Monday 23 June 2014

''இரண்டு சூரியன்கள்​"

''இரண்டு சூரியன்கள்''



ரா கணபதி அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய ஓர் அபூர்வமான கட்டுரையின் சுருக்கம் இது



"இன்று அக்டோபர், 25 , 1992 காஞ்சி மகா சுவாமிகளின் நூற்றாண்டைக் கொண்டாடத் தயாராகிக் கொண்டிருக்கிறோம். மே மாதம் 1994ல் தான் அவர் நூற்றாண்டு முடிப்பார் என்ற போதும், நமக்கு இந்த தருணத்தில் இரட்டிப்பு பாக்கியம் கிடைத்திருக்கிறது. மூன்று நாட்களுக்கு முன், நூறு ஆண்டுகளைக் கடந்த இன்னொரு பெரிய ஞானியை இன்று நினைக்கும் வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கிறது. இதில் அபூர்வமான விஷயம் என்னவென்றால் இரண்டு ஞானிகளின் பெயர்களுமே 'சந்திரசேகர' என்பதுதான்.



அவர் வேறு யாருமல்ல, சிருங்கேரி சங்கர மடத்தின் சந்திரசேகர பாரதி சுவாமிகள்தான். காஞ்சி சங்கர மடத்தை சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் நிர்வகித்துக்கொண்டிருந்த தருணத்தில் பாரதி சுவாமிகள் 42 ஆண்டுகள் சிருங்கேரி மடத்தின் பீடாதிபதியாக இருந்தார். இருவருமே தெய்வீகமான அருளாளர்கள். ஒரே தருணத்தில் இரண்டு சந்திரசேகரர்கள் இரு வேறு மடங்களில் தலைமையை ஏற்று நடத்துவது பராசக்தியின் விளையாட்டு அல்லவா? இருவரும் ஒரே விஷயத்தில் பார்வையை செலுத்தும் இரண்டு கண்கள், என்றே எடுத்துக்கொள்ளவேண்டும். சந்திரன் போன்ற குளிர்ச்சியான இரண்டு முனிவர்களும் அத்வைத ஞானத்தை சூரியன் போல் வெளிச்சமிட்டு உலகுக்குக் காட்டி கொண்டிருக்கின்றனர். இருவருமே ஒப்பிட முடியாதவர்கள். அதே நேரத்தில் ஒப்பிடகூடியவர்களும் கூட!



மனித குலத்தை வாழ்த்தும் தகுதி உடையவர்கள் அவர்கள். நிபுணர்களைத் திகைக்க அறிவொளி படைத்தவர்கள். வேதாந்தக் கருத்துகளை எளியவருக்கும் புரியும் வகையில் எடுத்துச் சொல்லக்கூடியவர்கள். பெரிய ஞானிகள் மட்டுமே நடந்துகொள்வது போன்று, அடக்கமாக நடந்துகொள்பவர்கள். மாற்றங்களும் சீர்திருத்தங்களும் நிகழும் இந்தக் காலத்தில், பாரம்பரிய கட்டுபாடுகளை மீறாமல் எதிர் நீச்சல் போட்டுபவர்கள். 'ஜகத்குரு' என்ற பட்டதை அவர்களாக தேடிப் போகவில்லை. குருவாக அவர்கள் யாருக்கும் பாடம் கற்பிக்க முனையவில்லை.



இன்னோர் ஒற்றுமையும் இருக்கிறது. தமிழ் நாட்டிலுள்ள காஞ்சி மடத்தின் தலைவரின் தாய்மொழி கன்னடம். கர்நாடகத்தில் உள்ள சிருங்கேரி மடத்தின் தலைவரின் தாய்மொழி தெலுங்கு. இருவருக்குமே சந்நியாசத்தை ஏற்கும் தருணத்தில் குரு என்று யாருமே இருக்கவில்லை. ஆனால் இருவருமே குரு என்று ஒருவர் தேவை என்பதை உலகுக்கு வலியுறுத்தியவர்கள். உள்ளத்தளவில் இருவருமே ஒரே மாதிரிதான். ஆனால் அவர்கள் வெளியே நடந்துகொள்ளும் முறையையும் செயல்களையும் கண்ட உலகத்தினர், வேறு மாதிரி நினைக்கத் தொடங்கினர்.



முக்கியமான வேறுபாட்டை இங்கே விளக்கியாக வேண்டும் காஞ்சி முனிவர் பிரம்மஞானியாக இருந்தாலும் வெளியுலக நடவடிக்கைகளில் கவனம் செலுத்தினார். அவை எல்லாமே சாஸ்திர அடிப்படைக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும் என்று செயல்பட்டார், அதை அடைய அவர் திட்டங்களை தீட்டினார்.



சாஸ்திர முறைகளுக்கு மக்களைத் திருப்பும் ஆர்வம் கொண்டிருந்த சிருங்கேரி ஆச்சாரியார். பொதுவாகத் தன்னை தனிமைப்படுத்திகொண்டு, தியானத்தில் ஈடுபட்டார். அவர் நினைத்திருந்தால் அறிவுக்கடலில் நீந்தித் திளைத்திருக்க முடியும். ஆனால் தெய்வீகம் ஆன்மிகம் தவிர வேறு விஷயங்களில் அவர் கவனம் செலுத்த விரும்பவில்லை. சீடர்களையும் அகடமிக் (Academic) எனப்படும் அறிவு சார்ந்த விஷயங்களில் அக்கறை காண்பிக்கத் தூண்டவில்லை.



மதம் சரித்திரம் அல்லது இலக்கிய ரீதியான அடிப்படையில் மதத் தலைவர்கள் அல்லது மதம் சம்பந்தப்பட்ட விவாதங்களிலும் ஆர்வம் காட்ட மாட்டார். ஆதிசங்கரர் காலம், அல்லது அவரது சில நூல்கள் சார்ந்த பிரச்சனைகளையும் அல்லது வித்யாரண்யருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட குருமார்கள் இருந்தார்களா என்பது போன்ற தர்க்கங்களிலும்... இதில் உண்மையை கண்டுபிடித்து அறிந்துகொள்வதற்கும், உனது சொந்த ஆன்மீக வளர்ச்சிக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதோ? என்பதுதான் பாரதி சுவாமிகளின் பதிலாக இருக்கும்.



மாறாக, காஞ்சி முனிவரோ எல்லாத் துறைகளிலும் ஆய்வு மேற்கொள்வதை வரவேற்பார். அத்துடன் தாமே நவீன அறிவியலில் கடலில் தேடித் தேடி முத்து, பவளம், சங்கு, என்று கண்டெடுத்து, அறிவு குறித்த பிரச்சனைகளை தீர்த்து வைப்பார். இந்த இருவரையுமே சனாதன தர்மத்தின் இரு கண்கள் என்று போற்றினார்கள் பல நிபுணர்கள்.



ஆசார்யர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்காவிட்டாலும், ஒரே இதயம் படைத்தவர்களாகவே இருந்தனர். 'தங்கள் திட்டங்கள் குறித்து பரஸ்பரம் கருத்துப் பரிமாற்றங்கள் செய்துகொண்டனர்' என்று கே. பாலசுப்ரமணிய அய்யர், எல் எஸ் பார்த்தசாரதி ஐய்யர், மற்றும் அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தச்சர்யார் போன்றவர்கள் என்னிடம் இந்த விஷயங்கள் குறித்து சொன்னது உண்டு.



காஞ்சி மடத்திலிருந்து எவர் வந்தாலும் அவர்களை மிக மரியாதையுடன் நடத்துவதுடன், மற்ற மடங்களுக்கும் அழைத்துச்செல்ல தம் தொண்டர்களை அனுப்பிவைப்பார் சிருங்கேரி ஆச்சார்யர். ''இப்படிப்பட்ட தேஜஸ்வியை வேறு எங்காவது நீங்கள் பார்த்ததுண்டா? அது அவரின் தபஸின் மகிமை!" என்று மகா பெரியவ அவரைப் பற்றி சொல்வதுண்டு. அவருடைய தந்தை மற்றும் பாட்டனார் குறித்தும் பெரியவாள் உயர்வாகச் சொல்வதுண்டு.



சிருங்கேரி ஆச்சார்யரோ காஞ்சி பெரியவர் பற்றி ''அந்த ஞானியின் ஆன்மிக ஒளி அல்லவா உலகின் நன்மைக்கு காரணமாக இருக்கிறது!" என்று மகிழ்ச்சியுடன் கூறுவார்.



நீதித்துறையில் புகழ் பெற்றவர் டி.எம்.கிருஷ்ணஸ்வாமி அய்யர். இவர் பெரியவ பாலக்காட்டில் உள்ள பல்லாவூரில் 1927 -ல் தங்கி இருந்தபோது அங்கே சென்று திருபுகழ் பஜனைகள் செய்தார், பெரியவா இவருக்கு திருபுகழ் மணி என்று பட்டம் கொடுத்தார்.



அதன் பிறகு திருபுகழ் மணி கோவைக்குச் சென்று சிருங்கேரி ஆச்சாரியார் முன்பும் திருபுகழ் பஜனைகள் செய்தார். அவருக்கு காஞ்சி பெரியவா விருது தந்து கௌரவித்தது பற்றி கேள்விப்பட்டதும், ''அவர் அப்படி கௌரவம் செய்திருந்தால் அதை நாங்கள் இருவருமே அளித்ததாக வைத்துக்கொள்ளுங்கள்'!'' என்றாராம் சிருங்கேரி ஆச்சாரியார்.



இன்னொரு விஷேசம் என்னவென்றால் 1935 -ல் பெரியவா கோயமுத்துருக்கு விஜயம் செய்த போது, அவர் முகமிட்டிருந்ததே சிருங்கேரி மடத்தில்தான்!.



1935 -ஆம் ஆண்டு கல்கத்தாவுக்கு நவராத்திரி பூஜை செய்யப் போனார் காஞ்சி பெரியவா. அங்கே மகேந்திர சர்மா என்ற சிருங்கேரி மட அபிமானியும் இருந்தார். பூஜையின் 4 -ஆம் நாள் வரை அவரால் பொறுக்கமுடியவில்லை. நேராக சிருங்கேரி போய் சுவாமிகள் முன் நின்றார்.



சுவாமிகளுக்கு வந்ததே கோபம். உன்மனதில் வேறுபாடு என்கிற கல்மிஷம் புகுந்துவிட்டது. ஏன் பாதி பூஜையில் இங்கே வந்தாய்? மகா பாபம் செய்திருக்கிறாய் என் கண் முன்னாள் நிற்காதே திரும்பிப் போய்விடு என்று அவரைக் கடிந்துகொண்டாராம்.



ஆம். இரண்டு 'சந்திரசேகரர்களும்' ''சங்கர நாராயணன்'' எனும் ஒருவராகவேதான் இருந்தார்கள்

No comments: