Tuesday 1 June 2021

கம்பன் – “தாயினும் தொழ தக்காள் மேல் தங்கிய.....”

 எனக்குத் தெரிந்த கம்பனை சிறிது “அசை” போடலாம் என்றுதான்..

இராவணன் இறந்து கிடக்கிறான்.  இராமன் இராவணனைப் பார்க்கிறான்.  இலங்கை வேந்தன் விழுந்து கிடப்பதைக் கண்டு சற்று மனம் கலங்குகிறான். அப்போது அவன் முதுகில் புண் இருக்கிறது.

’சீ சீ, இவன் புறமுதுகு காட்டியவனா, பெரிய வீரன் என்று நினைத்தேனே” என்று ஒரு நிமிடம் ராமன் அவனை இகழ்ந்து நோக்குகிறான். அப்போது விபீஷணன் அங்கு வருகிறான். “ராவணன் முதுகில் உள்ள தழும்புகள் எட்டு திசைகளிடம் உள்ள யானைகளிடம் சண்டை போட்டு, அந்த யானைகள் இராவணன் மார்பில் தங்கள் தந்தத்தால் குத்தி, அது முதுகின் வழியாக வந்த புண்ணே அன்றி, புற முதுகு புண் அல்ல” என்கிறான். ஒரு போதும் புற முதுகு கண்டவன் அல்ல. சுத்த வீரன் என்கிறான்.

கார்தாவீர்யன், வாலி இவர்கள் மிகவும் சிரமப்பட்டு, ராவணனை வென்றார்கள்.  இராவணன் தோற்றதற்க்குக் காரணம் அவன் பெற்ற சாபங்களே அன்றி, அவன் வீரம் இன்மை அன்று- என்கிறான் விபீஷணன்.

தாயினும் தொழத்தக்க சீதை மேல் அவன் வைத்திருந்த காதல் நோயும், உன் சினமும் அவனை வீழ்த்தியதே அன்றி அவன் கோழைத்தனத்தால் அல்ல.

கம்பன் பாடல்:

ஆயிரம் தோளினாலும் வாலியும் அரிதின் ஐய,

மேயின வென்றி விண்ணோர் சாபத்தின் விளைந்த; மெய்ம்மை     

தாயினும் தொழ தக்காள்மேல் தாங்கிய காதல்- தன்மை நோயும் நின் முனிவும், அல்லால், வெல்வரோ, நுவலர்பாலார்  

காமம் கொடியது  !!!

இதையே மண்டோதரியும் சொல்லி புலம்புகிறாள். அவனை ஒரு அம்பு கொன்றது என்றதைக் கேட்க அதிர்ச்சியும், ஆச்சர்யமும் அடைகிறாள். ஒடி வருகிறாள் யுத்த பூமிக்கு. அங்கு மாண்டு கிடக்கும் தன் கணவனப் பார்த்து கதறுகிறாள்.

ஒரு மானுடனுக்கு அவ்வளவு வலிமையா ? பிறகு தீர்மானமாய் சொல்கிறாள். ராவணனைக் கொன்றது:

அவன் ஜானகி மேல் கொண்ட காதல்

சூர்ப்பனகையின் மூக்கு

தசரதனின் கட்டளை (காட்டுக்குப் போகச் சொல்ல)

அதை ஏற்ற ராமனின் பணிவு

ஜானகியின் கற்பு

இந்திரனின் தவம்

மேலும் அவள் சொல்கிறாள். மன்மதன் விட்ட பாணம் தான் ராவணனைக் கொன்றது என்கிறாள். மன்மதன் ஒருவனுக்குத்தான், ராவணின் மேல் பாணத்தைப் போடுவதற்க்கு தைர்யம் இருக்கிறது. அந்த மன்மதன் மலர்க் கணைகளை தொடுக்காமல் இருந்தால், இராவணனுக்கு, சீதை மேல் ஆசை வந்திருக்காது” என்று சொல்கிறாள்.

அது தான் உண்மை என்றும் நமக்குத் தோன்றுகிறது. பெரிய வீரன் வீழ்ந்ததற்கு பதி விரதை மண்டோதரி சொல்லும் காரணத்தின் உண்மை – நமக்கு உணர்த்துவது. –காமம்

விபீஷணன், ராவணனின் உடலில் வீழ்ந்து கதறுகிறான். அவன் சொல்கிறான்- “எந்த விஷமும் உண்டால்தான் உயிரைப் பறிக்கும். ஆனால் இந்த சீதை என்ற விஷமோ கண்ணில் பட்டவுடனே உன் உயிர் பறிக்கப்பட்டு விட்டதே- என்கிறான்.

“அண்ணாவே அண்ணாவே, அசுரர்கள் தம் பிரளயமே, அமர்களின் எமனே, ஜானகி என்ற பேரு நஞ்சு உன்னைக் கண்ணால் நோக்கவே போக்கியதே உயிர்” – என்கிறார் கம்பர்.

விபீஷணன் மேலும் சொல்கிறான் –

வீரத் திருமகளின் அருள் பெற்று, எல்லா வெற்றியையும் பெற்றாய்.

கலை மகளை வெற்றி கொண்டு ஞானம் எல்லாம் பெற்றாய்.

புகழ் மகளை அடைந்து எல்லாப் புகழும் பெற்றாய்             

இத்தனை புகழை அடைந்த நீ, தெய்வக் கற்பின், பேர் மகளை தழுவ நினைத்து அதனால் உயிர் நீத்து, நில மகளை அனைத்துக் கிடந்தாயோ” என்று அழுகிறான்

No comments: