Sunday, 28 December 2025

செம்மங்குடியில் சஹஸ்ர தீபம்

 

தீபத்தைப் பற்றி:

தீபம் என்றால், நமக்கு கார்த்திகை தீபம் தான் ஞாபகம் வரும். சௌந்தர்ய லஹரியில் பகவ்த் பாதர்,

அம்பாளின் கடாக்ஷ மகிமையைப் பற்றிப் பேசும்போது, (57)  

புண்ணியம் செய்தவனோ, பாபாம் செய்தவனோ எல்லா ஜீவன்களும் உனக்கு சமம் அல்லவா ? சந்திரனின் கிரகணங்கள், காட்டிலும், வீட்டிலும், சமமாகத்தானே பிரகாசிக்கிறது. அதே போல் மஹா பாபியான எனக்கு உன் கடாக்ஷத்தின் பலனை எனக்குக் கொடு என்கிறார்.

தீபம்/சந்திரனின் ஒளி எல்லாம் ஒன்றுதானே !

தீபம் என்பது எல்லோரும் பார்க்க, அதன் மூலம் ஒவ்வொருவருக்கும் தீப வடிவில் இறைவன் காக்ஷி கொடுக்கிறான் என்பது சத்தியம்

இறைவனை ஜோதி வடிவாக கண்டார்கள் ஆழ்வார்கள். நாமாழ்வார் திருவாய் மொழியில்

“ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது

தேசமோ திருவேங்கடத்தானுக்கு ?

நீசனேன் நிறைவு ஒன்றுமில்லேன் என் கண்

பாசம் வைத்த பரஞ்சுடர் ஜோதிக்கே”

திருவேங்கடமுடையானை ஜோதி உருவில் கண்டு முறையிடுகிறார்.

சொனக மகரிஷி, “கார்த்திகை மாதத்தில் விஷ்ணு சந்நிதியில் பக்தியுடன் ஒருவன் விளக்கு ஏற்றினால் ஏற்படும் புண்ணியம் அளப்பரியது” என்கிறார்.

காஞ்சீபுரத்தில் உள்ள பெருமாளுக்கு “தீபப் பிரகாசர்” என்று பெயர்..

தீப மங்கள ஜோதி நமோ நம என்று முருகனுக்கு ஆரத்தி காட்டும்போது சொல்லும் ஸ்லோகம்

செம்மங்குடியில் ஸஹஸ்ர தீபம்

ஒரு காரியம் எடுத்தால் அதை முழுவதும் திருப்தியாக செய்வதில் செம்மங்குடி மக்களுக்கு இணையே இல்லை. நாம் செம்மங்குடியில் நடந்த விஷயங்களைக் கொண்டாட வேண்டும்.  கொண்டாடும் தருணம் இது. செம்மங்குடியில் முதல் முறையாக பெருமாள் கோவிலில் ஸஹஸ்ர தீபம் ஏற்றி நம் கிராமத்திற்கும், சுற்றி உள்ள கிராமத்திற்கும் பெருமை சேர்த்திருக்கிறார்கள்.

ஒரு சிறிய கிராமத்தில் உள்ள ஜனங்களை வைத்துக்கொண்டு நம் பெருமாள் கோவிலில் சஹஸ்ர தீபம் என்ற 1016 விளக்குகளை ஏற்றி ஒரு சாதனை செய்வது என்பது சாதாரண விஷயம் இல்லை

கார்த்திகை தீபம் டிசம்பர் ஒன்றாம் தேதி நடக்க, அதனைத் தொடர்ந்து கைசிக ஏகாதசி டிசம்பர் 15 அன்று நம் செம்மங்குடியில் சஹஸ்ர தீபம்.

எனக்கு, ஆனந்தவல்லிக்கு கொடுக்கும் ஒரு முக்கியத்துவத்தை, நம் பெருமாளுக்கு கொடுக்கவில்லையே என்ற குறை ஒன்று. அது ஸ.தீ மூலமாக எனக்கு தீர்ந்து விட்டது

முதல் தடவையாக நம் பெருமாளுக்கும் பண்ண வேண்டும் என்று தோன்றிய நம் அசேஷ மஹா ஜனங்களுக்கு, குறிப்பாக, ஸ்ரீ. கெளரி ஷங்கர், ஸ்ரீ. ராஜகோபாலன், மற்றும் அவர்கள் சஹோதரிகள்  வெங்குட்டு மற்றும் பலருக்கும் நம் பெருமாள் சகல சௌபாக்யங்களும் கொடுக்கட்டும்

பண உதவி செய்து விடலாம் ஆனால் இந்த பெரிய கைங்கர்யம் செய்வதற்கு ஆள், படை வசதிகள் ? சுற்று வட்டாரத்தில் இருந்து திரளாக வந்திருந்து மற்றும் மாதாஜி அவர்களுடைய பள்ளி குழந்தைகள், பலர் வந்து கலந்து கொண்டு விளக்கு ஏற்றி கொண்டாடியது மிகவும் சிறப்பு.

நாம் ஒரு அடி இறைவனை நோக்கி எடுத்து வைத்தால் போதும், இறைவன் பல அடிகள் எடுத்து நம்மை ரக்ஷிக்க வருவான் என்பதை இந்த ஒரு வைபவம் மூலம் நமக்கு அந்த இறை புரிய வைக்கிறது

கோவில் மேலே ஏற்றுவதற்கு கொஞ்சம் ஸ்ரமப்பட்டதால், பிராகாரத்தை சுற்றி ஏற்றிக் கொண்டாடி இருக்கிறார்கள்.

ஒரு ராம நவமி உத்சவம் போன்று, சித்ரா பௌர்ணமி போன்று, புரட்டாசி சனிக்கிழமை போன்று, இந்த கைங்கர்யமும் வருடா வருடா நடக்கவேண்டும் என்று அந்த பெருமாளைப் பிரார்த்திப்போம்.

Monday, 24 November 2025

பாரதீய வித்யா பவனில் ஸ்ரீ. விஜய் சிவா......NOV 2025

  

ஸ்ரீ. விஜய் சிவா

ஸ்ரீ. மனோஜ் சிவா- மிருதங்கம்

ஸ்ரீ சஞ்சீவ்– பிடில்

ஸ்ரீ. எஸ். சுனில் குமார்- கஞ்சிரா

Bharatiya Vidhya Bhavan – Nov 2025

விஜய் சிவா எனற ஒரு மாபெரும் கலைஞன், நம் கர்நாடக சங்கீதத்தின் கர்வம். எந்த ஒரு நிர்பந்தத்திர்க்கும் உட்படாத அற்புதம்.  டி,கே, ஜெயராமன், பட்டம்மாள் போன்ற மாபெரும் கலைஞர்களின் வார்த்தெடுத்த தங்கம். நீ ஒழுங்காக பயிற்சி பெற்று, பாடினால், விருதுகள் உன்னைத் தேடி வரும் என்பதற்கு இவர் சாட்சி.  இந்த கணீர் குரல் என்னை எப்போதும் மயக்கும் குரல். கணீர் குரலில், மதுரை சோமு, மஹா. சந்தானம், சஞ்சய், வரிசையில் இவரையும், பரத் சுந்தரையும் தாராளமாக சேர்க்கலாம்.

பா.வி.பவனில் அவர் கச்சேரி.

“சதா பால ரூபாபி” என்ற சுப்பிரமணிய புஜங்க ஸ்லோகத்தை பாடி, தரங்கத்தை எடுத்தார்.  ஸ்ரீ. நாராயண தீர்த்தர், மிகுந்த வயிற்று வலியோடு, நடுக்காவேரி என்ற இடத்தில் உறங்க (இது கண்டியூர்-திருக்காட்டுப்பள்ளி பாதையில் உள்ளது) அங்கு இருந்த பிள்ளையார், அவர் கனவில் தோன்றி, “காலையில் நீ யார் முகத்தில் விழிக்கிறாயோ, அதன் பின்னால் செல்”. என்று கூற, காலையில் ஒரு வராகம் (வெள்ளைப் பன்றி) அவர் முன் தோன்ற, அதன் பின்னே சென்று வரகூர் என்று இப்போது அழைக்கப்படும் பூபதி ராஜபுரம் சென்று, வராஹம் மறைய, அங்கு தங்கி, தரங்கம் பாட, வயிற்று வலி தீர்ந்தது,- என்று இப்போதும் புகழ்ந்து சொல்லப்படும் ஒரு சேதி. அந்த பிள்ளையார் மேல் பாடிய பாட்டு தான் இது.

இதில் 4 சரணம் உண்டு. அதில் “பாம்புகளை மாலையாக கொண்ட சிவன் என்ற கடலுக்கு சந்திரனாக இருப்பவனே” என்ற ஒரு வரி வருகிறது. கற்பனை வளம். கண்ணனை ஸ்ரீ. நாராயண தீர்த்தர், தன்னுடைய தரங்கங்களால் கொண்டாடும் விதம் மெய் சிலிர்க்கும். எனக்கும் வரகூர் பெருமாள் குல தெய்வம் என்பதாலும், நாங்கள் அடிக்கக்டி தரங்கம் பாடுகிறோம் என்பதாலும் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் இது

பிறது, சக்ரவாகத்தை எடுத்தார். சுகுணமுலே என்ற த்யாகராஜரின் இன்னொரு அற்புதமான கிருதி. “ஸ்ரீ நாயக க்ஷமியுஞ்சிமு” வில் நிரவல் எடுத்து, ஸ்வரம் பாடி முடித்தார்.

பிறகு, ஸ்ரீ ராகத்தை எடுத்து, கொஞ்சம் ராகம் பாடி, ஸ்ரீ வரலக்ஷ்மி நமஸ்துப்யம் என்ற தீட்சிதர் பாட்டை எடுத்து பாடினார்.  ராகத்தில் கொஞ்சம் குரல் படுத்தியது. வயலின் அதை சரி கட்டினார். “பாவனா பேத ச்துரே” ல் ஸ்வரம் பாடி முடித்தார். சஞ்சீவ், அவர் ஸ்வரத்திற்கு, “எந்தரோ மஹானுபாவுலு” வாசித்துக் கொண்டு இருந்தார் 

பிறகு வராளியை எடுத்தார். நான் இன்னொரு பஞ்ச ரத்னமா என்று நினைக்க “ஈவண்டி தெய்வமு”  என்ற வேணுகோபால் அவர்களின் க்ருதி பாடினார். இவர். ஸ்பென்சர் வேணுகோபால்.  புகழ் பெற்ற வா முருகா வா... பேகடா.. கருதி எழுதியவர்.

“தேஜோன்மய ஸ்ரீ ஜானகீஷா”... என்ற வரியில் நிரவல் எடுத்து,  பாடி முடித்தார்.

சரகுண பாலிம்பா வை எடுத்து, கேதார கௌளையின் அத்தனை அழகும் நிறைந்த பாடல். இது கே,கௌளையின், இந்தப் பாட்டு, ரத்னம் என்பேன். பூச்சியின் பாட்டு.

மெயின் ஐட்டமாக கரஹரப்பரியாவை தொடுத்து, பக்கல நிலபடியின் த்யாகராஜ கிருதியை மாலையாய் கொடுத்தார். எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாட்டு. அரியக்குடி காலத்திலிருந்து, இன்று வரை, இந்தப் பாட்டு கேட்டுக் கொண்டே இருக்கிறோம். மனசூன வில் நிரவல் கொடுத்து ஸ்வரம் பாடி முடித்தார்

நல்ல தனி, ரம்யமாக இருந்தது.

துக்கடாவாக, நடராஜர் பத்து, “இன்னமும் சொல்லவோ” என்று ஆரம்பித்து பேகடா, நட பைரவி, சாமா வில் முடித்து, தில்லை ஸ்தலம் என்று கோ.கி.பாரதியின் பாடலை பாடினார்

இந்த பாட்டில், “ஆலயம் ஆயிரத்து எட்டிலும் நேத்ரம்” என்ற ஒரு வரி வருகிறது.  கோ.கி. பா.. கற்பனை வளம்.

லீலா நாடக சாயி- என்ற இந்த பாட்டு, புட்டபர்த்தி சாயியின் நூறு ஆண்டு விழாவை முன்னிட்டும் கூட இருக்கலாம்.

காந்தமாம் கதிர் காமம் தன்னில் ஓர் வேதாந்தமா..... மாயுரம் விஸ்வநாத சாஸ்த்ரியின் அருமையான சிந்து பைரவி கருதி. இது விஜய் சிவா ஸ்பெஷல். ஆண்டவன் அருள் சேர சேர, அன்பு பெருகுது ஏற ஏற,,, போன்ற அருமையான வார்த்தைகள் வரும் இந்த பாட்டு.  இது சி.பைரவியில் வித்தயாசமான பாட்டு. 

துள்ளு மத வேல் கை – ஹம்சானந்தி திருப்புகழ். பாடி முடித்தார்.

வீ. சஞ்சீவின் பிடில், ஏனோ வி.சி ஸ்வரம் பாட, அவரோடு ஒட்டாமல் பாடினார். ஆனால் தனியில், மிகவும் அழகாக வாசித்தார். மிருதங்கம், தேர்ந்த கை. கஞ்சிரா வை முதலில் பார்க்கிறேன். தனி நன்றாக இருந்தது.

மனோஜ் சிவா நடுவில் கொஞ்சம் சிரித்தாலோ, விஜய் சிவா கை தட்டினால் அதை ஏற்றுக் கொள்ளும் பாணியில், கை குவித்தாலோ, இருவருக்கும் பத்ம ஸ்ரீ விருது சிபாரிசு செய்யலாம்.

நல்ல காலம் கடைசியில் ஏற்றுக் கொள்ளும் பாணியில் கை குவித்தார்.

விஜய் சிவா, அடிக்கடி அவருடன் பாடும் அவர் சீடரை, இன்னும் “SAFE ZONE”  லேயே வைத்து இருக்கிறார் என்று தோன்றுகிறது.  பயந்து பயந்து பாடுகிறார். நல்ல குரல் வளம், கற்பனை. அவரை இன்னும் கொஞ்சம் ராகம், ஸ்வரம் பாடச் சொல்ல வேண்டும்.

சீடர் சவுத் ஆப்ரிக்காவுக்கு எதிராக விளையாடும் இந்தியன் டெஸ்ட் டீம் மாதிரி இருக்கிறார். திறமை இருக்கிறது. ...ஆனால்.....

 

Saturday, 22 November 2025

பாரதீய வித்யா பவனில் ஸ்ரீ. ராம கிருஷ்ணன் மூர்த்தி கச்சேரி .......21.11.25

 

ராமகிருஷ்ணன் மூர்த்தி

பரத்வாஜ் – மிருதங்கம்

கமலாகிரன் வ்ரிஞ்சிமுரி – பிடில்

தேதி- 21.11.2025

பாரதிய வித்யா பவன்

பா.வி.ப கார்த்திகை மாசத்திலேயே “மார்கழி உத்சவம்” ஆரம்பித்து விடுவார்கள். மார்கழி மாதம் ஆரம்பிப்பதற்கு முன்பே, ஏறக்குறைய எல்லா ப்ரோக்ராம் முடிந்துவிடும். இப்போது எல்லாம் ஏன், எதற்கு என்று கேட்கப்டாது. இந்தக் கட்டுரையிலேயே நிறைய “ஏன்” இருக்கிறது

ஏன் கச்சேரியின் நடுவில்,  ராகம் பாடி பல்லவி பாடாமல் தானம் மட்டும் பாடினார் ? 

ஏன் கச்சேரியின் நடுவில் நாராயண கௌளையில், வீணை குப்பையரின் வர்ணத்தைப் பாடினார் ?

ஏன் ராகம் பாடி தில்லானா பாடினார் ?

ஏன்  “பூங்குயில் கூவும் பூஞ்சோலை” என்ற அரத பழசான “கல்கியில்” பாடலை நோட்டுப் புத்தகத்தைப் பார்த்துப் பாடினார் ?

இப்படி எல்லாம் நான் கேள்வி கேட்டுதான் டி.எம். கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி கொடுத்தார்கள்.  கூடிய சீக்கிரம் இவருக்கும் கிடைத்து விடும்

நேற்று கவர்னர் வந்து நாதஸ்வரத்துடன் தொடங்கி வைக்க, இன்று இரண்டாம் நாள்/ ரா.கி.மூ

ஒவ்வொரு பாட்டும் கையாண்ட விதம் அற்புதம். நிறைய இவருடைய வித்வத்தை புகழ்ந்தாகி விட்டது.

முதலில் ஸரசிருஹா  என்ற புலியூராரின் நாட்டை கிருதியை எடுத்தார். சரஸ்வதி தியானம். அருமையாக, கிடு கிடுவென ஸ்வரம் பாடி முடித்தார்.

இரண்டாவதாக, ஸ்ரீ சுக்ர என்ற நவக்ரஹ கிருதியை எடுத்தார். பரஸ்  ராக தீட்சிதர் கிருதி. மதுரை மணி அய்யருக்குப் பிறகு, யாரும் இதை எடுத்துப் பாட ஆள் இல்லை.  இந்த ஒரு விஷயத்திற்க்கே இவருக்கு நன்றி கூறலாம்.  இந்த ராக ஸ்வரூபத்தை “வடவரையை மத்தாக்கி” என்ற ஒரு பாடலின் ஒரு சரணத்தில் எம்.எஸ். அம்மா குழைத்துக் கொடுக்க, அதை மணி அய்யர் சிறப்பிக்க, பிருந்தா முக்தா அவர்கள் (யூ ட்யூப்) நீலாயதாக்ஷி என்ற ஒரு பாட்டு பாடி இருக்கிறார்கள். முடிந்தால் கேட்கவும்.

 மூன்றாவதாக சாளக பைரவியை கொஞ்சம் “கோடி” காண்பித்து, செம்மங்குடி புகழ் “பதவினியை” எடுத்தார். கொஞ்சம் ஸ்வரம் பாடினார். “உன்னிடம் நிஜமான பக்தி ஒன்றுதான், பதவி (Status).  மற்றதெல்லாம் waste.  என்கிறார் தியாகராஜர். அது போல தான் இது, செம்மங்குடி பாடிளால் தான் அது ஸா.பை.  மற்ற யார் பாடினாலும் அது கொஞ்சம் சுமார் தான்.

சாளக பைரவியில் எனக்குத் தெரிந்து “வரலக்ஷ்மி நீயே வந்தருள்வாயே” என்று பாட்டு. ஸ்ரீ. ஒ.எஸ். தியாகராஜன் அவர்கள் பாடியது தான். வேறு இருப்பதாகத் தெரியவில்லை.

வராளியை எடுத்து கொஞ்சம் ராகம் பாடிவிட்டு, பஞ்ச ரத்ன கிருதியை எடுத்துப் பாடினார்.  எனக்கு என்னமோ பஞ்ச ரத்ன கிருதி என்பது கச்சேரிகளுக்கு சரிபடாதோ என்று தோன்றியது. நல்ல வேளை ஸ்வரம் பாடவில்லை.  முக்கியமாக, தியாகராஜர் ஆராதனையில் பஞ்ச ரத்ன க்ருதி பாடாதவர்கள், வேறு எந்த மேடையிலும் பாடக்கூடாது,.. என்பேன் நான்

அப்புறந்தான். நாராயண கௌள ராகத்தை எடுத்து கொஞ்சம் பாடினார். திடீரென்று தானம் பாடினார். திடீரென்று வீணை குப்பையரின் அதே ராக “மகுவா நின்னே” வர்ணத்தைப் பாடி “அந்தக்” கட்சியில் சேர்ந்து விட்டார்.

இதுவும் ஸா.பை போன்று ஒரு அரிதான ராகம்.. இதில் தீக்ஷதிரின் “ஸ்ரீ ராமம்” தவிர எனக்கு வேறு தெரியாது.  அதுவும் செம்மங்குடி பாடியது தான். சஞ்சய், செம்மங்குடி மாமாவைப் பற்றி சொல்லி இருக்கும் வீடியோ வில், தான் இந்த ராகத்தை விரும்பி மாமாவிடம் கத்துண்டதாக சொல்லி இருக்கிறார்.

அடுத்து ஒரு 9 நிமிடம் தோடி பாடினார் பாருங்கள். அட அட...மிகப் பிரமாதம்.  “கீர்த்தி மேவும்” என்று ஆரம்பித்து, கார்த்திகேய காங்கேய என்ற பாபநாசம் சிவன் கிருதியை எடுத்தார். எனக்கு மிகவும் பிடித்த பாடல். ஆறு படையையும் ஒரே பாட்டில் கொண்டு வரும் பாடல். மூன்று சரணத்தையும் பாடினார். “வேல் முருவும்...” நிரவல் எடுத்து ஸ்வரம் பாடி முடித்தார்

பரத்வாஜின் தனி மிக இனிமை. டிசம்பர் சீசனில் இவர் மிக முக்கியமானர் ஆக ஆகிவிட்டார். மியூசிக் அகாடமி யிலும் இவருக்கே வாசிக்கிறார் என்பது, கமலகிரன், அபிஷேக் ரகுராமுக்கு வாசிக்கிறார் என்பதும், இந்த இளம் கலைஞர்களின் அயராத உழைப்பு. நேர்த்தி தெரிகிறது.

ஒரு கடமோ, கஞ்சிராவோ இருந்திருக்கலாமோ என்று தோன்றியது.

பிறகு துக்கடாக்களை கையில் எடுத்தார்......

மாலாசை கோபம் ஓயாதே நாளும் – என்ற வயலூர் திருப்புகழை, பீம்ப்ளாஸ் ராகத்தில் பாடினார்.

 பிலஹரி ராகம் கொஞ்சம் பாடி, தில்லானா பாடினார்

உல்லாச நிராகுல – என்ற அனுபூதியை காபியில் குழைத்து கொடுத்து, கேட்பவர்களுக்கு அநுபூதி அடைந்த திருப்தி. பூங்குயில் கூவும் என்ற கல்கியின் பாட்டு பாடி முடித்தார்

வந்தே மாதரம் அம்பிகாம் பகவதீம் - என்று தொடங்கி “கேதார கெளள, சாவேரி ஹிந்தோளம், நாட்டைகுறிஞ்சி, சிந்து பைரவி என்று கடைசியில் மாஞ்சி ராகத்தில் முடித்து, ஷ்யாமா சாஸ்த்ரியின் “ப்ரோவம்மா தாமசமேலே” என்ற கிருதியை பாடி, அதே ராகத்தில் மங்களம் பாடினார்

ரா.கி.மூ. பற்றியோ அவர் சங்கீதம் பற்றியோ நான் சொல்ல வேண்டியது இல்லை. அவரின் சங்கீதம் மிகவும் அழகு. அந்த காலத்து கலைஞர்களின் சங்கீதத்தை நேராக கேட்க முடியவில்லையே என்று நினைப்பவர்களுக்கு, கவலை வேண்டாம். ராம கிருஷ்ண மூர்த்தியைக் கேளுங்கள்..

முடிவுரைக்கு முன்பு-, ஏதோ இரண்டு கச்சேரி பண்ணிய சிறுசுகள் கூட, இன்றைக்கு Apple Tab வைத்துக் கொண்டு பாட, இவர் ஏதோ ஒரு 40 பக்க நோட்டை வைத்துக் கொண்டு புரட்டிக்கொண்டு பாடியது .ஆச்சர்யமாக இருந்தது

Sunday, 7 September 2025

वारं वारम् - இந்த வாரம் – (1.9.25 to 7.9.25)

 

செம்மங்குடி

இந்த வார ஆரம்பத்தில் நான் செம்மங்குடி போய் “லக்ஷம் த்ரிஷதி” அர்ச்சனை பண்ணியதை பற்றி விலா வாரியாக எழுதிவிட்டேன்.

மறுபடியும் க்ரஹணம் அன்று திரும்பிப் போவதாக ஐடியா இருந்தது. முடியவில்லை

ஆசிரியர் விருது

நான் போன வாரம் சொன்ன நல்லாசிரியர் விருது பெற்ற Dr ரேவதி பரமேஸ்வரன் அவர்கள், ஜனாபதி கையால் விருது வாங்கும் நிகழ்ச்சியை டி.வீயில் நேராக பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

சந்தோஷமான விஷயம்

சந்திர க்ரஹணம்

போன ஞாயிற்றுக் கிழமை சந்திர க்ரஹணம். அழகாக கணித்த (இன்றுதான் க்ரஹணம் வருகிறது என்று) அந்த பஞ்சாங்க ஸ்ரௌதிகளை வணங்கி, வழக்கம்போல், பிடித்த ஸ்நானம், விட்ட ஸ்நானம் என்று, நடுவில் கொஞ்சம் ஜபம். ஸ்லோகம் என்று

அதற்குள், ஒருவர் வீட்டு சுவாமி அறையை மூட வேண்டும். விளக்கு ஏற்றக் கூடாது. சுவாமிக்கு அர்சச்சனை பண்ணக் கூடாது. என்று ஏகப்பட்ட கட்டளை.  சில நக்ஷத்ரங்களுக்கு பரிஹாரம் என்று.

கொஞ்சம் கொஞ்சமாக, இந்த அனாவசிய குழப்பத்தில் இருந்து மீண்டு, நீ வேரேரனாதிருக்க, நான் வேரெனாதிருக்க, நேராக வாழ்வதற்கு வழி” கூற  என்று அருணகிரிநாதரின் திருப்புகழ் வாசகப்படி வாழ் வேண்டும் – என்று நினைத்துக் கொண்டேன் 

மெரீனா பீச் பல பக்தர்கள் போய் ஸ்நானம் பண்ணினார்கள். மிகவும் விசேஷம். புண்ணியம்.  என் மாமா கோ-தானம் பண்ணினார்.

நான் சௌந்தர்ய லஹரியில் கூறியது போல், கங்கை, யமுனை ,சரஸ்வதி  மூன்றையும் தன் கண்களில் வைத்துக்கொண்டு, பரமேஸ்வரின் பத்தினியாக இருப்பவளே. உன் கண்களினால் என்னைக் குளிப்பாட்டு.  நீ அப்படிச் செய்தால், நான் ஏன் கடல், குளம், ஏரி என்று அலையவேண்டும் ? – என்று சும்மா வீட்டிலேயே இருந்து விட்டேன்.

தம்பிக்கும், கல்யாண மாபிள்ளையாக ஆகப் போகிற என் தம்பி பையன் சந்திர மௌலிக்கும், க்ரஹண சமயத்தில் மஹா சங்கல்பம் சொல்லி ஜபம் பண்ணச் சொன்னது மனதுக்கு சந்தோஷமாக இருந்தது

கடைசி 15 நிமிடத்தில்,  சின்னர்-அல்காராஸ் – டென்னிஸ் மேட்ச் ஹாட்ஸ்டார் ல் பார்த்தேன்.  ம்ஹூம். என்ன சொல்ல ....?

விசர்ஜன்

நான் மும்பையில் இருந்தபோது, நேரே கண்டு பிரமித்த ஒரு நிகழ்வு, பிள்ளையாரைக் கொண்டு கடலில் கரைப்பது. ஜே ஜே என்று இருக்கும். நான் வாஷியில் இருந்தபோது, எங்கள் வீட்டின் அருகே, பிள்ளையார் சிலை ஒன்று வைக்க, அதற்கு, சுண்டல், சக்கர பொங்கல் என்று மனைவி செய்து கொடுக்க, அப்படியெல்லாம் ஒரு பண்டம் இருக்கிறது என்றே அறியாத மகாராஷ்டிரா மக்கள், இந்தப் பிரசாதத்தை சாப்பிட்டு அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை, என் மனைவி. மா ஜீ ஆகிவிட்டாள்.  எத்தனை வகை வகையான பிள்ளையார்..

இப்போது சென்னை வந்து விட்டாலும், இந்த விசர்ஜன் நாளில், மும்பை நினைவு வந்து அலை மோதும்

GST

நிர்மலா சீதாராமன் அவர்கள், ஹெல்த் இன்சூரன்ஸ் GST விலக்கு அளித்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது.

 

 

 

 

Wednesday, 3 September 2025

01.9.25 - செம்மங்குடி பிரவேசம்

 

செம்மங்குடியில் ருத்ர த்ரிஷதி (லக்ஷம் ஆவர்த்தி)

செம்மங்குடி போவதென்றால், எனக்கு எப்போதுமே குஷிதான். நான் பிறந்த இடம், வளர்ந்த இடம். நான் முதலில் பார்த்த மனிதர்கள், வீடு, கோவில், குளம், மரங்கள்.....

சர்க்கரைப் பொங்கலை பார்த்துக் கொண்டிருந்த என்னை, முகத்தை திருப்பி, அகஸ்தீஸ்வரரைப் பார்க்க வைத்த என் அன்பு தாத்தா  ஸ்ரீ. ராமமூர்த்தி சாஸ்த்ரிகள் இருந்த, சுவாசித்த இடம். வெள்ளிக்கிழமை குமுட்டியில் பாயசம் வைத்து, அதை நைவேத்யம் பண்ண ஆனந்தவல்லி யிடம், - இவன் வழியில் சாப்பிடமாட்டான் – என்று நம்பி அனுப்ச்ச என் பாட்டி- அலமேலு அம்மாள்-  கோலோச்சிய இடம்.

“யானி காணிச பாபானி” – மாதிரி, எங்கு சென்றாலும் செம்மங்குடி செல்லவேண்டும் என்ற எண்ணம் எப்போதும் எனக்கு உண்டு. மாட்டு வண்டியில் சென்று, திரும்பி வரும்போது, மாடுகள் வேகமாக வரும். -வீட்டில் தீனி இருக்கும். சாப்பிட வேண்டும் என்று.- அது போலதான்.

அகஸ்தீஸ்வரருக்கு, பவித்ரோஸ்வம் நாளில், த்ரிஷதி யில் (லக்ஷம்) தடவை சொல்ல வேண்டும் என்று முடிவாகி, 1.9.25 அன்று என்னையும், சொல்ல அழைத்து இருந்தார்கள். கடந்த 10 நாட்கள், உடல் நிலை சற்று “முன்ன பின்ன” இருந்தாலும், ஒரு வைராக்யத்தில் மன்னை விரவு ரயிலில் ரிசர்வ் செய்து கிளம்பி விட்டேன்.  

மாமா, மாளிகை மாதிரி கட்டி இருக்கும் வீட்டில், இருக்க கசக்குமா என்ன ?

காரில் செல்பவர்கள் விட, ரயிலில் செம்மங்குடி செல்வது சுகம் மன்னை எக்ஸ்ப்ரெஸ் ல், விடியற்காலை 5 மணி சுமாருக்கு திருவாரூரில் இறங்கி, புது பஸ் ஸ்டாண்ட் வந்து, அங்கு முதல் கும்பகோணம் பஸ்ஸில் ஏறி. அரசவனங்காடு ஆஸ்பத்திரியில் இறங்கி, மொபைலில், பிதாமகரின், மாருபல்கவோ, (ஸ்ரீரஞ்சனி) க்ஷீனமையோ (முகாரி)......கேட்டுக்கொண்டு, தீபங்குடி வழியாக, நாயைப் பார்த்து பயப்படாமல், அப்படியே சோழ சூடாமணி ஆற்றின் கரையில் இருக்கும் பிள்ளையாரையும், அய்யனாரையும் பார்த்து, சிவன் கோயில் அருகே, லெப்ட் எடுப்பதற்கு முன்பு, எனக்கு “அ” சொல்லிக்கொடுத்த, சின்ன பள்ளியையும், அ”ண்டசராசரங்களையும் ஆட்டி வைக்கின்ற எங்கள் ஆனந்தவல்லியையும் பார்த்து விட்டு நேரே மேற்கே, தாயாருடன் வரதராஜ பெருமாள்..........

அனுபவித்தேன் . ஆனால் இந்த முறை ஒரு வித்தியாசம். மொபைலில், செம்மங்குடியின், 1956 சங்கீத வித்வத் சபையில், T.N.Krishnan, பிடிலுடன் Vellore Ramabhadran, மிருதங்கம் வாசிக்க Vilvadri Iyer கடம் வாசிக்க, கௌரிமனோஹரியின், தியாகராஜரின் “குருலேக எடுவண்டி” ...ஆஹா.......

அகஸ்தீஸ்வரருக்கு, த்ரிஷதி ல.அர்ச்சனை. பெரும் பாக்கியம். கூடை கூடையாக பூ.  என்கண், செருகளத்தூர் பகுதியில் இருந்து வந்த மிகச் சிறந்த குருக்கள்மார். 10 குருக்கள் சன்னதி உள்ளே உட்கார்ந்து, ஜபிக்க, நாங்கள் ஒரு 15 பேர் வெளியில்.

முதலில், “ஸஞ்சமே, பிறகு ஓம் நமோ பகவதே ருத்ராயா. (நமோ ஆஸ்து பகவன் வரை), பிறகு “த்ரிஷதி” – முடிவில் “த்ராபே அந்த..... கடைசியில் ஸஞ்சமே.....இது ஒரு ஆவர்த்தி...... 

8 மணிக்கு ஆரம்பித்து, நடுவில் 3 முறை 15 நிமிட இடைவெளி கொடுத்து, ஐந்து தீபாராதனை முடிந்து சாப்பிடும்போது மணி 3 PM. பட்டையை கிளப்பும் அர்ச்சனை. தெறிக்க விட்டார்கள் .....

கடைசியில், மஹா தீபாராதனை, 5 பேர் செய்து காட்டிய ஒரு காட்சி இருக்கிறதே,  அட அடா.  இது என் WUP profile photo ஆக போட்டு இருக்கிறேன்.

அழகாக, பிரிண்ட் செய்யப்பட்ட, த்ரிஷதி யுடன் கூடிய, புத்தகம் கொடுத்தார்கள். மறக்காமல் முடிந்தவுடன் திருப்பி வாங்கிக் கொண்டார்கள்

முதுகு வலி, கால் வலி, பசி, மொபைலில் பிசி.......ம்ஹூம் – 

அந்த காலத்தில், ஸ்ரீ சிவகுரு தீட்சிதர், ஸ்ரீ குமாரு தீட்சிதர், என் தாத்தா, நின்று கொண்டே ருத்ரம், சமகம் சொல்வதைப் பார்த்திருக்கிறேன். அதுவும், மகான்யாசத்துடன்) குங்கும பிரசாதம் தான். இப்போது மூன்று தடவை சொன்னால், கஞ்சி ப்ரீ. ஆறு தடவை சொன்னால், ஆப்பிள் ஜூஸ்...... சொல்ல மாட்டேன் என்கிறோம். செம்மங்குடியில்  நம் மக்கள் எங்கே போனார்கள் ????

எப்போதுமே ஆனந்தவல்லிக்கே பூஜை, அபிஷகம், பூப்பந்தல் என்று இருக்க, “சிவனே” என்று இருக்கும் எங்கள் சுவாமிக்கு வட்டியும் முதலுமாக அவருக்கு கிடைக்கப்பெற்ற லக்ஷம் ஆவர்த்தி த்ரிஷதி -மாபெரும் வைபவம். பூவின் அளவு எப்படி என்றால், லிங்கம் மறைந்து, அதன் மேல் வைத்து இருந்த நாகாபாரணமும் மறைந்து, அப்பப்பா ஒரே பூ மயம். ரொம்ப அழகு.

எனக்கு அப்பைய தீட்சிதர் ஸ்லோகம் நினைவுக்கு வந்தது. ஒரு தும்பைப் பூவோ, எருக்கம் பூ வோ போட்டால் போறும். மோக்ஷ சாம்ராஜயம் கொடுக்கும் உன்னை புரிந்து கொள்ளாமல், நான் சம்சார ஸாகரத்தில் உழன்று கொண்டிருக்கிறேனே என்று புலம்பித் தள்ளுகிறார்.

அதையும், அவர் உன்மத்த நிலையில் சொல்கிறார். “அர்கத் த்ரோண ப்ரப்ருதி குசுமை:” என்று ஆரம்பிக்கும் “உன்மத்த பஞ்சஷதி”. யு டியுப் ல், மஹா பெரியவா இந்த விளக்கம் சொல்வது, இன்றும் இருக்கிறது

அப்படி சொன்ன அந்த சுவாமிக்கு, இவ்வளவு பூ !!!

எங்கள் அன்பு ஏகாம்பரம் மாமா, (மூன்று தலைமுறையைப் பார்த்து, இப்போது நான்காவது பார்த்துக் கொண்டிருக்கிறார்)  “நீ வருவ என்று தெரியும்” என்றார்.

நான், மனதிற்குள் என்கண் போய் முருகனைப் பார்க்க முடியவில்லையை என்று தாபப்பட (மத்யானமே கிளம்பி விட்டோம்) என்கண் தியாகராஜ குருக்கள் வந்து பிரசாதம், ஏகாம்பர மாமாவிடம் கொடுக்க, அதை, நான் எதிர் பார்க்க வில்லை” – என்னிடம் கொடுத்தார்

ஹரி குருக்களின் ஆளுமை, எங்கள் ஆனந்த வல்லி ஒரு பொக்கிஷம் என்றால் அதன் காவல் தெய்வம் அவர்.  அவர் கீழ் ஒரு டீம் இருக்கிறது பாருங்கள்.  பம்பரம் போல் சுழன்று வேலை செய்ய. பிரமாதம்  !!!!!!

நான் பக்கத்தாத்து வெங்குட்டு மாமா பேரன், ஸ்ரீ கல்யாணம், மற்றும் கெளரி அண்ணா குடும்பத்தில் ஸ்ரீதர் அண்ணா, என் மாமா இவர்களுடன் கழித்த அந்த தினம் ஒரு  - பொன்னாள்.

முடிவுரை

LKG படிக்கும் குழந்தை, முதல் நாள் பள்ளியில் கொண்டுவிட, அது அழுதுகொண்டே, திரும்பி அம்மாவைப் பார்த்துக் கொண்டே செல்லும்

அது போல நான் செம்மங்குடி கிராமத்தைப் பார்த்துக் கொண்டே சென்னை கிளம்பினேன் 

திரும்பி ஒரு முடிவுரை

நாங்கள் எல்லோரும் சொன்ன த்ரிஷதி யால் சுவாமி மகிழ்ந்து போனாரோ இல்லையோ தெரியாது,  ஆனால் மறுபடியும் திர்ஷதி சொல்ல வேண்டும் என்றஆசையை தூண்டிவிட்டது என்னமோ நிச்சயம்..



தமர்

 

அஞ்சுவது யாதொன்றும் இல்லை, அஞ்ச வருவதும் இல்லை

நமக்கு பயம் என்பது, பொழுது விடிந்தால், பொழுது அஸ்தமித்தால் வந்து விடுகிறது. அதனால் தான் பாடும்போது கூட, பயத்தை விட்டு, நல்ல தைர்யமாக எதையும் எதிர் கொள்ளும் அந்த பக்குவத்தைக் கொடு என்று பாடுகிறோம்.  நாராயண தீர்த்தர், தன்னுடைய தரங்கத்தில், அந்த ஸ்ரீநிவாசன், பயத்தை மட்டுமல்ல, பயத்தின் மூல காரணத்தையும் வேரோடு அறுத்து விடுகிறார். என்று பாடுகிறார்.

LKG படிக்கும் பையனுக்கு, டீச்சர் சொன்ன ஹோம் வொர்க் அல்லது ப்ராஜெக்ட் ஒழுங்காக பண்ணவேண்டும் என்ற பயம். வயதானவருக்கு, பாத் ரூமில் வழுக்காமல் போய் வர வேண்டும் என்ற  பயம்.

எல்லா வயதிலும் பயம் இருக்கிறது. பாரதியார் பாடினார், அச்சம் இல்லை அச்சம் இல்லை என்று. ஆனால் அவராலேயே அவ்வாறு இருக்க முடியவில்லை. ஆங்கிலேயருக்கு பயந்து பாண்டிச்சேரிக்கு சென்றார்.

அந்த காலத்தில் சந்திரபாபு பாட்டு ஒன்று உண்டு. "ஒரு நாளேனும் கவலை இல்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே"

என்றைக்காவது ஒரு நாள் பயமோ, கவலையோ, பொறாமையோ இல்லாமல் தூங்கி இருக்கிறோமோ ?  ம்ஹூம்

திருநாவுக்கரசர் சொல்கிறார், நாம் பயப்படவே வேண்டாம், இப்போது மட்டும் அல்ல. எப்போதுமே . அதுதான் இந்தப் பகுதி. 

அவர் சொல்கிறார் – “மேலே பூசிய வெண்ணீறும், சுடர் விடும் சந்திரனைப் போன்ற சூடாமணியும், புலித்தோல் உடையும், சிவந்த நிறமும், காளை வாகனமும், பாம்பும், கங்கை நதியும் கொண்ட அவர் இருக்கும்போது “நாம் அஞ்சுவது இல்லை, நமக்கு அஞ்ச வருவதும் இல்லை”

சரி, இப்படிச் சொல்கிறாரே, இவர் என்ன பயத்தைப் பார்த்தது இல்லையா ? பெரிய குடும்பத்தில் பிறந்து, செல்வசெழிப்பில் வளர்ந்து, சொடுக்கினால் வேலைக்காரர்கள் பத்து பேர் வர வாழ்ந்தவரா ? அதுதான் இல்லை

-    இவர் இளமையில் தாய் தந்தையை இழந்தவர்

-    அக்காவில் அரவணைப்பில் வாழ்ந்தவர்

-    அக்காவும், தன் கணவனை இழந்தவர்

-    வறுமை தாண்டவமாடும் ஒரு நிலை

சரி. இந்த வாசகத்தை எப்போது சொன்னார். ஏதோ ஜாலியாக இருக்கும்போது, ஊருக்கு உபதேசம் செய்வார்களே அது போலவா. ..அதுவும் இல்லை

சமண மதத்தில் இருந்து சைவ மதத்திற்கு, மாறிய திருநாவுக்கரசருக்கு, பல வித துன்பங்களை தந்து பல்லவ மன்னன். கடைசியில் யானையை வைத்து, அவரை மிதித்து, கொல்லச் சொல்கிறான். அந்த யானை அவரைப் பார்த்து வேகமாக வருகிறது.

கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம்.  தெருவில் போய்க் கொண்டு இருக்கறோம்.  ஒரு நாய் வேகாமாக குறைத்துக் கொண்டு வருகிறது.  நாம் என்ன செய்வோம்

கல்லை எடுப்போம் அல்லது தெறித்து ஓடுவோம்..

யானை வருகிறது என்றால்.  நாவுக்கரசர் அமைதியாக சொல்கிறார். "அஞ்சுவது யாதோன்றும்....) யானை அவரை வலம் வந்து அமைதியாக நின்று கொண்டு இருக்கிறது

இதை எழுதும்போது, பிரஹலாதன் கதை நினைவு வருகிறது. எத்தனை துன்பம் வந்தாலும் “நாராயணா” என்று சொல்லி அந்தப் பெருமாளின் அனுக்ரஹம பெற்றான்.

திருநாவக்கரசர் அவர்  பாடலில்

“சுண்ண வெண் சந்தனச் சாந்தும்.....என்று ஆரம்பிக்கிறது, அதில் ஒரு இடத்தில் “உடையார் ஒருவர் தமர்” என்கிறார். தமர் என்றால் உறவினர் என்று பொருள் பட சொல்கிறார்.

அந்த சிவபெருமான் என் உறவினர் என்கிறார்.

அவர் ஏன் உறவுடா. எப்போ கூப்டாலும் வருவார். நான் ஏன் அஞ்ச வேண்டும் ..... என்ற பாணியில் சொல்கிறார்.

திட பக்தி நமக்கு வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் ஒவ்வொரும் கட்டத்திலும் நமக்கு புராணங்கள் சொல்லிக்கொண்டே இருக்கிறது.

சபரி மலையில், ஏன் தந்தையுடன், நான் சில முறை சென்றாலும், பல பக்தர்கள், கார்த்திகை மாதம் மாலை அணிந்து, மிகவும் ஸ்ரத்தையாக, என் தந்தையாரை குருசாமியாக ஏற்று, அவர் என்ன சொன்னாலும் தட்டாமல், “அவர் தான், எங்கள் கண் கண்ட தெய்வம்” என்பதில் உறுதியாக இருப்பார்கள். இது தான் திட பக்தி. இப்படி இருக்கும்போது – அவர்கள் மன நிலை, திருநாவுக்கரசர் நிலைதான் 

அஞ்சுவது யாதொன்றும் இல்லை. அஞ்ச வருவதும் இல்லை