Sunday, 26 June 2022

திருப்பைஞ்சீலி

 

திருச்சியில் மேற் படிப்பு படித்தும், 6 வருடங்கள் இருந்த போதிலும், திருச்சியைச் சுற்றியுள்ள பல கோவில்களைப் பார்ததில்லை.  வயதானபிறகு, கொஞ்சம் புத்தி வந்து, ஒரு பிரார்த்தனைக்காக, திருப்பைஞ்சீலி என்ற ஒரு க்ஷேத்ரத்திர்க்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.

கோவில் பெருமமையைச் சொல்லும்போது “அடைய வல்லவர்க்கு இல்லை அவலமே” என்கிறார் திருநாவுக்கரசர்

ஞீலி என்பது ஒருவகை கல்வாழை. பைஞ்ஞீலி என்பது பசுமையான வாழையைக் குறிக்கும். பசுமையான ஞீலி வாழையை தலவிருட்சமாக பெற்றதால் திருப்பைஞ்ஞிலி என்று இத்தலம் பெயர் பெற்றது. இப்பவும் வாழை மரத்தையோ, கன்றையோ கொடுத்து, பரிகார நிவர்த்தி செய்து கொள்கிறார்கள்.

இதில் என்ன ஆச்சர்யம் என்றால், தல விருட்சம் என்போம். மருந்துக்கு ஒரு மரம் இருக்கும்.  இந்த இடம் வளமாக இருந்தது என்போம் ! இப்போது, கட்டிடங்கள், மக்கள், என்று அங்கலாய்ப்போம் !!

ஆனால் இதற்க்கு மாறாக, மண்ணச்ச்நல்லூரில் இருந்து, திருப்பைஞ்சீலி செல்லும் அந்த 1 கிலோமீட்டர் முழுவதும் வாழை மரங்கள் தான். ஒரு 10 தோப்பு பார்த்திருப்பேன். ஒரு 5000 மரங்கள. பச்சை பசேலென்று, குலை தள்ளி எத்தனை மரங்கள். இப்படி ஒரு இயற்க்கை சூழலை, திருச்சிக்கு மிக அருகே எதிர்பார்க்க வில்லை.

தாதாசார்யார் தோட்டமாக இருந்து இப்போது கட்டிடங்களாக இருக்கும் ஸ்ரீரங்கத்தில் பக்கத்தில் இப்படியும் ஒரு இடம் !!! 

ஸ்தல புராணத்தில், நாவுக்கரசர்,  திருவானைக்கோவில் ஜம்புகேஸ்வரரையும், தாய்மானஸ்வாமியையும், தரிசனம் செய்து விட்டு, நடந்து வர, களைப்பால் பசியெடுத்து, ஒரு மரத்தின் கீழ் அமர, வயோதிக வேடத்தில், சிவ பெருமான், கட்டுச் சோறு, கொண்டு கொடுத்தாராம். அதை சாப்பிட்டு விட்டு, பக்கத்தில் இருக்கும் ஞீலீஸ்வரர் கோவிலைப் பற்றி, வினவ, அவரை அழைத்துக் கொண்டு சென்று, ரிஷபரூடராக, ஊமையம்மையுடன் காக்ஷி கொடுத்தாராம்.

இப்பவும் இந்தக் கோவிலுக்கு உள்ளே செல்லும்போது, இடது புறத்தில், சிவன், நாவுக்கரசருக்கு, ஒரு மூட்டையில் சாப்பாடு கொடுப்பதுபோல், விக்ரகம், அதன் எதிரில், பெரிய நந்தி தான் ஆச்சர்யம். ஏனெனில் உள்ளே இருக்கும் ஞீலீஸ்வரருக்குக் கூட அவ்வளவு பெரிய நந்தி இல்லை. பக்தனோடு சேர்ந்து இருக்கும் ஸ்வாமிக்கு “ஸ்பெஷல்” நந்தி.

மூன்றாம் திருமுறை- தேவாரத்தில்

“தொத்தின தோள் முடியுடைய வன்றலை பத்தினை நெறித்த பைஞ்சீலி மேவலான்” என்கிறார்.

““கொத்தாகவுள்ள இருபது தோள்களைக் கொண்ட இராவணனின் முடியுடைய தலைகள் பத்தையும் இறைவன் நெரித்தான். அப்பெருமான் திருப்பைஞ்ஞீலி என்னும் திருத்தலத்தில்” என்று அர்த்தம்.

ராமன் ராவணனை அழிப்பதற்க்கு முன்பு, சிவனும், கொஞ்சம் பயம் காட்டி இருக்கிறார் என்பது தெரிகிறது.

சேக்கிழார், தனது பெரிய புராணத்தில், நாவுக்கரசர், பைஞ்சீலியில், தொண்டு செய்து காலத்தைக் கழித்ததை, எப்படி சொல்கிறார் என்று பாருங்கள்:  !!!!

பைஞ்ஞீலியினில் அமர்ந்து அருளும்பரமர் கோயில் சென்று எய்தி

மைஞ்ஞீலத்து மணி கண்டர் தம்மை வணங்கி மகிழ் சிறந்து

மெய்ஞ்ஞீலிர்மையினில் அன்புருக விரும்பும் தமிழ் மாலைகள்பாடிக் கைஞ்ஞீடிய தம் திருத்தொண்டு செய்து காதலுடன் இருந்தார்   5.1.31

 இதை ஒரு முறை, தவறில்லாமல் பார்த்துப் படித்தாலே, அவருக்கு, சிவபெருமானை விட்டு, இன்னொரு மூட்டை சாப்பாடு கொடுக்கச் சொல்லலாம்  !!!!!

 சிவ பெருமான், நாவுக்கரசரை, கூட்டிக்கொண்டு போய் இந்தக் கோவிலில் சென்று மறைந்து போக, உள்ளம் உருகுகிறார். தன்னுடன் வந்து நீயா ?  என்று

 “அடியேனைப் பொருளாய் அளித்த கருணை எனப் பாடல் புரிந்து, விழுந்து விழுந்து, கண்ணீர் மாரி பயில் வித்தார்” என்கிறார்.

 திருப்பள்ளி எழுச்சியில் – “தொழுகையர், அழுகையர், துவள்கையர் ஒரு பால்” (பால் என்றால் புறம்) என்கிறார் மணி வாசகப் பெருமான். கடவுளை நேரில் பார்க்காத பக்தனே இப்படி துவளும்போது, கூட இருந்தவர்- அந்த பெருமான் என்று அறிந்த பின் உள்ளம் எவ்வளவு பூரிக்கும் !!!

 என்ன ஒரு அற்புதமான் தமிழ். அந்தக் காலத்தில் எப்படி தமிழின் மூலம் இறையை அனுபவித்து இருக்கிறார்கள் ?

 விசாலாக்ஷி தாயார் சன்னதி தனியே இருக்கிறது. இதிலும் ஒரு ஆச்சர்யம் உண்டு. இங்கே  நீல நெடுங் கண் நாயகி என்ற பெயரிலும் ஒரு அம்பாள் விக்ரஹம் இங்கு உண்டு.  கும்பகோணம் மங்களாம்ம்பாள் மாதிரி கொஞ்சம் பெரிய விக்ரஹமாக இருக்கும்,  விசாலக்ஷி க்குத் தான் அர்ச்சனை, அபிஷேகம் நடக்கிறது. நீல.நாயகிக்குக் கிடையாது. ஆனால் த்வஜஸ்தம்பம் நீல. நாயகிக்குத்தான் இருக்கிறது.

இந்த ஆச்சர்யத்தை, அங்கு இருத ஷண்முக குருக்களிடம் கேட்டபோது, அவர் “விசாலக்ஷி” அம்மன் சற்று “பின்னப்பட்டு விட்ட படியால், தோஷ நிவர்த்திக்காக, நீல நெடுங்கண் நாயகியை பிரதிஷ்டை பண்ணினோம்”.  ஆனால் புராதானமாக இருக்கிற அம்பாளைத் தான் பூஜை செய்ய வேண்டும் என்ற ஆகமப்படி, பூஜை நடந்து கொண்டு இருக்கிறது” என்றார்.

அடுத்தது, நாம் இந்த்க் கோவிலில் முக்கியமான எமன் சன்னதிக்கு வருவோம். திருக்கடையூரில், மார்க்கண்டேயனுக்காக எமன் சம்ஹாரம் பண்ணப் பட்ட பிறகு, அழிக்கும் தொழில் ஸ்தம்பித்துப் போக, ப்ரம்மா, விஷ்ணு எல்லோரும் சென்று முறையிட, திருப்பைஞ்சீலி வந்து பல ரிஷிகள், கடும் தவம் புரிய, மனமிரங்கிசிவன், எம தர்மராஜரை உயிர்பித்த இடம் இது.

இது பூமி மட்டத்தின் கீழே இருக்கிறது, குடவரை கோவில் போல். பூமியில் இருந்து உயிர்பித்தார் என்பதை காட்டுவது போலே. சோமாஸ்கந்தர் என்று சொல்வது போல், தாக்ஷயானி யோடு, மிருத்யுஞ்சய மூர்த்தியும் மடியில் முருகனும், கீழே காலுக்கடியில் எமன், - ஸ்வ்யும்பாக தோன்றிய உருவம்.

சட்டென்று, ஸ்வயம்புவாகத் தோன்றியது, என்றால் எனக்கு உடனே ஞாபகம் வருவது, வேதாரண்யத்தில், திருமறைக்காடர் என்று போற்றப்படும் சிவனின்  பின்னால், திருமணக் கோலத்தில், பார்வதி சிவனோடு அற்புதமாகக் காட்சி அளிப்பார். இது அகத்தியருக்காக காண்பிக்கப்பட்ட கல்யாண கோலம். அற்புதமான ஸ்வயம்பு மூர்த்தி.

இங்கு திருக்கடையூரில் சென்று 60 வது 80 வது கல்யாணம் செய்து கொள்ள முடியாதவர்கள், இங்கு செய்து கொள்கிறார்கள். திருமணம் ஆகாதவர்கள், குழந்தை பேறு, இப்படி பல பரிகாரங்கள் இந்தக் கோவிலில் செய்து வருகிறார்கள்.

நவக்ரஹத்துக்கு சன்னதி இல்லை, எமன் சனீஸ்வரருக்கு அதிபதி என்பதால். ஆனால் நவக்ரஹம், 9 படிகளாக இருக்கிறது, நாம் இறங்கி ஸ்வாமி தரிசனம் செய்ய வேண்டும்.

 வேறு கோவில்:

கும்பகோணம் செல்லும் வழியில், திருக்கோடீஸ்வரர் என்று ஒரு ஸ்தலமும் உண்டு. அங்கே ஒரு பக்தனுக்கு இரங்கி, சிவன் கட்டளையிட, எமன் இந்தக் கோவிலுக்கு வருபவர்களை எமன் துன்புறுத்தக் கூடாது என்று கேட்டுக் கொண்டார் -  என்பது.

கும்பகோணத்தின் அருகில் இருக்கும் ஸ்ரீ வாஞ்சியத்திலும் எமனுக்கு ஒரு சன்னதி  உண்டு.

அற்புதமான கோவில், அழகான தரிசனம், அமைதியானது மனசு.

 



Saturday, 18 June 2022

தகப்பன் (குரு) சாமி

 

இன்றைக்கு தகப்பர் தினம்.  (Father’s day).  ஒவ்வொரு ஆணும் ஒரு வகையில் தகப்பனே, அவரு(னு)க்கு திருமணம் ஆனால் தான் என்பது இல்லை ! குழந்தை பிறந்தால் தான் என்பதும் இல்லை.  !!

ஒவ்வொருவரும் தம்மை ஒரு தந்தையாக பாவித்து, இந்த உலகை பார்த்தால், பொறுப்பு உணர்ச்சி தானாகவே வரும். பொறுப்பு என்று வந்து விட்டால் பயம் தானாகவே வரும். பயம் வந்தால், அந்த பயத்தைப் போக்க பக்தியின் உதவியை நாடுவோம். நாம் பக்தியை நோக்கி போக நினைக்கும்போது, ஒரு குரு உடனே நம்மிடம் தோன்றி, வழி நடத்திச் செல்வார்.  குரு நம்மிடம் வந்தவுடன் நாம் கவலை இல்லாமல் நாம் பாட்டுக்கு நம் வழியில் செல்லலாம்.  எப்படி, ஒரு குழந்தை, தன் தந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு, ஒரு பெரிய கூட்டதில், போகும்போது, ஏதாவது கவலைப் படுகிறதா ? இல்லை. ! காரணம் அப்பா இருக்கிறார் என்பது தான். அது போலத் தான் குரு இருக்க கவலை இல்லை.

பரமாத்மா ஜீவாத்மா ஒன்று சேருவதற்க்கு காரணம் குரு. ஆன்மீகத்தில் குரு என்றவுடன் எனக்கு ஞாபகம் வருவது ஆஞ்சநேய ஸ்வாமி. அவர் தான் ராமன் என்ற பரமாத்வாவையும், சீதை என்ற ஜீவாத்மாவாவையும் இணைக்கிறார். அதனால் தான் ராமாயணத்தில், இந்தப் பகுதியை சுந்தர காண்டம் என்கிறோம்.

ஒரு குரு தகப்பனார் ஆக முடியுமா என்ற கேள்விக்கு, ராமாயணத்தில் அற்புதமாக விளக்கப் பட்டிருக்கிறது

“விஸ்வாமித்ரர். மிதிலைக்குச் சென்று ராமனை அறிமுகப்படுத்துகிறார். அவர் சொல்கிறார்- இக்ஷ்வாகு குலத்திற்க்கு, பெருமை சேர்த்த பல பெயர்களை சொல்லிக் கொண்டு வந்த அவர், புத்திர காமேஷ்டி யாகத்தால் ராமன் பிறந்ததைச் சொன்னார். எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, இந்த ராமன் தசாரதனுக்குப் பெயரளவில் மட்டும் தான் புத்திரன், ராமனை வளர்த்த பெருமை அவரின் குரு வசிஷ்டரையே சாரும்” என்று கூறினார்.

அது போல் தான் நம் குருசாமியும்.

என் தகப்பனார் எனக்கும் என் சகோதர்களுக்கும் தகப்பனார் என்பது விட, திருச்சியில் பல இளைஞர்களுக்கு, பல குடும்பங்களுக்கு, பல மாந்தர்களுக்கும் ஒரு சிறந்த குருசாமி என்ற பெயரில் ஒரு சிறந்த தகப்பனாக இன்றும் இருக்கிறார் என்பது தான் பெருமை.

இது அவருக்கு, “சத்யமான பொன்னு பதினெட்டாம் படியில் இன்றும் கலியுக வரதனாய், கண் கண்ட தெய்வமாக இருக்கும் அய்யப்பன்” இட்ட கட்டளை என்று நான் நினைக்கிறேன்.

அதனாலோ என்னவோ, தாயும் தந்தையுமாய், தாயுமானவராய் எழுந்து அருளி, அருள் பாலிக்கும், மாத்ரு பூதேஸ்வரர் என்று நாம் கொண்டாடும், தாயுமானவ ஸ்வாமி இருக்கும் ஊரில் அவர் இருக்கிறார்.  

முத்து ஸ்வாமி தீக்ஷிதர், தாயுமானவர் ஸ்வாமியை பற்றி எழுதிய பாடலில் “தம் அடியார்களின் சந்தோஷத்திற்க்கு காரணமாக இருப்பவர். கருணையுள்ளம் படைத்தவர்” என்று எழுதுகிறார்.

அதே போலத்தான். நம் குருசாமியும். நம்மை சபரி மலைக்கு வழி நடத்துவதில், ஒரு தந்தையாக, ஆன்மீக விஷயங்கள் மட்டுமின்றி, வாழ்வியல் முறைகளிலும், குடும்ப பிரச்னைகளிலும வழி காட்டும், சிறந்த குருவாக. அன்னதானம் செய்வதில், எல்லோருக்கும் சரியான நேரத்தில், மலைப் பாதையிலும் சரி, சன்னிதானதிலும் சரி, மலைக்குப் புறப்படும்போதும் சரி, அய்யப்ப பஜனை முடிந்து உணவு எல்லோருக்கும் கிடைத்ததா, என்று பாசத்தோடு கேட்பதில் ஒரு தாயாக இருப்பது இப்படி. -இது எல்லோராலும் சாத்தியமே இல்லை.

தந்தை என்பவன் வீரனாக இருக்க வேண்டும். ஒரு படையை/குடும்பத்தை வழி நடத்திச் செல்வதில் ஒரு தனித் திறமை வேண்டும். இந்த தந்தை குணம் குருசாமியிடம் இருந்ததை பலர் பார்த்து இருக்கிறோம்.

சபரி மலை, போய் வந்த நம் ஒவ்வொருக்கருக்கும், ஒரு கதை இருக்கும், அந்தக் கதையில், ஏதோ ஒரு வகையில்,  நம் குருசாமி இருப்பார்.

நாம் தாயாக பல பேரை நினைக்கலாம். என் அதுதான் சிறந்த உறவு முறை. பாரத மாதா என்று, அதனால் தான் சொல்கிறோம். ஆனால் தந்தை முறை, எல்லோருக்கும் வராது. இன்னொரு ஆண் மகனை என் தந்தை என்று ஒப்புக்கொள்ள மனம் வராது. ஆனால், நம் குருசாமி, நிறைய பேருக்கு “ஆன்மீக ஒளி” காட்டும் ஒரு ஆசானாக, தந்தையாக, தாயாக இருக்கிறார். இந்தப் பேறு எல்லாருக்கும் கிடப்பதில்லை.

மூக்கில் மேல் விரல் வைத்த அய்யப்பனுக்கே, அம்மை அப்பன் குழப்பம் உண்டு. இது ஒரு ஸ்வாரஸ்யமான கதை. அதையும் கொஞ்சம் கீழே பார்ப்போம்:

ஒரு சமயம் தஞ்சை ஸ்ரீ பிருஹதீஸ்வரர் ஆலய பிரஹ்மோத்சவம் நடைபெற்றது.

விழா முடிந்து அனைத்து வித்வான்கள் அவரவர்கள் இருப்பிடம் திரும்பினார்கள். ஆனால் அரசன் ஸ்ரீ அப்பய்ய தீக்ஷிதர் அவர்களையும், தாதாசார்யார் அவர்களியும் தன்னுடன் சிலகாலம் இருக்கும்படி வேண்டுகிறான். பல க்ஷேத்ரங்களை தர்சித்து வரும்போது மூக்கின் மேல் வலது கை விரலை வைத்துக்கொண்டு யோசனையில் இருப்பதுபோல் விக்ரஹமுடைய ஸ்ரீ ஐயப்பனை ஒரு ஊரில் தர்ஸிக்க நேரிடுகின்றது.

இதை பார்த்து அதிசயித்த ராஜா கேட்டார்: இந்த விக்ரஹம் ஏன் இப்படி யோசிக்கின்ற பாவனையில் உள்ளது?”

அந்த ஊரில் இருக்கும் வயதானவர்களில் சிலர் முன் வந்து பவ்யத்தோடு அரசினிடம் சொன்னது:

அரசனே, இந்த விக்ரஹத்தை வடித்த ஸ்தபதிக்கு ஐயப்ப சாஸ்தா இப்படி தீர்க்க சிந்தனையில் இருப்பதுபோல் தர்ஸனம் தந்துள்ளார். தமக்கு தர்ஸனம் கிடைத்த அந்த காட்சியின்ப்படியே அந்த ஸ்தபதி மூர்த்தியை வடித்துவிட்டார். பிற்காலத்தில் ஸர்வ சாஸ்திர நிபுணரும், மஹா ஞானியுமான ஒரு மஹான் இங்கு வருவார். அவர் இதன் ரஹஸ்யத்தை உலகுக்கு எடுத்துச் சொல்லுவார். அந்த க்ஷணமே ஐய்யப்பனும் மூக்கிலிருந்து விரலை எடுத்து விடுவார்.

 

ராஜா தாதாசார்யாரை நோக்கி இதன் ரஹஸ்யத்தைச் சொல்லமுடியுமா என கேட்க, தனது மனதில் தோன்றிய கருத்தை கீழ்கண்ட ஸ்லோகம் மூலம் தெரிவிக்கிறார்:

 

விஷ்ணோ: ஸுதோஹம் விதிநா ஸமோஹம்
தந்யஸ் - ததோஹம் ஸுரஸேவிதோஹம் |
ததாபி பூதோச ஸுதோஹம் ஏதைர்
பூதைர் - வ்ருதச் சிந்த்யதீஹ சாஸ்தா ​​||

 

பொருள்:

 
மோஹினி ருபமாய் விஷ்ணு இருந்தபோதுதான் நான் பிறந்தேன். ஆதலால் நான் விஷ்ணுவுக்கு மகன். பிரஹ்மாவுக்கு சமானமானவன். நான் மிக சிறந்தவனும்கூட. ஆதலால்தான் தேவர்கள் என்னை வாழ்த்தி போற்றுகின்றார்கள். விஷயம் இப்படி இருக்கும்போது, சுடுகாட்டில் பூத கணங்களால் சூழப்பட்டு வாழ்ந்துவரும் சிவனின் மகன் நான் என்று ஒரு சிலர் என்னை சொல்லுவதை நினைக்கும்போது எனக்கு வருத்தமாக இருக்கிறது என்று சாஸ்தா நினைக்கின்றார்.

 

இதை கேட்ட ஐயப்பன் மூக்கிலிருந்து விரலை எடுக்கவில்லை. பிம்பம் அப்படியே இருந்தது. எந்த சலனமும் விக்ரஹத்தில் இல்லை.

 

உடனே அரசன் அப்பய்ய  தீக்ஷிதர் அவர்களை வணங்கி இந்த ஹரிஹரபுத்ரனின் கோலத்தின் வாஸ்தவமான அபிப்ராயத்தை எங்களுக்கு தெரியப்படுத்தவேண்டும் என பிரார்த்திக்கின்றான்.

 

தீக்ஷிதர்வாளும் தனது அபிப்ராயத்தை ஒரு ஸ்லோகம் மூலம் சமர்ப்பிக்கின்ரார். இதோ அந்த ஸ்லோகம்:


அம்பேதி கெளரீம் அஹம் ஆஹ்வயாமி
பத்ந்ய பிதுர் - மாதர ஏவ ஸர்வா : |
கதம் நு லக்ஷ்மீம் இதி சிந்தயந்தம்
சாஸ்தாரம் ஈடே ஸகலார்த்த ஸித்த்யை ​​||

 

ஸ்லோகத்தின் அர்த்தம்:

விஷ்ணு பகவான் மோஹினி அவதாரம் செய்த சமயத்தில் பரமசிவனுக்கு குமாரனாக பிறந்தேன் நான். ஆகையால் கைலாசம் சென்று தந்தையான பரமசிவனை தர்ஸிக்கும்போது பார்வதி தேவியை அம்மா என்று அழைப்பேன். தகப்பனாரின் பத்னிகள் அனைவரும் குழந்தைக்கு அம்மாதானே. ஆனால் வைகுண்டம் செல்லும்போதுதான் குழப்பம் வருகின்றது. அங்கு என் தாயான மஹாலக்ஷ்மியை- விஷ்ணுவின் மனைவியை - நான் என்ன முறை சொல்லி அழைப்பது என்று புரியவில்லை.

 

இம்மாதிரி அர்த்த புஷ்டியுள்ள ஸ்லோகத்தை பக்தியுடன் தீக்ஷிதர் அவர்கள் கூறிய அந்த க்ஷணம் சாஸ்தா தனது வலக்கரத்தின் விரலை மூக்கிலிருந்து விலக்கி விடுகிறார்

ஜீனி கண்ட் – என்ற ஒரு அறிஞர், தந்தையைப் பற்றி இப்படி எழுதுகிறார்

“ஒரு தந்தையின் நம்பிக்கை என்பது அந்தக் குடும்பத்தை வழி நடத்திச் செல்லும், அணையா விளக்கு”

அந்த நம்பிக்கையை சபரி மலை செல்லும் ஒவ்வொரு சாமியிடம் அந்த சாமியை சார்ந்த குடும்பத்திடம், விதைதது தான் ஒரு பெரிய ஆச்சர்யம்.

சபரிமலைக்கு. குருசாமியின் கீழ், சென்ற நம் எல்லோரும் அவர் குழந்தைகள். அவரையும், அவரது நிழலாக அவர் கூடவே இருக்கும் அவரது துணைவியார், என் தாய், அவர்களுக்கும்,  நாம் எல்லோரும் இந்த ஜன்மத்தில் நன்றி சொல்லி அவர் நீடூழி வாழ பிரார்தனை செய்வோம். 

 

Friday, 6 May 2022

சௌந்தர்ய லஹரியும் மீனாக்ஷியும் (sankara jayanthi)

 

ஸ்ரீ சங்கர ஜயந்தி (6-4-22) தினமான இன்று, கொஞ்சம் அம்பாள் தியானம். பகவத் பாதாளின் அற்புதமான சௌந்தர்ய லஹரியில் இருந்து சில பகுதிகளை ஸ்புரிப்போம்.. 

இன்று ஆதி சங்கரரின் நினைவாக அவரின் சௌந்தர்ய லஹரியின் ஸ்லோகத்தை எடுத்து எழுவது எனக்கு பெரும் பாக்யம். சௌ. ல ஆதி சங்கரரின் முக்கியமான ஒரு படைப்பு. அதனால் தான் அவர் அஷ்டோத்தர நாமத்தில். “சௌந்தர லஹரி முக்ய பஹூ ஸ்தோத்ர விதாயகாய நம:” என்று இருக்கிறது போலும். அபிராமி அந்தாதி என் சிந்தையுள்ளே” என்று அபிராமி பட்டர், சௌ.லஹரியின் சாரத்தைப் பிழிந்து கொடுத்து இருப்பதும், தமிழ் கூறு நல்லுலகுக்கு கிடைத்த பெரும் பாக்யம்.

அம்பாளின் பெருமையை யுகம் யுகமாக சொல்லி ஓய்ந்த பாடில்லை. அங்கே மூக கவி “உலக மக்களின் தாபங்களை ஒரு நொடிப் பொழுதில் நினைத்த மாத்திரத்தில் அகற்றிக்கொண்டு, அருள் புரிகிறாள் என்பதை – “லோகானாம் சம்க்ஷனமாத்ர சம்ஸ்மரனதஹ சந்தாப விச்சேதினி” (ஸ்துதி ஸதகம் 12) என்கிறார்

ஆதி சங்கரரின் படைப்புகளில் எனக்கு சுப்ரமண்ய புஜங்கமும் மிகவும் பிடித்தது. முருகன் தமிழ் கடவுள் என்பதாலோ, அந்தக் காலத்தில் ஒரு பழ மொழி உண்டு, சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை, சுப்ரமண்யர்க்கு மிஞ்சின தெய்வம் இல்லை” என்பதாலோ – தெரியாது.

பகவத் பாதாள் நமக்கு அளித்த ஒவ்வொன்றும் பொக்கிஷங்கள். நாம் அவரை தினமும் ஸ்‌மரித்தாலே போதும்.

என்னதான் எங்கள் ஊர் காபாலி ஜம் என்று கால் மேல் கால் போட்டுக் கொண்டு, அதிகார நந்தி மேலோ, தேரிலோ பவனி வந்தாலும், அவர் இட்டுக்கொள்ளும் வீபூதி என்னவோ, கற்பகத்தின், பாத தூளி தான் என்று, சௌ. லஹரியின் இரண்டாவது ஸ்லோகத்திலேயே சொல்லி விடுகிறார் (ஹர: சம்க்ஷூப்த ஏனம் பஜதி பசிதோத்தூலன விதிம்)

சமீபத்தில் அனந்த ராம தீக்ஷிதர் அவர்களின் மறு அவதாரம் என்று நான் கருதும் ஸ்ரீ. சுந்தர் குமார் அவர்களின் ஸ்ரீ மத் பாகவதம் உபன்யாசம், என் அருமை சகோதரராக பாவிக்கும். நங்கநல்லூர் ஸ்வாமிநாதன் அவர்களின் வீட்டில் நடந்தது. அதில் மீனாக்ஷி யைப் பற்றி அவர் குடுத்த சில விஷயங்களை தான் கீழே பகிர்ந்து கொள்கிறேன். அது ஆதி சங்கரரின் சௌ. லஹரி யாக அமைந்தது நாம் செய்த பாக்யம்.

லலிதா சகஸ்ரநாமத்தில் மீனாக்ஷி பெயர் வரவில்லை என்பது அதை ஊன்று படித்து, கவனித்து இருப்பவர்களுக்குப் புரியும். ஆனால் மறை முகமாக, அபர்ணா சண்டிகா” என்ற ஸ்லோகத்திலும், வக்த்ர லக்ஷ்மி பரீ வாஹ சலன் மீனாப லோசனா” என்ற வரிகளிலும் காண்பித்து இருக்கிறார்.

சௌ.ல – யில் மீனாக்ஷி யின் பெயர் வரவில்லை என்பதும் அதை படித்தவர்களுக்கு தெரியும்.  ஊன்று படிதவர்களுக்கு 56 வது ஸ்லோகத்தில் மீனாக்ஷியின் கண்களை வர்ணிப்பதன் மூலம், மதுரைத் தாயை மறை முகமாக வர்ணிக்கிறார், பகவத்பாதர். 

முதலில் தவ அபர்ணே” என்று ஆரம்பிக்கிறார். அபர்ணா என்பதன் அர்த்தம் “எவர்க்கும் கடன் படாதவள்”, பார்வதியாக தவம் செய்த போது, இலைகலைக் கூட உண்ணாமல் தவம் செய்தவள்” என்றும் பொருள். பகவத்பாதர், மிக அருமையாக ஒரு ஹாஸ்யமான உபமானத்துடன் மூலம், இந்த ஸ்லோகத்தை அருமையாக கொண்டு போகிறார்.

கொஞ்சம் விலகி ஒரு விஷயத்தைப் பேசலாம். ஒரு அழகில்லாத பொருள், அழகான பொருளுடன் சேரும்போது அதுவும் அழகாகி, மிளிரும். அதை நாம் எப்படி காட்டுகிறோம் என்பது பொருள். இரண்டு உதாரணம் இப்போது பார்ப்போம்:

குருக்ஷேத்ர போரில், கிருஷ்ண பரமாத்மா, மிகவும் லாவகமாக தேரை ஒட்டிச்சென்று, அர்ஜுனன் போர் செய்வதற்க்கு உதவியாக இருக்கிறார். அப்படி ஓடும்போது வரும் சிரமத்தால், அவர் உடல் முழுவதும் முத்து முத்தாக வேர்த்து விட்டு இருக்கிறது. முக்கியமாக, நெற்றியில் பொட்டு போட்டாக  அந்த வேர்வை முத்துக்கள் தெரிகின்றன. அந்த வேர்வையில், குதிரை குளம்பு மண்ணில் பட்டு, அந்த மண் துகள்கள், மேலே கிளம்பி, கிருஷ்ணணின் வேர்வைத் துளிகளில் ஒட்டிக் கொண்டு இருக்கிறது. அதை பார்க்கும்போது, மண்ணின் நிறத்தை ஒத்து, பகவானுக்கு முத்தங்கி சேவை, ஸ்ரீ ரங்கத்தில் செய்வார்களே, அது போல இருக்கிறது.

இதை காளிதாசன் ஒரு உவமையுடன் அருமையாக விளக்குகிறார். குளத்தில் பாசி இருக்கிறது. அது ஒரு அருவருப்பான வஸ்து. குளத்தில் இறங்கி அது நம் காலில் பட்டால் உடனே பிடிக்காமல் தள்ளி விடுவோம். அந்த பாசி குளத்தில் ஏற்படும் அலையால் தள்ளப்பட்டு, குளத்தில் நடுவே உள்ள தாமரையின் கீழே தண்டோடு ஒட்டிக் கொண்டுவிடும். அப்பாது அது பாக்கும்போது, தாமரை மலருக்குக் கீழே இலை போன்று அழகாக இருக்கும். இதுதான் அழகில்லாத..... அழகான....சேரும்போது...வரும் அழகு.

இங்கே சங்கரர். 56 வது ஸ்லோகத்தில். அம்பாளின் கண்கள், காது வரை நீண்டு, காதிடம் கோள் சொல்கிறது. (போட்டுக் குடுக்கிறது என்று இன்றைய புது மொழியில் சொல்வதுண்டு). இதை லக்ஷ்மிதரர், தன் வியாக்யானத்தில், இப்படிக் கூறுகிறார்.

அபர்ணே, பார்வதி, உன் கண்கள், காதுகளிடம் சென்று ரகஸ்யம் பேசி, தன் உள்ளத்தில் உள்ள எண்ணத்தை மறைத்து கோள் சொல்லுகின்றன.

என்ன கோள் சொல்கின்றன என்பதை அருணா மோதினீ இன்னும் விளக்குகிறது:

“தேவி, ஈடிணை அற்ற அழகியான உன்னைச்சார்ந்த எங்களுடைய அழகை இந்த மீன்கள் பரிகசிக்கின்றன. எம்மை விட இதுதான் அழகாம். எங்களுக்கு துரோகம் செய்கின்றன. எங்களுக்கு துரோகியான தாமரைகளில் எப்போதும் லக்ஷ்மி வசிப்பதால், தாமரையும் எங்களுடன் போட்டி போடுகின்றன. உன்னைச் சார்ந்தவர்களுக்கு. துரோகம் விளைவிக்கின்ற அவர்களுக்கு நீதான் தண்டனை தர வேண்டும். இனி இதை கவனியாதிருப்பது தவறு” எனக் கோள் சொல்கின்றன.

இதை மீன்கள் கவனிக்கின்றன. இப்படி கோள் சொல்லுவாளோ (கண்) என பயந்து மீன்கள் நீரின் அடியில் வளைய வருகின்றன. லக்ஷ்மியும் விடியும் வரை பொறுத்து இருக்க விரும்பாமல் தாமரை மொட்டின் மீதமர்வதை விட்டு பயந்து இரவில் எவரும் அறியாதபடி, அல்லியின் மொட்டைப் பிளந்து, அதில் இரவு முழுவதும் தங்கி, காலையில் அதனை விட்டகன்று, தாமரையிடம் பயந்தே செல்கிறாள்.

இதை “ஆனந்தக்ரியா” இன்னும் அழகாக வர்ணிக்கிறது.

அரசரின் காதுகள் அருகே நின்று, ஒருவனைப் பற்றி தவறாகக் படும்படி கோள் சொல்பவரிடம், பயந்து, நீர் மடுவில், மூழ்கி மறைந்து, வாழ்பவரின் நிலை, பெண் மீனுக்கு நேர்ந்துள்ளது.

தாத்பர்ய தீபிணி இப்படி சொல்லி முடிக்க்றது:

“தேவி, அபர்ணே, உனது காதுகளில் கோள் சொல்லுகின்ற கண்கள் கூறுகிற ரகசிய செய்தியில் பயந்த மீன்கள் கண்கள் மூடுவதில்லை. கண்கள் விரும்பிகின்ற அழகு அல்லிப் பூக்களிடமும் உள்ளது. அல்லீயும் இரவில் மலர்ந்து, பகலில் மூடிக் கொள்கிறது.

மீனாக்ஷியின் கண்கள், மீன்கள் இவற்றின் காரணமாக, மதுரையில் பொற்றாமரை குளத்தில் மீன்கள் இருப்பதில்லை என்றும் ஒரு செய்தி உண்டு.

சிருங்கேரி பெரியவா சொன்னது போல் ஆதி சங்கரர் இல்லை என்றால் இன்று நாம் படிக்கும் பல ஸ்லோகங்கள் இல்லாமல் போய் இருக்கும்.

அதுவும் கடந்த 2 வருடங்களாக, கொரொனா போட்ட போடில், நம் மனதிற்க்கு அரு மருந்தாக இருந்தது, பகவத் பாதாளின் “ஆயி கிரி நந்தினியும், கனகதாரா ஸ்தோத்ரமும், சுப்ரமண்ய புஜங்கமும், மற்றும் இது போன்ற ஸ்லோகங்கள் தான்.

 

Monday, 11 April 2022

உயிர்ப்பான காவியம் – வில்லி பாரதம்

 

உயிர்ப்பான காவியம் – வில்லி பாரதம்

புலவர் கீரன் சொற்பொழிவு, தமிழ் மீது நான் கொண்டிருந்த பற்றுக்கு ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது என்று சொன்னால் மிகையாகாது.  அவரது தமிழ் வீச்சு அலாதியானது.

 அவர் ஒரு தடவை சொல்லிய வில்லி பாரத சொற்பொழிவிலிருந்து சில பகுதிகள் கீழே. இப்போதும் அந்த கதை நம் வாழ்க்கைக்குப் பொருந்தும்.

வி.பா தில் இன்றும் நாம் வாழ்க்கைக்கு ஏற்றதான சில பாத்திரங்கள் இருக்கிறது. நாம் நம் வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று காட்டுவதற்க்காக ஓர் சில கதாபாத்திரங்கள்:

அவர் இப்படி ஆரம்பிக்கிறார். நம் வாழ்க்கையில் இரண்டு துருவங்கள் இருக்கிறது.

ஒன்று, உலகத்து சுகங்களில் நாட்டம் இல்லை என்று “பொய்” சொல்லி ஒரு வாழ்க்கை வாழாதே.

இரண்டாவது, இன்பமே வாழ்க்கை என்று இருந்து விடாதே !

கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்:

ஒன்று. உலகத்து இன்பங்களில் நாட்டம் இல்லை என்று பொய் சொல்லாதே. என் உள்ளம் எல்லாம் துறந்த உள்ளம் என்று சொல்லாதே.  உலகத்து இன்பங்கள் வேண்டாம் என்று தள்ளி விடக் கூடாது. அது எல்லா மனிதர்களுக்கும் வாய்ப்பது கிடையாது.  ஏதோ 100 வருஷங்களுக்கு ஒரு முறை புலன்களை அடக்கும் மனிதர்கள் இந்த தேசத்தில் பிறக்கிறார்கள். அவர்கள் ஞானிகள் அவதார புருஷர்கள்.  அதனால் தான் திருமூலர் சொல்கிறார்

அஞ்சும் அஞ்சும் அடக்கு என்பர் அறிவிலார்

அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை

அஞ்சும் அடக்கும் அசேதனமாம் என்றிட்டு

அஞ்சும் அடக்கா அறிவு அறிந்தேனே

என்கிறார்

அதாவது ஐம்புலங்களையும் அடக்கு என்று அறிவில்லாதவர்கள் சொல்லுவார்கள். அப்படி அடக்கியவர்கள் யாருமில்லை.  ஐம்புலங்களையும் அனுபவித்து மெதுவாக சிவ சிந்தனையில் திருப்பி ஞானம் பெற வேண்டும்” என்று முடிக்கிறார்.

அதனால், அந்த அந்த வயதில் உள்ள இன்பங்களை அனுபவித்து இறை உணர்வோடு வாழ்க்கை வாழ வேண்டும் என்பது தான் உண்மையான வாழ்க்கை.

திருவள்ளுவர் ஒரு அருமையான குறள் ஒன்று சொன்னார்.  தெய்வத்திடம் நீ என்ன வேண்டுவாய்  ? நாம் நாம் சிக்கல்கள், கவலைகள் எல்லாம் தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்வோம். இது போல பல பிரார்தனைகள்.

ஆனால் நாம் நாம் கடமைகளை ஒரு அளவு முடித்துவிட்டு எஞ்சி இருக்கிற வாழ்க்கையை இறைவனுக்காக ஒதுக்க வேண்டும். எஞ்சி இருக்கும் வாழ்க்கையில் கோவிலுக்குச் சென்று, பிறவாமை வேண்டும் என்று கேட்க வேண்டும்.

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை – மற்றவை

வேண்டாமை வேண்டா வரும்

வேண்டிக்கொண்டால் மட்டும் போறாது. அதை உறுதி படுத்தி கொள்ள ஒரு வாழ்க்கை வாழ வேண்டும்.

அதை விட்டு விட்டு, குடும்ப பந்தத்திலேயே உழன்று, பேரன், பேரனுக்கு பிள்ளை, அவர்களை வளர்ப்பது என்று ஸம்ஸாரக் கடலிலே உழன்று கொண்டு இருந்தால் எப்போது இறை வழிபாடை முழுமையாக செய்வது ? அர்ப்பணம் என்று ஒரு இருக்கிறதல்லவா ?  பரமபரை பரம்பரையாகவே பாசத்தில் ஈடுபடக்கூடாது.

அப்படி வாழாவிட்டால் என்ன ஆகும் என்பது தான் இந்தப் பகுதி:  முதல் துருவத்தில் வாழ்ந்த ஒரு ராஜா வின் வாழ்க்கை என்ன ஆனது என்பது கீழே: 

நகுஷன்:

நகுஷன் என்ற ஒரு ராஜா இருந்தான். மிகப் பெரிய அரசனாக இருந்து, எல்லா போகங்களையும் அனுபவிக்கக் கூடிய நிலையில் இருந்த போதிலும், எதிலும் நாட்டம் இல்லாமல் இருந்தான். அமைச்சர்கள் எவ்வளவோ எடுத்துக் கூறியும், கேட்பதாக இல்லை. ராஜாங்கத்தை கவனிக்காமல், போகங்களை அனுபவிக்காமல் வாழ்ந்து கொண்டு இருந்தான்.  

“எனக்கு பிறவியே இருக்கக் கூடாது” என்றான். அதனால் எந்தப் பொருளின் மேல் நாட்டம் இல்லை என்று முடிவு செய்து, ஒரு சாமியார் வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருந்தான்.

வேறு வழியில்லாமல், நகுஷனிடம், அமைச்சர்கள் சொன்னார்கள். “நீங்கள் நிறைய புண்ணிய காரியங்கள் செய்து இருக்கிறீர்கள். அதற்க்கு உண்டான இந்திரப் பதவியை பெற்ற பிறகு, நீங்கள் மறு பிறவி இல்லாத உலகத்திற்க்குச் செல்லலாம்” என்றார்கள்.

நகுஷன் “அந்த இந்திரப் பதவி பெற்ற பிறகுதான் எனக்கு மறு பிறவி இல்லாமல் போகும் என்றால், அந்தப் பிறவி பெறுவதற்க்கு என்ன செய்ய வேண்டும். ?” என்று கேட்டான்.

அமைச்சர்கள். “100 அசுவ மேத யாகம் செய்ய வேண்டும்” என்று சொன்னார்கள். உடனே செய்வதற்க்கு உத்தரவு பிறப்பித்தான்.

நகுஷன் அசுவமேத யாகம் செய்து முடித்தான். அவனை இந்திர லோகத்திற்க்கு அழைத்துப் போவதற்க்கு பல்லக்கு வந்து நிற்கிறது. பல்லக்கில் அழைத்துப் போவதற்க்கு சப்த ரிஷிகள் (7 ரிஷிகள்) வந்து நிற்கிறார்கள். அவன் கையில் ஒரு பிரம்பை எடுத்துக் கொண்டுன் பல்லக்கில் மெதுவாக ஏறி உட்கார்ந்து கொண்டு இந்திர லோகம் நோக்கிப் போகிறான். பல்லக்கை தூக்கிக் கொண்டு போகும் ரிஷிகளின் மேல் மிகுந்த மரியாதை கொண்டு, அவர்களை மெதுவாகப் போகச் சொல்கிறான்.

முனிவர்கள் சொன்னார்கள் “100 அசுவமேத யாகங்கள் செய்த உன்னை சுமந்து செல்வது, எங்களுக்குப் பெருமை. அதனால் அந்தப் புண்ணியத்தை எங்களுக்குக் கொடுங்கள்” என்றார்கள்.

இருந்தாலும், மரியாதை காரணமாக மெதுவா, மெதுவா செல்லுங்கள்” என்று சொல்லிக் கொண்டே வந்தான் நகுஷன். அவனைத் தூக்கிக் கொண்டு வந்த முனிவர்களுடன் மிகுந்த மரியாதையுடன் தூக்கிக் கொண்டு வந்தனர்.

இந்திர உலகத்தில் வாயிலுக்குச் சென்ற நகுஷன் அங்கே பிரமாண்டமான இந்திர உலகத்தை நிமிர்ந்து பார்த்தான்.  அங்கே உப்பரிகையில், இந்திராணி தான் தலை முடியைக் கோதிக்கொண்டு இருப்பதைப் பார்த்தான். அதுவரை, மெய், வாய், கண் என்ற ஐம்புலங்களின் மேல் நாட்டமில்லை என்று கூறிக் கொண்டிருந்தவன், இந்திராணியைப் பார்த்த மாத்திரத்தில், அவள் மேல் சொல்ல முடியாத ஆசை கொண்டான். இதுதான் “twist”

இதுவரை அவன் கொண்ட “சாமியார்” கொள்கை காற்றில் பறந்தது. அவளை உடனே அடைய ஆசை கொண்டான். இதுவரை, வேகமாக சென்று கொண்டிருந்தது என்று நினைத்துக்கொண்டு, மெதுவா மெதுவா என்று சொல்லிக் கொண்டிருந்த நகுஷன், இப்போது இந்த பல்லக்கு, இப்போது மெதுவாக செல்கிறது என்று நினைத்து, வேகமாக செல்ல வேண்டும் என்று (அவளை அடைய) என்று முடிவு செய்து, பல்லக்கை விரைவாக செல்லச் சொன்னான்.

உடனே பல்லக்கை சுமந்து சென்ற முனிவர்களிடம் “வேகமாக செல்லுங்கள்” என்று சொன்னான். தான் கொண்டு வந்திருந்த “தடியால்” அவர்களை தட்டி “வேகமா” என்று சொன்னான்

இப்போதுதான் பிரச்னை ஆரம்பிக்கிறது

வேகமா என்பதற்க்கு சம்ஸ்கிரிதத்தில் “ஸற்ப” என்று சொல்லுவோம்.

 

பல்லக்கை சுமந்து சென்றவர்களில் ஒருவர் மகாமுனி அகத்தியர். அவர் கொஞ்சம் குட்டை. அதனால் அவர் பல்லக்கை சமமாகத் தூக்க முடியாததால், கொஞ்சம் முட்டுக் கொடுத்து, சிரமமாக தூக்கிக் கொண்டு சென்றார். நகுஷன் அவரால் தான் பல்லக்கு மெதுவாகச் செல்கிறது என்று நினைத்து, தடியால் அவரை தட்டி “சர்ப, சர்ப என்றான்.

 

அகத்தியர்க்கு கோபம் வந்து விட்டது. என்னை “சர்ப” என்று சொல்லி அடித்ததால், நீ சர்ப்பமாக (பாம்பாக போகக் கடவது” என்று சாபம் இட்டார். இந்திரா உலகம் வரைக்கும் போன நகுஷன், பாம்பாகிப் போனான்.

 

இந்தக் கதையில் இருந்து தெரிவது என்ன என்றால்,

முதல் பகுதியில் சொன்ன விஷயங்களை தவிர, எல்லாவற்றிர்க்கும் மனது தான் காரணம். உலகம் என்றும் சரியாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது. எப்படி பல்லக்கு வேகமாகப் போவதோ, மெதுவாகப் போவதோ நகுஷன்  மனதில் இருந்ததோ, அப்படித்தான் இருக்கிறது,

கணியன் பூங்குன்றானார் அன்றே சொன்னார் – “நன்றும் தீதும் பிறர் தர வாரா” அதான் மனம் போல மாங்கல்யம் என்பார்கள்.

அடுத்த துருவம் பின்பு பார்ப்போம்: