Monday 24 December 2018

எழுதும் பணியே பணியாய் அருள்வாய் - 2) "தேதியூர் சாஸ்த்ரிகள் நூற்றாண்டு விழா மலர்"


முன்னுரை:
தேதியூர் சாஸ்த்ரிகளின் நூற்றாண்டு நினைவாக “பிரம்ம வித்யோபாக்யான சதகம்” என்று ஒரு புத்தகம் கிடைத்தது. Published in 1984

இவருடைய நூற்றாண்டு விழாவில் (1984), தேதியூர் மாமாவின் ஞாபகார்த்தமாக, வேதம், உபநிஷத், புராணம், இதிகாசங்களில் இருந்து, உபாக்யானங்கள் மூலம் போதிக்கப்படும் விஷயங்களை, மிகச் சிறந்த பண்டிதர்களைக் கொண்டு “பிரம்ம வித்யோபாக்யான சதகம்” என்ற ஒரு புத்தகம் வெளியிட்டு இருக்கிறார்கள்.

32 பண்டிதர்களைக் கொண்டு 1௦௦ வேதாந்த விஷயங்களை தயாராக்கி, இதை சம்ஸ்க்ருதத்திலும், தமிழிலும், எழுதி மேற் சொன்ன புத்தகத்தை வெளியிட்டு, அது எனக்குக் கிடைத்தது.

தேதியூர் சாஸ்த்ரிகள், மஹா பெரியவாளின் பரிபூர்ண ஆசியைப் பெற்றவர். பெரிய மஹான். தன் வாழ் நாள் முழுவதும், வேதாந்த சாஸ்த்ரத்தை அப்யாசம் செய்தவர். சென்னையில் அபிராமபுரத்தில், குருகுலம் என்று (ஆதி சங்கரருக்கு) ஒரு ஆலயம் ஸ்தாபனம் செய்து, வேத சம்ரக்ஷனை செய்தார்.  இப்போதும் மிகவும் பிரமாதமாக, சாந்நித்யம் கொஞ்சம் கூட குறையாத ஒரு கோவிலாக இன்றும் இருக்கிறது.

இந்தப் புத்தகம், திருவானைக்கோவிலில், இருந்த, மஹா பெரியாவளின், அணுக்கத் தொண்டரான,  மறைந்த A. சிவராமக்ருஷ்ண சாஸ்த்ரிகளிடம் இருந்து, என் தந்தைக்கு வந்து,  என் தந்தையிடம் இருந்து எனக்கு வந்தது   ஸ்ரீ. சிவராமக்ருஷ்ண சாஸ்த்ரிகள், ஜனாபதியிடம் இருந்து, சம்ஸ்கருதத்திற்காக பரிசு வாங்கியவர். என் தம்பியின் மாமனார் என்பதில் எனக்கு பெருமை.

ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி பெரியவா, இதற்க்கு “ஸ்ரீ முகம்” எழுதும்போது= “இந்த செயல் – அதாவது 32 பண்டிதர்களை வைத்து, தினம்தோறும் உபன்யாசங்கள் மூலமாக, நல்ல விஷயத்தை கேட்பதற்க்கு, ஏற்பாடு செய்து உள்ளார்கள்.  நல்லதை கேட்பதன் மூலம், நமக்கு இரண்டு பங்கு புண்ணியம் கிடைக்கிறது. சொல்பவர்களுக்கு, ஒரு பங்கு புண்ணியம் தான் உண்டு. இது எப்படி ?
நல்லது சொல்வதைக் கேட்டால், நாம் கேட்பதற்கு, ஒரு பங்கு புண்ணியம் தான் உண்டு.  நன்றாக சொல்வதைக் கேட்பதால், சொல்பவரும் நன்கு ஆலோசித்து, நல்ல விஷயங்களை நமக்குத் தெளிவாக எடுத்துச் சொல்வார். நல்ல விஷயம் சொல்லத் தூண்டிய புண்ணியமும் கேட்பவர்க்குக் கிடைக்கும்.

இதை எழுதுபவருக்கு எத்தனை பங்கு புண்ணியம் என்று எனக்குத் தெரியவில்லை ?!?  ஒரே விடை- மஹா பெரியவாதான்.

இந்தப் புத்தகத்தில்  உள்ள சில கட்டுரைகள நான் இந்தப் பதிவில் வெளியிடுகிறேன். ஏன் இதை செய்கிறேன் ?, என்ன பயன் ?, என்னை யார் தூண்டி விட்டு செய்யச் சொல்கிறார்கள் ?- எனற எல்லா கேள்விகளுக்கும் ஒரே பதில், “மகா பெரியவா” தான்.  இதைப் படிப்பவர்களும், மஹா பெரியவாளின் பரிபூர்ண ஆசீர்வாதம் உண்டு என்பது நிச்சயம்.

1.       இக்ஷ்வாகு, மனு- சம்வாதம் (உரையாடல்)

இக்ஷ்வாகு, மனு உரையாடலை, ராமனுக்கு, வசிஷ்டர் கூறுகிறார்.- “ஓ
ராமா, உங்கள் வம்சத்தின் கூடஸ்தரான இக்ஷ்வாகு, ஒரு சமயம் தனிமையில், மனதில், இந்த உலகிற்க்கு காரணம் என்ன ? என்று ஆலோசித்து ஒன்றும் அறியாமல், பிரம்ம லோகத்தில் இருந்து மனு வந்த போது, அவரை, இதற்கு காரணம் கேட்டான்.

மனு இக்ஷ்வாகுவை பாராட்டி, “இந்த உலகம் பரமார்த்தத்தில், உண்மை நிலையில் இல்லாதது, அனால் கண்ணாடி உண்மையாக இருப்பதால், பிரதி பிம்பமும் இருப்பது போல், தோன்றுகிறது அல்லவா ! அதே போல், பரமாத்வாவின் சத்தியத் தன்மையினால், அதை பிரதிபலிக்கும் உலகமும் சத்யம் போலத் தோன்றுகிறது. ஆனால் தானாகவே சத்தியமாக இருக்கும் தன்மை உலகிற்கு இல்லையாதலால், அது மித்யை. (அசத்தியம்)

எங்கும் நிறைந்த பரமாத்மா, தன் மாயா சக்தியால் அக்ஞானிக்கு சிருஷ்டியை உண்டு பண்ணியும், ஜ்ஞானிக்கு, சம்ஹார ரூபமான வித்யா சக்தியால் எல்லாவற்றையும் சம்ஹரித்தும், கூடஸ்தமான, அத்வயமான, ஆத்மாவாக, எப்பொழுதும் இருக்கிறார். எங்கும் நிறைந்த பிரகாசமான ஆத்மா தெரியாமல் இருப்பதும், இல்லாததும் மேலும் பிரகாசமற்ற ஜகத் (உலகம்) நன்கு தெரிவதுமான ஆச்சர்யம், சேர முடியாததைச் சேர்த்து வைப்பதில்  சாமர்த்தியம் வாய்ந்த “மாயையின்” பலத்தால்தான்.

அப்படியானால், எந்த பாவனையால் ஆத்மாவை அறிந்து சுகமாக இருக்கலாம் என்றால், “கண்ணாடியில் தோன்றும் பிம்பத்தைப் போல், உலகின் தோற்றம், “ப்ராதிபாஸிகமே”, வாஸ்தவமல்ல, என்று பாவனை செய்து, உலகு எல்லாம் “சூன்யம், ஆலம்பனமற்ற சித்ரூபம் தான்” என்று பாவனை செய்ய வேண்டும்.

ஒ புத்ரனே, நீ முதலில் விவேக விலாசமடைந்து, சமாதியினால், வெளி உலகை மறந்து, பூரணமாயும், பயமற்றதுமான, சைதன்யமாகி, சரீரத்தை அடைவாயாக ! என்று யோக பூமிகைகளின் அபியாஸத்தினால், உண்டாகும் பயனைக் கூறி, அப்பயனை அடையும், எழு லோக பூமிகைகளையும் கூறி, மோக்ஷமென்பது, ஒரு தேசமோ காலமோ அல்ல, அஹம் என்று தேஹம், முதலியவைகளில், உண்டான பிரம்மஞானத்தினால் விலகுவது தான். அப்படிப்பட்ட, ஞானம் அடைந்த ஜீவன் முக்தனை பூஜிக்க வேண்டும். நமஸ்கரிக்க வேண்டும். அவனுடைய பக்தியினால் ஞானம் உண்டாகி, எந்த ஸ்தானத்தை அடைகிறானோ,  அதை யக்ஞ்ம் முதலியவைகளால் அடைய முடியாது.......

என்று கூறி மனு பிரம்ம லோகம் சென்றார்........

என்னுரை- இதை ஒரு மூன்று தடவையாவது படித்தால் தான் ஏதோ புரிவது போல் இருக்கும்.  

மனு மகரிஷியின் வாக்கியமல்லவா !!!. அது அப்படிதான் !!!!

No comments: