Monday, 24 November 2025

பாரதீய வித்யா பவனில் ஸ்ரீ. விஜய் சிவா......NOV 2025

  

ஸ்ரீ. விஜய் சிவா

ஸ்ரீ. மனோஜ் சிவா- மிருதங்கம்

ஸ்ரீ சஞ்சீவ்– பிடில்

ஸ்ரீ. எஸ். சுனில் குமார்- கஞ்சிரா

Bharatiya Vidhya Bhavan – Nov 2025

விஜய் சிவா எனற ஒரு மாபெரும் கலைஞன், நம் கர்நாடக சங்கீதத்தின் கர்வம். எந்த ஒரு நிர்பந்தத்திர்க்கும் உட்படாத அற்புதம்.  டி,கே, ஜெயராமன், பட்டம்மாள் போன்ற மாபெரும் கலைஞர்களின் வார்த்தெடுத்த தங்கம். நீ ஒழுங்காக பயிற்சி பெற்று, பாடினால், விருதுகள் உன்னைத் தேடி வரும் என்பதற்கு இவர் சாட்சி.  இந்த கணீர் குரல் என்னை எப்போதும் மயக்கும் குரல். கணீர் குரலில், மதுரை சோமு, மஹா. சந்தானம், சஞ்சய், வரிசையில் இவரையும், பரத் சுந்தரையும் தாராளமாக சேர்க்கலாம்.

பா.வி.பவனில் அவர் கச்சேரி.

“சதா பால ரூபாபி” என்ற சுப்பிரமணிய புஜங்க ஸ்லோகத்தை பாடி, தரங்கத்தை எடுத்தார்.  ஸ்ரீ. நாராயண தீர்த்தர், மிகுந்த வயிற்று வலியோடு, நடுக்காவேரி என்ற இடத்தில் உறங்க (இது கண்டியூர்-திருக்காட்டுப்பள்ளி பாதையில் உள்ளது) அங்கு இருந்த பிள்ளையார், அவர் கனவில் தோன்றி, “காலையில் நீ யார் முகத்தில் விழிக்கிறாயோ, அதன் பின்னால் செல்”. என்று கூற, காலையில் ஒரு வராகம் (வெள்ளைப் பன்றி) அவர் முன் தோன்ற, அதன் பின்னே சென்று வரகூர் என்று இப்போது அழைக்கப்படும் பூபதி ராஜபுரம் சென்று, வராஹம் மறைய, அங்கு தங்கி, தரங்கம் பாட, வயிற்று வலி தீர்ந்தது,- என்று இப்போதும் புகழ்ந்து சொல்லப்படும் ஒரு சேதி. அந்த பிள்ளையார் மேல் பாடிய பாட்டு தான் இது.

இதில் 4 சரணம் உண்டு. அதில் “பாம்புகளை மாலையாக கொண்ட சிவன் என்ற கடலுக்கு சந்திரனாக இருப்பவனே” என்ற ஒரு வரி வருகிறது. கற்பனை வளம். கண்ணனை ஸ்ரீ. நாராயண தீர்த்தர், தன்னுடைய தரங்கங்களால் கொண்டாடும் விதம் மெய் சிலிர்க்கும். எனக்கும் வரகூர் பெருமாள் குல தெய்வம் என்பதாலும், நாங்கள் அடிக்கக்டி தரங்கம் பாடுகிறோம் என்பதாலும் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் இது

பிறது, சக்ரவாகத்தை எடுத்தார். சுகுணமுலே என்ற த்யாகராஜரின் இன்னொரு அற்புதமான கிருதி. “ஸ்ரீ நாயக க்ஷமியுஞ்சிமு” வில் நிரவல் எடுத்து, ஸ்வரம் பாடி முடித்தார்.

பிறகு, ஸ்ரீ ராகத்தை எடுத்து, கொஞ்சம் ராகம் பாடி, ஸ்ரீ வரலக்ஷ்மி நமஸ்துப்யம் என்ற தீட்சிதர் பாட்டை எடுத்து பாடினார்.  ராகத்தில் கொஞ்சம் குரல் படுத்தியது. வயலின் அதை சரி கட்டினார். “பாவனா பேத ச்துரே” ல் ஸ்வரம் பாடி முடித்தார். சஞ்சீவ், அவர் ஸ்வரத்திற்கு, “எந்தரோ மஹானுபாவுலு” வாசித்துக் கொண்டு இருந்தார் 

பிறகு வராளியை எடுத்தார். நான் இன்னொரு பஞ்ச ரத்னமா என்று நினைக்க “ஈவண்டி தெய்வமு”  என்ற வேணுகோபால் அவர்களின் க்ருதி பாடினார். இவர். ஸ்பென்சர் வேணுகோபால்.  புகழ் பெற்ற வா முருகா வா... பேகடா.. கருதி எழுதியவர்.

“தேஜோன்மய ஸ்ரீ ஜானகீஷா”... என்ற வரியில் நிரவல் எடுத்து,  பாடி முடித்தார்.

சரகுண பாலிம்பா வை எடுத்து, கேதார கௌளையின் அத்தனை அழகும் நிறைந்த பாடல். இது கே,கௌளையின், இந்தப் பாட்டு, ரத்னம் என்பேன். பூச்சியின் பாட்டு.

மெயின் ஐட்டமாக கரஹரப்பரியாவை தொடுத்து, பக்கல நிலபடியின் த்யாகராஜ கிருதியை மாலையாய் கொடுத்தார். எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாட்டு. அரியக்குடி காலத்திலிருந்து, இன்று வரை, இந்தப் பாட்டு கேட்டுக் கொண்டே இருக்கிறோம். மனசூன வில் நிரவல் கொடுத்து ஸ்வரம் பாடி முடித்தார்

நல்ல தனி, ரம்யமாக இருந்தது.

துக்கடாவாக, நடராஜர் பத்து, “இன்னமும் சொல்லவோ” என்று ஆரம்பித்து பேகடா, நட பைரவி, சாமா வில் முடித்து, தில்லை ஸ்தலம் என்று கோ.கி.பாரதியின் பாடலை பாடினார்

இந்த பாட்டில், “ஆலயம் ஆயிரத்து எட்டிலும் நேத்ரம்” என்ற ஒரு வரி வருகிறது.  கோ.கி. பா.. கற்பனை வளம்.

லீலா நாடக சாயி- என்ற இந்த பாட்டு, புட்டபர்த்தி சாயியின் நூறு ஆண்டு விழாவை முன்னிட்டும் கூட இருக்கலாம்.

காந்தமாம் கதிர் காமம் தன்னில் ஓர் வேதாந்தமா..... மாயுரம் விஸ்வநாத சாஸ்த்ரியின் அருமையான சிந்து பைரவி கருதி. இது விஜய் சிவா ஸ்பெஷல். ஆண்டவன் அருள் சேர சேர, அன்பு பெருகுது ஏற ஏற,,, போன்ற அருமையான வார்த்தைகள் வரும் இந்த பாட்டு.  இது சி.பைரவியில் வித்தயாசமான பாட்டு. 

துள்ளு மத வேல் கை – ஹம்சானந்தி திருப்புகழ். பாடி முடித்தார்.

வீ. சஞ்சீவின் பிடில், ஏனோ வி.சி ஸ்வரம் பாட, அவரோடு ஒட்டாமல் பாடினார். ஆனால் தனியில், மிகவும் அழகாக வாசித்தார். மிருதங்கம், தேர்ந்த கை. கஞ்சிரா வை முதலில் பார்க்கிறேன். தனி நன்றாக இருந்தது.

மனோஜ் சிவா நடுவில் கொஞ்சம் சிரித்தாலோ, விஜய் சிவா கை தட்டினால் அதை ஏற்றுக் கொள்ளும் பாணியில், கை குவித்தாலோ, இருவருக்கும் பத்ம ஸ்ரீ விருது சிபாரிசு செய்யலாம்.

நல்ல காலம் கடைசியில் ஏற்றுக் கொள்ளும் பாணியில் கை குவித்தார்.

விஜய் சிவா, அடிக்கடி அவருடன் பாடும் அவர் சீடரை, இன்னும் “SAFE ZONE”  லேயே வைத்து இருக்கிறார் என்று தோன்றுகிறது.  பயந்து பயந்து பாடுகிறார். நல்ல குரல் வளம், கற்பனை. அவரை இன்னும் கொஞ்சம் ராகம், ஸ்வரம் பாடச் சொல்ல வேண்டும்.

சீடர் சவுத் ஆப்ரிக்காவுக்கு எதிராக விளையாடும் இந்தியன் டெஸ்ட் டீம் மாதிரி இருக்கிறார். திறமை இருக்கிறது. ...ஆனால்.....

 

Saturday, 22 November 2025

பாரதீய வித்யா பவனில் ஸ்ரீ. ராம கிருஷ்ணன் மூர்த்தி கச்சேரி .......21.11.25

 

ராமகிருஷ்ணன் மூர்த்தி

பரத்வாஜ் – மிருதங்கம்

கமலாகிரன் வ்ரிஞ்சிமுரி – பிடில்

தேதி- 21.11.2025

பாரதிய வித்யா பவன்

பா.வி.ப கார்த்திகை மாசத்திலேயே “மார்கழி உத்சவம்” ஆரம்பித்து விடுவார்கள். மார்கழி மாதம் ஆரம்பிப்பதற்கு முன்பே, ஏறக்குறைய எல்லா ப்ரோக்ராம் முடிந்துவிடும். இப்போது எல்லாம் ஏன், எதற்கு என்று கேட்கப்டாது. இந்தக் கட்டுரையிலேயே நிறைய “ஏன்” இருக்கிறது

ஏன் கச்சேரியின் நடுவில்,  ராகம் பாடி பல்லவி பாடாமல் தானம் மட்டும் பாடினார் ? 

ஏன் கச்சேரியின் நடுவில் நாராயண கௌளையில், வீணை குப்பையரின் வர்ணத்தைப் பாடினார் ?

ஏன் ராகம் பாடி தில்லானா பாடினார் ?

ஏன்  “பூங்குயில் கூவும் பூஞ்சோலை” என்ற அரத பழசான “கல்கியில்” பாடலை நோட்டுப் புத்தகத்தைப் பார்த்துப் பாடினார் ?

இப்படி எல்லாம் நான் கேள்வி கேட்டுதான் டி.எம். கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி கொடுத்தார்கள்.  கூடிய சீக்கிரம் இவருக்கும் கிடைத்து விடும்

நேற்று கவர்னர் வந்து நாதஸ்வரத்துடன் தொடங்கி வைக்க, இன்று இரண்டாம் நாள்/ ரா.கி.மூ

ஒவ்வொரு பாட்டும் கையாண்ட விதம் அற்புதம். நிறைய இவருடைய வித்வத்தை புகழ்ந்தாகி விட்டது.

முதலில் ஸரசிருஹா  என்ற புலியூராரின் நாட்டை கிருதியை எடுத்தார். சரஸ்வதி தியானம். அருமையாக, கிடு கிடுவென ஸ்வரம் பாடி முடித்தார்.

இரண்டாவதாக, ஸ்ரீ சுக்ர என்ற நவக்ரஹ கிருதியை எடுத்தார். பரஸ்  ராக தீட்சிதர் கிருதி. மதுரை மணி அய்யருக்குப் பிறகு, யாரும் இதை எடுத்துப் பாட ஆள் இல்லை.  இந்த ஒரு விஷயத்திற்க்கே இவருக்கு நன்றி கூறலாம்.  இந்த ராக ஸ்வரூபத்தை “வடவரையை மத்தாக்கி” என்ற ஒரு பாடலின் ஒரு சரணத்தில் எம்.எஸ். அம்மா குழைத்துக் கொடுக்க, அதை மணி அய்யர் சிறப்பிக்க, பிருந்தா முக்தா அவர்கள் (யூ ட்யூப்) நீலாயதாக்ஷி என்ற ஒரு பாட்டு பாடி இருக்கிறார்கள். முடிந்தால் கேட்கவும்.

 மூன்றாவதாக சாளக பைரவியை கொஞ்சம் “கோடி” காண்பித்து, செம்மங்குடி புகழ் “பதவினியை” எடுத்தார். கொஞ்சம் ஸ்வரம் பாடினார். “உன்னிடம் நிஜமான பக்தி ஒன்றுதான், பதவி (Status).  மற்றதெல்லாம் waste.  என்கிறார் தியாகராஜர். அது போல தான் இது, செம்மங்குடி பாடிளால் தான் அது ஸா.பை.  மற்ற யார் பாடினாலும் அது கொஞ்சம் சுமார் தான்.

சாளக பைரவியில் எனக்குத் தெரிந்து “வரலக்ஷ்மி நீயே வந்தருள்வாயே” என்று பாட்டு. ஸ்ரீ. ஒ.எஸ். தியாகராஜன் அவர்கள் பாடியது தான். வேறு இருப்பதாகத் தெரியவில்லை.

வராளியை எடுத்து கொஞ்சம் ராகம் பாடிவிட்டு, பஞ்ச ரத்ன கிருதியை எடுத்துப் பாடினார்.  எனக்கு என்னமோ பஞ்ச ரத்ன கிருதி என்பது கச்சேரிகளுக்கு சரிபடாதோ என்று தோன்றியது. நல்ல வேளை ஸ்வரம் பாடவில்லை.  முக்கியமாக, தியாகராஜர் ஆராதனையில் பஞ்ச ரத்ன க்ருதி பாடாதவர்கள், வேறு எந்த மேடையிலும் பாடக்கூடாது,.. என்பேன் நான்

அப்புறந்தான். நாராயண கௌள ராகத்தை எடுத்து கொஞ்சம் பாடினார். திடீரென்று தானம் பாடினார். திடீரென்று வீணை குப்பையரின் அதே ராக “மகுவா நின்னே” வர்ணத்தைப் பாடி “அந்தக்” கட்சியில் சேர்ந்து விட்டார்.

இதுவும் ஸா.பை போன்று ஒரு அரிதான ராகம்.. இதில் தீக்ஷதிரின் “ஸ்ரீ ராமம்” தவிர எனக்கு வேறு தெரியாது.  அதுவும் செம்மங்குடி பாடியது தான். சஞ்சய், செம்மங்குடி மாமாவைப் பற்றி சொல்லி இருக்கும் வீடியோ வில், தான் இந்த ராகத்தை விரும்பி மாமாவிடம் கத்துண்டதாக சொல்லி இருக்கிறார்.

அடுத்து ஒரு 9 நிமிடம் தோடி பாடினார் பாருங்கள். அட அட...மிகப் பிரமாதம்.  “கீர்த்தி மேவும்” என்று ஆரம்பித்து, கார்த்திகேய காங்கேய என்ற பாபநாசம் சிவன் கிருதியை எடுத்தார். எனக்கு மிகவும் பிடித்த பாடல். ஆறு படையையும் ஒரே பாட்டில் கொண்டு வரும் பாடல். மூன்று சரணத்தையும் பாடினார். “வேல் முருவும்...” நிரவல் எடுத்து ஸ்வரம் பாடி முடித்தார்

பரத்வாஜின் தனி மிக இனிமை. டிசம்பர் சீசனில் இவர் மிக முக்கியமானர் ஆக ஆகிவிட்டார். மியூசிக் அகாடமி யிலும் இவருக்கே வாசிக்கிறார் என்பது, கமலகிரன், அபிஷேக் ரகுராமுக்கு வாசிக்கிறார் என்பதும், இந்த இளம் கலைஞர்களின் அயராத உழைப்பு. நேர்த்தி தெரிகிறது.

ஒரு கடமோ, கஞ்சிராவோ இருந்திருக்கலாமோ என்று தோன்றியது.

பிறகு துக்கடாக்களை கையில் எடுத்தார்......

மாலாசை கோபம் ஓயாதே நாளும் – என்ற வயலூர் திருப்புகழை, பீம்ப்ளாஸ் ராகத்தில் பாடினார்.

 பிலஹரி ராகம் கொஞ்சம் பாடி, தில்லானா பாடினார்

உல்லாச நிராகுல – என்ற அனுபூதியை காபியில் குழைத்து கொடுத்து, கேட்பவர்களுக்கு அநுபூதி அடைந்த திருப்தி. பூங்குயில் கூவும் என்ற கல்கியின் பாட்டு பாடி முடித்தார்

வந்தே மாதரம் அம்பிகாம் பகவதீம் - என்று தொடங்கி “கேதார கெளள, சாவேரி ஹிந்தோளம், நாட்டைகுறிஞ்சி, சிந்து பைரவி என்று கடைசியில் மாஞ்சி ராகத்தில் முடித்து, ஷ்யாமா சாஸ்த்ரியின் “ப்ரோவம்மா தாமசமேலே” என்ற கிருதியை பாடி, அதே ராகத்தில் மங்களம் பாடினார்

ரா.கி.மூ. பற்றியோ அவர் சங்கீதம் பற்றியோ நான் சொல்ல வேண்டியது இல்லை. அவரின் சங்கீதம் மிகவும் அழகு. அந்த காலத்து கலைஞர்களின் சங்கீதத்தை நேராக கேட்க முடியவில்லையே என்று நினைப்பவர்களுக்கு, கவலை வேண்டாம். ராம கிருஷ்ண மூர்த்தியைக் கேளுங்கள்..

முடிவுரைக்கு முன்பு-, ஏதோ இரண்டு கச்சேரி பண்ணிய சிறுசுகள் கூட, இன்றைக்கு Apple Tab வைத்துக் கொண்டு பாட, இவர் ஏதோ ஒரு 40 பக்க நோட்டை வைத்துக் கொண்டு புரட்டிக்கொண்டு பாடியது .ஆச்சர்யமாக இருந்தது