Friday 25 October 2013

கர்நாடக இசையில் முதலில் ஊ லல்லல்லா

கடந்த ஒரு வருடமாக, மதுரை மணி அய்யரின் ரசிகர்கள் மாதம் ஒருமுறை கூடி, அவரது கச்சேரி பதிவுகளில் ஒன்றை, ரசிகர்களுக்காக ஒலிபரப்புவார்கள். லட்சுமிபுரத்தில் ஒரு நண்பர் வீட்டு மொட்டைமாடியில், சுமார் 25 முதல் 30 பேர் குழுமியிருப்பார்கள். அன்று அவருக்குப் பக்கவாத்தியம் வாசிப்பவர்கள் யார் என்று அமைப்பாளர் எஸ்.எல். நரசிம்மன் சொல்லமாட்டார். “மதுரை மணி சங்கீதம் தான் முக்கியம். வயலின், மிருதங்கம் யார் என்பதை எல்லாம் நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்’ என்பார். இந்தக் கச்சேரியைக் கேட்க பூனாவிலிருந்து ஒரு ரசிகர் விமானத்தில் வந்து இரண்டு முறை கலந்து கொண்டார்.

மயிலாப்பூர் லஸ்ஸில், சுமார் 75 பேர் வசதியாக அமரும் சிறு ஹாலில் ஒரு மாதம் இந்த நிகழ்ச்சி நடந்த போது, கூட்டம் தாங்க முடியவில்லை. 200 பேர் உட்கார்ந்து கொள்ள வேண்டி வந்தது! பாத்ரூமில்கூட ரசிகர்கள் அமர்ந்து இசை கேட்டார்கள். மேடையில் ஒரு நாற்காலியில் மணி அய்யர் படம் மட்டும். சின்ன டேப் ரிக்கார்டரில் அவருடைய இசை ஒலி நாடாவைச் சழல விட்டார்கள். கூட்டத்தைப் பார்த்த அமைப்பாளர் ஜெயராமகிருஷ்ணன், அடுத்த மாத நிகழ்ச்சியை கிருஷ்ணகான சபாவில் நடத்தினார். கிட்டத்தட்ட அரங்கில் முக்கால் பகுதி நிரம்பியிருந்தது. பாடகர் மறைந்து சுமார் 40 வருடங்களுக்குப் பிறகும் அவருடைய இசையைக் கேட்க பெரும்கூட்டம் வருவது மதுரை மணிக்கு மட்டுமே!
சமீபத்தில் சென்னை மியூஸிக் அகாடமி விமர்சகர்கள் கருத்தரங்கில், “ஓவியக் கண்காட்சியில், ஓவியர் இல்லாமல் நம்மால் ஓவியத்தை மட்டும் ரசிக்க முடிவது போல், பாடகர் மேடையில் இல்லாமல், அவருடைய இசையை அப்படி ரசிக்க முடியுமா?’ என்று கேள்வி எழுப்பினார்கள். “மதுரை மணி அய்யரின் இசையை அப்படி ரசிக்க முடியும்’ என்று மேற்படி நிகழ்ச்சிகள் நிரூபித்தன.

இசை, ஓவியம் இரண்டிலும் புகழ்பெற்ற எஸ்.ராஜம், மணி அய்யரின் சங்கீதத்தை ரசித்தவர். “தமிழிசை இயக்கம் தொடங்கும் முன்பே எந்த நிர்ப்பந்தமும் இல்லாமல், ஏராளமான தமிழ்ப் பாடல்களை மணி அய்யர் பாடி பிரபலப்படுத்தியிருக்கிறார்’ என்று பாராட்டியிருக்கிறார்.

தந்தை ராமசாமி அய்யரும், மாமா மதுரை புஜ்பவனம் அய்யரும் மணியின் ஆரம்ப காலத் தூண்டுதல்கள். தொடக்கத்தில் ராஜம் பாகவதரும், பின்னர் ஹரிகேச நல்லூர் முத்தையா பாகவதரும், அவருடைய ஆசான்கள். மணி அய்யரின் சுருதி சுத்தமான இசை பற்றி, “சூரியன் மேற்கே உதித்தாலும் உதிக்கலாம், மணி அய்யர் சுருதி விலகவே மாட்டார்’ என்று கோட்டுவாத்தியம் நாராயண அய்யங்கார் ஒருமுறை சொன்னார்.

மணி அய்யர் தவறாமல் வானொலியில் ஆங்கிலச் செய்தி கேட்பார். அரசியலில் ஆர்வம் இல்லை என்றாலும் செய்தியை அறிந்து வைத்திருப்பதில் அவருக்கு விருப்பம். “அவருக்க பிடித்த எழுத்தாளர் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா. கன்னிமாரா நூலகத்துக்குச் சென்று ஷாவின் நூல்களை விரும்பிப் படிப்பார்’ என்கிறார் அவருடைய நண்பர் வி.கே. விசுவநாதன். அதேபோல் கிரிக்கெட்டிலும் ஆர்வம் அதிகம். வானொலியில் ரன்னிங் கமென்டரி கேட்காமல் இருக்க மாட்டார்.
ஒருமுறை காஞ்சிப் பெரியவர் மயிலாப்பூர் வந்தபோது, “மணி அய்யர் வீட்டில் இருக்கிறாரா’ என்று சீடர்களிடம் விசாரித்தார். அது காலை நேரம். வீட்டில்தான் இருப்பார் என்று தெரிந்ததும், உடனே கிளம்பி கற்பகாம்பாள் நகரில் இருக்கும் மதுரை மணியின் வீட்டுக்கு வந்துவிட்டார். மணி அய்யருக்கு தூக்கிவாரிப் போட்டு விட்டது. மகா பெரியவரை பக்தியுடன் வரவேற்றார்.

“ம்... பாடு!’ என்றார் மகா பெரியவர்.

“நான் இன்னும் ஸ்நானம் கூடப் பண்ணலை, பெரியவா!’ என்று சமாளித்தார் மணி அய்யர்.

“நீ சங்கீதம் என்கிற சாகரத்தில் மூழ்கி இருப்பவன், குளிக்காவிட்டாலும் பரவாயில்லை... பாடலாம்.!’ என்றார்.
“மிருதங்கம் வாசிக்கிறவா இப்போதான் போனா...’ என்று இழுத்தார் மணி அய்யர்.

“நான் தாளம் போடுறேன் நீ பாடு’ என்று அங்கேயே உட்கார்ந்து கைகளால் தாளம் போட ஆரம்பித்துவிட்டார் மகா பெரியவர்.
வேறுவழியில்லை. காஞ்சி மகான் முன் அந்தக் காலை நேரத்தில் பாடினார் மதுரை மணி அய்யர்.

வீணை தனம்மாள் மாதிரி சுமார் ஆயிரம் பாடல்கள் மணி அய்யருக்குத் தெரியும். ஒவ்வொரு சீசனிலும் 10-12 புதிய கீர்த்தனைகளை அறிமுகப்படுத்துவார். பின்னர் 3-4 என்று குறைத்துக் கொண்டாராம்.

பல ஆண்டுகளுக்கு முன், திருச்சியில் உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் இலக்கியவாதி கு.ப.ராஜகோபாலனின் குடும்ப நிதிக்காக மணி அய்யர் செய்த கச்சேரி முடிவில் பேசிய தேசத் தொண்டர் டாக்டர் சாமிநாத சாஸ்திரியார், “மதுரை மணி அய்யர் என்பதைவிட மதுரமணி அய்யர் என்பதே பொருந்தும்’ என்று கூறினார்.

“மகாத்மா காந்தி மணிமொழி வழிநடப்போம்’ என்று எழுத்தாளர் சிட்டி, மதுரை மணி அய்யரிடம் ஒரு பல்லவி எழுதிக் கொடுத்தார். காந்திஜி ஜனவரி 30 அன்று சுடப்பட்டு இறந்ததற்கு நாலைந்து நாட்கள் கழித்து அவர் திருச்சி வந்தபோது எழுதிய பல்லவி அது. உடனே ஷண்முக ப்ரியாவில் மெட்டமைத்து, கூடவே கானடா ராகத்தில் சுவரம் பாடி அமர்க்களப்படுத்திவிட்டார் மணி அய்யர்.

இசை வல்லுனராக டாக்டர் எஸ்.ஏ.கே. துர்க்கா, மதுரை மணி அய்யரின் ராக ஆலாபனை தனித்துவம் வாய்ந்தது என்று புகழ்ந்திருக்கிறார். சின்னச் சின்ன சங்கதிகளாகப் பாடி கடைசியில் ஒன்றாக இணைப்பாராம். அதில் கார்வைகள் நிறைந்திருக்கும். அந்த சஞ்சாரங்களில் சுவரங்களின் ஆதிக்கம் அதிகமாம். நிரவலுக்கு அவர் தேர்ந்தெடுக்கும் வரிகள் நல்லனவாக, முழு அர்த்தம் தெரிவிப்பதாக இருக்கும்.

காபிநாராயணி, கௌடமல்ஹார், ரசாளி, விஜயனாகரி எல்லாம் மதுரை மணி அய்யர் பிரபலப்படுத்திய அபூர்வ ராகங்கள்.
அக்டோபர் 12, 1912 அன்று பிறந்த மதுரை மணி அய்யருக்கு, பன்னிரண்டாவது வயதில் ராமநாதபுரம் அலவக்கோட்டை கோயில் கும்பாபிஷேகத்தில் முதல் கச்சேரி. அவர் பிரபலமான பின்னரும் அவரைத் தேடி வந்து கச்சேரி செய்யுமாறு கேட்ட எவருக்கும் அவர் ஏமாற்றம் அளித்ததில்லை. சன்மானம் குறித்து அவர் கவலைப்பட்டதும் இல்லை. அதற்காகப் பேரம் பேசியதும் இல்லை. கச்சேரிகளில் பணம் வாங்கிக் கொண்டு பாடுவதால் “நிதி சால சுகமா’ என்ற தியாக ராஜரின் கிருதியை அவர் பாடுவதே இல்லை.

மதுரை மணி அய்யரின் பாட்டைக் கேட்டு மயங்கிய இளைஞர் பாலசுப்பிரமணியன், ஐ.ஐ.டி. மாணவர். கடைசித் தேர்வு எழுத வேண்டும். அன்று காலை மதுரை மணி அய்யரின் கச்சேரி ரேடியோவில் ஒலிபரப்பாகிறது என்று அறிவித்தார்கள். பாலு பரீட்சைக்குப் போகவே இல்லை. “மதுரை மணியின் இசையைவிடவா ஐ.ஐ.டி பரிட்சை முக்கியம் என்று உட்கார்ந்து முழுக் கச்சேரியையும் கேட்டேன்!’ என்றார் பாலு. பின்னர் அவர் இந்தியன் வங்கியில் வேலைக்குச் சேர்ந்தார்.

மதுரை மணி அய்யரின் கடைசிக் கச்சேரியை, சென்னை மியூசிக் அகாடமியில் கேட்ட நினைவு இருக்கிறது. அரங்கம் மேலேயும் கீழேயும் நிரம்பி வழிந்தது. சம்மணம் இட்டு அமர்ந்த வாக்கிலேயே அவரை ரசிகர்கள் சிலர் மேடையில் கொடு வந்து உட்கார வைத்தனர். திரை விலகியே இருந்ததால் இந்தக் காட்சியை கண்ட அத்தனை ரசிகர்களும் நெகிழ்ந்து போய்விட்டனர். கச்சேரி முடித்தபின் அந்த நெகிழ்ச்சி அப்படியே மகிழ்ச்சியானது.

மயிலை கபாலி கோயிலில் அவர் கச்சேரி நடக்கும்போது, கூட்டம் நிரம்பி வழியும். அதில் ரிக்ஷா ஓட்டுபவர் நிறையப் பேர் இருப்பார்கள். அவர்களைக் கச்சேரி முடிவதற்கு முன்னால் யாராவது வீடு திரும்பக் கூப்பிட்டால் வரமாட்டார்கள். கந்தன் கருணை புரியும் வடிவேல், எப்போ வருவாரோ, இங்கிலீஷ் நோட்டு எல்லாம் கேட்ட பிறகுதான் சவாரிக்கு வருவார்கள்! பண்டிதர் முதல் பாமரர் வரை தம் இசையால் மயக்கி வைதிருந்தார் மணி அய்யர்.

“அட, அதை எல்லாம் விடுங்கள். அவர் அன்றைக்கே ராக ஆலாபனை பண்ணும்போது, தரனன்னவுக்கு பதில், ஊ லல்லல்ல என்று பாடியிருக்கிறார் தெரியுமா?’ என்று ஒரு மதுரை மணி ரசிகர் வேடிக்கையாகக் கேட்டார். அவர் பாடுவதை நினைவுபடுத்திக் கொண்டபோது, அது உண்மைதான் என்று தோன்றிற்று!

No comments: