Friday 22 March 2013

- ஜகத்குரு காஞ்சிகாமகோடி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்.

[ அக்டோபர் 2010-ல் கல்கியில் வெளியானது]

இப்போது வாழ்க்கையில் உங்களுக்கு நிம்மதியிருக்கிறதா ? ஏதோ அப்பப்போ கொஞ்சம் சந்தோஷம், திருப்தி ஏற்பட்டாலும், ஒன்று மாற்றி ஒன்று ஏதோ இழுபறிச் சக்திகளிடம் மாட்டிக்கொண்டே இருக்கும்படிதானே இருக்கிறது. ""ஆஹா''என்று,""அக்கடா''என்று, ""நமக்குக் கவலையே இல்லை'',பயமே வராது, துக்கமே வராது'''என்றெல்லாம் சொல்லும்படியான உறுதிப்படுத்திய சாந்தியாயிருக்கிறதா ? இல்லையோல்லியோ ?
இல்லை என்றுதான் பதில் சொல்வீர்கள். சரி, எதனால் இத்தனை சலனம், பறப்பு? இழுபறி, சிரமம் எதனால் ?
இதை யோசித்தீர்களானால்,யாராலும் க்ஷணம்கூடச் சும்மா இருக்காமல் ஏதாவது கார்யம் செய்துகொண்டே இருக்கத் தோன்றுவதாயும், இந்தக் கார்யங்களினால்தான் சாந்தியைக் குலைக்கிற எல்லாம் வந்து சேர்வதாயும் தெரியும். கார்யமே இல்லாவிட்டால்தான் சாந்தி என்பது இரண்டும் இரண்டும் நாலு என்கிற மாதிரி எவருக்கும் தெரியும். ""எதற்காகக் கார்யம் ?'' என்பது அடுத்த கேள்வி. இதை யோசித்துப் பாருங்கள். பார்த்தால் பலவிதமான ஆசைகளில் எதுவோ ஒன்றின் பூர்த்தியை முன்னிட்டுத்தான் ஒவ்வொரு கார்யமும் என்று புரியும். கோபத்தினாலோ மோஹத்தினாலோ வேறெந்த உணர்ச்சியினாலோ செய்கிற சகல கார்யங்களுங்கூட அந்த உணர்ச்சிகளுக்கெல்லாம் அடியிலே மூலமாகப் பதுங்கியிருக்கிற ஓர் ஆசையினாலேதான் என்று கொஞ்சம் தீர்க்கமாக ஆலோசித்துப் பார்த்தா புரிந்து விடும்.
சரி, கார்யத்தை நிறுத்திவிடலாமா என்று பார்த்தீர்களானால், அது லேசில் சாத்தியமில்லை என்பது தெரியும். ப்ரக்ருதி ( நேச்சர் ) ஒருத்தனை ஏதாவது கார்யத்தில் ஏவிக்கொண்டேதானிருக்கிறது என்று தெரியும். அதனாலேதான், சாஸ்திரம் இந்த ஸ்டேஜில் என்ன சொல்கிறதென்றால், ""கார்யம் செய்துவிட்டுப் போங்கள். ஆனால், ஆசை வாய்ப்பட்டுச் செய்வதைக் குறைத்துக்கொள்ளுங்கள். ஸ்வந்த ஆசைக்காகச் செய்வது என்றில்லாமல் உலக நலனுக்காக கார்யங்களைப் பண்ண ஆரம்பியுங்கள்'' என்கிறது.

No comments: