Sunday 10 July 2022

சிவ சிவ

 

இந்த வார்த்தை சிவன் கோவில் உள்ளே போகும்போது நியான் விளக்கில் பின்னே எழுதப்பட்டிருக்கும் சிவ சிவ வோ” அல்லது சிவனைப் பற்றி உபன்யாசத்தின் தொடக்கமோ இல்லை.

இது ஒரு ஆச்சர்யமான “சிவ சிவ”. நாம் பல நேரங்களில் ஒரு அதிர்ச்சியான/ஆச்சர்யமான ஒரு செய்தியைக் கேட்டவுடன் நாம் உடனே காதைப் பொத்திக்கொண்டு “சிவ சிவ போறும், சொல்லாதே” என்று சொல்வோமே, அது,

இதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது ? என்று கேட்டால் மூன்று முக்கியமான நூல்களில்/புராணங்களில் இந்த வரிகளைக் கையாண்டிருக்கும் அழகு. அதை தான் இப்போது பார்க்கப் போகிறோம்.

ஒன்று மூக பஞ்ச சதியில்

இரண்டாவது அப்பய்ய தீக்ஷிதரின் ஆத்மார்பண ஸ்துதியில்

மூன்றாவது, ஆச்சர்யமாக- நாராயணீயத்தில்.

அ) நாராயணீயத்தை முதலில் எடுத்துக் கொள்வோம்.

நாராயணீயத்தைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். ஸ்ரீ மத் பாகவதத்தின் ஸாரத்தைப் பிழிந்து கொடுத்து இருக்கும் இந்த அற்புதமான் கிரந்தத்தில், ஸ்ரீ. சுந்தர் குமார் அவர்கள் சொன்ன ஒரு விஷயம் சொல்கிறேன்.

வால்மீகி ராமாயணத்தில் “சுந்தர காண்டத்தில் எத்தனை பகுதிகளோ (chapters) அத்தனை பகுதிகளை வார்த்தைகளாக (ஒவ்வொரு பகுதியும் ஒரு வார்தையாக) ஒரு 4 வரியில் (35 வது சதகம், 3 வது செய்யுள்) முடித்து இருக்கிறார்.

இதெல்லாம் குருவாயூரப்பன் அருள் இல்லாமல் எப்படிச் செய்ய முடியும்  ? 

இதில், ராமாயணத்தைப் பற்றி நாராயண பட்டத்ரி சொல்லும்போது, ஒரு இடத்தில் சிவ சிவ வருகிறது.

நா.ப. சொல்கிறார்:   (35 வது சதகம், 9 வது ஸ்லோகம்)

உத்தர காண்டத்தில், ராமர் பட்டாபிஷேகம் முடிந்து, பதினாறாயிரத்திற்க்கு அதிகமான வருடங்கள் சுகமாக ஆட்சி செய்தீர்கள். பிறகு சீதாதேவி விஷயமான அபவாதச் சொல்லைக் கேட்டு, கர்ப்பிணியான அவளை பரித்யாகம் செய்தீர்கள் அல்லவா ?

சிவ சிவ -என்ன கொடுமை இது”

“மைதில்யாம் பாபவாசா....ஷிவ ஷிவ் கில தாம்” என்று சம்ஸ்க்ருத பதம் வருகிறது.

ஆ) இரண்டாவது அப்பய்ய தீக்ஷிதரின்- ஆத்மார்பண ஸ்துதி

தீக்ஷிதர் பற்றி முன்னுரை தேவையில்லை. அவரைப் பற்றி, காஞ்சி பெரியவர், ஒரு ஆடியோ ஒன்று வெளியீட்டு யூ ட்யூப் ல் இன்றும் இருக்கிறது. செம்மங்குடி மாமா “மௌளம் கங்கா, ஷஷாங்கௌ.......” என்று மாயமாளவ கௌளையில் ஒரு விருத்தம் பாடுவார், அது இவரது தான்.

அவர் தேவி மகாத்மியத்தை சுருக்கி, ஸாரமாக, துர்கா சந்திர கலா ஸ்துதி” என்று ஒன்று எழுதி இருக்கிறார். உத்தமாமான ஒரு கிரந்தம் இது.

அவர் “பைத்தியம் ஆக இருந்தபோது ஒரு 50 ஸ்லோகங்களை இயற்றி உள்ளார். ஏன்/எதற்க்கு பைத்தியம் ஆனார் என்பதை

https://www.youtube.com/watch?v=u0aJAkpMxic

இந்த ஆடியோவைக் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

இது “உன்மத்த பஞ்சாஷத்” என்றும் அழைக்கப் படுகிறது. இப்படி ஒரு அற்புதமான கிரந்தத்தை எழுதிவிட்டு, கடைசி ஸ்லோகத்தை இப்படி முடிக்கிறார்.

“இறைவா, ஒருமுகப்பட்ட மனதுடன், இந்த ஆத்மார்ப்பண ஸ்துதியை நான் இயற்ற வில்லை. கருணைக் கடலே !  இந்த அற்பமானவன் வார்த்தை அளவிலாவது சரணம் அடைந்துள்ளான் என்று நினைத்து என்னை ரக்ஷிப்பாயாக  !!!!

இந்த வரிகளை “உன்மத்த” நிலையில் எழுதி இருக்கிறார்.....!!!!!

இதையெல்லாம் படிக்கும்போது, நமக்கு தூக்கி வாரிப் போடுகிறது.

இதில், 8 வது ஸ்லோகத்தில் இப்படிச் சொல்கிறார்

“காமனை எரித்தவனே, எருக்கு, தும்பை முதலான மலர்களால், உன்னை அர்ச்சனை செய்து, அத்ன் பலனாக மோக்ஷ சாம்ராஜ்யத்தை எளிதில் அடையலாம் என்பதை அறிந்தும் கூட

 “சிவ சிவ”

எனது காலத்தை வீணாக்கி, ! ஓ ஆத்மரூபியே  !  ஆத்மத்ரோஹியாகி, இந்த்ரியங்களுக்கு அடிமையாகி, உன்னை மறந்து, நான் மேல் மேலும் அதோ கதியை அடைகிறேன்”

“எதத் ஜாநன் அபி “சிவ சிவ” வியர்தயன் காலம் ஆத்மன்”

இ) இது மூக பஞ்ச ஸதி- இதுவும் காஞ்சி பெரியவா சொன்ன ஆடியோ தான்.

ஆர்யா சதகத்தில் 48 வது ஸ்லோகம் – இதன் அர்த்தம் இப்படிப் போகிறது.

“ஸ்ரீ காமக்ஷி தேவியின் கடாக்ஷத்தினால் அனுக்ரஹிக்கப்பட்ட மகா புருஷன், காட்டையும், அரண்மனையும், சத்ருவையும், ஸ்நேகிதனையும், ஒட்டாஞ்சல்லியையும், யுவதிகளின் கோவைக்கனி போன்ற உதடுகளையும் சமமாக பார்க்கிறார்கள். 

சிவ சிவ

என்ன ஆச்சார்யம், என்ன ஆச்சர்யம்..... என்று முடிக்கிறார்.

“ஷிவ ஷிவ பஷ்யந்தி சமம்.......” என்று ஆரம்பிக்கிறது இந்த ஸ்லோகம்.

மகான்கள் கஷ்டப்பட்டு, நமக்காக சொன்ன விஷயங்கள்

நான் கொஞ்சம் யோசித்தேன். இதை தவிற, புராணங்களிலும், இதிகாசங்களிலும், பல இடங்களில் சிவ சிவ”பிரயோகப் பட்டு இருக்கலாம். உங்களுக்கும் பல இடங்கள் தோன்றலாம். எனக்கு தோன்றிய சில

1)  திரௌபதி மான பங்கப் படுத்தப்பட்ட போது

2)  கர்ணன் அடிபட்டு குற்றுயிரும், குலையுயிரும் ஆக இருக்கும்போது, “உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா ! கர்ணா ..... என்று பாடிக்கொண்டே “உன் தர்மத்தை தானம் பண்ணு” என்று கிருஷ்ணர் கேட்பாரே – அப்போது

3)  இறப்பே கிடையாது, நான் எப்போது இறப்பேன் என்று நான் தான் முடிவு செய்வேன் என்று ஒரு வரம் பெற்ற பீஷ்மர் அம்புப் படுக்கையில் கிடக்கும் போது, அந்த வலியிலும், நமக்குக் கொடுத்த விஷ்ணு ஸஹஸ்ரநாமம்,

4)  ராமாயணத்தில் பல இடங்களில்

5)  எல்லாவற்றிற்க்கும் மேலாக, அரிச்சந்திரன் கதைதான். வஷிஸ்டருக்கும், விஷ்வாமித்தருக்கும் நடந்த போட்டியில், பெரிய ராஜாவாக இருந்த ஹரிச்சந்த்ரனை, பொய் சொல்ல வைக்க வேண்டும் என்று கங்கணம் காட்டிக்கொண்டு, இந்த விஸ்வாமித்ரர் அவனை படுத்திய பாடு, ராஜாவை, கடைசியில், சுடுகாட்டில் வெட்டியானாக வேலை செய்ய வைத்து, இறந்து போன மகனையே, தன் மகன் என்று தெரியாமல், மனைவியை பிரிந்து பட்ட கஷ்டம் கொஞ்சமா நஞ்சமா.

இப்பவும் காசிக்குப் போய், அந்த “ஹரீஷ்சந்திர காட்” என்ற இடத்திற்க்கு போய் நின்று ஒரு நிமிடம் அரிச்சந்திரனை, நினைத்துப் பார்த்தால், கண்ணீர் விடாமல் இருக்க முடியாது.

முடிவில், மும்மூர்த்த்திகளும் அரிச்சந்திரனிடம் என்ன வரம் வேண்டும் என்று கேட்க- “வஷிஸ்டர் தான் ஜெயித்து விட்டோம் என்று, விஷ்வாமித்ரரை “அவமதிக்கக் கூடாது” என்று ஒரு வரம் கேட்டார் பாருங்கள்- அதுதான் எனக்கு சிவ சிவ.

நானாக இருந்தால், மினிமம், விஷ்வாமித்ரரை “ணங்” என்று ஒரு குட்டாவது குட்டி இருப்பேன்.

நிகழ் காலத்தில், நம்பி நாராயணன் உண்மைக் கதை கூட எனக்கு சிவ சிவ தான்.

 

 

No comments: