Friday, 2 February 2018

தரங்கிணி மகோற்சவம் – 2018- (TM 2018)

இந்தக் கட்டுரையை எழுவதற்கு, என்னை வழி நடத்தும், எங்கள் வரகூர் இரட்டைப் பிள்ளையார், அருள் புரிய வேண்டுகிறேன்.

தரங்கிணி கீதங்கள், வரஹூர் பெருமாள் முன்பு பாடும் 2 நாள் உத்சவம், சென்ற மாதம் 26, 27 (ஜனவரி) தேதிகளில் இனிதே நடந்தது.

நான் இந்தக் கட்டுரையை ஆரம்பிக்கும் முன்பு,  சாந்து மாமா என்ற சந்திரசேகரன் மாமா அவர்களுக்கும், ஸ்ரீ. ஜகன்னாதன் (ஜக்கு) மாமா அவர்களுக்கும், அனந்த கோடி நமஸ்காரங்களுடன் ஆரம்பிக்கிறேன். “மாற்றம் ஒன்றுதான் மாறாதது” என்ற வசனத்திற்கு ஏற்ப, அவர்கள் இந்த வருட தரங்கினி மகோத்சவத்தில் கொண்டு வந்த மாற்றங்கள் அசாத்தியமானது. 

இதில் என்ன ஆச்சர்யம் என்றால், சாந்து மாமா வின் பெயரும், மகா பெரியவாளின் பெயரும் ஒன்றாக இருப்பது, பெரியவாளே ஆசி கூறி அணுக்ரகஹம் செய்வது போல்...

தரங்கிணி என்ற ஒரு விதை, 8 வருடங்கள் முன்பு, என்னுடைய, தகப்பனார், ஸ்ரீ. குஞ்சிதபாதம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, பிரம்மாண்டமாக ஒரு பெரிய ஆல மரமாக வளர்ந்து, நாராயண தீர்த்தர், அவர்களை தட்சிணா மூர்த்தியாக அமர வைத்து, தரங்கப் பாடல்களை அவர் “வர்ஷித்த”  வெங்கடேச பெருமாளின் முன்பு பாடுவதற்கு/கேட்பதற்கு, வரகூர் வாசிகளான நாங்கள் என்ன பாக்கியம் செய்திருக்க வேண்டும் ?

தரங்கிணி என்ற ஒரு பெரிய தேரை,  வரகூர் ஆஸ்திகர்கள் ஆன, ஷங்கர், ரவி, சூரி, விஜயகுமார், ஆனந்த், ராது, சாமு இவர்கள் கூடி தேரை இழுக்க, (சில பெயர்கள் விட்டுப் போயிருந்தால் மன்னிக்கவும்)  சாந்து மாமா,  தந்தையார் குஞ்சிதபாதம் மற்றும் நலம் விரும்பிகள், ராஜ பாட்டை அமைத்துக் கொடுக்க, ஸ்தல பாகவதர்கள் தரங்கிணி பாடி ஆரம்பித்து வைக்க, ராமஜி மாமா, மோகன் மாமா, சேதுராமன் மாமா, இவர்கள் பெரிய உந்து சக்தியாக இருக்க, ஜாம் ஜாம் என்று, தன் அதிஷ்டானம் இருக்கும், சிவன் கோவிலில் இருந்து புறப்பட்ட நாராயண தீர்த்தர் ஊர்வலம் பார்க்க, கண் கோடி வேண்டும்.

மிகவும் உணர்ச்சி பூர்வமான தருணம் அது.  ஒவ்வொரு வரகூர் வாசியும், பெருமாளின் கருணையை நினைத்து, நினைத்து, பெருமாளின் காலடியில் கண்ணீரைக் காணிக்கையாக்கும் தருணம் அது. 

தரங்கினியப் பற்றி தெரியாதவர்களுக்கு, ஒரு சின்ன “Intro”
ஒவ்வொரு வருடமும் கிருஷ்ணா லீலா தரங்கிணி என்று சொல்லக்கூடிய, தரங்கிணி பாடல்கள் பாடும் உற்சவம் இந்த வருடமும் 26,27 – ஜனவரி மாதத்தில், வரஹாபுரியில் நடந்தது.

ஒவ்வொரு வருடமும், தரங்கிணி உற்சவத்தின் மெருகு கூடிக் கொண்டே போவது என்பது சத்தியம்.  இந்த வருடம் 2 முக்கியமான “ஆச்சர்யங்கள்”  அரங்கேற்றப் பட்டன.  ஒன்று சத்குரு நாராயண தீர்த்தர்  அவர்களின் புறப்பாடு  மற்றொன்று,  இரண்டாவது நாள் சாயந்திரம் சுவாமி புறப்பாடு.  இதில் என்ன விசேஷம் என்று கேட்டால்:

-       சென்ற வருடம் வரை, சாதாரணமாக நாராயண தீர்த்தர் படததை ஒருவர் கையில் எடுத்துக் கொண்டு,  பெருமாள் கோவிலில் இருந்து புறப்பட்டு சிவன் கோவில் வந்து, பிறகு வீதி உலா வந்து, பெருமாள் கோவிலுக்கு வருவார்கள்.

-       இந்த வருடம்  நாராயண தீர்த்தர் படம் மிகவும் அழகாக அலங்காரம் செய்யப் பட்டு, சிவன் கோவிலில் இருந்து புறப்பட்டு,  வாரை கட்டி,  ஸ்ரீ பாதம் தாங்கிகள் தூக்கி வர தரங்கிணி பாடல்கள் பாட  பெருமாள் கோவிலில் வந்து அடைந்தது. அதாவது நாராயண தீர்த்தர்,  தேரில் பவனி....

-       இரண்டாவது,  சுவாமி புறப்பாடு.  சாதாரமாக  சு.புறப்பாடு என்பது இந்த மகோட்சவத்தில் கிடையாது.  2 வது நாள் முடிவில் சுவாமி அலங்காரம் கலைத்து, அர்த்த ஜாமம் செய்வது வழக்கம்.   உரியடி போதும், மற்றும், தன் சகோதரியான, ஆனந்த வல்லிக்கு சீர் கொடுக்கும்போது, மற்ற 1-2  தடவை தான் சுவாமி வெளியில் வருவது வழக்கம்.  

-       சுக வாசியான/அலங்கார பிரியரான எங்கள் பெருமாள், அலங்காரம் பண்ணிக்கொண்டோமா, தரங்கப் பாடலையும், அஷ்டபதியும் கேட்டோமா,  கோவிலுக்குள்ளேயே 7 பிரதட்சிணம் வந்தோமா,  கோணங்கியைப் பார்த்தோமா,  ஆஹிரி ராகப் பாட்டான, சாக்ஷாத் மதன  கோடியைக் கேட்டோமா என்று இருப்பார். 

-     இந்த முறை,  சுவாமி புறப்பாடு இருந்தது, அதுவும் சுவாமி வெளியில் வந்து, வீதி ஊர்வலம் உண்டு, என்று அறிந்தவுடன், முதலில் சில, பல  வரகூருக்கே  உண்டான, குழப்பங்கள் இருந்தால் கூட,  அறங்காவலர்களின்  உறுதியும்,  பெருமாளும் தரங்கினியின் பாடல்களைக் கேட்டு,  மிகவும் மகிழ்ச்சி  அடைந்து வெளியில் வர ஒப்புக் கொண்டார் என்பது தான் உண்மை. 

-   இதற்க்கு மேலும் மெருகு ஏற்றும் வகையில், நாதஸ்வரம்/மேளம் ஏற்பாடு செய்திருந்தார் பாருங்கள்.  அதுதான்  Top class.  Beyond any words.   சாதாரணமாக, நாதஸ்வர வித்வான்கள், சுவாமிக்கு முன்னே வாசித்துக்கொண்டு செல்வது வழக்கம். அனால் இந்த முறை, 3 இடங்களில், - முதலில், சிவன் கோவிலில் வாசலில் சுவாமியை நிறுத்தி,  தெற்கு மூலையில் கடைசியில், ஆனந்த் அவர்களின் வாசலில் இரண்டாவதாக மற்றும், சுவாமி கோபுரத்தின் அருகில் – ஜமக்காளம் போட்டு, நாதஸ்வர வித்வான்களை  அமர வைத்து, -ஆர அமர- ஒரு முழுப் பாட்டு வாசிக்க, ஆஹா, கேட்க காது கோடி வேண்டும். 
-        
-     சாமஜ வர கமணா- என்ற ஹிந்தோளம் ராக,  தியாகராஜ கிருதியை,  எந்தரோ மகானுபாவலு என்ற ஸ்ரீ ராக, பஞ்ச ரத்ன பாடலையும், கடைசியில், கோவிலருகில் வாசித்த காபி ராகமும்,  இதற்குப் பிறகும், இந்த ஜன்மம் எதற்கு எனறு என்னை நினைக்க வைத்தது உண்மை !!

நாங்கள் 26, 27 ஜனவரி, வருடா வருடம், கொண்டாடிக் கொண்டு வருகிறோம்.  தேதி மாறாது. நாள், நக்ஷத்ரம் எல்லாம் பார்ப்பது கிடையாது.  8 வது வருடமான, இந்த வருடம் நடந்த இந்த நிகழ்ச்சியில் நடந்த முக்கியமான விஷயங்களை/அதிசயங்களைப் பார்ப்போம்.
முதல் நாள்

26 january 2018 அன்று தை கிருத்திகை,

இன்று முக்கியமான இரண்டு நிகழ்வுகள் நடந்த நாள். 

தபோவனத்தில் இருந்து கொண்டு, இன்றும் பக்தர்களுக்கு அருள் மழை பொழிந்து கொண்டிருக்கும் சத்குரு ஜ்னானநந்தர் அவர்கள் பிறந்த தினம், மற்றொன்று,
 
முருகனுக்கு தை கிருத்திகை மிகவும் உயர்ந்த தினம்.

இதற்கு மேல், தை வெள்ளிக்கிழமை, அம்பாளை உபாசிக்க மிகச் சிறந்த நாள்
முருகனுக்கு, அபிஷேக ஆராதனைகளை சொல்வதா, அம்பாளின் சந்தன காப்பு அலங்காரத்தை சொல்வதா,  நாராயண தீர்த்தர் அதிஷ்டானத்தில், தட்சிணாமூர்த்தியாக அமர்திருக்கும்,  மகா கைலாசநாத சுவாமிக்கு, நடந்த சிறப்பு அபிஷேகத்தை சொல்வதா.....எதைச் சொல்ல, எதை விட.

இன்று வந்து பாடிய பாகவதர்களைப் பார்க்கலாம்:

நினைத்தாலே முக்தி என்று அழைக்காபடும், ரமண மகரிஷி,  சேஷாத்ரி ஸ்வாமிகள், வள்ளி மலை ஸ்வாமிகள், குமார குருபரர்,  எல்லாவற்றிற்கும் மேலாக,  தமிழ் வேதம் என்று “மகா பெரியவா” அவர்களால் சொல்லப்பட்ட,  திருப்புகழ் எழுதிய அருணகிரி நாதர் வாழ்ந்த.  திருவண்ணாமலையில் இருந்து வந்த, ஆர்மோனியம் வாசித்த பெரியவர்.

இன்றைக்கெல்லாம், பஜனை சம்ப்ரதாயம் என்றால்.  மருதாநல்லூர் சத்குரு சுவாமிகள் தான். அவர்கள் போட்ட வழியில்தான் இன்றும் பாடிக்கொண்டிருக்கிறோம்.  மருதாநல்லூரில் இருந்து வந்த,  இப்போது பீடத்தை அலங்கரிக்கும், ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமிகள் வந்திருந்தார்.

இன்றும் தக்ஷிண பண்டரிபுரம் என்று அழைக்கப்படும், கோவிந்தபுரம், ஸ்ரீ விட்டல் தாஸ் மகாராஜ் அவர்கள் வந்திருந்தார்.

சிவ -வைஷ்ணவ பேதமில்லாமல் இருக்கும் எங்கள் வரகூரில், திருமண் இட்டுக்கொண்டு, பெருமாளாக, வந்த வயலின் வித்வான்

எனக்குத் தெரிந்தது இவ்வளவுதான்.  முதல் நாள் முழுவதும்,  குரு  மூலமாக, தரங்கங்களை பாடிக் கேட்ட ஆசைப்பட்ட எங்கள் பெருமாள், 2 ம் நாள் நடத்திய லீலையைப் பார்ப்போம்


இரண்டாம் நாள்
27-1-2018- இன்று

·         ஏகாதசி
·         ரோகிணி நக்ஷத்ரம்
·         செதலபதி சௌந்தரராஜ பாகவதர் அவர்களின் அற்புதமான தரங்கிணி பாடல்கள்

தரங்கிணி  கீதங்கள் பாடி முடித்தவுடன் சுவாமி புறப்பாடு
ஸ்தல பாகவதர் சொன்னாற்போல், இது “மினி உரியடி”.  8 மணிக்கு ஆரம்பித்த சுவாமி புறப்பாடு,  முடியும் போது மணி  11.45 PM.

கோணங்கியின் போது, ராது அவர்கள் சொன்ன விஷயம் தான் “நெத்தி அடி”.  அவர் சொன்னார், இது 8 வது ஆண்டு.  கிருஷ்ணன், தேவகிக்கும், வசுதேவருக்கும்-  8 வது குழந்தையாக ஜனனம் எடுத்தார்.  அதே போல், 8 வது ஆண்டில்,  பெருமாள்,  வீதியுலா வந்து,  பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

சாப்பாட்டுக்கு வருவோம்

புறப்பாட்டின் முடிவில் பிரசாதமாக வழங்கிய “அசோகா”

பிச்சுமணி அவர்களின்,  பூரி, உருளைக் கிழங்கு,  பால் பாயசம், கசப்பு நார்த்தங்காய் ஊறுகாய், கிராம்பு ரசம்.  மேலும் மேலும்......

செவிக்கு  தரங்கத்தின் மூலமாகக, அறு சுவை உணவு, வாய்க்கு-  Hats off to Sri  பிச்சுமணி & Team.

கிராமத்தில், ஒரு சிறிய விழா ஏற்பாடு செய்வது எவ்வளவு கஷ்டம் என்று எல்லோருக்கும் தெரியும்.  அந்த கிராமத்தில், 2 நாள், மிகவும் அற்புதமாக, ஒரு  விக்னம் இல்லாமல் நடந்த தரங்கிணி உத்சவம், வரகூர் வாசிகளின் ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பின் மூலமாக கிடைத்த பிரசாதம்.

எங்களையும், எங்கள் கிராமத்தையும், ஒரு பிரம்பு வைத்துக்கொண்டு காத்தருளும், எங்கள் பெரம்பனார்  அய்யனாருக்கு கோடி கோடி நமஸ்காரங்கள்.

முடிவுரை:
திரும்பி சென்னைக்கு வந்து கொண்டிருந்தபோது,  எங்குமே பார்க்க முடியாத, அளப்பரிய கருணை, வரகூர்  பெருமாளிடம் எப்படி இருக்கிறது ?  என்ன காரணம்.  கோவிலுக்கு வந்த ஒவ்வொருவருக்கும், கருணை மழையை வாரி வழங்கும்,  எங்கள் பெருமாள்.. எப்படி என்று introspect செய்தேன். 

வரகூர் மண், மிகச் சிறந்த பாகவதோத்தமர்கள் பிறந்து, வளர்ந்து, மிகப் பெரிய பதவியை அடைந்து,  காஞ்சி மஹா பெரியவர்களின் கையால் சன்மானம், ஏன்,  ஜனாதிபதி கையால் பரிசு பெற்று கௌரவிக்கப்பட்டிருக்கிறார்கள்.  சில பெயர்களைக் கீழே கொடுத்து இருக்கிறேன்

கோபால பாகவதர்
அய்யாசாமி பாகவதர்
நாராயண பாகவதர்
முத்துசாமி பாகவதர்
அச்யுத கிருஷ்ணா சரஸ்வதி
ஸ்ரீ ராமகிருஷ்ண சாஸ்த்ரிகள்
பாஷ்ய பாவஞ்ச வெங்கட்ராம சாஸ்த்ரிகள்
எஸ். வீ குருசுவாமி சாஸ்த்ரிகள்

இவர்கள், எத்தனை உரியடி நடத்தி இருப்பார்கள், எத்தனை தடவை, வெண்னைத் தாழி கிருஷ்ணனை தரிசித்து மெய் சிலிர்த்து இருப்பார்கள்.  எத்தனை தடவை, ஆனந்தவல்லிக்கும், மஹா கைலாசனாதருக்கும், அபிஷேகம் செய்திருப்பார்கள்.  எத்தனை கும்பாபிஷேகம் நடத்தி இருப்பார்கள் !?

இவ்வளவு செய்து சாந்நித்யம் பெற்ற, பெருமாள்,  ஒரு  4  தரங்கம் கூட புத்தகத்தைப் பார்த்து, பாடத் தெரியாத எனக்கும் அருள் செய்கிறார் என்பது தான், அளப்பரிய கருணை.
உரியடியோ, கோவிந்தோ !!!!!

என்னை பெருமாள் சந்நிதிக்கு வழி காட்டிய என் பெற்றோர்களுக்கு நமச்காரங்களுடன்........

தரங்கிணி நடந்து முடிந்து, 2 நாட்கள் கழித்து,

சிவன் கோவிலில் அருகே உள்ள குளம் நிரம்பி இருக்கிறது என்ற செய்தி கேள்விப்பட்டவுடன்,  நான் நினைத்தேன்- “பெருமாளே மிகவும் மகிழ்ந்து, நேற்று, குளத்தில்  தண்ணீரை நிரப்பி, பூமா தேவியின் மூலமாக, தனது நன்றியை சொல்லி இருப்பாரோ என்று/”

Tuesday, 19 December 2017

அபார கருணா சிந்தும் - இன்றும்

போன அனுஷ தினத்தில், எனக்கு நடந்த, அதற்கு முன்பு பெரியவா ஜெயந்தியில் என் குடும்பத்தில் ஒருவருக்கு நடந்த அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

நான், பெரியவாளின் கோடானு கோடி பக்தர்களின் ஒருவன். அனால் பெரியவாளுக்காக நடத்தப்படும் அனுஷ பூஜையில் கலந்து கொண்டு, தொண்டு செய்பவர்களில் ஒருவரோ,  அல்லது ஸ்ரீ பாதம் தாங்கிகளில் ஒருவரோ கிடையாது. அவரை அனவரதமும் நினைத்துக் கொண்டிருப்பவனும் கிடையாது. வாட்சப்பில், பெரியவாளைப் பற்றி வரும் பல குரூப்பில் நான் இருக்கிறேன். அதனால், அவரைப் பற்றி அடிக்கடி படிப்பதுண்டு. அவ்வளவுதான்.

பெரியவாளின் அத்யந்த பக்தரான, ஸ்ரீ கணேஷ் சர்மா அவர்கள் அனுஷ பூஜை மாதா மாதம் நடத்துகிறார். மயிலாப்பூர் வாசியான எனக்கு, இதில் எப்போதாவது கலந்து கொள்ளும் பாக்கியம் கிடைக்கும். அதாவது கடைசி 15 நிமிடம் போய், தீபாராதனை பார்த்து இருக்கிறேன் சில சமயம் பெரியவாளின் படம், மயிலாப்பூர் மாட வீதியில் (உலாவாக) வந்து காட்சி கொடுக்கும்போது, அவரை நமஸ்கரித்துச் சென்று இருக்கிறேன். அவர்களுடன் கூட போய் இருக்கிறேன். அவ்வளவது தான்.

குருவின் அணுக்ரஹம் என்பது கிடைத்தற்கரியது.  குருவைப் பற்றிச் சொல்லும்போது. இரண்டு விஷயங்கள் நினைவுக்கு வருகிறது.

கோபால சத்குருவைப் பற்றி சொல்லும் ஒரு ஸ்லோகத்தில், “எவருடைய பாத தூளியை அரை க்ஷணம் தரித்த மாத்திரத்தில், ஒருவரின் கலி தோஷங்கள் விலகி, பரிசுத்தமாகிரானோ, எவருடைய உள்ளம் ஸ்ரீ கிருஷ்ணனின் பாத கமலத்தில் மூழ்கி இருக்கிறதோ அந்த கோபால சத்குருவை, தினமும் வணங்குகிறேன்.  இதனுடைய ஸ்லோகம் வருமாறு:

யத் பாத பங்கஜ ரஜ சிரஸா க்ஷணார்த்தம், நருத்வா நர; கலிமலாத் ஸுபவித்ரா காத்ர:
தம் ருக்மீநீச சரனாப்த நிமக்ன சித்தம், கோபால சத்குருவரம் ப்ரணதோஸ்மி நித்யம்

க்ஷனார்தம்- அரை நொடி

இரண்டாவது, அருணகிரினாதரைப் பற்றிச் சொல்லும்போது, ஆரம்பத்தில் இருந்த நிலை, (திருப்புகழில் அவர் சொல்கிறார்)

சரண கமலாலயத்தில் அரை நிமிட நேரம் மட்டும் தவ முறை அறிய மூட, மட்டி”
ஒரு அரை நிமிட நேரம் கூட உன் பாத்தில் என் சிந்தனையை வைக்க முடியவில்லையே என்று ஏங்கிய அருணகிரிநாதர், அனுபூதி பெற்றவுடன்,

“எல்லாம் அற என்னை மறந்தேன்” என்று பாடுகிறார்.

எனக்கு இந்த சிந்தனை உண்டு. நான் செய்யும் நித்ய பூஜையில்- “அபார கருணா சிந்தும்,.....முதான்வஹம்” என்ற அவரது குரு காயத்ரி சொல்வது வழக்கம்.

சரி இப்போது விஷயத்திற்கு வருவோம்.

என் மனைவிக்கு போன வாரம் மிகவும் ஜுரமாக இருந்தது, சளித் தொல்லை வேறு. போன 13 ம் தேதி, உடல் நலம் மெதுவாக குன்ற ஆரம்பித்தவுடன், என் மனைவி, நாட்டு வைத்யம், என்று-- டப்பா செட்டி கடை பொடி, வெந்நீரில் ஆவி பிடிப்பது (வேப்பலை போட்டு), என் அம்மா சொன்ன வைத்தியம், என் மாமியார் சொன்ன வைத்தியம், என்று பல தரப்பட்ட மருந்து கலவைகளை, ஏதோ ஒரு டி. வீயில், healer Baskar  என்ற ஒருவர் சொன்னது என்று பல தரப்பட்ட விஷயங்களைப் பயன்படுத்தி வந்தாள், ஜுரம் குறைந்தாலும் சளி குறையவே இல்லை. நான் எவ்வளவு சொல்லியும், சளிக்காக, டாக்டரிடம் வர மாட்டேன் என்று உறுதியாக இருந்தாள். சனிக்கிழமை அனுஷம். வெள்ளிக்கிழமை இரவு மிகவும் ஜாஸ்தியாகப் போய் விட்டது. சனிக்கிழமை காலை 
எழுந்தவுடன் முகம் ஒரு சுற்று வீங்கி இருந்தது.

மேலும் போன திங்கள் கிழமை, அமாவாசை சோம வார பிரதட்சிணம் வேறு. அது மேற்கு மாம்பலத்தில் இருக்கும், கல்யாணம் ஆன மரத்தில் 108 தடவை பிரதட்சிணம் செய்ய வேண்டிய கட்டாயம். இந்த வ்ரதத்தை முன்பே ஆரம்பித்ததால், விடவும் முடியாது, என்னடா இது இப்படி ஒரு சோதனை என்று ஒரு கலக்கம்= இது அப்படியே இருக்கட்டும்.

என்னுடைய மகள், கர்நாடக சங்கீதம், ஸ்ரீமதி, பத்மா நாராயணசுவாமி அவர்களிடம் கற்றுக் கொண்டு இருக்கிறாள். இதை நான் முன்பே ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறேன். ஓரிக்கை, வித்வத் சமாஜம், மகாலிங்கபுரம் ஐயப்பன் கோவில், அகமதாபாத்தில், விமானத்தில் சென்று, சங்கர ஜெயந்தி உற்சவம் கூட பாடி இருக்கிறாள். அவளுக்கு, கற்பகாம்பாள் சன்னதியில், போன சனிக்கிழமை பாட ஒரு வாய்ப்பு வந்தது. சன்னதியில் சங்கீதம் என்று Giri trading banner ல். எனக்கு இதில் மிகவும் மகிழ்ச்சி, முதலில், எனக்கு மிகவும் பிடித்த கபாலி கோவில், பெரியவா அனுஷ நக்ஷத்ரம், மேலும், மார்கழி முதல் நாள். திருப்பாவை மிகவும் பிரபலப்படுத்தி, ராகம் போட்டு, எல்லா கச்சேரியில் பாடிய சங்கீத கல்லாநிதி திரு. கே.வீ நாராயணசுவாமி அவர்களின் பாடாந்திரமானதால், திருப்பாவை almost எல்லா பாட்டும் பாடுவாள் என்ற வகையில், மார்கழி முதல் நாள், திருப்பாவை பாடும் பாக்கியம்- இது இப்படியே இருக்கட்டும்
இப்போது பெரியவாளின் லீலையைப் பாப்போம்:

எனக்கு, ஒரு ஆசை வந்தது. முதலில் கற்பகாம்பாள் கோவிலில் பாடப்போகும் என் பெண், அனுஷ நக்ஷத்திரமாக இருப்பதால், ஸ்ரீ கணேஷ் சர்மா வீட்டிற்க்குச் சென்று, குரு சந்நிதானத்தில் திருப்பாவை பாடச் சொல்ல வேண்டும் என்று தோன்றியது. மார்கழி முதல் தேதி, என்பதும், காலையில், அவர் வீட்டில் என்ன ப்ரோக்ராம் என்று தெரியாததாலும், தனுர் மாச பூஜை போன்ற இத்யாதிகள் இருப்பதாலும், அனுமதி கிடைக்குமா என்று அறிந்து கொள்ள, ஒரு வாரம் முன்பு, ஸ்ரீ கணேஷ் சர்மா வீட்டிற்குச் சென்று, எல்லா விபரங்களையும் சொன்னேன். அவர் சனிக்கிழமை காலை 6 மணிக்கு வந்து விடுங்கள், பாடட்டும், என்று சொன்னார்.

நானும் தனுர் மாச பூஜை செய்வதால், 4 மணிக்கு எழுந்து, பூஜை முடித்துவிட்டு, பெண்ணையும் எழுப்பி, குளித்து, தாவணி இத்யாதிகளுடன், கிளப்பிக் கொண்டு ஸ்ரீ. கணேஷ் சர்மா அவர்களின் வீட்டுக்கு வரும்போது, மணி 6.10 am.

வீட்டை விட்டு கிளம்புவதற்க்கு முன்பு, மனைவியிடம், கொஞ்சம் படுத்துக் கொள், நான் பெரியவா பூஜைக்கு சென்று, திரும்பி வந்து உன்னை HOSPITAL  அழைத்துச் செல்கிறேன். – என்று சொன்னேன். எனக்கு வேறு வழி தெரியவில்லை, பாடுவதற்கு முன்பே சொல்லி வைத்ததால், அங்கு போக வேண்டிய சூழ்நிலை. அரை மனதோடு கிளம்பினேன். என் மனைவி- நான் “காமாக்ஷி, பெரியவா” என்று திருப்பி திருப்பி சொல்லிக் கொண்டிருக்கிறேன், சீக்கிரம் வந்து விடுங்கள்” என்று சொன்னாள்”.  அவளுக்கும் கூட வர வேண்டும் என்று ஆசை.

ஸ்ரீ கணேஷ் சர்மா வீட்டில் -பெரியவா பாதத்தை எடுத்துக்கொண்டு, ஸ்ரீ கணேஷ் சர்மா அவர்கள் வந்து, பாதுகையை வைத்து, அபிஷேகத்துக்கு உண்டான இத்யாதிகளை சரி செய்ய, ஹோம குண்டம், ஒரு பக்கம் வைத்து, அதற்கு உண்டான, கலசம் இத்யாதிகள் மற்றொரு புறம். அங்கு இருவர் தைத்ரீயம் பாராயணம் பண்ணிக் கொண்டிருந்தார்கள்,

நடுவில், என் பெண் பாட ஆரம்பித்து, பூஜை முடிந்த பின் 3 பாடல்கள் பாடி, சத்குரு சுவாமிக்கு என்ற ரீதிகௌள ராகத்தில் அமைந்த ஒரு பாடலை பாடி முடித்தாள். எப்போது பாடுவது என்று தெரியாததால், ஹோமம் முழுவதும், முடிந்து, பெரியவா விக்ராஹதுக்கு, எல்லா அபிஷேகமும் முடிந்து, தூபம், தீபம் எல்லாம் முடிந்து, பிரசாதம் வாங்கிக்கொண்டு செல்லும் வரை அங்கு இருக்க வேண்டிய கட்டாயம் எனக்கு வந்துவிட்டது

என் பிளான் – அங்கு 30 நிமிடம் பாடிவிட்டு, உடனே கிளம்பி, மனைவியை அழைத்துக் கொண்டு HOSPITAL  செல்லவேண்டும் என்பது தான். ஹோமம், அபிஷேகம் போன்றவை, நான் எதிர் பார்க்கவே இல்லை. கணேஷ் சர்மாவிடம் சொல்லிவிட்டு கிளம்பவும் மனம் இல்லை. அவரிடம் பேசுவதற்கே, ஒரு பயமாக இருந்ததால், அவரே “சரி போகலாம்” என்று சொல்வார் என்று பார்த்தால், அவரும் போக சொல்லவே இல்லை. எனக்கு சொல்லவும் முடியவில்லை, மெல்லவும் முடியவில்லை.

8.15 மணிக்குத் தான் முடிந்தது. பிரசாதம் வாங்கிக்கொண்டு வீட்டிற்கு வந்து, படுத்துக் கொண்டு இருந்த மனைவியை அழைத்துக் கொண்டு மந்தவெளியில் இருக்கும் B.S.S HOSPITAL  சென்றேன்.

இப்போது தான் முக்கிய கட்டம்

B.S.S HOSPITAL  உடனே வைத்தியம் பார்த்து, மிகவும் சளியாக இருக்கிறது, என்று ஊசி போட்டு, மருந்து, மாத்திரை..மேற்படி.....எல்லாம் நடந்த்து. நான் அடிக்கடி அந்த ஆஸ்பத்திரிக்கு போவேன் 
என்பதால், DUTY DOCTOR எல்லோரும் பரிச்சயம்.

மேலும், நான் ரங்கா HOSPITAL செல்வதா என்ற குழப்பத்தில் இருந்து (ரங்கா HOSPITAL, டாக்டர் மாதவன் எனக்குத் தெரியும் என்பதாலும்), கடைசியில் B.S.S HOSPITAL சென்றேன்.

டாக்டரிடம், திங்கள் கிழமை, ஒரு கோவில் விசேஷம் இருக்கிறது என்பதாலும், ஸ்நானம் பண்ண வேண்டும் என்பதால், ஒரு நாளில் குணம் ஆகி விடும் என்றால், BETTER என்றேன். அவர் சொன்னார், “இன்று இரவே சரியாகிவிடும், மிஞ்சி போனால், அடுத்த நாள், SUNDAY, குனமாகிவிடும்.  இருந்தாலும், ஸ்நானம் செய்யாமல் MONDAY FUNCTION க்கு போனால் பெட்டர்” என்றார்

எல்லாம் முடித்துவிட்டு, RECEIPTION ல், பணம் கட்டிவிட்டு, - எனக்கு ஒரு ஆசை, அடிக்கடி வருகிறோமே, இந்த டாக்டரை பல முறை பார்த்திருக்கிறோமே, அவர் பேர் தெரிந்து கொள்ள ஆசை.. ஆகவே, RECEPTION ல் இருந்த பெண்ணிடம் அந்த டாக்டர் பெயர் கேட்டேன்;

அவள் சொன்னார் - அவர் பெயர்- டாக்டர்.சந்திரசேகரன்

நான் ஒரு நிமிடம், அப்படியே அசையாமல் நின்று விட்டேன். சற்று உணர்ச்சி வசப்படக்கூடிய என் மனைவி உடனே அழ ஆரம்பித்து விட்டாள். அபார கருணா சிந்தும் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கற்பிப்பவராக, பெரியவாளை அங்கு பார்த்தேன். எனக்கு அந்த இன்ப அதிர்ச்சி அடங்க பல நிமிடங்கள் ஆகியது

அது மட்டும் இல்லை. சண்டே உடல் 70%  பூரணமாகி, திங்கள் எழுந்து குளித்து, சோம வார பிரதக்ஷிணமும், செய்து வந்தாகி விட்டது.

இது என்ன சாத்தியமா. கனவா, அனுக்ரஹமா ? அதற்கு அருகதை எனக்கு இருக்கிறதா ? என்று தெரியவில்லை. அந்தப் பாதத்திற்கு அவ்வளவு மகிமையா ? அதுவம், அந்தப் பூஜைக்கு, ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாத எனக்கு இவ்வளவு அனுக்ரஹமா ? இன்னும் அந்த பிரமிப்பு அடங்கவில்லை

இதை இன்னொரு முக்கியமான விஷயம், என் பெண், பாடிவிட்டு வீட்டிற்க்கு வந்தவுடன், “கோவிலுக்குச் சென்று பாட முடியாதபடி” ஆகிவிட்டது. (பெண்கள் பிரச்னை)

என் பெண் அழ, நான் சொன்னேன்- பெரியவா “இந்தப் பிரச்னையை” முன்பே உணர்ந்துதான், உன்னை தன் சன்னதியில் பாட அழைத்துக் கொண்டார்”  - இது குரு அனுகிரகம். எத்தனை பேருக்குக் கிடைக்கும், பெரியவாளை, நெஞ்சில் ஏற்றிக் கொண்டாடும் ஸ்ரீ. கணேஷ் சர்மா மாதிரி ஒருவர வீட்டில், அபிஷேக ஆராதனைகளைப் பார்த்து, பாத தரிசனம் செய்து கொண்டே, பாடுவதற்கு எத்தனை புண்ணியம் செய்திருக்க வேண்டும்”

இந்த வார்த்தைகளைச் சொன்ன பிறகுதான் என் பெண் சாந்தமானாள். வேறு ஒரு தேதியில் கோவிலில் பாடுவதற்கு முயற்சிகள் – பெரியவா எடுப்பா – என்பதில் எனக்கு கொஞ்சம் கூட சந்தேஹமே இல்லை.

மகா பெரியவா சரணம். ஸ்ரீ கணேஷ் சர்மா பாதங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்.

இதை எழுத வைத்ததும் பெரியவாதான்.

-என்னுடைய சஹோதரின் மனைவிக்கு நடந்ததை நாளை எழுதுகிறேன்.


Wednesday, 13 December 2017

ராமகிருஷ்ணன் மூர்த்தி என்கிற சங்கீத பிரவாஹம்

பிரம்ம கான சபா
10th December 2017

ராமக்ருஷ்ணன் மூர்த்தி- வாய் பாட்டு
நெய்வேலி நாராயணன்- மிருதங்கம்
சாருமதி ரகுராம்- வயலின்
சுந்தர் குமார்- கஞ்சிரா

பிரம்ம கான சபா இந்த வருட டிசம்பர் சீசனை வழக்கம் போல ஆரம்பித்து, மிக அருமையான பாடர்களின் கச்சேரியை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.  அதில் நேற்று, ராமகிருஷ்ண மூர்த்தியின் ஒரு “நெஞ்சை அள்ளும்” (இன்று, பாரதியின் பிறந்த/நினவு தினம்) கச்சேரியை கேட்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

பி.கா,சபாவில் ஒரு வசதி உண்டு. இஷ்டத்திற்கு கச்சேரி என்று வைத்து, யார், யாரையோ பாடச் சொல்லி, கூட்டம் வராமல், வரும் ரசிகர்களையும் நோக அடிக்காமல், ஒரே ஒரு கச்சேரி, அதுவும் 6 மணிக்கு ஆரம்பித்து 9 மணிவரை 3 மணி நேர கச்சேரியாக வைத்துள்ளனர். 3 மணி நேர கச்சேரியில் ஒரு வசதி, ராகம் தானம் பல்லவி கேட்கும் பாக்கியம் உண்டு. மேலும் தனி ஆவர்த்தனம் சுமார் 7.45 மணிக்கு வருவதால் யாரும் எழுந்து போகாமல், தனி கேட்கும் வாய்ப்பும் உண்டு.

Online ல் டிக்கெட் book பண்ணும் வசதி இருப்பதால், அனாவசியமாக டிக்கெட் கிடைக்குமோ என்று கவலையும் படவேண்டாம்.

கொஞ்சம் off track  போய், பிறகு விஷயத்திற்கு வரலாம்:

இளையராஜா சொல்லுவார்

சிலரின் பாட்டு நம்மை அறியாமல் நம்மை உணர்ச்சி வசப்பட வைக்கும். அது இசையால் கூட இருக்கலாம். பாடுபவரின் குரலால் கூட இருக்கலாம். அல்லது அந்தப் பாடலின் பொருளாகக் கூட இருக்கலாம். அதற்கு அவர் “மாலைப் பொழுதின் மயக்கத்திலே” என்ற ஒரு பாடல் (பாக்ய லக்ஷ்மி என்ற படம்) உதாரணமாகச் சொல்வார்.  என் எலும்பை உருக்கிய பாட்டு என்பார். 

என்னைக் கேட்டால். “மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன” என்ற தில்லானா மோகனாம்பாள், படப் பாடலை இதே போல் சொல்வேன். ஷண்முகப்ரியா ராகத்தில் அமைந்த பாடலைச் சொவதா. இந்தப் படத்தில், நாயகன் பெயர் ஷண்முக சுந்தரம். அதனால் ஷண்முகப்ரியா ராகமா, இசை அமைப்பாளர் K.V.MAHADEVAN  சாதுர்யத்தைச் சொல்வதா. பாடலின் பொருள் மிகவும் சிறப்பாக, கதையின் வலிமையச் சொன்ன அதிசயத்தைச் சொல்வதா ? பல சிறப்புகள். சிவாஜி, பத்மினி –இவர்களின் கண்கள் பேசும் அழகைச் சொல்வதா ?

அதே போல் ஒரு நல்ல இசை நான் கேட்டது

இப்போது விஷயத்திற்கு வருவோம்

ராமகிருஷ்ணன் மூர்த்தியைப் பற்றி, கர்நாடக ரசிகர்கள் உலகில் தெரியாவதர்கள் இருக்க முடியாது. இங்கிருந்து அமெரிக்கா போய், மேல் படிப்பு படித்து, முடிந்தால் கொஞ்சம் சங்கீதமும் கற்றுக் கொள்ளும் மக்களின் இடையே, அமெரிக்காவில் படித்து, சந்கீததுக்காக, சென்னை வந்து, வந்த பிறகும், IT கம்பனியில் கிடைத்த வேலையை உதறி, சங்கீதத்தை மிகவும் பண் படுத்தி, அதை தன் வசமாக ஆக்கிக் கொண்டு, சங்கீதத்தின் உயிர் நாடி என்கிற ஜீவனைப் பிடித்துக் கொண்டு, ராஜ பாட்டையில் உலா வரும் ஒரு அற்புதமான கலைஞர்,

சென்னை வந்த பிறகு,. சங்கீதத்தை தன் உயிர் மூச்சாக கொள்ள நினைத்த அவருக்கு, கடவுள் ஒரு படி கீழே இறங்கி. R.K.Shriramkumar  என்ற ஒரு மகத்தான குருவைக் கொடுத்து, ராமகிருஷ்ணன் மூர்த்தியின், இசையை, மேலும் பலப்படுத்தியது, அதன் மூலம் ரசிகர்களை வசப்படுத்தியது என்பது சத்தியம்.

சுருதி மாத இதழில், அவருடைய பேட்டி வந்திருந்தது.  சாத்தூர் AG சுப்ரமண்யம் அவர்களின் நினைவாக, அவருடைய, படத்தை கவரில் போட்டு வந்த இதழ். அதில் ராமகிருஷ்ணன் மூர்த்தியின் ஒரு பேட்டி இடம் பெற்றிருந்தது. அதில் அவருடைய குரு வுடனான ஒரு பக்தியை மிக அழகாக சொல்லி இருந்தார். எல்லோரும் அவசியம் படிக்க வேண்டிய ஒரு பேட்டி.
இந்த சின்ன வயதில், கச்சேரி செய்து வரும் ராமகிருஷ்ணன் மூர்த்தியைப் பற்றி, என் ஒரு வரி விமர்சனம்- “சங்கீத தேவதை, இறங்கி வந்து ஒருவரின் உடலில் புக நினைத்து, அதன் மூலம் ரசிகர்களின் சங்கீத உணர்வுகளை மேம்படுத்த நினைத்து, புகுந்த உடல், ராமகிருஷ்ணன் மூர்த்தி”

நான் மகாராஜபுரம் சந்தானத்தின், குரலில் நுழைந்து, சஞ்சயின் இதயம் புகுந்து, இப்போது ராமகிருஷ்ணன் மூர்த்தியின், இசை என்ற உணர்வில் கலந்து நிற்கிறேன்.

கர்நாடக சங்கீதத்தைப் பற்றி, அவரே ஒரு INTERVIEW வில் சொன்னது:

Carnatic music is not just about entertainment… it elevates a person beyond that; it’s soul-lifting

இது தான் உண்மை. இதைதான் அவர் செய்து கொண்டிருக்கிறார்

மேலும், அவர் விமர்சனங்களைப் பற்றிச் சொல்லும்போது:

Personally, I don’t think a review alone can make or unmake an artist. It is the merit of the music that decides.

My opinion: His music has lot of merits

இனி விமர்சனத்திற்கு வருவோம்:

நேற்று, மயிலாப்பூர் சங்கீத ரசிகர்களுக்கு, ஒரு மிகப் பெரிய சவாலான நாள். நாரத கான சபாவில், கார்த்திக் பைன் ஆர்ட்ஸ்- க்காக சஞ்சய் பாட, ARKAY CONVENTION CENTRE  மல்லாடி சகோதரர்கள் பாட, ராஜரத்தினம் அரங்கில், அபிஷேக் ரகுராம், பாட BGS ல், நான்சென்ற ரா.மூ. கச்சேரி.
பாவம் ரசிகர்கள். !!!

நான் அரங்கத்துக்குள் நுழையும்போது, “நீ கேல”, என்ற ஒரு மோகன ராக வர்ணனை ஆரம்பித்து, துரித கதியில் பாடிக் கொண்டிருந்தார். சாருமதியும், ஈடு கொடுத்து வாசித்துக் கொண்டிருதார். கச்சேரி களை கட்டிவிட்டது.

முந்து வேணுக என்ற தர்பார் ராக, சத்குரு தியாகரஜர் கிருதியை எடுத்தார். “பாகவதப்ரிய பாக ப்ரோவவய்யா, த்யாகராஜ நுத” என்ற இடத்தில நிரவல் செய்தார். ஸ்வரம் பாடி, “பெத்தாச்சி” தர்பாரில், தர்பார் ராகத்தில் லயிக்கச் செய்தார்.

“நாரத குருஸ்வாமி”, “யோசனா” போன்ற பல பாடல்கள் இருக்க, இந்தப் பாடல், பல சிறப்புகள் நிறைந்த, தியாகரஜரின் பக்தியை மேம்படுத்தச் செய்யும் பாடல்:

“நீ என் முன்னே, பின்னே, இரு புறமும் என்னைக் காக்க வரவேண்டும் “ராரா” என்று பாடல் முழுவதும் சொல்கிறார். பாடல் ஆரம்பத்தில், கெஞ்சுகிறார், பல்லவியில், அவர் வீரத்தை புகழ்கிறார். அனுபல்லவியில். அவர் அழகை மெச்சுகிறார். சரணத்தில், அவர் இரக்க குணத்தை (கஜேந்திர மோட்சம்) பாராட்டும் தியாகராஜர் கடைசியில், பாகவதப் ப்ரியராகவும், தத்துவப் பொருளாகவும் ராமனை நினைக்கிறார்” – அழகான வரிகள். எனக்குத் தெலுங்கு தெரியாமற் போனாலும். தியாகராஜரின் பாடலுக்காகவது, தெலுங்கு கற்றுக் கொள்ள ஆசை. (நிறைவேறவில்லை என்பது வேறு விஷயம்)

மூன்றாவதாக, “ஜெயந்த சேனாவை” எடுத்தார். இந்த ராகத்தில், எனக்குத்தெரிந்த “வினதா சுதவா” எந்த வித குழப்பமும் இல்லாமல் ராகத்தை ஒரு 3 நிமிடம் பாடி, வயலின், அதை வழி மொழிய பாடினார். ஸ்வரம், “மத பேதமனே” என்ற இடத்தில பாடி நிறைவு செய்தார்.
ஜயந்த சேனாவைக் கூட அழகாக முத்துக் கோத்தது போல், பாடினார்.

தமிழ் பாடலான பருவம் பார்க்க ஞாயமா, பராத்பரி, என்ற ஆனை அய்யா அவர்களின் பாடல். இதை சாத்தூர் AGS அவர்கள் சொல்லித் கொடுத்தார் என்று அவர்களது புதல்விகனான, சாத்தூர் சகோதரிகள், ஒரு கச்சேரியில், பாடி முன்பு அசத்தி இருக்கிறார்கள்..  Recent ஆக சஞ்சய் கூட எங்கேயோ பாடியதாக ஞாபகம்.

ஆனை அய்யாவைப் பற்றிச் சொல்லும்போது, “அம்பா நன்னு ப்ரோ” என்று ஒரு தோடியில் ஒரு மிக அழகான சாஹித்யம் உண்டு. அது வரிகள் ஜாஸ்தி இல்லாமல், ராகத்தை வைத்தே, வரிகளை நிரப்புவது போன்ற ஒரு பாடல். செம்மங்குடி பாடிக் கேட்ட ஞாபகம். இந்தப் பாடலை மிகவும் கை தேர்ந்தார்கள் தான் பாடவேண்டும். இல்லாவிடில், வழுக்கிக் கொண்டு ஓடிவிடும்.

பிறகு, வேலைக்காரனாக இருக்கிறேன், என்னை ஏற்றுக்கொள் என்ற, தியாகராஜர் இயற்றிய, பண்டு ரீதி என்ற ஹம்சநாத ராக கீர்த்தனை, ராகத்தை, 3-4 நிமிடம் ராகம் பாடி பிறகு அழகாக முடித்து, 

மெயின் உருப்படியாக வாசஸ்பதி ராகத்தை எடுத்தார்...

இந்த ராகத்தை ராமகிருஷ்ணன் மூர்த்தி பாடிய விதம் மெய் சிலிர்க்க வைத்தது உண்மை. சாதரணமாக வாசஸ்பதி ராகம், எனக்கெல்லாம் 2-3 நிமிடம் தான். பிறகு ராமப்ரியாவா, சரஸ்வதியா என்று குழம்பி, “பராத்பரா பரமேஸ்வரா” என்று யாராவது பாடினால், உடனே அரங்கத்தை காலி செய்து விடுவேன். அலுப்பு தட்டும் ராகம் இது. அனால் அதை ரா.மூ கையாண்ட விதம் அபாரம்.

பாஹி ஜகஜ்ஜனனி என்ற மகாராஜா கிருதியை எடுத்து, விஸ்தாரமாக பாடினார். சம்ஸ்க்ருத 
சுத்தம், R.K.SRIRAMKUMAR என்ற குருவின் நேர்த்தியை பறை சாற்றியது.

சமலஜாதம் வாரய என்ற சரண வரிகளில், நிரவல் செய்து, தனி விட்டார்.

நெய்வேலியும், சுந்தரகுமாரம், தனியாக, மிகவும் சிறப்பாக வாசித்த பிறகு,

ஷ்யாமா சாஸ்திரி மாஞ்சி ராக கிருதியான, ப்ரோவம்மா வை பாடினார். அதை “நீவே அனாதரான ஜெசிதே” என்ற அனுபல்லவியில் எடுத்து குழைத்து கொடுத்தார்

பிறகு தான் ராகம் தானம் பல்லவி:

யதுகுலகாம்போஜி ராகத்தை ரா.தா.பல்லவி யாக பாடுவதற்கு ஒரு தைர்யம் வேண்டும். இந்த ராகம் 3 நிமிடத்திற்கு மேல் தேறாது. “காலை தூக்கி நின்று ஆடும் தெய்வமே” என்று மாரிமுத்து பிள்ளை அவர்களின் ஒரு பாடலை, சஞ்சய் பாடி, பாடி, கேட்டு கேட்டு, சிதம்பரம் நடராஜர் மேலே ஒரு “அலுப்பு”: வரும் அளவுக்கு ஆக்கிய ராகம் இது.

இதை மிக லாவகமாக கையாண்டு தானம் நாயகியிலும், மோகன கல்யாணியிலும், கொடுத்து, பாலவியை ஆரம்பித்தார்

“ஹரே, மாம் பாஹி யதுகுல காம்போஜ பத யுகள” என்ற பல்லவியை (குருநாதர் R.K.SRIRAMKUMAR சொன்ன பல்லவி என்று ரா.மூ சொல்லி ஆரம்பித்தார்)

ஆனந்த பைரவி, ஹிந்தோளம், பெஹாக், தர்பாரி கானடா, என்று ராஜ பாட்டையில் சென்று, பிறகு “U Turn” போட்டு, முடித்தார்.

“ச்ருத்வா குணா புவனசுந்தர” என்று ஸ்ரீமத் பாகவத வரிகளை வருத்தமாக பாடி, அரவிந்த பத மலர்” என்ற “காபி ராக” அம்புஜம் கிருஷ்ணாவின் பாட்டை பாடினார்.

இந்தப் பாடலில் எனக்கு ஒரு சந்தேஹம்.  “குறள் வடிவாக வந்து ஈரேழு உலகளந்தாய்” என்ற வரியில், ரா.மூ. “குரல்” என்று பாடினார். இதை திருப்பி, திருப்பி பாடி “குரல்” என்ற வார்த்தையை உறுதி செய்தார். அது தவறோ என்பது என் எண்ணம்.

இதை எழுதும்போது, எனக்கு, மல்லடி சஹோதர்கள், ஞாபாகம் வந்தது. அவர்கள் தமிழ் பாட்டு பாடுவதில் உள்ள அந்த முயற்சியை நான் மனதார பாராட்டினாலும், சில வரிகள், “சட்” என்று, ஒரு தமிழ் தவறு இருக்கும்போது, அது கவனிக்கப் படாவிட்டாலும் கூட, சிரிப்பை வரவழைக்கும்.

நாரத கான சபாவில், போன வாரம் ம.சகோ. பாடும்போது “சீதா மதி” (நவசித்தி பெற்றாலும் என்ற நீலகண்ட சிவன் பாடலை-கரஹரப்ரியா- மெயின் ஆக எடுத்து பாடினார்கள்).
குரல் கேட்கும்போது அது நினைவுக்கு வந்தது.

கடைசியில், தேவகி நந்தன நந்த முகுந்த- என்ற மாண்ட் ராக புரண்தர தாசர் தேவர் நாமாவை பாடி, “பவமான”, பாடி நிறைவு செய்தார்.

சாருமதி பற்றி சொல்லாமல் விட்டால், சம்பிரதாய பஜனையில், ஆஞ்சநேய உற்சவம் இல்லாமல் முடிப்பது போல..

சாருமதி போன்று ஒரு வயலின் வித்வான் இருக்கும்போதுதான், ரா.மூ கச்சேரி எப்படி, பரிமளிக்கிறது என்பது புரியும். சில சமத்தில், சுந்தரகுமார், ரா.மூ தாளத்தை சரியாக கவனிக்காமல் “பிசற” சாருமதியும் தவித்தது உண்மை. ஆனால், அதெல்லாம் தவிர்த்துப் பார்த்தால், எனக்கு மிகவும் மன நிறைவு தந்து, இப்படி ஒரு உன்னதமான கலைஞனை நமக்கு கொடுத்து, கொஞ்சம் சங்கீத ஞானமும் கொடுத்த அந்த இறைவனுக்கு நன்றி சொல்லி, அப்படியே ஒரு கொசுறாக, ரா.மூ க்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கவும் பிரார்த்திக்கிறேன்.