட சில சமயம் ஒழிந்தாலும் ஒழியலாம். அனால் தி.டி.வி.டி ஒழியாது

சில படங்கள், “உட்கார்ந்து யோசித்தாலும்”, வரவே வராத கதையெல்லாம் ஆங்கிலப் படங்களில் பார்க்கலாம். ஆனால் கடைசி வரையில் அந்த விறு விறுபை கொண்டு செல்லும் படங்கள் சில படங்கள் தான்.

ஆங்கிலப் படங்களில் எனக்கு என்ன பிடிக்கும் என்றால், அவன் அவன், நம்மூர் காய்கறி மார்க்கெட்டில் கேரட், முள்ளங்கி, மாதிரி ஒரு துப்பாக்கி வைத்திருப்பான், திடீரென்று, NYPD, CIA, FBI என்று “பொங்குவான்”.  நம்மூரில் அப்பளம் சுடுவது போல் சுட்டுகொண்டே இருப்பான்.  JACKIE CHAN படம் என்றால் கேட்கவே வேண்டாம்.  பேசினாலே அடிதான்.

நம்மூர் வில்லனையும், ஆங்கில பட வில்லனையும் COMPARE பண்ணி நான்கு வரி எழுத வில்லை என்றால், நான் நரகத்திற்குத் தான் போவேன்.  ஆங்கில படங்களில் வில்லன்கள், கோட், சூட், அணிந்து கொண்டிருப்பார்கள். டை வேறு கட்டியிருப்பார்கள். காலில் புத்தம் புது அல்லது பாலிஷ் போட்ட ஷூ அணிந்திருப்பார்கள்.  ஹீரோவிடம் குண்டடிபட்டோ, உதைபட்டோ கீழே விழுவார்கள். 2-3 நிமிஷத்தில் சாகிறவனுக்கு இந்த “பில்ட் அப்”.

நம்மூர் வில்லன், தலை முடி ஒரு பக்கம் சேப்பாக இருக்கும், மறு பக்கம் கருப்பாக இருக்கும். ஒரு வாரம் பல் தேய்த்து இருக்கமாட்டார். கழுத்தில், சைக்கிள் செயின் மாலையாகப் போட்டிருப்பார்.  மலை போல் வந்து, ஒல்லியாக இருக்கும் ஹீரோவிடம், ஒரு குத்து வாங்கி, நான்கு அல்லது 5 முறை குட்டிகரணம் அடித்து கீழே விழுவார்.

புவி ஈர்ப்பு விசை என்ற ஒரு சமாசாரம் இருப்பது என்பது, புத்தகத்தில் தான், நம்மூர் சினிமாவில் கிடையாது.

இப்போது படத்திற்கு வருவோம். படம் பெயர் பார்க்கும்போது, ஜெயில் கைதி தப்பிப்பது போன்ற கதையோ என்று நினைத்தேன்.  ENGLISH காரன் படங்களில், ஜெயில் கைதிகள் எல்லாம் பார்க்க “தமாஷாக” இருக்கும்.  போலீசைவிட, “காத்திரமாக” இருப்பார்கள், தலையில் முடி இருக்காது, உடம்பு பூராக பச்சை குத்தியிருப்பார்கள்.  சிலர் காதில் கடுக்கன் போட்டுக்கொண்டு இருப்பார்கள்.  அடிக்கடி, நம் மூஞ்சியில் குத்துவது போல் போஸ் குடுப்பார்கள்.

அனால், ஜெயில் பற்றிய படம் இல்லை.  படம் AIRPORT ல், ஆரம்பிக்கிறது.  ஹீரோ, AIRPORT ல், செல்லில் பேசிக்கொண்டு இருக்க, செல் சார்ஜ் தீர்ந்து விடுகிறது.  பவர் பாயிண்ட் தேடுகிறார். கிடைக்கததால், LAND LINE ல், வீட்டுக்குப் பேசுகிறார்.  காசும் தீர்ந்து விடுகிறது. என்ன செய்யலாம் என்று யோடித்துக் கொண்டிருக்கும் போது, திடீரென்று, செல்லில் பேசிக்கொண்டிருந்தவர்கள் எல்லாரும், காக்கா வலிபபு வந்தவர்கள் போல, “விலுக் விலுக்” என்று வாயில் நுரை தள்ள கீழே விழுகின்றனர்.  சிலர் மற்றவரை அடிக்கின்றனர், சில பேரை “போட்டுத் தள்ளுகின்றனர்”,  ஹீரோவுக்கு ஒன்றுமே புரியவில்லை.  கீழே இறங்கும் ஒரு விமானம், திடீரென்று வானத்தில் வெடித்து, AIRPORT க்குள் வந்து விழுகிறது.  இதன் மத்தியில், ஹீரோவை கத்தியால் குத்த வரும் ஒரு ஆளிடம் இருந்து தப்பித்து, ஹீரோ தலை தெறிக்க ஓடி, UNDERGROUND மெட்ரோ ஸ்டேஷனுக்கு போகிறார்.  அங்கே இன்னொரு உப ஹீரோ வுடன் மெதுவாக நடந்து, மெட்ரோ ஸ்டேஷன் வெளியில் வந்தால், ஊரே நிசப்தமாக இருக்கிறது. இவர்களைத் தவிர, மற்ற எல்லோருமே, “தண்ணி அடித்தவர்கள்” மாதிரி நடந்து போகின்றனர். 

இதற்கு, ஆங்கிலத்தில், ZOMBIES என்கிறார்கள்.  நம்மூரில், சோம்பலாக இருப்பவர்கள் எப்படி இருப்பார்களோ, அப்படியே இந்தப் படத்தில் வருபவர்கள் இருப்பதால் இந்த ஆங்கிலப் பெயர் வந்திருக்கலாம்

அதாகப்பட்டது, செல் போனில் உள்ள அலைகள், - கதிர்வீச்சுகள், என்ற ஒன்று,  அதை உபயோகித்தவர்கள் மூளையை அடைந்து, அவர்களை பைத்தியமாக அடிக்கிறதுஹீரோ, நல்ல வேளையாக, அந்த சமயத்தில், செல் உபயோகிக்காததால், பிழைத்து விடுகிறார்.  அவர் தன மனைவியையும், மகனையும், தேடி போகிறார். நடுவில், அவர் எதிர்கொள்ளும் இன்னல்கள், தன்னை கொல்ல வரும், “செல் பைத்தியங்களில்” இருந்து எப்படி தப்பிக்கிறார், தன் மனைவி, மகனைப் பார்த்தாரா ? என்பது மிச்ச படம். 

கடைசியில், படத்தை சப்பையாக முடித்திருந்தார்கள்.  Stephen King என்று ஒரு பிரபல எழுத்தாளர் எழுதிய புத்தகத்தை தழுவி எடுத்த படமாம்.


சரியாக தழுவவில்லை.

Thursday, 13 April 2017

மயிலையில் “பங்குனிப் பெருவிழா” என்ற மகாமகம்


புன்னாக  வனத்து எழில்சேர் கயிலை மலையுமை மயிலாய்ப் பூசை செய்யு நன்னாமத்தான் மயிலையென விலங்கு மூதூர்”  என்ற பாடல் மூலம் ஆரம்பிப்போம்

அது என்னமோ தெரியவில்லை.  பங்குனி மாதம் என்றாலே, கபாலிக்கும், கற்பகாம்பாளுக்கும் கொண்டாட்டம் தான்.   ஜாலியாக வெளியே கிளம்பி நான்கு மாட வீதிக்கும் வந்து,  திகட்ட திகட்ட, தரிசனம் தந்து, பக்த ஜனங்களை,  ஜன்ம சாபல்யம் அடைய வைத்துவிடுவார்கள்
அதற்கு ஈடாக பகத கோடிகள் ஒன்றாகக் கூடி “மகாமகம்”  effect ஐ ஏற்படுத்திவிடுவார்கள். 

நான் நினைப்பது உண்டு, என்  63 வருக்கு மட்டும் இந்த கூட்டம் ?.  அதற்கு விடை தெரியவில்லை.  ஒரு வேளை அன்னதானமாக இருக்கலாம்.  பங்குனி வெய்யிலில் வீட்டில் உட்கார முடியாமல் வெளியில் கிளம்பி, மயிலாப்பூர் வரலாம்.  நிறைய கடைகள் திடீரென முளைத்து, விசிறி முதல் மண் சட்டி வரை விற்றுக்கொண்டு  இருப்பவர்களின், பர்ஸை நிரப்பவும் இருக்கலாம். 

ஆனால் பக்தி என்று ஒன்று இருப்பதாகவோ,  சுற்றுச் சூழல் மாசு என்று ஒன்று இருப்பதாகவோ – எனக்குத் தெரியவில்லை.  பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட்டுகள்,  ஜூஸ் பாக்கெட்டுகள்,  சாப்பிட்டு அப்படியே மிச்சம் வைத்து தூக்கி எறிந்த தட்டுகள்- அடுத்த நாள்,  துப்பரவு பணியாளர்கள்,  மாங்கு மாங்கு என்று இவைகளை அகற்றும்போது, மனது வேதனையாக இருக்கிறது.

இவ்வளவு பெண்களுக்குள் யாருக்காவது   இயற்கை உபாதையால் அவதிப்பட்டால், அவர்களுக்கு,  டாய்லெட் எங்கே இருக்கிறது என்று கேட்டால் விடை இல்லை.

பெண் போலீசாரையே எடுத்துக் கொள்வோம், அவர்களுக்கும் இதே கதி தானே...

இருந்தாலும், கோவில் திருவிழா என்று வந்துவிட்டால், நம்மாளை அடித்துக்கொள்ள ஆள் இல்லை.  “தும் தடாக்தான்”.

மூன்று முக்கியான பங்குனி உற்சவம்:

அதிகார நந்தி

தேர்

63 வர்
அதிகார நந்தி என்பது பேரைப் போலவே- சிவனை இவர் அனுமதி இல்லாமல் யாரும் பார்க்க முடியாது.  மனித உருவில், நந்தி முகத்தோடு, இடது காலை மடக்கி, நீட்டிய கரங்களில், ஐயனைத் தாங்கி வருவது, மிகவும் அழகு.  மேலும், அதிகார நந்தி என்றால், கபாலிக்கு மட்டும் இல்லை.  பிள்ளையார் முதற்கொண்டு,  முருகன் வரை, அதிகார நந்தி வாகனம்தான்.

பாபநாசம் சிவன் என்ற ஒரு மகா மேதை, கபாலியே கதி என்று இருந்த அவர், சில சங்கீத முத்துக்களைத் தந்திருக்கிறார்.  அதில் “காணக் கண் கோடி வேண்டும் கபாலியின் பவனி” என்று ஒரு பாட்டு.  அதில் இரண்டு இடங்களில்,  நெஞ்சு உருக கபாலியின், ஊர்வலத்தை கொண்டாடுகிறார்.

ஒன்று,  “அபாங்க அருள் மழை பொழி பவனி”

இரண்டாவது- “கண்ணாரக் கண்டு, உள்ளுருகி, பணிய, பலர் காண”

கோவிலுக்குப் போகாதவர்களைக் கூட மன்னித்து ஏற்றுக்கொண்டு,  “நான் வருகிறேன் என்று கோவிலை விட்டு வெளியில் வந்து, தேரிலும், ரிஷப வாகனத்திலும், அதிகார நந்தியிலும், யானை வாகனத்திலும், தான் மட்டும் வாராமல், பிள்ளையார், முருகன்,  சண்டிகேஸ்வரர் என்று பரிவாரங்களோடு வந்து, காக்ஷி கொடுக்கும்  கபாலி ஒரு பெரிய கோடை (கொடை என்று கூட சொல்லலாம்)  வள்ளல் தான்.

அந்தக் காலத்தில் மாட்டு வண்டியில், சாப்பாடு கட்டிக் கொண்டு வெகு தூரத்தில் இருந்து, மயிலாப்பூருக்கு வந்து 3 நாட்கள் தங்கி போவார்கள்.  அப்போது அவர்களுக்காக அன்னதானம், தண்ணீர் பந்தல் என்று மயிலாப்பூரில் உள்ள சத்திரத்தில், வீடுகளில் அமைத்துக் கொடுத்தார்கள்.

கபாலி கிருபையில், இன்னும் அன்ன தானமும் தண்ணீர் பந்தலும், வெகு ஜோராக நடந்து கொண்டிருக்கிறது. 

இது மயிலாப்பூர் வாசிகளுக்கு, ஒரு உணர்ச்சி பூர்வமான ஒரு வைபவம். தேர் வரும்போது “விண்ணைப் பிளக்கும்” கபாலி என்ற ஒரு சத்தம், கைலாசம் வரை கூட கேட்கும் என்று சொன்னால் மிகையாகாது.  என்னதான் “ஏகம்பத்துரை எந்தாய் போற்றி” என்று கற்பகாம்பாளைக் கொஞ்சினாலும்,  மாட வீதி ஊர்வலம் என்றால் “கபாலி” தான்.  அந்த பிரம்மாண்டமான தேரும், அதில் கபாலி, சும்மா “ஜம்” என்று கால் மேல் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்து கொண்டு இருக்கிற அழகும், வடத்தை பிடித்து இழுக்கும்,  பக்தர்கள் கூட்டமும், அட அட அடா, காண, நிஜமாகவே, கண் கோடி வேண்டும்தான்.

63 வர் என்றால் என்ன என்று எல்லோருக்கும் தெரியும்.  63 நாயன்மார்களின் பின்னே வருகின்ற கபாலியும், உடனுறையாளும், முருகப் பெருமானும் மிக அழகு.

9 ம் நாள் பிட்சாடனர் வடிவிலும், மஹா விஷ்ணு, மோகினி வடிவிலும் காட்சியளிப்பது மிகவும் விஷேஷமானது.

இதோ, இதை முடிக்கும்போது, விடையாற்றி உத்சவம் என்று, இசை மேதைகள் பாட ஆரம்பித்து விட்டனர்.  இன்று ஸ்ரீ விஜய் சிவா பாடுகிறார், சஞ்சய் சுப்ரமணியம்,  ரஞ்சனி காயத்ரி என்ற மிகச் சிறந்த பாடகர்கள்,  கற்பகத்தையும், கபாலியையும், இசை மழையால், குளிர்விக்கப் போகின்றனர்.

ஒரு காலத்தில், மதுரை மணி அய்யர், மதுரை சோமு போன்ற மகா மேதைகள் 
இங்கு இரவு முழுவதும், மழை, பனி என்று பாராமல்,  பாடி அசத்தி இருக்கிறார்கள். 

ஒரு முறை, மதுரை மணி அயருக்கு,  நல்ல ஜுரமாம்.  பங்குனிப் பெருவிழாவில்,  பாட வேண்டிய தினம் அது. எல்லோரும், இன்று நீங்கள் பாட வேண்டாம் என்று மணி அய்யரை வற்புறுத்த, அவர், “ஒரு மணி நேரம் பாடிவிட்டு, வந்து விடுகிறேன்- எனக்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருப்பர்கள்” என்று சொல்லி வந்து பாட ஆரம்பித்து, 5 மணி நேரம் பாடினாராம். 


காளிதாசன் சொன்னது போல், வாக்கும், பொருளுமாக இருக்கும் கற்பகாம்பாள் சமேத கபாலிச்வரை நாம் மனதுருக வணங்குவோம். அவர்கள் அருளைப் பெறுவோம்.

Thursday, 30 March 2017

கேட்டதும், பெற்றதும்- humour club- திருப்பூர் கிருஷ்ணன்

திருப்பூர் கிருஷ்ணன் ஒரு மிக சிறந்த பேச்சாளர்.  அவர் ஒரு முறை,  humour club என்ற ஒரு அமைப்புக்காக, சென்ற காந்தி ஜெயந்தி அன்று,  பாரதிய வித்யா பவனில், பேச வந்திருந்த போது, நகைச்சுவையுடன் பல அருமையான விஷயங்களை சொன்னார்.  அதில் சிலவற்றை கீழே கொடுத்திருக்கிறேன். எப்படியாவது அவருடைய, சொற்பொழிவை பதிவு செய்ய எண்ணினேன்.  அதனால் தான் “better late than never”

காந்திஜியைப் பற்றிச் சொல்லும்போது, அவர் உடல் நலத்தைப் பேணிக் காப்பதைப் பற்றிச் சொல்லி இருக்கிறார். அதில்

கொயாப்பழத்தின், விதையை அப்படியே முழுங்கினால், அது ஜீரணத்திற்கு மிகவும் நல்லது,  அதே விதையை கடித்துச் சாப்பிட்டால், அதில் ஒரு அமிலம் இருக்கிறது.  அது இதயத்திற்கு மிகவும் நல்லது.  Heart attack  வராமல் தடுக்கும்.

காந்திஜியைப் பற்றிச் சொல்லும்போதி. “காந்திஜியின், மனைவி இறந்த பிறகு, அவர் உடல் எரியூட்டப் படுகிறது.  திரும்பி வந்தபிறகு, ஒருவர் வந்து காந்தியிடம் “கஸ்தூரிபா காந்தி  தகனமான பின்பும் கூட, அவருடைய கையில் இருந்த கண்ணாடி வளையல்,  அப்படியே இருக்கிறது” என்று கொடுத்தாராம்.  அதப் பார்த்து, காந்திஜி நெகிழ்ந்து போய், கண்ணில் ஒற்றிக் கொண்டு சொன்னாரம்.  “உயர்ந்த பத்தினிப் பெண்களின் அடையாளம் இது” என்றாராம்.
வள்ளலாரைப் பற்றிச் சொல்லும்போது, “மனித வாழ்க்கையில், நோய் வருவதற்க்கு, முக்கிய காரணம்,  சிறுநீர், மலம், ஒழுங்காகப் போகாமல் அடக்கி வைத்திருப்பதால் தான். அந்தக் காலத்தில், ஆண்களை விட பெண்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதற்குக் காரணம், அவர்களுக்கு பொதுக் கழிப்பிடம், கிராமங்களில் இல்லாதது தான்.

தற்போது பாரதப் பிரதமர் மோடி அவர்களின், கழிவறை திட்டத்தின், முக்கியத்துவம் புரிகிறதல்லவா ?

காமராஜரைப் பற்றி, அருமையான ஒரு விஷயம் சொன்னார்- ஒரு முறை காமராஜர் டெல்லி சென்றிருந்தார்.  அப்போது “எடை பார்க்கும் இயந்திரம்” வந்திருந்த காலம் அது.  புதியதாக ஒரு Machine  வந்திருந்தது. எல்லோரும் ஒரு ரூபாய் போட்டு எடை பார்த்துக் கொண்டிருந்தனர்.  காமராஜர் பக்கத்தில் இருந்த ஒருவர் “நீங்களும் எடை பாருங்களேன்” என்று கூற அவர் “இருக்கட்டும், இருக்கட்டும், பிறகு பார்க்கிறேன்” என்றாராம்.  அவர், திரும்ப திரும்ப காமராஜரை வற்புறுத்த, பக்கத்தில் இருந்த நேரு “காமராஜரை விட்டு விடுங்கள், அவரிடம் சட்டைப் பையில் ஒரு ரூபாய் கூட இருக்காது, போடுவதற்கு” என்றாராம்

(என்னால் நினைத்தே பார்க்க முடியவில்லை- இப்படியும் ஒரு தலைவர் தமிழ் நாட்டில் இருந்தார் என்று.)

 தமிழில் நகைச்சுவை என்பது “சொற்களை மாற்றிப் போடுவதன் மூலம், சிறிய ஆங்கில வார்த்தைகள் மூலம்” கொண்டு வரலாம் என்பதை அழகாக விளக்கினார்
·        
     ஒருவர், மளிகை கடைக்காரருக்கு, கடிதம் எழுதுகிறார்- “எனக்கு ரவா வேணும்,  இது தான் என் பேரவா. நானே வரவா, என் பையனை அனுப்பித் தரவா ?”
    கடைகாரர்- “இது என்ன பெரிய தொந்தரவாப் போச்சு”

·        ஒருவர்- அருவி இருக்கு, நீர் வீழ்ச்சி இருக்கிறது என்று சொல்லி இங்கு வந்து பார்த்தால், ஒன்றுமே இல்லையே-
பதில்- சார், உங்களுக்கு யாரோ False (falls) information கொடுத்திருக்கிறார்கள்.

·        அப்பா, மகனிடம்- மகனே, உன்னை  “உளுந்து, பெருங்காயம் வாங்கச்சொன்னால், நீ கீழே உளுந்து  (விழுந்து), பெருங்காயப்பட்டு, வந்திருக்கிறாயே ?!”

·        ருத்தி, இன்னொருத்தியிடம்- “அடுக்கு மாடிக் கட்டிடத்தின் 10 வது மாடியிலில் இருந்து, மாமியார், மருமகளைக் கீழே தள்ளி விட்டாளாமே, இது அடுக்குமாடி ?

 திலகரைப் பற்றி ஒரு அருமையான தகவல் சொன்னார்
திலகர் சிறையில் தள்ளப்பட்டார்.  அது அவரது மனைவிக்கு ரேடியோ மூலம் தெரிய வந்தது.  அவர் மிகவும் அதிர்ச்சி அடைந்தார். அவருக்கு அழகு அழகாக மூண்று பெண் குழந்தைகள்.  அப்போது பெண் குழந்தைகளுக்கு கல்வி அறிவு கிடையாது. 

திலகரின் மனைவி, சத்தியபாமா,  சேதி கேட்ட அன்றே, இறந்து விட்டார்கள்.   சுதந்தர இந்தியா பெறுவதற்காக  இவர்கள் செய்த உயிர் தியாகத்தை  நாம் மறந்து விட்டது கொடுமை.  சுதந்திரக் கொடி, எத்தனை தாலிக் கொடியின் வலிமையில் பின்னப் பட்டது என்பதை மிகவும் ஆழமாக நம் மனதில் இருத்திக் கொள்ள வேண்டிய ஒரு விஷயம்.

திருப்பூர் குமரன்:   திருப்பூர் குமரன் தம் கையில் கொடி பிடித்துக்கொண்டு போராடும் போது,  ஆங்கிலேயர்களால் தலையில் “லத்தி அடி” வாங்கினார்.  அந்த அடி, அவரின் தலையின் “சில்லை” 2 cm பெயர்த்து விட்டது.  உடனே அவரை hospital லில் சேர்க்க, யாருமே வைத்தியம் பார்க்க முன் வரவில்லை.  ஆங்கிலேயர் பயம்.  கடைசியில் ரங்கநாதன் என்ற ஒரு மருத்துவர் வைத்தியம் பார்த்தார்.  (இப்பொழுதும் அவர் பெயரில் ரங்கநாதபுரம் என்ற ஒரு ஊர் திருப்பூரில் உள்ளது.). மருத்துவ சிகிச்சை பயனில்லாமல்,  குமரன் மரணமடைந்து விட்டார்.

ராமாயி என்ற அவரது மனைவிக்கு அப்போது 12 வயது. புஷ்பவதி ஆவதற்கு முன்பு விதவைக் கோலம். சுதந்திரப் போராட்டக் காலத்தில் நடந்த பல அவலங்களில் இதுவும் ஒன்று. வறுமை. அடுத்த வேளை சோறுக்கு வழி இல்லை. பத்து பாத்திரம் தேய்த்து பிழைப்பு நடத்தலாம் என்றால், பயந்து கொண்டு (வெள்ளைக்காரர்களை எதிர்த்த குடும்பம்) வேலை கொடுக்கக் கூட ஆளில்லை. 

அப்போது காந்தி மகான் திருப்பூருக்கு விஜயம் செய்தார்.  அவர்  வந்து முதலில் கேட்ட கேள்வி, குமரனின் மனைவி எப்படி இருக்கிறார் ? என்பதுதான் ? அவர் மகாத்மா,  சுதந்தரத்தின் வலி அவருக்குத் தெரியும். உடனே அவர் நடந்து வந்து ராமாயியைப் பார்க்க, பிறகுதான் பலரின் கவனம் ராமாயி மேல் திரும்பியது. 
ஓடக் காட்டில் ஒரு வீட்டில் ராமாயி குடியிருந்த பொது, திருப்பூர் கிருஷ்ணன் (தான்)  அடிக்கடி அவர் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்ததை நினைவ கூர்ந்தார்.

ஒரு முறை,  ராமாயி வீட்டுக்கு ஒரு நடிகர் வந்திருந்தார்.  அவர் மிகப் பெரிய நடிகர்.  ராமாயி அம்மாள், சினிமா பார்ப்பதில்லை என்பதால் அவருக்கு யார் வந்திருக்கிறார் என்று தெரிய வில்லை. உங்கள் பெயர் என்ன என்று ராமாயி அம்மாள் கேட்க அவர்  எம். ஜி . ராமச்சந்திரன் என்றார். உடனே, நன்கு சாப்பிடுகிறாயா ? என்று கேட்டார். அசந்து போன எம். ஜி, ஆர், தான் வறுமையில் இருந்த பொது கூட, விருந்தோம்பலில் எந்தக் குறையும் வைக்காத ராமாயி அம்மாளின் உயர்ந்த குணத்தைப் பார்த்து, போகும் பொது ரூபாய் 25,000 கொடுத்து விட்டுச் சென்றார்.

தலைமை செயலகம் திரும்பியவுடன், எம்.ஜி, ஆர் செய்த முதல் வேலை, அதுவரை “சுதந்திர போராட்டத் தியாகிகளுக்கு” என்று இருந்த பென்ஷனை,  முதியவர்கள் என்ற வகையில், அவர்களுடைய மனைவிகளுக்கும் உண்டு என்று சட்டம் கொண்டு வந்தார்.

எம்.ஜி,ஆர் மறந்த செய்தி கேட்டபோது, ராமாயி அம்மாள் மிகவும் வருத்தப்பட்டு “தன் பிள்ளை” இறந்து விட்டதாக எண்ணினார்.  “தாயாரை பொருளாதார ரீதியாக எவன் நன்றாக வைத்துக் கொள்கிறானோ அவன் தான் பிள்ளை. மற்றவர்கள் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன ?” என்றார். தன்னையும் ஒரு தாயாக மதித்து, பென்ஷன் திட்டத்தைக் கொண்டு, என் வறுமையை ஒழித்த அவர் என் மகன்.  அவருடைய மறைவு எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது என்றார்.

ஒரு முறை ராமாயி அம்மாள், ஒரு சினிமா பார்க்க ஆசைப்பட்டார்கள். திருப்பூரில் “டைமண்ட்” டாக்கீஸில் அந்த படம் ஓடிக்கொண்டிருந்தது.  அது சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த “ராஜபார்ட் ரங்கதுரை”.  அந்தப் படத்திற்கு அழைத்துச் சென்று பார்த்த போது, அதில் “திருப்பூர் குமரனாக” சிவாஜி நடிக்கும் ஒரு சீன் வந்தது.  அந்த சீனில், கடைசியில், குமரன், ஆங்கிலேயர்களால், அடி வாங்கும் காட்சியைப் பார்த்து, ராமாயி அம்மாள், மயக்கம் போட்டு விழுந்து விட்டார்கள்.

பிறகு மயக்கம் தெளிவித்து, வீட்டிற்க்கு, அழைத்துச் சென்று, “ஏனம்மா,
 உணர்ச்சி வசப்பட்டு விட்டீர்கள் ? என்று திருப்பூர் கிருஷ்ணன் வினவ, அவர், “நான் என் கணவரை சரியாகப் பார்த்தது கூட கிடையாது.  அவர். சுதந்தரப் போராட்டத்தில் இருந்ததால், வீட்டிற்கு வருவதே கிடையாது. அவர் மறைந்து விட்டார். இந்தப் படம் பார்க்கும்போது, என் கணவரையே, சிவாஜி கணேசன் அவர்களின் மூலம் பார்த்தேன்”  என்றார்.  இந்த விஷயத்தை, தான் இறக்கும் வரை யாரிடம் சொல்லக் கூடாது என்றும் சத்தியம் வாங்கிக் கொண்டார் (திருப்பூர் கிருஷ்ணனிடம்).  என்ன ஒரு பெண்மணி, என்ன ஒரு தூய வாழ்க்கை ?
இதை கேட்டப்போது அரங்கத்தில் எழுந்த கரகோஷம், அப்பப்பா....!!!
                                                                              (தொடரும்)