Thursday 13 April 2017

மயிலையில் “பங்குனிப் பெருவிழா” என்ற மகாமகம்


புன்னாக  வனத்து எழில்சேர் கயிலை மலையுமை மயிலாய்ப் பூசை செய்யு நன்னாமத்தான் மயிலையென விலங்கு மூதூர்”  என்ற பாடல் மூலம் ஆரம்பிப்போம்

அது என்னமோ தெரியவில்லை.  பங்குனி மாதம் என்றாலே, கபாலிக்கும், கற்பகாம்பாளுக்கும் கொண்டாட்டம் தான்.   ஜாலியாக வெளியே கிளம்பி நான்கு மாட வீதிக்கும் வந்து,  திகட்ட திகட்ட, தரிசனம் தந்து, பக்த ஜனங்களை,  ஜன்ம சாபல்யம் அடைய வைத்துவிடுவார்கள்
அதற்கு ஈடாக பகத கோடிகள் ஒன்றாகக் கூடி “மகாமகம்”  effect ஐ ஏற்படுத்திவிடுவார்கள். 

நான் நினைப்பது உண்டு, என்  63 வருக்கு மட்டும் இந்த கூட்டம் ?.  அதற்கு விடை தெரியவில்லை.  ஒரு வேளை அன்னதானமாக இருக்கலாம்.  பங்குனி வெய்யிலில் வீட்டில் உட்கார முடியாமல் வெளியில் கிளம்பி, மயிலாப்பூர் வரலாம்.  நிறைய கடைகள் திடீரென முளைத்து, விசிறி முதல் மண் சட்டி வரை விற்றுக்கொண்டு  இருப்பவர்களின், பர்ஸை நிரப்பவும் இருக்கலாம். 

ஆனால் பக்தி என்று ஒன்று இருப்பதாகவோ,  சுற்றுச் சூழல் மாசு என்று ஒன்று இருப்பதாகவோ – எனக்குத் தெரியவில்லை.  பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட்டுகள்,  ஜூஸ் பாக்கெட்டுகள்,  சாப்பிட்டு அப்படியே மிச்சம் வைத்து தூக்கி எறிந்த தட்டுகள்- அடுத்த நாள்,  துப்பரவு பணியாளர்கள்,  மாங்கு மாங்கு என்று இவைகளை அகற்றும்போது, மனது வேதனையாக இருக்கிறது.

இவ்வளவு பெண்களுக்குள் யாருக்காவது   இயற்கை உபாதையால் அவதிப்பட்டால், அவர்களுக்கு,  டாய்லெட் எங்கே இருக்கிறது என்று கேட்டால் விடை இல்லை.

பெண் போலீசாரையே எடுத்துக் கொள்வோம், அவர்களுக்கும் இதே கதி தானே...

இருந்தாலும், கோவில் திருவிழா என்று வந்துவிட்டால், நம்மாளை அடித்துக்கொள்ள ஆள் இல்லை.  “தும் தடாக்தான்”.

மூன்று முக்கியான பங்குனி உற்சவம்:

அதிகார நந்தி

தேர்

63 வர்
அதிகார நந்தி என்பது பேரைப் போலவே- சிவனை இவர் அனுமதி இல்லாமல் யாரும் பார்க்க முடியாது.  மனித உருவில், நந்தி முகத்தோடு, இடது காலை மடக்கி, நீட்டிய கரங்களில், ஐயனைத் தாங்கி வருவது, மிகவும் அழகு.  மேலும், அதிகார நந்தி என்றால், கபாலிக்கு மட்டும் இல்லை.  பிள்ளையார் முதற்கொண்டு,  முருகன் வரை, அதிகார நந்தி வாகனம்தான்.

பாபநாசம் சிவன் என்ற ஒரு மகா மேதை, கபாலியே கதி என்று இருந்த அவர், சில சங்கீத முத்துக்களைத் தந்திருக்கிறார்.  அதில் “காணக் கண் கோடி வேண்டும் கபாலியின் பவனி” என்று ஒரு பாட்டு.  அதில் இரண்டு இடங்களில்,  நெஞ்சு உருக கபாலியின், ஊர்வலத்தை கொண்டாடுகிறார்.

ஒன்று,  “அபாங்க அருள் மழை பொழி பவனி”

இரண்டாவது- “கண்ணாரக் கண்டு, உள்ளுருகி, பணிய, பலர் காண”

கோவிலுக்குப் போகாதவர்களைக் கூட மன்னித்து ஏற்றுக்கொண்டு,  “நான் வருகிறேன் என்று கோவிலை விட்டு வெளியில் வந்து, தேரிலும், ரிஷப வாகனத்திலும், அதிகார நந்தியிலும், யானை வாகனத்திலும், தான் மட்டும் வாராமல், பிள்ளையார், முருகன்,  சண்டிகேஸ்வரர் என்று பரிவாரங்களோடு வந்து, காக்ஷி கொடுக்கும்  கபாலி ஒரு பெரிய கோடை (கொடை என்று கூட சொல்லலாம்)  வள்ளல் தான்.

அந்தக் காலத்தில் மாட்டு வண்டியில், சாப்பாடு கட்டிக் கொண்டு வெகு தூரத்தில் இருந்து, மயிலாப்பூருக்கு வந்து 3 நாட்கள் தங்கி போவார்கள்.  அப்போது அவர்களுக்காக அன்னதானம், தண்ணீர் பந்தல் என்று மயிலாப்பூரில் உள்ள சத்திரத்தில், வீடுகளில் அமைத்துக் கொடுத்தார்கள்.

கபாலி கிருபையில், இன்னும் அன்ன தானமும் தண்ணீர் பந்தலும், வெகு ஜோராக நடந்து கொண்டிருக்கிறது. 

இது மயிலாப்பூர் வாசிகளுக்கு, ஒரு உணர்ச்சி பூர்வமான ஒரு வைபவம். தேர் வரும்போது “விண்ணைப் பிளக்கும்” கபாலி என்ற ஒரு சத்தம், கைலாசம் வரை கூட கேட்கும் என்று சொன்னால் மிகையாகாது.  என்னதான் “ஏகம்பத்துரை எந்தாய் போற்றி” என்று கற்பகாம்பாளைக் கொஞ்சினாலும்,  மாட வீதி ஊர்வலம் என்றால் “கபாலி” தான்.  அந்த பிரம்மாண்டமான தேரும், அதில் கபாலி, சும்மா “ஜம்” என்று கால் மேல் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்து கொண்டு இருக்கிற அழகும், வடத்தை பிடித்து இழுக்கும்,  பக்தர்கள் கூட்டமும், அட அட அடா, காண, நிஜமாகவே, கண் கோடி வேண்டும்தான்.

63 வர் என்றால் என்ன என்று எல்லோருக்கும் தெரியும்.  63 நாயன்மார்களின் பின்னே வருகின்ற கபாலியும், உடனுறையாளும், முருகப் பெருமானும் மிக அழகு.

9 ம் நாள் பிட்சாடனர் வடிவிலும், மஹா விஷ்ணு, மோகினி வடிவிலும் காட்சியளிப்பது மிகவும் விஷேஷமானது.

இதோ, இதை முடிக்கும்போது, விடையாற்றி உத்சவம் என்று, இசை மேதைகள் பாட ஆரம்பித்து விட்டனர்.  இன்று ஸ்ரீ விஜய் சிவா பாடுகிறார், சஞ்சய் சுப்ரமணியம்,  ரஞ்சனி காயத்ரி என்ற மிகச் சிறந்த பாடகர்கள்,  கற்பகத்தையும், கபாலியையும், இசை மழையால், குளிர்விக்கப் போகின்றனர்.

ஒரு காலத்தில், மதுரை மணி அய்யர், மதுரை சோமு போன்ற மகா மேதைகள் 
இங்கு இரவு முழுவதும், மழை, பனி என்று பாராமல்,  பாடி அசத்தி இருக்கிறார்கள். 

ஒரு முறை, மதுரை மணி அயருக்கு,  நல்ல ஜுரமாம்.  பங்குனிப் பெருவிழாவில்,  பாட வேண்டிய தினம் அது. எல்லோரும், இன்று நீங்கள் பாட வேண்டாம் என்று மணி அய்யரை வற்புறுத்த, அவர், “ஒரு மணி நேரம் பாடிவிட்டு, வந்து விடுகிறேன்- எனக்காக ரசிகர்கள் காத்துக்கொண்டிருப்பர்கள்” என்று சொல்லி வந்து பாட ஆரம்பித்து, 5 மணி நேரம் பாடினாராம். 


காளிதாசன் சொன்னது போல், வாக்கும், பொருளுமாக இருக்கும் கற்பகாம்பாள் சமேத கபாலிச்வரை நாம் மனதுருக வணங்குவோம். அவர்கள் அருளைப் பெறுவோம்.

No comments: