Monday, 21 April 2025

......பகைஞன் போலுமால்....

 

கொஞ்சம் கம்பர், கொஞ்சம் வால்மீகி, கொஞ்சம் சொந்த சரக்கு

விபீஷணன் ராமனிடம் வந்து அடைக்கலம் ஆகும் இடம். விபீஷ்ணன் இதற்கு முன் ராமனைப் பார்த்தது கிடையாது.  இலங்கையில் இருந்து கொண்டு, அவன் மட்டும், ராமன் மேல் பக்தி கொண்டு அவரிடம் சரணம் அடைய வந்து இருக்கிறான் என்பது ஒரு ஆச்சர்யமான விஷயம்.

எத்தனையோ மலர்கள் இருப்பினும் தாமரை தான் சூரியனைப் பார்த்தவுடன் மலர்கிறது. அது போலத்தான். அது நன்மையில் முடியும் ஒரு விஷயமாக இருந்தால் தெய்வ அணுக்ரஹம் என்றும் தீமையில் முடியுமானால் “பிராரப்தம்” என்றும் கூறுகிறோம்.

காணாமலே காதல் என்பது ரொம்ப அபூர்வமான விஷயம். அருணகிரிநாதர் சொன்னது, பக்தி செய்வதற்கு அறிவு அவசியமில்ல, அன்பு போதும்.  (உன்னை அறியும் அன்பைத் தருவாயே). “எதோ விட்ட குறை தொட்ட குறை” – ராமரின் மேல் அன்பை வைத்துவிட்டான்.  அவரை பார்க்க வேண்டும் என்று உருகுகிறான்.

கம்பர் சொல்கிறார் -விபீஷணன் உருவத்தில்

“நான் இவனை இதற்க்கு முன் பார்த்தது கிடையாது. அவனைப் பற்றிக் கேள்விப் பட்டத்தும் கிடையாது. அவன் மேல் எனக்கு அன்பு பிறக்க என்ன காரணம் என்றும் தெரியவில்லை. எலும்பு வரை குளிர்கிறது. என் மனம் உருகுகிறது.

'முன்புறக் கண்டிலென்; கேள்வி முன்பு இலென்;
அன்பு உறக் காரணம் அறியகிற்றிலேன்;
என்பு உறக் குளிரும்; நெஞ்சு உருகுமேல், அவன்
புன் புறப் பிறவியின் பகைஞன் போலுமால்

தலைப்பில் நான் சொல்லி இருக்கும் வார்த்தையை சொல்கிறான்.

பிறவி என்ற பகையை அழித்து மீண்டும் பிறக்காமல் செய்வான். “புன் புறப்பிறவியின் பகைஞன் போலுமால்”

 

 

 

 

அரக்கர்களில் பல தினுசுகளை, ராமயணத்தில் பார்க்கலாம். மாரீசன் தாடகை வதம் போது, ராமன் விட்ட அம்பில் ஓட்டமாக ஓடி, கடலுக்குள் புகுந்து கொண்டான்.  அதனால் தான் ராவணன், மாரீசனிடம் வந்து. சீதையை அபகரிக்க உதவி கேட்கும்போது, அரண்டு போகிறான். வால்மீகி எழுதுகிறார். “எனக்கு “ர” சப்தம் கேட்டாலே பயமாக இருக்கிறது” என்கிறான,

ராமர் “தர்மத்தின் உருவம், ரொம்ப கருணை மிக்கவன், சத்தியத்தை மீறாதவன், பராக்ரமம் மிக்கவன், இதை நான் நேரில் பார்த்தவன். ஒழுங்கு மரியாதையாய் சீதையை அபகரிக்கும் உன் நோக்கத்தைக் கை விடுவாயாக”  என்கிறான்.

இது எனக்கு மிகவும் பிடித்த வாசகம். நம் விரோதி கூட நம்மை புகழுமாறு ஒரு வாழ்க்கை வாழ வேண்டும், அட் லீஸ்ட் முயற்சியாவது செய்ய வேண்டும்

சூர்ப்பனகை கதை நமக்குத தெரியும். அவள் யாரிடம் எப்படிப் போட்டுக் கொடுத்தால், சரியாக இருக்கும் என்று யோசித்து, இலக்குவன், காதையையும் மூக்கையும் வெட்டியவுடன், நேரே கர தூஷனாதிகள் இடம் சென்று, “ராமன் என்று ஒருவன் இருக்கிறார், அவன் பெரிய வீரனாம். ஒரு வில் வைத்து இருக்கிறான். அவன் தம்பி என்னை அவமானப் படுத்தி விட்டான், நீ அவனை வதம் செய்யாவிட்டால், உன் வீரத்திற்கே இழுக்கு” என்கிறாள்

நேரே ராவணனிடம் போகிறாள்.  “ராவணா, சீதை என்று ஒரு அழகான பெண் இருக்கிறாள். அவள் கணவன் ஒரு அற்ப மானுடன், ராமன் என்று பெயர்” என்று அவனிடம் சொல்கிறாள்.

கர தூஷனாதிகள் வீரர்கள், அவர்களுக்கு வீரம் முக்கியம் ராவணன் வேற லெவல்.

இந்த்ரஜித் என்று ஒரு மாவீரன் அவனை யாரும் வெல்லவே முடியாது. லக்ஷ்மணனே மிகவும் கஷ்டப்பட்டு அவனை கொன்றான். தன் தந்தை செய்த தவறால், தன் தந்தை உயிருடன் இருக்கும்போதே, அவர் கண் முன்னே மரணத்தைத் தழுவினான்.  இதுதான் கொடுமை. தாம் செய்த தவறு குழந்தைகளை பாதிக்கும் என்பதை இந்த்ரஜித் மூலமாக நமக்கு ராமாயணம் உணர்த்துகிறது

கொஞ்சம் சரணாகதி தத்துவத்தைப் பார்ப்போம்.  சரணாகதி பண்ணியவர்களில் மிக முக்கியமானவர்கள், விபீஷணன் அடுத்து சுக்ரீவன். தன்னை யார் வந்து சரணம் என்று சொன்னாலும், கொஞ்சம் கூட யோசிக்காமல் அடைக்கலம் கொடுக்கும் தன்மை உடைய ராமன், விபீஷணன் “சரணாகதி” என்று வந்த பொது, எல்லோரிடமும் ஆலோசனை கேட்கிறான்.  நிறைய மாறுபட்ட கருத்துகள் வந்த போதும். கடைசியில், ராமனின் “அடைக்கல” குணத்தால் விபீஷணனுக்கு அடைக்கலம் தருகிறான்.

விபீஷணனுக்கு சரணாகதி பண்ணியதில் பெருமை இல்லை. காகாசுரனுக்கு பண்ணியதில் தான் ராமன் உயர்ந்து நிற்கிறான்.  காகாசுரன் கதை எல்லோருக்கும் தெரியும்,  சீதையை துயரப்படுத்தியதை ராமன் பார்க்க, ஒரு புல்லை எடுத்து, ஜபித்து, விட, அது அவனை, துரத்து துரத்து என்று துரத்தி, கடைசியில், ராமன் திருவடியிலிலேயே வந்து விழ, தொடுத்த அம்பு, வீணாகி விடக்கூடாது என்பதற்காக, ஒரு கண்ணை பறித்து அவனை உயிரோடு விடுகிறான்

இதை அருணகிரி மிக அழகாக சொல்கிறார்

காதும் ஒரு விழி காக முற அருள் மாயன்

அரி திரு – மருகோனே

இவர் காதையையும் துண்டித்தான் என்கிறார்.

இன்னும் சொல்லப் போனால், காகாசுரன் சீதையை காயப் படுத்தி இருக்கிறான். ராவணனை விட மோசம்.  ராவணன் சீதையை மனதளவில் தான் துன்பப் படுத்தினான்.  இருந்தாலும் ராமன் காகாசுரனிடம் காட்டிய கருணை, நமக்கு எல்லாம் ஒரு பாடம். 

இன்னா செய்தாரை ஒருத்தல்....குறள் நமக்கு நினைவில் வந்தாலும், எத்தனை பேர் அப்படி இருப்போம். ?

 


Tuesday, 25 February 2025

தனி மூவர்

 

இன்று சிவராத்திரி. கொஞ்சம் ஈஸ்வர த்யானமும்,  நிறைய சுப்ரமண்ய சுவாமியும்.

             இருவர் என்றால் நமக்கு சட் என்று மணிரத்னம்     படம் நினைவு வரும். இது ரத்னங்களை மணிகளாக  செய்து “திருப்புகழ்” என்ற பெயரில் கொடுத்த/சொல்லப்பட்ட - மூவர் கதை

      நம் புராணங்கள், கடவுள், முனிவர்கள்   இவர்களைக்       குறிப்பிடும்போது மூன்று மூன்றாகவே குறிப்பிடும் பழக்கம் துர்கா, லக்ஷ்மிசரஸ்வதி,- பிரம்மா, விஷ்ணு சிவன்., சங்கீத மும்மூர்த்திகள்,- சைவக் குரவர்கள்- மாணிக்கவாசகர்அப்பர், சுந்தரர். சிவபெருமானை குறிக்கும்போது கூட, உமையாள்கங்கையாள், இந்தப் பக்கம், ஸ்ரீதேவிபூமிதேவி உடனுறை பெருமாள். ராமரைக் கூட, வைதேஹி கூட, லக்ஷ்மனனும் சேர்த்து....

          திருப்புகழ் ஒரு அமிர்தம். அந்தத் தமிழின் அழகு சொல்லி மாளாது. அர்த்தத்துடன் படிக்க, எப்படியெல்லாம், அருணகிரி முருகனைக் கொண்டாடுகிறார் என்று மெய் சிலிர்க்கும். சத்குரு நாராயண தீர்த்தரின் தரங்கமும் அப்படித்தான்.  சுவாமியை நேரில் பார்த்தோ, மனதில் வைத்து, எழுதும்போது, இப்படித்தான் வருமோ ?

     அருணகிரிநாதரின் தமிழ் சற்று சிரமம்.     சம்ஸ்க்ருத்தில் நாரயணீயம் போன்று. ஆனால் அதில் மூழ்கினால், பரமானந்தம் தான்......

            ஒரு உதாரணம் பார்ப்போம்

.......  .  பொருது கையிலுள அயில் நிணம் உண்க

         குருதி புனலேழு கடலினும் மிஞ்ச     புரவி கனமயில் நடவிடும் விந்தை குமரேசா..........

          என்று ஒரு பாட்டின் வரிகள். இதில் இரண்டாவது வரி புரியும், மூன்றாவது வரி, சற்று, புரிந்தமாதிரி  இருக்கும், முதல் உஹூம்.... இதன் அர்த்தத்தை கடைசியில் பார்ப்போம்

            சரி. மூவர் பற்றி பார்ப்போம். முருகப் பெருமான் மூன்று பேருக்கு பிரணவ உபதேசம் செய்தார் என்ற ஒரு பெரிய உண்மையை நமக்குச் சொல்கிறார். பக்தி இலக்கியங்கள் படித்தவருக்கு, திருவிளையாடல் படம் பார்த்தவருக்கு, ஒருவர் நிச்சயம் தெரியும், முருகன் சிவ பெருமானுக்கு   உபதேசித்தார் என்று. 

             இதிலும் இரண்டு விஷயங்கள், வேறு வேறு இடத்தில்  சொல்கிறார்.

            ஒன்று, சிவபெருமானின் இரு காதில் ஓதுகிறார் என்று ஒரு திருப்புகழிலும், தன்னுடைய வாகனமாகிய எருதின் மேல் உட்கார்ந்து, முருகனை சுற்றி வந்து பிரணவ மந்திரத்தை கேட்கிறார் (சேவேறும் ஈசர் சுற்ற மாஞான போத முத்தி) என்றும்

            இண்டாவது, பிரணவ மந்திரத்தை வாங்கிக் கொள்பவர், பிரம்மா தான். அவர் பிரணவத்தின் பொருள் நான்தான் என்று இறுமாப்பாக சொல்ல, வீரபாகுவைக் கூப்பிட்டு, ஜெயிலில் போட்டுவிட, சிவபெருமான் வந்து, சொல்லி வெளியில் விட்டு, அவருக்கும் உபதேசம் செய்கிறார்.

        மூன்றாவது யார் ?

          குறு முனி அகத்தியர் தான். எந்த முனிவருக்கும் கிடைக்காத பாக்கியம் அவருக்குக் கிடைத்து இருக்கிறது. ஆச்சர்யமான முனிவர், மீனாக்ஷி கல்யாணத்திலும் இருப்பார், ராமாயணத்தில், ஆதித்ய ஹ்ருதயமும் சொல்லிக் கொடுப்பார். “அந்த பைரவி துணைவன் பாதம் பணிந்து உன்னை வென்றிடுவேன்” என்று சீர்காழி கோவிந்தராஜன் உருவத்தில், ராவணனோடு மல்லு கட்டுவார்.  ஔவையாருடன் கலந்து உரையாடுவார்

         அருணகிரி, அகத்தியரை, எப்படி அறிமுகப்படுத்துகிறார் என்பது அழகின் உச்சம்.

          புடவி அணி துகில்....” என்ற சாருகேசி ராகத்தில் அமைந் திருப்புகழ்

            அவர் சொல்கிறார். “இந்த உலகத்தை (நிலப் பரப்பை) ஒரு மங்கையாக நினைத்துக் கொண்டு, அதற்க்கு நீலக் கலரில் ஒரு சேலையைக் கட்டு. அதுதான் கடல். அந்தக் “எட்டு   கடலையும்” ஸ்வாஹா... என்று ஓரே மூச்சில் குடித்த அகத்தியர்” என்கிறார்

       

           "புடவிக் கணி துகில் ஏன வளர் அந்த

           கடல் எட்டையும் அற குடி முனி”

             அடுத்தது, பிரம்மா

         எட்டு கண்களுடன்,ஆயிரம் தாமரை இதழ்களில் உட்கார்ந்து, சுயம்புவாக  பிரம்மா

         “என்கண் புனித சததள நிலைகொள் சுயம்பு சதுர்வேதன்”

          மூன்றாவதாக சிவனைக் கொண்டாடுகிறார்.

         “கண்களில் கனல் கொப்பளிக்க, புரம் எட்டையும் எரித்து, ரொம்ப   கஷ்டப்பட்டு, ஒரு அழகான சிரிப்பை உதிர்த்தாராம்”

          புரமெட்டறி எழ விழி கனல் சிந்தி, கடினத்தொடு சில சிறு நகை கொண்டு அற்புத கர்த்தரஹர பர சிவன் இந்த தனி மூவர்”........

          என்று சொல்கிறார். சொல்லிவிட்டு, இந்த மூவருக்கும் ப்ரணவ     உபதேசம்  செய்தார் என்று பாடல் போகிறது

             ஏன்  சிரித்தார் என்று காஞ்சி மகாஸ்வாமி ஒரு கட்டுரையில் எழுதி இருக்கிறார். அதை வேறு ஒரு தருணத்தில் பார்ப்போம்

         முடிந்தால் kaumaaram.com சென்று இந்தப் பாட்டைசாருகேசி ராகத்தில் குருஜி ராகவன் சார் பாடிய ஆடியோ கேளுங்கள் அழகு சொட்டும்

         முதலில் ஒரு பாடல் எழுதினேனே- அதற்கு       பதில்

....   .     பொருது கையிலுள ஆயில் நிணம் உண்க    “தன்னுடைய வேலினால், (ஆயுதத்தால்)  பகைவர்களில் கொழுப்பை சாப்பிட்டு” – (நிணம் = கொழுப்பு)     

             இரண்டு- தெரியும்     

            மூன்றாவது- தன்னுடைய மயிலை, குதிரையைப்     போல் வேகமாக ஓட்டுகிறார்.     இரண்டு கால் மயிலை, எப்படி குதிரை போல் வேகமாக ஓட்ட முடியும் ? அதனால் தான் “விந்தை குமரேசா” என்கிறார்.     பிரணவ உபதேசம் பண்ணிய சுவாமிக்கு, இதெல்லாம் எம்த்திரம்

            இந்த சிவராத்திரி எல்லோருக்கும் மங்களத்தைக் கொடுக்கட்டும்....