Thursday 7 April 2016

What is the use of "VidhyA" (Education) - Interesting Tamil Article

பார்த்தும், கேட்டும், படித்தும், உணர்ந்தும் நமக்குள் செல்கிறது கல்வி. அந்தக் கல்வி நம்மிடமிருந்து அறிவாக வெளிப்படவேண்டும்! அதுதான் கல்வியின் சிறப்பு.  சரியாகச் சொல்வதானால் கல்வியின் இயல்பே அதுதான். தமிழர்களைப் பொறுத்தவரை மிகவும் திட்டமிட்ட வாழ்க்கையை மேற்கொண்டிருந்தார்கள் என்றே  சொல்லலாம். முதலில் தாங்கள் வாழ்ந்த நிலத்தை ஐந்து வகைகளாகப் பிரித்தார்கள். அவை: மருதம், குறிஞ்சி, முல்லை, நெய்தல், பாலை. அந்தந்தப் பகுதிகளில்  அந்தந்த இயற்கைக்கேற்ப தங்களுடைய வாழ்க்கையை அவர்கள் அமைத்துக்கொண்டார்கள். புவியியல் ரீதியான நிலங்களில் ஒன்றுக்கொன்று  வேறுபட்டிருந்தாலும் தங்கள் வாழ்க்கையை அதற்கேற்ப அனுசரித்து நடத்திக்கொள்ளும் மனப்பாங்கு அவர்களுக்கு இருந்தது. அந்தந்த சூழ்நிலைகளுக்கேற்ப  குடியிருப்புகளைக் கட்டிக்கொள்வதும், அந்தந்தப் பகுதிகளின் விளைபொருட்களை உணவாக உட்கொள்வதுமாக தங்களை அவர்கள் பொருத்திக்கொண்டார்கள்.  அடுத்து, அவர்கள் தங்கள் சுவாசத்துக்கு, அதனால் உயிர்நிலைத்தலுக்கு உதவிய காற்றை நான்காக வகுத்தார்கள் - தென்றல், வாடை, கீழைக்காற்று,  மேலைக்காற்று.

மென்மையாக வீசும் தென்றல், காலத்திற்கேற்ப குளிர்ப்பதம் மிக்கதாக தன் தன்மையை மாற்றிக்கொள்ளும். அதேபோல கிழக்கு, மேற்குத் திசைகளிலிருந்து  மழையையும் சுமந்துவந்து நமக்குப் பேரானந்தம் அளிக்கும். இந்தக் காற்றுவகைகளை அனுபவித்ததோடு அவற்றோடு ஒன்றி, அவற்றின் தன்மையை தம்  தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொண்டும் வாழ்ந்தார்கள். இயற்கைக்கு அடுத்து கருத்துப் பரிமாற்றத்துக்கு மொழிகளை உருவாக்கிக்கொண்டார்கள். வெறும் பேச்சாக  அது அமைந்துவிடாமல், கேட்போரை ஈர்க்கும் வண்ணமாகவும் அமையவேண்டும் என்றும் தீர்மானித்தார்கள். அதனால் அதனை இயல், இசை, நாடகம் என்று  முக்கலைகளாக வகுத்து மொழியின் மேன்மையை உலகெங்கும் பரப்பினார்கள்.

அடுத்து சொந்த வாழ்க்கையை இரண்டாக வகுத்துக் கொண்டார்கள். அகவாழ்க்கை, புறவாழ்க்கை. தான், தன் குடும்பம், தன் உறவினர் என்று தன் சொந்த வாழ்க்கை  ஒருவகை; சமூகம், சமுதாயம், பொதுநலன் என்ற புறவாழ்க்கை இன்னொருவகை. இப்படி ஐந்து நிலங்கள், நான்கு காற்றுகள், மூன்று கலைகள், இரண்டு  வாழ்க்கை அமைப்பு என்று வகுத்துக்கொண்ட அவர்கள், ஒழுக்கத்தை மட்டும் ஒன்றாகவே எண்ணி வாழ்ந்தார்கள். நல் வாழ்க்கைக்கு நல் ஒழுக்கம் ஒன்றுதான்.  இதில் பிரிவு, பகுதி என்று கிடையாது. இந்த நல் ஒழுக்கம் எப்படி அமையும்? அன்பால்தான் அமையும். மனித இனத்துக்குள்ளேயே பாகுபாடு இல்லாமல், ‘யாதும்  ஊரே, யாவரும் கேளிர்’ என்ற ஒற்றுமை மனப்பான்மையோடு வாழும் சீரிய வாழ்க்கைக்கு அன்புதான் அடிப்படை.

இந்த அன்பைப் பாரபட்சம் இல்லாமல் பரப்பினால் உலகெங்கும் அமைதி தானாக நிலவும். இப்படி அன்பு செலுத்துவதற்கு ஓர் உந்து சக்தி வேண்டும். அது என்ன  சக்தி? கடவுளின் அருள்தான் அது. அதாவது, தான் வாழும் நிலத்தைப் பகுதிப்படுத்தி, காற்றை வகைப்படுத்தி, மொழியைக் கலையாக்கி, இருவகை வாழ்க்கையில்  ஈடுபட்டு, நல்லொழுக்கத்தை மேற்கொண்டதாகிய கல்வி, அறிவாக வெளிப்பட அன்பு தேவை. அந்த அன்புக்கு இறைவன் அருள் தேவை. என்ன அற்புதம்  பாருங்கள், கல்வி, இறையருளில் நிறைவடைகிறது! இதைத்தான் திருவள்ளுவர் சொன்னார்:

‘கற்றதனாற் ஆயபயன் என்கொல் வாலறிவன்
நற்றாள் தொழார் எனின்’

கற்றதன் பயனே எல்லாம் வல்ல, எல்லாம் அறிந்த இறைவனின் தாள்களைத் தொழுவதே என்று வெகு அழகாக  அறுதியிட்டுக் கூறியிருக்கிறார் வள்ளுவர்.

- இந்திய விவகாரங்களுக்கான சிறப்பு அமலாக்கப் பிரிவு, மலேசிய பிரதமர் துறை (SITF), மற்றும் சென்னையிலுள்ள கலைஞன் பதிப்பகம் இரண்டும்  இணைந்து, கோலாலம்பூர்-சென்னை தமிழ் எழுத்தாளர் மாநாடு மற்றும் அதைத் தொடர்ந்து சுற்றுலா என ஏற்பாடு செய்து தமிழ் எழுத்தாளர்களை சமீபத்தில்  மலேசியா அழைத்துச் சென்றார்கள். மாநாட்டில் மலேசிய அரசின் இளைஞர்-விளையாட்டுத் துறை துணையமைச்சர் மாண்புமிகு டத்தோ எம். சரவணன் அவர்கள்  ஆற்றிய உரையிலிருந்து ஒரு பகுதி இது.

No comments: