Sunday 14 July 2024

செம்மங்குடி ஸ்ரீ வெங்கட்டு சித்தப்பா......கனகாபிஷேகம்

 

என் செம்மங்குடிக்கு என்று பல பெருமைகள் உண்டு

 

இதை இரண்டாகப் பிரிக்கலாம்

 

ஒன்று பேரின்பம்

ங்கீத பிதாமகர் செம்மங்குடி ஸ்ரீனிவாச அய்யர்

எங்கள் பெருமாள், சிவன் கோவில்

நான் படித்த பள்ளி

என்னை ஆளாக்கிய ஸ்ரீ. ராமுர்த்தி சாஸ்த்ரிகள் அண்ட் அலமேலு அம்மாள் -என் குடும்பம்

 

சில சிற்றின்பங்கள்

-சிவன் கோவில் அருகில் இருக்கும் குளம்

-ராம நவமி பானகம், நீர்மோர்

-மேல குளத்தில் இருந்த நெல்லிக்காய் மரம்

-ஆவணி அவிட்டம், அன்னாபிஷேக  சாப்பாடு

-எங்கள் வீட்டின் பின்னாடி இருந்த வாய்க்காலில் நானும்  சசியும் தட்டைத் தூக்கிப்போட்டு, அது அருகே வருவதை ரசித்த நாட்கள்.

-சப்பரம்

- மழை கொட்டி, சாக்கைப் போத்திக் கொண்டு வாசல் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு இருக்கும் காலை வேளையில், “ஸ்கூல் லீவு” யாரோ ஒருவர் சைக்கிளில் சொல்லிக் கொண்டே செல்லும்போது கிடைத்த சுகம்

- மார்கழி மாதம் பஜனை

- தீபாவளி, பொங்கல் விழா

 

பேரின்பத்தில், எங்கள் ஸ்ரீ. வெ.சி வின் கனகாபிஷேகத்தை தாராளமாக சேர்க்கலாம்.

அவருக்கு திருஷ்டி வந்து விடுமோ என்று, இந்த கட்டுரையை எழுத தயங்கினேன். இருந்தாலும்.....அவர் வழிபடும் செம்மங்குடி அய்யனாரைப் பணிந்து எழுதுகிறேன்.

ஸ்ரீ. வெங்குட்டு சித்தப்பா -உண்மையாக, அவர் உறவு எப்படி என்றால், என் தாத்தாவின் தாத்தா, அவர் தாத்தா, அண்ணன், தம்பி. அதனால் இவரும் என் தாத்தா தான். ஆனால், எங்கள் குடும்பத்தில் இஷ்டத்திற்கு உறவை சொல்லி கூப்பிடுவோம். அதனால் இந்த பெயர். அதனால் தான் சித்தப்பா, அதனால் அவர் மனைவி சித்தி...

எங்கள் செம்மங்குடியில்,  என் தாத்தா ஸ்ரீ. ராமமூர்த்தி சாஸ்த்ரிகள்,  கனகாபிஷேக ஸ்ரீ. வெங்குட்டு தீக்ஷிதர், ஸ்ரீ. சிவகுரு தீட்சிதர், ஸ்ரீ குமாரு தீட்சிதர் என்று  4 ரத்தினங்கள் உண்டு. 2 துண்டு கல்கண்டு, ஒரு தேங்காய் மூடி, சுமாரான வாழை பழம்,  நாலு அணா, எட்டணா வுக்காக நடையாய் நடந்து வைதீகம் பார்த்த மகானுபாவர்கள்.  இன்றும் அவர்களை நான் நினைவு கொள்ளும்போது கண் பனிக்கிறது. 

எங்கள் பக்கத்து வீடு. அவர்கள் வீட்டில், 6 க்கு மேல் குழந்தைகள். எங்கள் வீட்டிலும் பல. உறவுக்கு அப்பாற்பட்டு, எங்கள் குடும்பத்திலும் அவர் குடும்பத்திலும் ஒரு அன்யோன்ய நெருக்கம் உண்டு. ஏன் மாமா, அவரின் மூத்த மகன் ஸ்ரீ. யக்ஞ ராமன் கிளாஸ் மேட்ஸ். அவருடைய இன்னொரு பையன், நாகராஜன் எனக்கு நெருங்கிய என் வயது.  என்னுடைய பெரியம்மா, சித்தி, அவர் குடும்பத்தில் உள்ள லேடீஸ், விஷாலி அக்கா, சந்திர அக்கா. மற்றும் ஸ்ரீநிவாசன் என்று.

சாஸ்த்ரிகள் என்பது ஒரு மதிப்பிற்குரிய பெயர் என்பதால், எல்லா வீட்டிலும் நான் “ சாஸ்த்ரிகள் பேரன்” வந்திருக்கான் என்று சுவாதீனமாக உள்ளே நுழைந்து பேசும் “பாக்கியம்” எனக்கு உண்டு.

துவும் பக்கத்து வீடு என்பதால் அடிக்கடி. “ஏ ராம்கி வாடா” என்று அன்புடன் ஏதாவது தின்பதற்கு கொடுத்து விடுவாள், நாகராஜன் அம்மா. சீடை, முறுக்கு, பொரி உருண்டை. எப்போது சென்றால் என்ன கிடைக்கும் என்று எனக்கு சரியாகத் தெரியும். நவராத்திரி கொலுவின் போது, என் சித்திகளுடன் கொலு பார்க்கப் போவேன். அவாத்தில் எல்லா பெண்களுடன் சேர்ந்து இன்னொரு முறை செல்வேன். எல்லாம் சுண்டல் மோகம் தான்.

இந்தப் பக்கம் இன்னொரு friend வெங்குட்டு ஆம். அது கொஞ்சம் பெரிய இடம்.  தட்டாத்தி மூலை கிராமத்தில் இருந்து, எப்போதாவது வெங்குட்டு வந்தால் நான் அவன் வீட்டில் போய் உட்கார முடியும்.  அவாத்தில் தோசை எனக்குக் கிடைக்கும். இல்லாவிட்டால், “போர்” தண்ணீர் பிடிக்க அடிக்கடி போய் வருவேன். அவ்வளவு தான்.

அதனால் நாகராஜன் வீட்டுக்கு செல்வதில் எனக்கு உரிமை ஜாஸ்தி.

அவருக்கு கனகாபிஷேகம் செய்தது மூலமாக, எங்களுக்கு ஒரு பெரிய பாக்கியம். நான் என் குடும்பத்துடன் சென்று ஆசி வாங்கியது, என்னை அடையாளம் கண்டு சித்தப்பா பேசியது. செம்மங்குடியில் பல நண்பர்களை மீண்டும் சந்தித்தது. அருமையான சாப்பாடு.

இன்றும் ஏன் மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கும், சித்தப்பா குடும்பத்தில் அனைவருக்கும் ஏன் நன்றி கலந்த நமஸ்காரங்கள்.

 

 

 

 

 

 

 

 


Saturday 22 June 2024

மஹா பெரியவாளும், சென்ற மைலாப்பூர் அனுஷமும் (20.6.24)

 

மு.கு. இதை படித்துவிட்டு நான் ஏதோ அனவரதமும் பெரியவாள நினைச்சுண்டு உருகி உருகி பூஜை பண்ணுகிறேனோ என்று கற்பனை பண்ண வேண்டாம்.  அடுத்த ஜன்மத்தில் சின்ன வயசில் இருந்தே பக்தி பண்ண வேண்டும்  என்று ஆசைப்பட்டு, இந்த ஜன்மத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கும் சாதாரண பிரஜை நான். அப்போதும், முப்போதும் பண்ணும் காயத்ரி ஜெபத்தில் அப்போ அப்போ அவரை நினைத்து வாழ்பவன்.

நான் எல்லாம் சௌந்தர்ய லஹரியில் பகவத்பாதர் சொன்னால் போல் “தவீயாம்சம் தீனம் ஸ்னபய க்ருபயா மாம்பி ஷிவே” வகை தான்

இப்போது விஷயத்திற்கு வருவோம்:

வரஹூர் பெருமாள் அனுக்ரஹத்தாலும், பெற்றோர்களின் ஆசிகளினாலும், ஏன் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்து, நிச்சயதார்த்த ஏற்பாடுகள் நடை பெற்று வருகிறது.

நி.தா க்கு பத்திரிகை அடிக்கலாமா வேண்டாமா என்று குழம்பி, ஒரு சபையைக் கூட்டி,  இந்த வாட்ஸ் ஆப் மக்களுக்கு, தெரிவிப்பதற்காக, ஒரு கார்டு பாதிரி அடிக்கலாம் என்று “முக்கா” மனதாக முடிவு செய்து, மைலாப்பூர் ஒரு DTP கடையில் உட்கார்ந்து ஒரு மாதிரி கார்டு தயார் பண்ணினேன். இரண்டு நாட்கள் உட்கார்ந்து, நேற்று (19) இரவு  ஒரு 7.30 மணிக்கு முடித்தேன்.

10 கார்டுகள் பிரிண்ட் போட்டு வீட்டுக்கு, மெட்ரோ போடுவதனால், லஸ் பூரா அடைக்கப்பட்டதாலும், மத்தள நாராயண தெரு வழியாக வரும்போது, “மயிலாப்பூர் மஹா பெரியவா” என்று நான் மிகவும் மரியாதை வைத்திருக்கும் ஸ்ரீ. கணேஷ் ஷர்மா அவர்கள், மாதா மாதா செய்யும் அனுஷ தினம், மஹா பெரியவா புறப்பாடு, திரும்பி, தேரடி தெரு பக்கம் சென்று கொண்டிருந்தது. அதாவது எனக்கு பெரியவா முதுகு (பின் பக்கம்) காட்டிக்கொண்டு.

அப்போதுதான் எனக்கு அனுஷ நினைவு வந்து, உடனே, போவதா வேண்டாமா என்று யோசித்து, கொஞ்சம் பூ வாங்கி கொடுத்து சுவாமியை பார்த்துவிட்டு உடனே போகலாம் என்று நினைத்தேன். அதற்க்கு இரண்டு காரணம்

-    முழுவதுமாக இருந்தால் 9.30 ஆகி விடும். பசி

-    இந்தியா T 20 மேட்ச் வேறு

அப்படியே வலது பக்கமாக திரும்பி, அம்பிகா அப்பளம் எதிரில் உள்ள பூக்கடையில், கொஞ்சம் கட்டின பூவும், ஒரு தாமரையும் எடுத்துக்கொண்டு வேறு வழியில் சென்று பா.வி.ப. வாசலில் வண்டியை நிறுத்தி பார்த்தால், சரியாக பெரியவா ஊர்வலம் நின்று கொண்டு இருந்தது.

அப்போது தான் எனக்குத் தோன்றியது, நிச்சயதார்த்தப் பத்திரிகை பிரிண்ட் பண்ணி இருக்கிறோமே என்று, அதில் ஒன்றை எடுத்து, பூ, தாமரை இவைகளுடன், ஸ்ரீ. கணேஷ் ஷர்மா அவர்களிடம் கொடுக்கலாம் என.  கொடுத்தேன். அங்கு ஏன் இனிய நண்பரும், மஹாதானபுரம் மாமாவின், ஆப்தாளும் ஆன ஸ்ரீ. ராமநாதன், பெரியவா பாதுகையை தன சிரசில் மேல் வைத்துக்கொண்டு முன்னாள் நிற்க, அதன் மேல் ஏன் பத்திரிக்கையை வைத்து, பிறகு, சுவாமியின் சித்ர படத்தின் அருகில் பூக்களின் நடுவே வைத்தார்.  நான் ஒரு நிமிடம் சிலிர்த்துப் போனேன்.  பிறகு கொஞ்சம் புஷ்பத்தை பெரியவா காலடியில் இருந்து எடுத்து எனக்குக் கொடுத்தார்.  பத்திரிகை தரவில்லை

நான் பணி புரியும் பள்ளியில் வில்வ மரம் ஒன்று உண்டு. நான் சில தளங்களைப் பறித்து, உள்ளே உள்ள கோவிலில் வைத்து உள்ளே செல்வேன். 19 இரவு, நான் கிளம்பும்போது, திடீரென்று, ஒரு கிளையை ஒடித்து, அருகில் இருக்கும் மாமா வீட்டிருக்குச் சென்று கொடுத்து விட்டுப் போனேன்.  சத்தியமாக அடுத்த நாள் அனுஷம் என்பது, ஸ்ரத்தையாக் அனுஷ பூஜை செய்யும் என் மாமா அந்த வில்வத்தில் அர்ச்சனை செய்வார் என்பதும் எனக்குத் தெரியாது.  எனக்குத் தெரிந்து நான் வில்வ தளம் பறித்து அவருக்கு முன்பு கொடுத்ததாக நினைவு இல்லை – இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக மேலே நான் கூறிய விஷயம்.

நான் கிளம்பி விட்டேன். வேறு சில வேலைகளை முடித்துவிட்டு, திரும்பி வீடு செல்லுபோது, திடீரென்று எனக்கு ஒரு சந்தேஹம், “ஒரு வேளை, ஸ்ரீ.க.ஷ பூஜை முடிந்தவுடன் அந்தப் பத்திரிக்கையை எடுத்துக் கொடுப்பதற்காக என்னைத் தேடினால் என்ன செய்வது. ? அது ஒரு அபசகுனமாக படுமோ” என்று யோசித்து, கடைசியில் சரி, அனுஷ பூஜை முடிந்தே சென்று விடுவோம். என்று திரும்பி, பெரியவாளிடமே வந்தேன்.

அப்போது ஊர்வலம் முடிந்து, ஒரு சிறிய வீட்டில், (மண்டபம் தனியாக கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்), உள்ளே போவதற்கு முன்பு, அலங்கார வண்டியில் இருந்து எடுத்து, வாரையில் கட்டி  ‘English Note” க்கு, ஸ்ரீ பாதம் தாங்கிகள் டான்ஸ் ஆடிக்கொண்டு இருந்தனர். பிறகு, நாதஸ்வரம், கற்பகமே கண் பாராய்” பாட. சுவாமி உள்ளே போய் விட்டார்.

நல்ல கும்பல். உள்ளே செல்ல இடம் இல்லாததால், வெளியிலேயே, கடைசியாக, சுவாமியை பார்க்கும் ஒரு கோணத்தில் நின்று கொண்டு இருந்தேன்.

அப்போதுதான் அது நடந்தது. உள்ளே சென்ற மறு நொடி, ஒரு மழை ஒன்று வந்தது. சட சட என்று பெரிதாகி, ஒரு 15 நிமிடத்தில், எங்கள் செம்மங்குடியில் வீட்டில் பின்னே ஒரு சிறு வாய்க்கால் உண்டு.  அது போல் தண்ணீர். எனக்கும் மழைக்கும் ஒரு மூன்று அடி.  கொட்டித் தீர்த்துவிட்டது. நான் சன்னமாக, பிலகரி ராகத்தில், ஸ்ரீ. பாலசுப்ரமணிய என்ற தீக்ஷதர் கிருதியை பாடிக்கொண்டு நின்றுகொண்டு இருந்தேன்.. உள்ளே ஷோடசோபசாரங்கள் முடிந்து,  ‘விதிதாகில சாஸ்த்ர” முடிந்து, தீபாராதனை காட்டி,  நவநீத சோராய....நாராயணாநந்த தீர்த்த குருவே” பாடி முடிந்து, பிரசாதம் கொடுத்து, எல்லோரும் வெளியே வந்த போது, சுத்தமாக மழை நின்றிருந்தது. ......

நான் பிரசாதம் வாங்கிகொண்டு, பத்திரிக்கை வாங்கிக்கொள்ளலாமா வேண்டாமா, யார் கொண்டுப்பார், என்ன செய்வது என்று தெரியாமல் நின்று கொண்டிருதேன். பிறகு, பெரியவா படம் அருகில் நின்று கொண்டு இருந்த ஒருவரிடம், அந்த பத்திரிக்கையை எடுத்து தருமாறு கேட்க, அவர் தேடி, தேடிக் கிடைக்கவே இல்லை.

நாளை வந்து வாங்கி கொள்ளுங்கள் என்று சொல்ல, வெளியே வந்து லேசாக தூறல் போட, வண்டியை எடுத்து வீடு வந்து சேர்ந்தேன்.

 

இது என்ன கருணை ? ஏன் எப்படி நடந்தது. என்ன நடக்கிறது என்று தெரியாத ஒரு நிலை.

 

பாலக்ருஷ்ண ஜோசியர் மஹா பெரியவாளைப் பற்றி சொன்னதாக  திருவீழி அவர்கள் சொன்னதை நான் நினைவு கூறுகிறேன்

“It requires tremendous misfortune to escape the impartial gaze of His Holiness”

இதான் எனக்கு நினைவு வந்தது

 

திரும்பி வீட்டுக்கு வரும்போது, சங்கீதாவை தாண்டி லெப்ட் எடுக்கும்போது, திரும்பிப் பார்த்தேன். கபாலி கோவில், சீரியல் லைட், மின்ன, கீழே குளத்தில் அதன் பிம்பம் தெரிய, அந்த லைட் கண் சிமிட்டி, - வடிவேல் சொன்னது போல் = இதெல்லாம் ஒண்ணுமே இல்லை, இன்னொரு ஸ்பெஷல் ஐடெம் இருக்கு” என்பது போல்...

 

பி.கு.  வரஹூரில், கோணங்கி வேஷம் போட்டு, வருபவரிடம், சம்ஸ்க்ருத பாஷை யை திராவிட பாஷையில் சொல்லச் சொல்லுவார். அதே போல் ஆரம்பத்தில். நான் சொன்ன சௌந்தர்ய லஹரி வார்த்தைக்கு அர்த்தம்.  (என்னுடைய தம்பி மனைவி அபர்ணா கேட்டதனால்)

“நான் தீனன், உன்னுடைய கடாக்ஷம் என்ற ஒரு எல்லைக்குள்ளேயே நான் இல்லை. இருந்தாலும், உன்னுடைய கடாக்ஷம் என்கிற அமுதத்தை ஏன் மேல், தெளி, ப்ரோக்ஷனம் பண்ணு” என்கிறார்... யார் சொல்கிறார். ஆதி சங்கரர்.  (இதுவும் மஹா பெரியவா, கடாக்ஷ வீக்ஷண்யம் என்று 1962-63 களில், சொன்ன உபன்யாசத்தின் ஒரு பகுதி)

பஞ்ச கச்சம் கட்டிக்கொண்டு, ஸ்ரத்தையாக கண்ணீர் மல்க தரிசனம் செய்பவர்களும், ஆனந்தமாக நடனம் ஆடும் ஸ்ரீ பாதம் தாங்கிகளும், எந்த ஒரு லஜ்ஜையும் இல்லாமல் அங்க பிரதட்சிணம் செய்யும் பக்தர்களும் வேத பிராம்மணர்களும், அஷ்டபதி அபங் பாடும் பாகவதர்களுக்கும் இருக்க, சாதாரண ஒரு தீனன் எனக்கு அருள் புரிகிறார் பாருங்கள்

அதான் பெரியவா..........

பி.கு 2

நான் ஏன் ஸ்ரீ. பாலசுப்ரமணிய பாட்டு பாடினேன் என்று இரவு நினைத்துப் பார்க்க அந்த பாடலில், “ஆபால கோப, விதித தீன சரண்ய” என்று முத்து தீக்ஷிதர் சுவாமி மலை சுப்பிரமணிய சுவாமியை நினைத்து அந்தப் பாட்டு பாடியிருக்கிறார்

இப்போது உங்களுக்கும் தெரிந்து இருக்கும்......

 

Tuesday 18 June 2024

அரை பக்க பக்தி - 1 - "குஞ்சரரசன்"

 மனிதன் தோன்றும் முன் இறைவன் இருந்தானா  ?

இருந்தார் என்கிறார் வில்லிப்புத்தூரார்.  அதை கர்ணன் இறக்கும் தருவாயில், அவனுக்கு விஸ்வரூப தரிசனம் காட்டும்போது, கஜேந்திரமோக்ஷத்தை மேற்கோள் காட்டுகிறார்.

“குஞ்சரராசன் முனன்று தோற்றியபடியே தோற்றினான்” என்கிறார்.

குஞ்சர ராசன் - யானைகளின் தலைவன் (கஜேந்திரன்).  இந்தப் பாடல் ஆரம்பத்தில் "போற்றிய கன்னன் கண்டு கலிப்ப" என்கிறார்.  கன்னன் என்று இரண்டு சுழி போட்டால் கர்ணனைக் குறிக்கும்.

இறைவன் என்பவன் மனிதர்களின் கற்பனையில் உத்த்தவன் என்று சொல்பவர்களும் உண்டு.  மனிதர்கள் தோன்றுவதற்கு முன்பு, விலங்குகள் இருந்தன என்று வைத்துக் கொண்டால்,  ஒரு யானை துன்பத்தில் இருந்த பொது அதை காக்க வந்திருக்கிறார்.

அற்புதமாக சுகப்ரஹ்மம் அதை தன்னுடைய ஞான த்ருஷ்டியால் உணர்ந்து,  ஸ்ரீ மத் பாகவதத்தில் நமக்குச் சொல்லி இருக்கிறார். இதில் என்ன ஒற்றுமை என்றால், "ஆதி மூலமே" என்று கஜேந்திரன் கூறிய போது, ஒரு வினாடி கூட வெயிட் பண்ணாமல், தன்னுடைய வாகனமான கருடனை நினைக்க, உடனே அதன் மேல் ஏறி சடுதியில் கிளம்பி ...முதலையை கொன்று கஜேந்திர மோட்சம்.  முதலைக்கும் மோட்சம்

அதே போல் கர்ந்ணன் குற்றுயிராய் வீழ்ந்து கிடந்த வுடன், ஒரு நிமிடம் கூட தாமதியாமல்,  அவனுக்கு அருள் புரிய வருகிறார். என்ன ஒரு அருமையான ஒற்றுமை.

எந்த நிலையிலும், அவனை சரணாகதி பண்ணினால்,  திரௌபதி போல, உடனேயோ, சபரி போல காத்திருந்தோவ- - காக்க பெருமாள் ரெடி.













Sunday 31 March 2024

சங்கீத கலா நிதி - 2024 -

 

முன்னுரை:

இந்த வருட சங்கீத வித்வத் சபை, சங்கீத கலாநிதி மற்றும் இதர நிதிகளை தேர்வு செய்யும் பொருட்டு சபை, ஒரு திங்கள் காலை கூடுகிறது. சபையில் என்ன நடந்து இருக்கும் என்று எல்லோரும் மண்டையை உடைத்துக் கொள்ளாமல்- படிக்கவும் - ஒரு அலசல்:

வீ. ஸ்ரீ – வீ.ஸ்ரீராம்.-  ஸ்ரீ.மு – ஸ்ரீ. முரளி -  மெ. மெம்பர்ஸ்

பாகம் 1

வீ. ஸ்ரீராம் - இந்த சபைக்கு வந்திருக்கும் அனைவருக்கும் சங்கீத வித்வத் சபை சார்பாக வாழ்த்துக்கள். ஸ்ரீ. முரளி அவர்களின் கார் மெட்ரோ-பாதை குழப்பத்தில் மாட்டிக் கொண்டு இருப்பதால் கொஞ்சம் லேட்டாக வருவார்.

இந்த வருடம் சங்கீத கலாநிதி மற்றும் இதர அவார்டுகள் யாருக்கு வழங்க வேண்டும் என்று என்பதை தீர்மானிப்பதற்காக இந்த சபை கூட்டப்படுகிறது வழக்கம் போல கடவுள் வாழ்த்துடன் இந்த சபையை தொடங்குவோம்.

மெ-1 – என்ன சார் இது. மணி 8.50  தான் ஆகிறது. கொஞ்சம் வெயிட் பண்ணி ராகு காலம் முடிந்து 9.00  ஆரம்பிக்கலாம்.

வீ.ஸ்ரீ – (கொஞ்சம் கோபமாக) இரண்டு மாதம் முன்பு, நாம் இனிமேல், சமூக நீதியை பின் பற்றவேண்டும் என்றும் சனாதனம் வேறு, நாம் வேறு என்று முடிவும் பண்ணி விட்டோம். இது போன்ற மூட நம்பிக்கைகளை ஒழிக்கவேண்டும் என்று உங்களுக்கு சொன்னது மறந்து விட்டதா ? இப்படி பொறுப்பில்லாமல் இருந்தால் என்ன அர்த்தம். அதனால் ராகு காலம் முடிவதற்குள் நிகழ்ச்சி ஆரம்பிக்கவேண்டும். இது அவரின் அன்புக் கட்டளை. இறை வணக்கம் ஆரம்பிக்கலாம்.

மெ.1 – சாரி. சார். எனக்கு கொஞ்சம் காது கேக்காது.

வி.ஸ்ரீ . சரி சரி.

ஸ.வி.சபை- ஸ்டூடென்ட் - “மஹா கணபதிம்” என்று பாட ஆரம்பிக்க, ஸ்ரீ. முரளி உள்ளே வருகிறார்.

ஸ்ரீ. மு- “யார் பா இந்த பாட்டை எல்லாம் பாடறது. சமத்துவ சிந்தனையும், சமூக நீதியிலும் எதற்கப்பா கணபதி ?  நிறுத்துப்பா !!!!

இன்னொரு மெம்பர் – சார். அது வேண்டாம் என்றால் “ஈஸ்வர அல்லா தேரே நாம்” பாட்டை பாடலாமா”

மெ-3 – “என்ன சார் விவரம் கெட்ட ஆளா இருக்கீங்களே. ரகுபதி ராகவ ராஜாராம் என்று ஆரம்பிக்குது அந்தப் பாடல். எப்படி சார் பாடறது ? இதை பாடினா “அவர்” கோச்சுப்பார். இந்த ஒரு வரியை மட்டும் பாட, இது என்ன RTP யா. ?!

வீ.ஸ்ரீ. – சார் வேதநாயகம் பிள்ளை என்று ஒருவர் இருந்தார். அவர் அருமையான பாடல்கள் பல எழுதி இருக்கிறார். அவர் 1826 ல் பிறந்தார். அவர் பன் மொழி வித்தகர். அவர் திருச்சி நீதிமன்றத்தில் வேலை செய்தார்  இதுவரை அவர் பல புத்தகங்கள்..........

மெ.4 – இடை மறித்து, ஏம்பா ஸ்ரீ ராம். எப்போ ஏதாவது பேசச் சொன்னாலும் உடனே சரித்திர ப மாதிரி வள வள என்று பேசறியே  எங்களால முடியல பா. இறை வணக்கம் தானப்பா இப்ப டாபிக். அதுக்கு ஏம்பா வே.நா சரித்திரம் சொல்லிண்டு இருக்க !!!

வீ.ஸ்ரீ. சாரி சார். பழக்க தோஷம்....

மெ. 5 – சார் பாரதியார் பாட்டு பாடலாம். நாட்டுப் பற்றுள்ள பாடல் பல இருக்கின்றன. ஏதாவது பாடலாம் !!

ஸ்ரீ. மு- நல்ல ஐடியா. கூப்பிடுப்பா பாரதியார் பாட்டு பாடத் தெரிந்தவரை....

பாடகர் – சுருதி பாக்ஸ் சரி செய்து கொண்டு. “நெஞ்சு பொறுக்குதில்லையே, நெஞ்சு பொறுக்குதில்லையே, இந்த நிலை கெ....

ஸ்ரீ.மு – ஸ்டாப், என்ன கண்றாவிப்பா  இது. இந்தப் பாட்டெலாம் பாடிண்டு. யாருப்பா இது பாடறது  ?

பாடகர். நான் விஜய் சிவா சிஷ்யன். இங்கு advance music training சேந்திருக்கேன்.

மெ 5  - நினைச்சேன். இந்த பாட்டெல்லாம் சமத்துவத்துக்கு ஒத்து வராது. வேற எதோ நினைவு  வருது. நிச்சயமா அவர் கோச்சுப்பார். போப்பா உள்ளே.....

மெ- 6 -  இறை வணக்கமே வேண்டாம், மீட்டிங்கை ஆரம்பிக்கலாம்.

மெ 7 –  அது எப்படி !!! சம்பிரதாயமா அதான பண்றோம் !!!. நான் ஒத்துக்க முடியாது.

ஸ்ரீ. மு- என்னாப்பா இது, சாதரணமாக மீட்டிங் போது தான் அடிச்சிப்போம். இப்போ இ.வணக்கம் முன்னாடியே அடிசுக்கிறோம். !!!!!

மெ 4  -  சார். வானாகி மண்ணாகி வளிஆகி..  பாடலாம், இது இயற்கையைப் பற்றி பாட்டு. அர்த்தம் யாருக்கும் புரியாது.

வீ.ஸ்ரீ – கரெக்ட். அதையே பாடலாம்

இனிதாக கடவுள் வாழ்த்து முடிந்தது

 

பாகம் 2

ஸ்ரீ. முரளி – இங்கு கூடியுருக்கும் அனைவருக்கும் வணக்கம் இந்த வருட சங்கீத கலாநிதி யாரு என்பதை முடிவு செய்யலாம் ?

மெ. 4 –  ஒரு சின்ன விண்ணப்பம். சாதாரமாக இட்லி, வடை போடுகிறீர்கள். இந்த வருடமாவது சமோசா, கட்லெட், கொஞ்சம் கெட்டி சட்னி, போடவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். வீட்டில் இட்லி சாப்டு நாக்கு செத்துப் போச்சு. அதனால்.

மெ. 7 -  ஏன் சார் தின்னிப் பண்டாரம் மாதிரி, இன்னும் மீட்டிங்கே ஆரம்பிக்கலை. அதற்குள்ளாகவே தீனியா  >

ஸ்ரீ. மு- சார் அவரை ஒன்னும் சொல்லாதீங்கோ. சாதாரனமா. பாதி மீட்டிங்கிலதான் நிறைய பேர் தூங்குவா. இவர் கலை டிபன் சாப்ட ஒடனேயே தூங்கிடுவார். அதனால் நாம் என்ன சொனாலும் அவருக்குத் தெரியாது. அதனால் அவர் கேட்பதை கொடுத்து விடுவோம். !!!

வி.ஸ்ரீ  -  அது மட்டும் இல்லை  இங்கு பாதி பேருக்கும் காது கேட்காது. கண்ணு தெரியாது.

ஸ்ரீ. மு- இந்த வருடம், மிகுந்த சிரமம் எடுத்து, சங்கீத கலாநிதி விருதுக்குரியவரை தேர்ந்து எடுத்து இருக்கிறோம். யார் என்று நான் சொன்னால், மூக்கில் மேல் விரலை வைக்கப் போகிறேள் ?

மெ 5. இரண்டு வருடமாகவே மூக்கில் மேல் அடிக்கடி விரல் வைக்கிறமாதிரி நிறைய நடந்து கொண்டு இருக்கிறது.

ஸ்ரீ.மு. இந்த வருடம் மகா.ஸ்ரீ T.M.Krishna அவர்களுக்குக் ஸ.க விருது கொடுப்பது என்று ஏக மனதாக தீர்மானித்து இருக்கிறது.

விழித்துக் கொண்டிருக்கும் எல்லா மெம்பரும் ஒரு மனதாக எழுந்து

“என்னது !  அவருக்கா !! என்னப்பா நடக்குது. இங்கே”

இந்த சத்தத்தில் அந்த சமோசா மெம்பெர், அரை குறையாக காதில் வாங்கிக்கொண்டு

“சரியான முடிவு. ஏன் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சி. போன வருடம் கூட காலை ப்ரோக்ராமில் மிக அருமையாக பாடினார். மிகச் சிறந்த ஸ.கலாநிதியின் மகன். அவரைப் போலவே பாடினாலும் ஞானம் அதிகம்.

ஒய், நீ யாரைச் சொல்றீர்

அதான் நா..T.N.S.Krishna

நாசமா போச்சு. அவர் இல்லைன்னா. இது T.M.Krishna

என்னது அவரா ? என்று பல் செட்டு விழுந்தது கூட தெரியாமல் அதிர்ச்சி ஆகிறார்.

மெ.4 -  அவர் என்ன சாதித்தார் என்று விருது கொடுக்கிறீர்கள் ?

வீ. ஸ்ரீ. அவருடைய சங்கீதம் சம்ப்ரதாயமானது. நம்முடைய பாரம்பரிய சங்கீதத்தை கட்டிக் காப்பதில் இன்னிக்கு அவர்தான் முதல்.

மெ. 4.  என்னது அப்படியா ?  (அப்படியே மயங்கி விழுகிறார்)

மெ. 8   கடுப்புடன்  அவர் போகாத சர்ச் கிடையாது. பாடாத மசூதி கிடையாது  திட்டாத பாடகர்கள் கிடையாது” – இதையும் சேத்துக்கோங்கோ..

மெ. 9 – என்ன சார் அக்ரமமா இருக்கு

மெ. 4 -  அவர் நம் சபாவிலேயே பாடலியே சார் !

வி.ஸ்ரீ. அதனால் தான் 4 மாதத்திற்கு முன்பு  கச்சேரி பண்ண வைத்தோம். த்யாகராஜர் உற்சவத்தின் போது. தியாகராஜர் மன்னிச்சாரோ இல்லையோ ? நாங்க மன்னிச்சு அப்பயே முடிவும் பண்ணிட்டோம். அவர்தான் ஸ.கலாநிதி என்று.

மெ.3. – அவர் கச்சேரியைக் கேட்டே ரொம்ப நாள் ஆச்சே சார். ?

ஸ்ரீ.மு.  அவர்தான் வாடிகன் சிடியில் பாடினாரே. ஹிண்டு பேப்பரில் கூட ஒரு பக்கத்திக்கு கட்டுரை வந்து இருந்ததே. அவர் வாடிகனில் பாடியபோது ஞான ஒளி எல்லா நாடுகளுக்கும் பரவியதே  ?... நீங்க பார்க்கலையா ?

வீ.ஸ்ரீ  இந்த வருடம் Musicologist விருது, ஒரு கிறிஸ்தவ பெண்மணிக்கு கொடுத்து இருக்கிறோம். அவர் தேவாரம் ராமலிங்க அடிகளார் அவர்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் வாங்கி இருக்கிறார்.  அது போல ஹிந்து அல்லாத தெய்வங்களைப் புகழ்ந்து பாடி, நம்முடைய இசையை உலகெல்லாம் பரவக் செய்த TM Krishnaa விற்கு வழங்கறதுக்கு என்ன தடை?

மெ. 4 – (தமிழ் பண்டிதர் மற்றும் MA மெம்பெர்) - இது சங்கீத கலா அநீதி

மெ 3 அவர் தியாகராஜ சுவாமியை மிகவும் வருந்தத்தக்க முறையில் பேசி இருக்கிறார். ?

வி.ஸ்ரீ  இடை மறித்து, ஏன் சுவாமி தியாகராஜரே “நரஸ்துதி சுகமா ?” ங்கறார். அதனால் தான்....

மெ. 3 -அதனால. தியாகராஜரை வசை பாடணுமா என்ன. Stupid Answer   இது  ?

வி.ஸ்ரீ - அவர் மிகச் சிறந்த நடிகர் கூட ?

மெ. 4 - என்னது எப்போ சார் நடிச்சார் ?

வி.ஸ்ரீ- என்ன சார் ஆறு மாதம் முன்னாடி, அந்த சபாவில் “சுவாமி ஐயப்பன்” நாடகம் போடுமோது வாபர் வேஷம் போட்டுக் கொண்டு வந்தாரே ? மறந்துட்டீங்களா ?

மெ. 4 - ஆமா. சாரி மறந்துட்டேன். அந்த வேஷத்திலேயே லுங்கியோட அடுத்த கச்சேரி பண்ணினாரே ?  அதில் கூட அமீர் கல்யாணி RTP பாடி “எல்லோரும் கொண்டாடுவோம், அல்லாவின் பெயரை சொல்லி” ன்னு பல்லவியும் பாடினாரே ?!

வி.ஸ்ரீ  கரெக்ட்., இருந்தாலும் உமக்கு அநியாயத்திற்கு ஞாபக சக்திங் கனும் !!!

மெ. 3- அப்போ அடுத்த ஸ.க விருது, சித் ஸ்ரீராமுக்கு கொடுத்து விடலாம். சாதாரணமாக TMK தியாகராஜரைத் திட்டறார்.  சித் பாடினாலே திட்றா மாதிரி தான் இருக்கும். அதனால் தான்.

மெ. 8.  இந்த அவல நிலை ஏன் வந்தது என்றால். இதுவரை ஸ.க கொடுக்காத மிகச் சிறந்த வித்வான்களின்  ஆவி வந்து இங்கு பழி வாங்குகிறது என்று நினைக்கிறேன். அதனால் ஆவி அமுதாவை கூப்பிட்டு எதாவது பரிகாரம்........

மெ. 2 – சங்கீத கலாநிதி என்பது நம் சபையில் மையப் புள்ளி. அதற்க்கு என்று ஒரு நீதி உண்டு. மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதும் நீதி மக்கள் பக்கமா, நல்ல சங்கீதத்தின் பக்கமா என்று விவாதிக்கும் அதே வேளையில், நாம் எந்தப் பக்கம் இருந்தாலும் கவலைப் படாமல் ஒரே பக்கமும்.........

மெ 4 – ஐயோ.....யாருப்பா இவரு. என்ன சார் சொல்ல வரீங்க ?

வி.ஸ்ரீ – சாரி சார். அவர் 5 மாதத்திற்கு முன்பு ஆழ்வார்பேட்டையில் கமல ஹாசன் வீட்டிற்கு பக்கத்தில் குடி போய் விட்டார். இரண்டு மூன்று முறை அவருடன் பேசியதின் விளைவு !!!

ஸ்ரீ. மு – அதனால் எல்லோரும் ஏக மனதாக ஒத்துக் கொண்டதன் பேரில். இந்த வருடம் ஸ.க விருது  T M Krishna அவர்களுக்கு கொடுப்பது என்பதை உறுதி செய்து விட்டோம். உடனே அவருக்கு சொல்ல வேண்டும். ரொம்ப நன்றி

முடிவுரை

தில்லானா மோகனாம்பாள் படத்தில் தூண் மறைவில் நின்று கொண்டு சண்முகசுந்தரம், மோகனா நாட்டியத்தைப் பார்ப்பது போல், நான் தூணின் மறைவில் நின்று கொண்டு இதை எல்லாம் பார்த்த பின்,

வெளியில் வந்து புலம்புகிறேன்  (வடிவேலு, "இதுக்கெல்லாம் சரி படமாட்டான் என்று எல்லோரும் சொன்ன பிறகு புலம்புவாரே....அது போல)

“அவர் அவர் னு அடிக்கடி சொல்றாங்களே. யாருப்பா அவரு !. சாதாரணமா பேர சொல்லிட்டு தான அப்புறம் தானப்பா அவர் அவர் ன்னு சொல்லுவாங்க. கேட்டா கூட சொல்ல மாட்டேன் கராங்களே. !! பதில் தெரியலேன்னா :உறுத்துமே... Rasikas.org குழுமத்தில் வேறு கேட்பாங்களே. அவர்களுக்கு நான் என்ன பதில் சொல்வேன் ? இப்படிப் புலம்ப வுட்டாங்களே !! தெய்வமே....

என்று நடந்து 29C பஸ்சில் மந்தவெளி போவதற்கு பதிலாக, எதிர் திசையில் ஏறிவிட, கண்டக்டர் என்னைப் பார்த்து, என்ன சார், “கீழ்பாக்கமா?” என்று கேட்டார்.