Tuesday 26 July 2016

கர்ணனும் பட்டினத்தாரும்- அவர்களது தாயன்பும்



“கற்றதும் கற்க நினைத்தும்”

சமீபத்தில் TAMILVU.ORGஎன்ற ஒரு இணைய தளத்தை பார்க்க நேர்ந்தது. இதன் கரு எப்படி என்றால், சமீபத்தில் தீவுத்திடலில் நடந்த புத்தகக் கண்காட்சியில், தமிழ் இனைய தளத்தைப் பற்றி ஒரு STALLஒதுக்கப்பட்டு இருந்தது.  அங்கு சென்று பெசிக்கொண்டிருந்த போது, மேற்சொன்ன இ.த பற்றி பேசினார்கள்.

“மிக அருமையான புத்தகங்களை (UPLOAD) “ஏற்றி இருக்கிறோம்” உங்களுக்கு படிப்பதற்கு எளிமையாக” என்றார்கள்.

அந்த “இ.த” பார்த்த போது முதலில் “சித்தர் இலக்கியங்களை’ பார்த்தேன். அதில் பட்டினத்தாரின் அருமையான தொகுப்பைப் பார்த்தேன்.

அதனுடைய தாக்கம் தான் இந்தக் கட்டுரை.

பட்டினத்தாரின் ஒரு செய்யுளைப் பாப்போம்

ஐயிரண்டு திங்களா யங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் - செய்யஇரு
கைப்புறத்தி லேந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பிற் காண்பே னினி

மேற்கூறிய செய்யுள் பட்டினத்தார் தன் தாயார் மரணத்தை கேள்விப்பட்டு கதறி அழுது பாடிய வரிகள்.

புலவர் கீரன் அவர்கள் கர்ணனைப் பற்றிக் கூறும்போது, ஒரு கட்டத்தில் கர்ணன், தன்னைப் பெற்றெடுத்த தாயான குந்தியை சந்திக்க நேருகிறது. தாய் குந்தி கர்ணனை தன் மகன் என்று ஒப்புக்கொள்ள இசையும் ஒரு கட்டம். 

கர்ணன் ஒரு போர்வை வைத்திருந்தான். அது அவனைப் பெற்று நதியில், ஒரு பெட்டியில் வைத்து விடும்போது, அவனுடன் அந்தப் போர்வையையும் சேர்த்து குந்தி அனுப்புகிறாள். அந்தப் போர்வையை யார் முதுகில் போர்த்தினால் அவர்கள் எரியாமல் இருக்கிறார்களோ, அவர்களே கர்ணனின் உண்மையான அம்மா என்று ஒரு நிலை.

நிறைய பேர் “நான் தான் உண்மையான அம்மா என்று பொய் சொல்லிக்கொண்டு வருவார்கள். இந்தப் போர்வைக் கதையை சொன்னவுடன் ஓடி விடுவார்கள்.

கீரன் சொல்லுவார்- “என்ன கேவலம் இது.  அன்புத் தாயின் அரவணைப்புக் கிடைக்காமல் மேலும் நாட்டையே ஆளும் உரிமை பெற்றிருந்தாலும், அது தெரியாமல், செஞ்சோற்றுக் கடன் என்ற ஒரு வலையில் விழுந்து, அலைக்கழிக்கப்பட்டு, ஒரு பேரரசராக இருந்திருக்க வேண்டியவன், தாயின் அன்பும் கிடைக்காமல், பேரரசராகவும் இல்லாமல் தரையில் விழுந்து உயிரை விட்ட ஒரு துர்பாக்யசாலி இந்தக் கர்ணன்”, என்பார்

பட்டினத்தாரைப் பற்றிச் சொல்லும்போது, என்னதான், உலகத்தை நன்கு புரிந்து கொண்டு, “காதறுந்த ஊசியும் வாறது காண் கடை வழிக்கே” என்று ஆணித்தரமாக சொன்ன பட்டினத்தார், தன் தாய் மறைந்த செய்தியை கேட்டவுடன் கதறி அழுத் சொன்ன வார்த்தைகள்தான் நான் ஆரம்பத்தில் எழுதிய வார்த்தைகள்.

உணர்ச்சி பூர்வமான இந்த கட்டத்தில் தாய் பாசத்தைப் பற்றிப் பேசும்போது, இந்த பட்டினத்தாரின் செய்யுளை மேற் சொல்லி காட்டுவார்.

அதனால் தான் என்னவோ, ஸ்ரீ லலிதா சஹாஸ்ரநாமத்தில் முதல் வரி “ஸ்ரீ மாதா மகாராஞ்சி” என்று தாயின் பெருமையை அம்பாளைத் தாயாக பாவிக்கும் அருமையான் ஒரு கருத்துடன் ஆரம்பிக்கிறது.

கர்ணன் தாயன்பு வேண்டாம் என்று நினைத்தாலும், அவன் தன் தாய் குந்தியிடம் கேட்ட வரத்தில்,நான் இறந்தபிறகு உரறிய, நீ என்னை, உன் மகன் என்று சொல்லவேண்டும் என்றான்.  பட்டினத்தார் சிறிய வயதிலே முழு “அநுபூதி” பெற்றாலும் தாயன்பை அவரால் புறக்கணிக்க முடியவில்லை

தாய் தாய் தான்.


எந்தக் காலத்திலும், யாராலும் தாயின் இடத்தை நிரப்ப முடியாது.

No comments: