Monday, 24 November 2025

பாரதீய வித்யா பவனில் ஸ்ரீ. விஜய் சிவா......NOV 2025

  

ஸ்ரீ. விஜய் சிவா

ஸ்ரீ. மனோஜ் சிவா- மிருதங்கம்

ஸ்ரீ சஞ்சீவ்– பிடில்

ஸ்ரீ. எஸ். சுனில் குமார்- கஞ்சிரா

Bharatiya Vidhya Bhavan – Nov 2025

விஜய் சிவா எனற ஒரு மாபெரும் கலைஞன், நம் கர்நாடக சங்கீதத்தின் கர்வம். எந்த ஒரு நிர்பந்தத்திர்க்கும் உட்படாத அற்புதம்.  டி,கே, ஜெயராமன், பட்டம்மாள் போன்ற மாபெரும் கலைஞர்களின் வார்த்தெடுத்த தங்கம். நீ ஒழுங்காக பயிற்சி பெற்று, பாடினால், விருதுகள் உன்னைத் தேடி வரும் என்பதற்கு இவர் சாட்சி.  இந்த கணீர் குரல் என்னை எப்போதும் மயக்கும் குரல். கணீர் குரலில், மதுரை சோமு, மஹா. சந்தானம், சஞ்சய், வரிசையில் இவரையும், பரத் சுந்தரையும் தாராளமாக சேர்க்கலாம்.

பா.வி.பவனில் அவர் கச்சேரி.

“சதா பால ரூபாபி” என்ற சுப்பிரமணிய புஜங்க ஸ்லோகத்தை பாடி, தரங்கத்தை எடுத்தார்.  ஸ்ரீ. நாராயண தீர்த்தர், மிகுந்த வயிற்று வலியோடு, நடுக்காவேரி என்ற இடத்தில் உறங்க (இது கண்டியூர்-திருக்காட்டுப்பள்ளி பாதையில் உள்ளது) அங்கு இருந்த பிள்ளையார், அவர் கனவில் தோன்றி, “காலையில் நீ யார் முகத்தில் விழிக்கிறாயோ, அதன் பின்னால் செல்”. என்று கூற, காலையில் ஒரு வராகம் (வெள்ளைப் பன்றி) அவர் முன் தோன்ற, அதன் பின்னே சென்று வரகூர் என்று இப்போது அழைக்கப்படும் பூபதி ராஜபுரம் சென்று, வராஹம் மறைய, அங்கு தங்கி, தரங்கம் பாட, வயிற்று வலி தீர்ந்தது,- என்று இப்போதும் புகழ்ந்து சொல்லப்படும் ஒரு சேதி. அந்த பிள்ளையார் மேல் பாடிய பாட்டு தான் இது.

இதில் 4 சரணம் உண்டு. அதில் “பாம்புகளை மாலையாக கொண்ட சிவன் என்ற கடலுக்கு சந்திரனாக இருப்பவனே” என்ற ஒரு வரி வருகிறது. கற்பனை வளம். கண்ணனை ஸ்ரீ. நாராயண தீர்த்தர், தன்னுடைய தரங்கங்களால் கொண்டாடும் விதம் மெய் சிலிர்க்கும். எனக்கும் வரகூர் பெருமாள் குல தெய்வம் என்பதாலும், நாங்கள் அடிக்கக்டி தரங்கம் பாடுகிறோம் என்பதாலும் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் இது

பிறது, சக்ரவாகத்தை எடுத்தார். சுகுணமுலே என்ற த்யாகராஜரின் இன்னொரு அற்புதமான கிருதி. “ஸ்ரீ நாயக க்ஷமியுஞ்சிமு” வில் நிரவல் எடுத்து, ஸ்வரம் பாடி முடித்தார்.

பிறகு, ஸ்ரீ ராகத்தை எடுத்து, கொஞ்சம் ராகம் பாடி, ஸ்ரீ வரலக்ஷ்மி நமஸ்துப்யம் என்ற தீட்சிதர் பாட்டை எடுத்து பாடினார்.  ராகத்தில் கொஞ்சம் குரல் படுத்தியது. வயலின் அதை சரி கட்டினார். “பாவனா பேத ச்துரே” ல் ஸ்வரம் பாடி முடித்தார். சஞ்சீவ், அவர் ஸ்வரத்திற்கு, “எந்தரோ மஹானுபாவுலு” வாசித்துக் கொண்டு இருந்தார் 

பிறகு வராளியை எடுத்தார். நான் இன்னொரு பஞ்ச ரத்னமா என்று நினைக்க “ஈவண்டி தெய்வமு”  என்ற வேணுகோபால் அவர்களின் க்ருதி பாடினார். இவர். ஸ்பென்சர் வேணுகோபால்.  புகழ் பெற்ற வா முருகா வா... பேகடா.. கருதி எழுதியவர்.

“தேஜோன்மய ஸ்ரீ ஜானகீஷா”... என்ற வரியில் நிரவல் எடுத்து,  பாடி முடித்தார்.

சரகுண பாலிம்பா வை எடுத்து, கேதார கௌளையின் அத்தனை அழகும் நிறைந்த பாடல். இது கே,கௌளையின், இந்தப் பாட்டு, ரத்னம் என்பேன். பூச்சியின் பாட்டு.

மெயின் ஐட்டமாக கரஹரப்பரியாவை தொடுத்து, பக்கல நிலபடியின் த்யாகராஜ கிருதியை மாலையாய் கொடுத்தார். எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாட்டு. அரியக்குடி காலத்திலிருந்து, இன்று வரை, இந்தப் பாட்டு கேட்டுக் கொண்டே இருக்கிறோம். மனசூன வில் நிரவல் கொடுத்து ஸ்வரம் பாடி முடித்தார்

நல்ல தனி, ரம்யமாக இருந்தது.

துக்கடாவாக, நடராஜர் பத்து, “இன்னமும் சொல்லவோ” என்று ஆரம்பித்து பேகடா, நட பைரவி, சாமா வில் முடித்து, தில்லை ஸ்தலம் என்று கோ.கி.பாரதியின் பாடலை பாடினார்

இந்த பாட்டில், “ஆலயம் ஆயிரத்து எட்டிலும் நேத்ரம்” என்ற ஒரு வரி வருகிறது.  கோ.கி. பா.. கற்பனை வளம்.

லீலா நாடக சாயி- என்ற இந்த பாட்டு, புட்டபர்த்தி சாயியின் நூறு ஆண்டு விழாவை முன்னிட்டும் கூட இருக்கலாம்.

காந்தமாம் கதிர் காமம் தன்னில் ஓர் வேதாந்தமா..... மாயுரம் விஸ்வநாத சாஸ்த்ரியின் அருமையான சிந்து பைரவி கருதி. இது விஜய் சிவா ஸ்பெஷல். ஆண்டவன் அருள் சேர சேர, அன்பு பெருகுது ஏற ஏற,,, போன்ற அருமையான வார்த்தைகள் வரும் இந்த பாட்டு.  இது சி.பைரவியில் வித்தயாசமான பாட்டு. 

துள்ளு மத வேல் கை – ஹம்சானந்தி திருப்புகழ். பாடி முடித்தார்.

வீ. சஞ்சீவின் பிடில், ஏனோ வி.சி ஸ்வரம் பாட, அவரோடு ஒட்டாமல் பாடினார். ஆனால் தனியில், மிகவும் அழகாக வாசித்தார். மிருதங்கம், தேர்ந்த கை. கஞ்சிரா வை முதலில் பார்க்கிறேன். தனி நன்றாக இருந்தது.

மனோஜ் சிவா நடுவில் கொஞ்சம் சிரித்தாலோ, விஜய் சிவா கை தட்டினால் அதை ஏற்றுக் கொள்ளும் பாணியில், கை குவித்தாலோ, இருவருக்கும் பத்ம ஸ்ரீ விருது சிபாரிசு செய்யலாம்.

நல்ல காலம் கடைசியில் ஏற்றுக் கொள்ளும் பாணியில் கை குவித்தார்.

விஜய் சிவா, அடிக்கடி அவருடன் பாடும் அவர் சீடரை, இன்னும் “SAFE ZONE”  லேயே வைத்து இருக்கிறார் என்று தோன்றுகிறது.  பயந்து பயந்து பாடுகிறார். நல்ல குரல் வளம், கற்பனை. அவரை இன்னும் கொஞ்சம் ராகம், ஸ்வரம் பாடச் சொல்ல வேண்டும்.

சீடர் சவுத் ஆப்ரிக்காவுக்கு எதிராக விளையாடும் இந்தியன் டெஸ்ட் டீம் மாதிரி இருக்கிறார். திறமை இருக்கிறது. ...ஆனால்.....

 

No comments: