Wednesday 5 June 2013

மாருதி மஹிமை!

”குரங்கு புத்தி’ என்றே சொல்வது வழக்கம். எது ஒன்றிலும் சித்தம் க்ஷணகாலங்கூட நிற்காமல் ஸதாஸர்வதா ஒன்று மாற்றியொன்றாகப் பாய்ந்துகொண்டே இருப்பதற்குப் பேர் போனது குரங்கு. துளிக்கூட கட்டுப்பாடே இல்லாமலிருப்பதற்கு உதாரணம் அதுதான். இதனால்தான் மனுஷ்யர்களான நம் சித்தமும் எதிலும் கட்டுப்பட்டு நிற்காமல் சாஞ்சல்யமயமாக இருக்கிறபோது ‘குரங்கு புத்தி’ என்கிறோம்.
ஹ்ருதய – கபிம் அத்யந்த சபலம்

என்று ஆசார்யாளே சொல்கிறார் (சிவானந்தலஹரி – 20).  ‘பரமேச்வரா! ரொம்ப ரொம்பச் சபலமான இந்த என்னுடைய மனக்குரங்கை பக்திக் கயிற்றாலே கட்டி உன் கையிலே பிடித்துப் போ ! வெறுமனே கபாலத்தை வைத்துக் கொண்டு பிச்சை கேட்பதைவிட இப்படி ஒரு வித்தை, கித்தை செய்து காட்டினாயானால், உனக்கும் நல்ல வரும்படி வருகிற பிழைப்புக் கிடைக்கும்; நானும் பிழைத்துப் போவேன்’ என்று பரமேச்வரனிடம் அவர் வேடிக்கையாக ப்ரார்த்திக்கும் போது, ‘ஹ்ருதய கபி’ அதாவது ‘மனக்குரங்கு’, என்கிற வார்த்தையைப் போட்டிருக்கிறார்.

வெள்ளைக்காரர்களும் ‘மன்கி மைண்ட்’ என்கிறார்கள்.
கட்டுப்பாடேயில்லாமல் ஸதா ஸர்வகாலமும் சரீரத்தாலோ, மனஸாலோ, அல்லது இரண்டினாலுமோ அலையாக அலைந்து கொண்டேயிருப்பதற்குக் குரங்குதான் ரூபகம்.

ஒரு பசு இருக்கிறது, யானை இருக்கிறது – இவை மாம்ஸம் சாப்பிடுவதேயில்லை, சாக உணவுதான் தின்கின்றன என்றால் அதிலே ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. ‘பசித்தாலும் புல் தின்னாது’ என்கிற ஒரு புலி சாக பக்ஷிணியாக மாறினால் அதுதான் ஆச்சர்யம் !

ஆஞ்ஜநேய ஸ்வாமியின் ஆச்சர்யமான பெருமை இதில்தான் இருக்கிறது. சாஞ்சல்யத்துக்கே (சஞ்சலத் தன்மைக்கே) பேர்போன கபியாக அவர் இருந்தபோதிலும், அதோடு மஹாபலிஷ்டராக இருந்த போதிலும், மனஸைக் கொஞ்சங்கூடச் சஞ்சலம், சபலம் என்பதேயில்லாமல் அடக்கி, புலன்களையெல்லாம் அடக்கி, இந்த்ரிய நிக்ரஹம் பண்ணி, சரீரத்தையும் ராமசந்த்ரமூர்த்தியின் தொண்டுக்கே என்று அடக்கி அடிபணிந்து அவர் இருந்ததுதான் அவருடைய மஹிமை.

இதிலே இன்னொரு ஆச்சர்யம், அவர் மனஸை அடக்கினார், பூர்ணமான இந்த்ரியக் கட்டுப்பாட்டோடு   இருந்தாரென்றால், எல்லாக் கார்யத்தையும் விட்டுவிட்டு எங்கேயோ குஹையிலே மூக்கைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்துவிடவில்லை. ஜன ஸமூஹ ஸம்பந்தமில்லாமல், கார்ய ப்ரபஞ்சத்தில் பட்டுக் கொள்ளாமல் எங்கேயோ ஒதுங்கி மூக்கைப் பிடித்துக் கொண்டு உட்காருபவர்கள் இந்த்ரியம், சித்தம் ஆகியவற்றை ஓடாமல் அடக்கிப் போட்டு விடலாம். ஆஞ்ஜநேயர் அப்படி இல்லை. ‘அஸாத்ய ஸாதகர்’ என்கிற அளவுக்குக் கார்ய ப்ரபஞ்சத்திலே செய்திருக்கிறார். ஸமுத்ரத்தையே தாண்டுவது, ஒரு மலையையே (ஸஞ்சிவி பர்வதம்) தூக்கிக் கொண்டு வருவது, ஒரு பெரிய வனத்தை (அசோகவனம்) அப்படியே நிர்மூலம் பண்ணுவது, ஒரு பெரிய பட்டணத்தையே (லங்காபுரி) தஹனம் பண்ணுவது-என்றிப்படிச் செய்தவர் அவர்.
மனஸ் கொஞ்சங்கூடச் சலிக்காதவர்; ஸ்ரீராமனின் பாதாரவிந்தத்தை விட்டு இந்தண்டை, அந்தண்டை துளிக்கூட ஆடாமல் மனஸை நிறுத்தியிருந்தவர். ஆனால் உடம்பால் அவரைப்போல ஓடி ஆடித் தொண்டு செய்த இன்னொருத்தர் இல்லை. ராம த்யானத்திலே அசையாத மனஸு; ராம கார்யத்திலே ‘இதைவிட வேகமில்லை’ என்னும்படியாக ஓடியாடுகிற உடம்பு !
ரொம்ப வேகமாக ஓடுவது எது?
‘வாயுவேகம், மனோவேகம்’ என்பார்கள்.
காற்றுதான் ஸ்தூலத்திலே பஹுவேகமாகச் செல்வது, ஸூக்ஷ்மத்திலே மனஸின் ஓட்டத்துக்கு மிஞ்சி எதுவுமில்லை.

‘காற்று மாதிரி இந்த மனஸு கிடந்து பறக்கிறதே ! காற்றைப் பிடித்து வைத்து அடக்க முடியாத மாதிரியே அல்லவா இந்த மனஸையும் கட்டுப்படுத்தி வைக்க முடியவில்லை?’ என்று அர்ஜுனன் முறையிடுகிறான்.
சஞ்சலம் ஹி மந: க்ருஷ்ண…….வாயோரிவ ஸுதுஷ்கரம் (கீதை 6-34)
பகவானும் ஆடாமல் அசையாமல் நிறுத்தப்பட்ட யோகியின் மனஸைக் கொஞ்சங்கூடக் காற்றேயில்லாத இடத்தில் ‘ஸ்டெடி’யாக ஜ்வலிக்கிற தீபத்தோடு உவமித்துத்தான் சொல்லியிருக்கிறார்:

யதா தீபோ நிவாதஸதோ நேங்கதே ஸேபமா….. (கீதை 6-19)
‘நிவாதம்’ என்றால் ‘காற்று இல்லாமல்’ என்று அர்த்தம். வாதம் என்றால் காற்று. வாதம்,வாயு இரண்டும் ஒன்றுதான். ‘வாயுப்பிடிப்பு’ என்றும் ‘வாத ரோகம்’ என்றும் ஒன்றையேதான் சொல்கிறோம்?

No comments: