Friday 8 May 2020

எடுக்கவோ கோர்க்கவோ


மகாபாரதம் ஒரு சிக்கலான ஒரு காவியம். பல பெயர்கள். பல கிளைக் கதைகள். வியாச முனிவரின் சொந்தக் கதையைப் படித்தாலே தலை சுற்றும். சிகண்டி ஏன் சிகண்டினியாக மாறினாள். ? பீஷ்மரை வைத்து ஒரு வருடத்திக்கு, prime time ல் ராமாநந்த சாகரின் ராமாயணத்திற்கு முன்பு ஒரு சீரியல் ஓட்டலாம்.  ஏன் –எதற்கு-எப்படி நிறைய உண்டு. இப்போது தலைப்புக் கதைக்கு வருவோம்.

மகாபாரதம் படித்தவர்களும், கொஞ்சம் தமிழில் ஆசை உள்ளவர்களுக்கும், அட.. கர்ணன் படம் பார்த்தவர்களுக்கும், (சிவாஜி-சாவித்திரி-அசோகன்) மேற் சொன்ன வரிகள் புரிந்திருக்கும்
வில்லிப்புதூரார், எப்படி தன் பாடலில் இந்த இடத்தைக் கையாளுகிறார் என்று பார்க்கலாம்.

“சட்” என்று புரியாதவர்களுக்கு, சுருக்கமாக, கதையைப் பார்க்கலாம்.  கதை தெரிந்தவர்கள் அடுத்த பாராவை “ஸ்கிப்” செய்து விடலாம்

குந்தி போருக்கு முன் கர்ணனை சந்திக்கிறாள். அதற்கு முன்பு....

கிருஷ்ண பரமாத்மா, பாண்டவர் தூது முடிந்தபின், கர்ணனை, துரியோதனிடம் இருந்து பிரிக்க வேண்டும், அப்படி பிரிக்க முடியாவிட்டால், செயலிழ்க்கவாவது செய்ய வேண்டும் என்று குந்தியைப் பார்க்க வருகிறார். குந்தியிடம் கர்ணன் பிறப்பைப் பற்றிச் சொல்லி, “அவன் உன் மகன்” என்று சொல்லி குந்தியைப் பதற வைக்கிறார். கர்ணனைப் போய் பார்த்து உண்மையைக் கூறுமாறும், பாண்டவர் பக்கம் வந்து விடுமாறும் கூறச் சொல்கிறார்.  அப்படி அவன் மறுத்தால் (செஞ்சோற்றுக் கடன்). அவனிடம் இரண்டு வரங்களைக் கேட்கச் சொல்கிறார்.

இரண்டு வரங்கள் என்ன என்பதை நான் கூறப்போவதில்லை. இந்த கட்டுரைக்கு அது அவசியம் இல்லை.

குந்தி சந்திக்க வருகிறாள்.  கர்ணனிடம் தான் உன் தாய், நான்தான் என்று கூறுகிறாள்.  நிலை குலைந்து நிற்கும் கர்ணனிடம், குந்தி பாண்டவர் பக்கம் வந்துவிடுமாறு கூறுகிறாள்.

கர்ணன் மறுக்கிறான், அவன் பாண்டவர் பக்கம் ஏன் வரமாட்டேன் என்பதற்கு ஒரு காரணம் கூறுகிறான். அதுதான் இந்த “தலைப்பு”

இப்போது வில்லியாரின் பாடலைப் பார்ப்போம்

மடந்தை பொன்-திரு மேகலை மணி உகவே மாசு

அறத் திகழும் ஏகாந்த இடம்தனில் புரிந்தே நான் அயர்ந்து இருப்ப

"எடுக்கவோ?கோக்கவே?'" என்றான்; திடம் படுத்திடு வேல் 

இராசராசனுக்குச் செருமுனைச் சென்று, செஞ்சோற்றுக்

கடன் கழிப்பதுவே, எனக்கு இனிப் புகழும், கருமமும்,

சில வரிகளுக்கு அர்த்தம் பார்ப்போம்:

பொன்-திரு மேகலை மணி- இடையில் கட்டி இருந்த மேகலை என்ற பொன் ஆபரணத்தில் உள்ள மணிகள்

உகவே – உதிர்ந்து விழ

மாசு அறத் திகழும் ஏகாந்த இடம் தன்னில் – (நான் மிகவும் ரசித்த வரிகள்) – கர்ணனும் பானுமதியும் தனியாக இருக்கிறார்கள். ஆனாள், அந்த குற்றமோ, தவறோ நிகழாத இடம்.

மற்ற வரிகள் எளிமையானவை, அர்த்தம் சொல்ல வேண்டிய அவசியமில்லை

சரி – இப்போது விஷயத்திற்கு வருவோம் – எடுக்கவோ கோர்க்கவோ என்று துரியோதனன் கேட்கிறான் !

எடுப்பது சரி, எதற்குக் கோக்கவேண்டும் ?

முத்தில் நூலைக் கோர்க்கும்போது, கை நடுங்காமல் இருக்க வேண்டும். கை எப்போது நடுங்கும். ஆத்திரத்தில்,  கோபத்தில் நடுங்கும்.

கோபம் கொள்ளக் கூடிய, ஆத்திரம் அடையக் கூடிய ஒரு நிகழ்வு நடந்து இருக்கிறது. ஆனால் துரியோதனுக்கு, ஆத்திரமும் இல்லை, பயமும் இல்லை. நிதானமாக இருக்கிறான். கர்ணனின் மேல் 

அவ்வளவு நம்பிக்கை. அதனால், “கோர்க்கவோ” என்றான்.

இரண்டு அர்த்தம் கொள்ளலாம்- ஒன்று, கர்ணனோ, பானுமதியோ அதிர்ச்சியில் உறைந்து நிற்கின்றனர், எதிர் பாராத இந்த நிகழ்ச்சியால் – துரியோதனன் தங்களை தவறாக நினைத்து விடுவானோ என்று (அவர்களால் கோர்க்க முடியாது என்பது மறைமுக கருத்து)

“நீங்கள் விளையாடுங்கள், நான் கோர்த்துத் தருகிறேன்” என்று துரியோதனன் சொன்னது, தன் உயிர் நண்பனிடம், தன் மனைவியிடமும் அவன் வைத்த நம்பிக்கை.

இதை கர்ணன் தன் அம்மாவிடம் சொன்னது இன்னும் மேன்மையானது. இது போன்ற ஒரு “ situation” ஐ இன்னொரு பெண்ணால் தான் புரிந்து கொள்ள முடியும். அதுவும் தன் தாய் மிக நன்றாகப் புரிந்து கொள்ள முடியும் என்பதால் – சொல்கிறான்.

ஒரு வரி- இரண்டு அர்த்தம். வில்லியாரின் வரிகள் அபாரம்.

கர்ணன் படம் திருப்ப பார்க்கும்போது – இந்த சீனைப் பாருங்கள். “சிவாஜியில் அதிர்ச்சியும், சாவித்திரியின் பதற்றமும், அசோகனின் கனிந்த பார்வையும் – அபாரமாக இருக்கும்.





No comments: